என் மலர்tooltip icon

    விருதுநகர்

    தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு மாரிமுத்துவை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    விருதுநகர்:

    தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் சிறைத்துறையில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.

    விருதுநகர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதி தேர்வு தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. காலையிலேயே ஏராளமானோர் திரண்டு வந்து இதில் பங்கேற்றனர். ஓட்டம், உயரம், மார்பளவு உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடைபெற்றன.

    விருதுநகர் எம்.அழகாபுரியைச் சேர்ந்த சங்கர்ராஜா மகன் மாரிமுத்து (வயது 21) என்பவரும் இன்று உடல் தகுதி தேர்வில் பங்கேற்றார். அவரது உயரம், மார்பளவு பரிசோதிக்கப்பட்டது. அதன் பிறகு ஓட்டப்போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாரிமுத்து, வேகமாக ஓடியபோது எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு மாரிமுத்துவை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    காவலர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற வாலிபர் மயங்கி விழுந்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முக கவசம் அணிந்தவர் மட்டுமே நூலகத்தின் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
    அருப்புக்கோட்டை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் 2-ம் அலையின்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நூலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
    நூலகங்கள் மூடப்பட்டதால் வாசகர்கள், நூலக உறுப்பினர்கள், நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் என அனைவரும் பெரிதும் சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் 75 நாட்களுக்கு பிறகு அருப்புக்கோட்டை நாகலிங்க நகரில் உள்ள பொது நூலகம் அரசு வழிகாட்டுதலின்படி மீண்டும் திறக்கப்பட்டது.

    இதனால் போட்டி தேர்வுக்கு தயார் ஆகுபவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து நூலகர் நடராஜன் கூறுகையில்:-

    கொரோனா தொற்று குறைந்ததால் தற்போது நூலகங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இருப்பினும் முக கவசம் அணிந்தவர் மட்டுமே நூலகத்தின் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நூலகத்திற்குள் அனுமதிப்பதில்லை என்றார்.
    பட்டாசு வியாபாரி தற்கொலையான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே சாட்சியாபுரம் காமராஜர் நகரைச்சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது55). பட்டாசுகளை வாங்கி சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்துவந்தார். இந்த தொழிலில் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ரவிச்சந்திரனுக்கு சர்க்கரை வியாதி மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு அதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த அவர் அனுப்பன்குளம் அகதிகள் முகாம் அருகே உள்ள ரேஷன் கடை முன்பு குருணை மருந்து சாப்பிட்டு (விஷம்) உயிரிழந்தார். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே கல் கிடங்கு நீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
    சிவகாசி:

    வெம்பக்கோட்டை அருகே உள்ள கே. மடத்துப்பட்டி ராஜீவ்காலனியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது36). இவர் சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரத்தில் நடந்த உறவினர் இறுதி சடங்கில் கலந்துவிட்டு பின்னர் தனது மனைவி, குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது சிவகாசியை அடுத்த மணியம்பட்டி கல் கிடங்கு அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கல் கிடங்கில் குடும்பத்தினருடன் குளித்துள்ளார்.

    அப்போது செல்வகுமார் மகன் ஞானகுருசாமி (9) எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினான். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் உதவியுடன் மகனை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் செல்வக்குமார் சேர்த்தார்.

    அவனை பரிசோதித்த டாக்டர், சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிறுவன் கல் கிடங்கு நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் படித்ததற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று பணிக்கு மருத்துவப்பணியிடங்கள் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    5 நுண் கதிர்வீச்சாளர், 10 டயாலிசிஸ் டெக்னீசியன், 15 இ.சி.ஜி. டெக்னீசியன், 5 சி.டி. ஸ்கேன் டெக்னீசியன், 15 மயக்கவியல் நிபுணர், 5 ஆய்வக நுட்பனர், 5 மருந்தாளுனர், 15 செவிலியர், 11 பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் ஆக மொத்தம் 85 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

    பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள் பணி வரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரமாக்கவோ வாய்ப்பில்லை.

    உரிய கல்வி தகுதி சான்றிதழுடன் முதல்வர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம், ராமமூர்த்தி ரோடு, விருதுநகர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி ஆகும்.

    தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் படித்ததற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். 4-ந் தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பழங்களை சாப்பிடுவதற்காக வெள்ளை மந்திகள், கரு மந்திகள் மற்றும் ஏராளமான பறவைகள் இந்த பகுதியில் முகாமிட்டு உள்ளதாக மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையின் காரணமாக பல இடங்களில் வண்ண வண்ண காளான்கள் மற்றும் அழகிய வண்ண பூக்கள் பூத்துள்ளன. மேலும் பல்வேறு பகுதிகளில் மலை ஆரஞ்சு பழங்களும், மலை மாதுளம் பழங்களும் அதிக அளவு பழுத்து தொங்குகின்றன.

    இந்த பழங்களை சாப்பிடுவதற்காக வெள்ளை மந்திகள், கரு மந்திகள் மற்றும் ஏராளமான பறவைகள் இந்த பகுதியில் முகாமிட்டு உள்ளதாக மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து மலைவாழ் மக்கள் கூறும்போது, “வறட்சியான நேரங்களில் மலைப்பகுதிகளில் ஆரஞ்சு மற்றும் மாதுளை பழம் மிக குறைந்த அளவே பழுக்கும். ஆனால் தற்போது பரவலாக மழை பெய்ததால் மலைப்பகுதியில் இந்த முறை அதிக அளவு பழங்கள் பழுத்துள்ளன. அடர்த்தியான வனப்பகுதியில் இத்தகைய பழங்கள் தொங்குவதால் இதனை வெளியாட்கள் யாரும் எடுக்க முடியாது. வன விலங்குகள் சாப்பிட்டது போக ஏராளமான பழங்கள் கீழே விழுந்து கிடக்கும்” என்று கூறினர்.
    விருதுநகர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் பச்சிளம் குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் தடுப்பூசி முகாம் இன்று முதல் நடைபெறுகிறது.
    விருதுநகர்:

    உலகளாவிய நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் நியுமோகோக்கல் தடுப்பூசியை (பி.சி.வி) மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறை, குறைமாத பிரசவம் உள்பட பல காரணங்களால் சராசரி எடையை விட குறைந்த எடையில் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 1.5 கிலோ, அதற்கும் குறைவான எடையில் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் உள்பட பல்வேறு உடல் உறுப்புகள் போதிய வளர்ச்சி இல்லாமல் இருக்கும். 

    இதனால் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டு நோய் தொற்றுகள் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் போதிய அளவுக்கு இருக்காது. 

    இதில் நுரையீரல் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க நியுமோகோக்கல் தடுப்பூசி போடப்படுகிறது.

    குழந்தை பிறந்ததில் இருந்து முறையே ஒன்றரை மாதம், மூன்றரை மாதம் மற்றும் ஒன்பதாவது மாதம் என மூன்று முறை இந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு போட வேண்டும். தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. அதன் மூலம் நிமோனியா மற்றும் மூளை காய்ச்சல் காரணமாக ஏற்படும் இறப்புகளை குறைக்க இது உதவும்.

    எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்காக நியுமோகோக்கல் தடுப்பூசி மருந்துகள் விருதுநகர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படும்.

    இன்று விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைக்கிறார். எனவே இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரசவித்த தாய்மார்கள் பிறந்த குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி நியுமோகோக்கல் தடுப்பூசி போட்டு குழந்தைகளை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
    விருதுநகர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், விருதுநகர் புறநகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் புறநகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், அருப்புக்கோட்டை தாலுகாவிற்கும், சூலக்கரையில் பணியாற்றிய மாரியப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கும், ஆமத்தூரில் பணியாற்றிய கணபதி, ராஜபாளையம் போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளார்.

    கட்டுப்பாட்டு பிரிவில் பணியாற்றிய பிரகாஷ், வீர சோழனுக்கும், பாண்டிய ராஜன் சூலக்கரைக்கும், மணிகண்டன் நரிக்குடிக்கும், தாமரைக்கண்ணன் அருப்புக்கோட்டை தாலுகாவிற்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

    விருதுநகர் புறநகர் பிரிவில் பணியாற்றிய நமச்சிவாயம் நத்தத்துப்பட்டிக்கும், கமல் அ.முக்குளத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், விருதுநகர் புறநகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

    வன்னியம்பட்டியில் பணிபுரியும் இலக்கியமுத்து, நத்தம்பட்டிக்கும், பந்தல்குடியில் பணியாற்றும் மீனாட்சிசுந்தரம் வெம்பக்கோட்டைக்கும், விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் நாகராஜ் வச்சக்காரப்பட்டிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றும் கண்ணன், சங்கரன் ஆகியோர் கூமாப் பட்டிக்கும், சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் கிருஷ்ணசாமி இருக்கன்குடிக்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    அதேபோல ஏழாயிரம்பண்ணையில் பணியாற்றும் பாலசுப்பிரமணியன் இருக்கன்குடிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றிய சீனிகுருசாமி பரளச்சிக்கும், திருச்சுழியில் பணியாற்றிய கந்தசாமி வத்திராயிருப்புக்கும், சூலக்கரையில் பணியாற்றும் பெருமாள், நில அபகரிப்பு பிரிவிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதேபோல மாவட்டத்தில் மேலும் 38 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களையும், 59 போலீசாரையும் பணியிடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டுள்ளார்.
    மாவட்ட நிர்வாகம் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதை வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போலீசார் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே ஆனைக்குட்டத்தில் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததாக ஆமத்தூர் கிராம நிர்வாக அதிகாரி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு முதலிப்பட்டியை சேர்ந்த தர்மலிங்கம் (வயது 50), சின்னதுரை (38) உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் தர்மலிங்கம், சின்னத்துரை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதை வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போலீசார் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில் ஆமத்தூர் போலீசார் அவர்களது விசாரணை எல்லைப்பகுதியில் உள்ள ஆனைக்கட்டத்தில் பட்டாசு தயாரிப்பு அனுமதி இல்லாமல் நடைபெற்று வருவதை போலீசார் கண்காணிக்காத நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் தகவல் அறிந்து சோதனை நடத்தி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    நரிக்குடி வட்டார மருத்துவ அலுவலர் ரெங்கசாமி தலைமையிலான மருத்துவ குழுவினர் வீரசோழன் கிராமத்தில் போலி டாக்டர்கள் யாரேனும் உள்ளார்களா என விசாரணை மேற்கொண்டனர்.
    காரியாபட்டி:

    நரிக்குடி பகுதிகளில் போலி டாக்டர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து நரிக்குடி வட்டார மருத்துவ அலுவலர் ரெங்கசாமி தலைமையிலான மருத்துவ குழுவினர் வீரசோழன் கிராமத்தில் போலி டாக்டர்கள் யாரேனும் உள்ளார்களா என விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது வீரசோழன் கிராமத்தில் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் பஞ்சாட்சரம் (வயது 74) என்பவர் தனது குடியிருக்கும் வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இவர் முறையான மருத்துவ படிப்பு இல்லாமல் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து வீரசோழன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், போலி டாக்டர் பஞ்சாட்சரத்தை கைது செய்தனர்.
    மாரிக்கனிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மொட்டமலையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது. அந்த கல் குவாரியில் தண்ணீர் தேங்கி ஒரு குட்டை போன்று உள்ளது. இதில் மொட்டை மலை அருகே உள்ள வன்னியம்பட்டியை சேர்ந்த மாரிக்கனி (வயது 33) மற்றும் சிலர் குளிக்க சென்றனர். அப்போது திடீரென மாரிக்கனிக்கு வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி வன்னியம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வன்னியம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கிய மாரிக்கனியை தேடினர். ஆனால் நீண்ட நேரத்திற்கு பிறகு அவரை உடலை மீட்டனர். இதையடுத்து மாரிக்கனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வன்னியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி அருகே சாலை விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி சிவன் கோவில் நந்தவனம் தெருவை சேர்ந்தவர் மீனா (வயது 41). இவரும் இவரது உறவினருமான பராசக்தி காலனியை சேர்ந்த ஈஸ்வரி (65) என்பவரும் இருசக்கர வாகனத்தில் பழைய விருதுநகர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர். வாகனத்தை மீனா ஓட்டி வந்தார். அப்போது இந்த வாகனத்தை பின்தொடர்ந்து வந்த சக்திவேல் (30) என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் ஈஸ்வரி படுகாயமடைந்து இறந்தார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×