என் மலர்tooltip icon

    வேலூர்

    பேரணாம்பட்டில் இன்று பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் சாலையோர கடையில் டீ குடித்தார். அப்போது இளைஞர்கள் செல்பி எடுத்து கொண்டனர். #UdhayanidhiStalin #dmk

    பேரணாம்பட்டு:

    மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் இறங்கியுள்ளார். நேற்று வேலூர் மண்டித்தெருவில் பிரசாரத்தை தொடங்கினார்.

    இன்று 2-வது நாளாக வேலூர் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். பேரணாம்பட்டில் இன்று பிரசாரம் செய்தார். அங்கு சாலையோர டீ கடையில் கட்சியினருடன் அமர்ந்து டீ குடித்தார்.

    அந்த டீக்கான பணம் வாங்க கடை உரிமையாளர் மறுத்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் 100 ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்தார்.

    பேரணாம்பட்டு மெயின் ரோட்டில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு கேட்டார். அப்போது இளைஞர்கள் கைகொடுத்து செல்பி எடுத்து கொண்டனர். #UdhayanidhiStalin #dmk

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் காவலாளியை கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    வாலாஜா:

    காட்பாடி அடுத்த சேவூர் பகுதியை சேர்ந்தவர் நேதாஜி (வயது 62). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

    ரத்தினகிரியை அடுத்த நந்தியாலம் பகுதியை சேர்ந்தவர் அருள் (40). இவர் சேவூரில் உள்ள இந்தியன் உணவுக்கிடங்கில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேதாஜி நேற்று இரவு 8 மணியளவில் சேவூரில் உள்ள பொது இடத்தில் வைத்து மது அருந்தினார்.

    அப்போது அங்கு வந்து அருளும் மது அருந்தி உள்ளார். இருவரும் அருகருகே அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது திடீரென அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது.

    அப்போது நேதாஜி மதுபோதையில் அருளின் கையில் கடித்தார். அதனால் வலியில் துடித்த அருள் ஆத்திரம் அடைந்து நேதாஜியை சரமாரியாக கைகளால் தாக்கினார்.

    பின்னர் அவரின் தலையை பிடித்து அருகேயுள்ள சுவரில் பலமாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயம் அடைந்த நேதாஜி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதைக்கண்ட அப்பகுதி மக்கள் திருவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நேதாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அருளை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர் அருகே குழந்தைக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கோணாப்பட்டை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 39). இவரது மனைவி நீலா (33). இந்த தம்பதிக்கு பவதாரணி (5). என்ற மகள் இருந்தார்.

    உதயகுமார் பெங்களூருவில் சில ஆண்டாக கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் வீட்டிற்கு வந்த உதயகுமார் மீண்டும் வேலைக்கு செல்லாமல் ஊரைச் சுற்றி வந்தார். இதனால் தம்பதியடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதனிடையே உதயகுமார் தான் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கிறேன் அதற்கு ரூ. 5 லட்சம் தேவைப்படுகிறது என நீலாவிடம் கூறியுள்ளார்.

    இதனை நம்பிய நீலா தனது பெயரில் இருந்த நிலத்தை அடகு வைத்தும் வட்டிக்கு வாங்கியும் ரூ.5 லட்சம் பணத்தை கணவரிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட உதயகுமார் வெளிநாடு செல்வதாக கூறி பெங்களூருவுக்கு சென்று தங்கி விட்டார்.

    பெங்களூருவில் இருந்து உதயகுமார் தான் நல்ல வேலையில் இருப்பதாகவும் நல்ல சம்பவம் கிடைக்கிறது என்று கூறி அவ்வபோது நீலாவிடம் போன் செய்து பேசியுள்ளார். இனியும் கஷ்டபட தேவையில்லை என்று நிலா எண்ணி வந்தார்.

    இந்நிலையில் கணவர் வெளிநாடு செல்லவில்லை பெங்களூருவில் தான் உள்ளார் என்பது நீலாவிற்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நீலா தனது கணவரிடம் இது குறித்து கேட்டார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நீலா நேற்று முன்தினம் தனது குழந்தைக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தானும் வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதை கண்ட உறவினர்கள் 2 பேரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பவதாரணி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    நீலாவிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு நீலா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூரில் இன்று காலை பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #Parliamentelection #LSPolls

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பறக்கும்படை தாசில்தார் ரூபிபாய் தலைமையிலான போலீசார் இன்று காலை வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது காட்பாடியில் இருந்து வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் இருந்த ஒரு பேக்கில் ரூ. 1 லட்சம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பணம் எடுத்து வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் காட்பாடி காந்தி நகரை சேர்ந்த மணிவண்ணன் (45) என்பது தெரியவந்தது.

    சென்னைக்கு பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. பறிமுதல் செய்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை வேலூர் தாசில்தார் பழனியிடம் பறக்கும் படை போலீசார் ஒப்படைத்தனர். #Parliamentelection #LSPolls

    ராணிப்பேட்டை அருகே குடிநீர் கேட்டு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை அருகே உள்ள வேலம் கே.கே.நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ராணிப்பேட்டை சோளிங்கர் செல்லும் சாலையில் இன்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த சோளிங்கர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதியில் உடனடியாக குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர் மாவட்டத்தில் 326 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார். #LSPoll
    ஆம்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய கலெக்டர் ராமன் ஆம்பூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர், தேர்தலுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, தாசில்தார் சுஜாதா மற்றும் தேர்தல் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடக்கிறது. இதனால் ஆம்பூர் தொகுதி மக்கள் 2 வாக்கு செலுத்த வேண்டும். வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ளவர்களுக்கு வருகிற 24-ந் தேதி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்களுக்கு 4 கட்ட பயிற்சி அளிக்கப்படும்.

    வேலூர் மாவட்டத்தில் 326 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கும், ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை வேலூரில் உள்ள தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தான் நடக்கும்’ என்றார்.

    அதைத்தொடர்ந்து வாணியம்பாடி தாலுகா அலுவலகத்திற்கு சென்று தேர்தல் பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்தும், அதன் விவரங்களையும் கேட்டறிந்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, தாசில்தார் முருகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    முன்னதாக குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் பாதுகாப்பு அறைகளை கலெக்டர் எஸ்.ஏ.ராமன் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து மண்டல அலுவலர்களுக்கான வாக்குச்சாவடி மையங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது தாசில்தார் சாந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராமநந்தினி, வட்ட வழங்கல் அலுவலர் நெடுமாறன், துணை தாசில்தார் பலராமன், கிராம நிர்வாக அலுவலர்கள் தரணி, சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர். #LSPoll

    வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பறக்கும்படை சோதனையில் ரூ.2.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    வேலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற இடைதேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    வேட்பாளர்கள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லபடுவதை தடுக்கும் பொருட்டு நிலை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிரவாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பறக்கும்படை தாசில்தார் ரூபிபாய் தலைமையிலான போலீசார் இன்று காலை வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது காட்பாடி வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் இருந்த ஒரு பேக்கில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பணம் எடுத்து வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் காட்பாடி காந்தி நகரை சேர்ந்த பிரசாத் (வயது 44) என்பதும் காண்ட்ராக்ட் தொழில் செய்வதும் தெரியவந்தது.

    தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க சென்னைக்கு பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. பறிமுதல் செய்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை வேலூர் தாசில்தார் பழனியிடம் பறக்கும் படை போலீசார் ஒப்படைத்தனர்.  #LSPolls

    வாலாஜா அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள பெல்லியப்பா நகர் மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் ரஞ்சித் (வயது 22). இவர் தனியார் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அன்டு எலக்ட்ரானிக்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    ரஞ்சித் நேற்று வீட்டிலிருந்து பைக்கில் வாலாஜா நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில் ரஞ்சித் பலத்தகாயமடைந்தார்.

    அவரை மீட்ட உறவினர்கள் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு ரஞ்சித் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரசாரத்தின்போது பிறரின் சொந்த வாழ்க்கை குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சாதி, மத உணர்வுகளை தூண்டி வாக்கு சேகரிக்க கூடாது என வேலூர் டிஎஸ்பி கூறியுள்ளார்.

    வேலூர்:

    அரசியல் கூட்டங்களை இரவு 10 மணிக்கு மேல் நடத்தக்கூடாது என்று வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசினார்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக அனைத்து கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம் வேலூர் காவலர் மன்றத்தில் நேற்று நடந்தது. சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். தெற்கு இன்ஸ்பெக்டர் அழகுராணி வரவேற்றார்.


    கூட்டத்தில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நகர் பகுதிகளில் டிஜிட்டல்பேனர் வைக்க அனுமதி கிடையாது. கிராமப்புறங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே சுவரொட்டி போன்றவை ஒட்ட வேண்டும். ஊர்வலம் செல்ல வேண்டுமானால் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும். அரசியல் கூட்டங்களுக்கும் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். கூட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடத்திலே கூட்டம் நடத்த வேண்டும்.

    பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்களில் அதிகப்படியான மக்களை ஏற்றி வரக்கூடாது என கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. எனவே அதை கடைபிடிக்க வேண்டும். பிரசாரத்தின்போது பிறரின் சொந்த வாழ்க்கை குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும். சாதி, மத உணர்வுகளை தூண்டி வாக்கு சேகரிக்க கூடாது. தேர்தலில் வேட்பாளர்கள் மற்றும் அந்த கட்சியினர் செய்யும் செலவுகள் கணக்கிடப்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான பொருட்களை பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் கூட்டங்களை நடத்த கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அரக்கோணம் அருகே கழிவுநீர் கால்வாயில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் பஜனைகோவில் தெருவை சேர்ந்தவர் ரகுபதி இவரது மனைவி அம்சா (எ) வள்ளி (வயது 40). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். ரகுபதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அம்சா எந்தவித ஆதரவுமின்றி அந்த பகுதியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் திரு.வி.க.தெருவில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அம்சா இன்று காலை இறந்துகிடந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அரக்கோணம் கிராம நிர்வாகி வேலுவிற்கும் அரக்கோணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ் பெக்டர் மஞ்சுநாத் மற்றும் போலீசார் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் அம்சா உடலில் காயங்கள் இருந்தன எனவே அவர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழந்ததில் ஏற்பட்ட காயங்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரணாம்பட்டு அருகே கைது செய்யப்பட்ட சாராய வியாபாரியை விடுவிக்ககோரி உறவினர்கள் போராட்டம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு வனசரகம் அத்திபட்டு மாமரத்து என்ற இடத்தில் வனசரகர் சங்கரய்யா, வனவர்கள் வேல்முருகன், அரி மற்றும் வனத்துறையினர் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வனப்பகுதியில் 3 நபர்கள் துப்பாக்கியுடன் இருப்பதை கண்ட வனத்துறையினர் அவர்களை பிடிக்க சென்றனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    அதில் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் கோட்டைசேரியை சேர்ந்த முரளி (38), என்பதும், அவருடன் வந்தவர்கள் அதே ஊரை சேர்ந்த ராமு (30), அனந்தகிரியை சேர்ந்த வெங்கடேசன் (35) என்பதும் தெரியவந்தது.

    இவர்கள் 3 பேரும் கள்ள சாராயம் காய்ச்சுவது, வனவிலங்குகள் வேட்டையாடுவதை தொழிலாக கொண்டுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து முரளியை கைது செய்த வனத்துறையினர் அவரிடம் இருந்து லைசென்ஸ் இல்லாத நாட்டு துப்பாக்கி, பைக் மற்றும் டார்ச்லைட், கந்தக மருந்து ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் முரளியை வனத்துறையினர் வேனில் ஏற்றிகொண்டு சென்றனர். அப்போது முரளியின் உறவினர்கள் வனத்துறையின் வேனை முற்றுகையிட்டு முரளியை விடுவிக்க வேண்டுமென போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசாருக்கு வனத்துறையினர் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முரளி துப்பாக்கியுடன் சிக்கியதால் அவரை விடுவிக்க முடியாது என கூறி கூட்டத்தை கலைத்தனர்.மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
    ராகுல் காந்தி வருகையால் தமிழகத்தில் பெரிய மாற்றம் உருவாகாது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். #ilaganesan #rahulgandhi #parliamentelection

    வாலாஜா:

    வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் 15ம் ஆண்டு ஸம்வத்சராபிஷேக விழா, 16 தெய்வங்களுக்கு திருக்கல்யாண மஹோத்சவ விழா மற்றும் முரளிதர ஸ்வாமிகள் 58வது ஜெயந்தி விழா முன்னிட்டு நேற்று 108சுமங்கலி பூஜை, கோ மாதா திருக்கல்யாணம், சமஷ்டி உபநயனம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் காலை கணபதி ஹோமம், கோ பூஜை செய்து 108சுமங்கலிக்கு பூஜையும் கோமாதா திருகல்யாணம் நடைபெற்றது.

    இதில் பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன், ரத்தனகிரி பாலமுருகனடிமை ஸ்வாமிகள், ஏர்வாடி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசிர்வதித்து சிறப்பித்தனர்.இதனைதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ராகுல் வருகையால் எந்த ஒரு பெரிய மாற்றம் உருவாகாது. ராகுல் எங்கெல்லாம் பேசுகிறாரோ அங்கெல்லாம் மக்கள் நரேந்திர மோடிக்கு ஆதரவான மனநிலைக்கு மாறுகிறார்கள். மக்களிடத்தில் அபத்தமான கருத்துகளை முன்வைப்பார்கள். இவர்களுடைய சரக்கு இவ்வளவுதான் என மக்கள் நினைப்பார்கள்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. கடந்த முறை பா.ம.க. ஒன்று, பா.ஜ.க. ஒன்று, மற்ற அனைத்தும் அதிமுக கைப்பற்றியது. அப்போது யாருயெல்லாம் வெற்றி பெற்றார்களோ அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம் கூட்டணி வைத்திருக்கிறோம் மீண்டும் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ilaganesan #rahulgandhi #parliamentelection

    ×