என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    போளூர் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கரப்பன் மற்றும் போலீசார் நேற்று பல்வேறு கிராமங்களில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அத்திமூரை அடுத்த காமாட்சிபுரத்தில் சாராயம் விற்ற மகா என்ற மகாதேவன் (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
    பொங்கல் பண்டிகையையொட்டி கடையில் வாங்கி வந்த இனிப்பு சாப்பிட்ட அக்காள்-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 29), கூலித்தொழிலாளி. இவருக்கு பாஞ்சாலை (25) என்ற மனைவி, ஆஷானி (4) என்ற மகளும், ஹரி (3) என்ற மகனும் உண்டு.

    பொங்கல் பண்டிகையையொட்டி பழனி தனது குழந்தைகளுக்கு கடைவீதியில் விற்ற இனிப்பு வகைகளை வாங்கி வந்து கொடுத்துள்ளார். அவர் வாங்கி வந்த இனிப்பு வகைகளை இரு குழந்தைகளும் சாப்பிட்டுள்ளனர். இதனால்  வயிற்றுப்போக்கு ஏற்பட்டு குழந்தைகள் மயக்கம் அடைந்தனர்.

    அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்களின் இரு குழந்தைகளையும் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஆஷானி பரிதாபமாக உயிரிழந்தாள்.

    கவலைக்கிடமாக இருந்த ஹரியை மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஹரி பரிதாபமாக உயிரிழந்தான். இரு குழந்தைகளும் உயிரிழந்ததைப் பார்த்து பெற்றோரும், கிராம மக்களும் கதறி அழுதனர்.

    இதுகுறித்து விசாரித்தபோது, தரமற்ற பழைய இனிப்பு வகைகளை குழந்தைகள் சாப்பிட்டதால் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

    இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு வேட்டகிரிபாளையம் நொளம்பை பகுதியை சேர்ந்தவர் ஜம்பு (வயது 45). அ.தி.மு.க. மேலவை பிரதிநிதி. இவர் தனது மனைவி ரத்னாவுடன் (40) மோட்டார் சைக்கிளில் குப்பம் கிராமம் வழியாக கண்ணமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது குப்பம் வீரகோயில் அருகே உள்ள வளைவில் வந்தபோது, எதிரே வேகமாக வந்த லாரி, ஜம்பு ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜம்பு சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி இறந்துவிட்டார். அவரது மனைவி ரத்னா காயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்தில் தனது கண்முன் இறந்த கணவனின் உடலை பார்த்து ரத்னா கதறி அழுதார்.

    தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜம்புவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஜம்புவின் உடலருகே அவரது மனைவி ரத்னா கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.
    கீழ்பென்னாத்தூர் அருகே மெக்கானிக் கடையில் வைத்து ஆவின் ஊழியரை தாக்கிய கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடியில் மோட்டார்சைக்கிள் பழுதுப் பார்க்கும் மெக்கானிக் கடை வைத்திருப்பவர் சுரேஷ் (வயது 39). ஆராஞ்சியைச் சேர்ந்தவர் பெருமாள் (60), ஆவின் பாலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். பெருமாள், பழுதான தனது மொபட்டை பழுது நீக்கம் செய்து தருமாறு சுரேசின் மெக்கானிக் கடையில் விட்டிருந்தார்.

    அப்போது சோமாசிபாடி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான மைக்கேல் என்ற சத்யராஜ் (32) என்பவரும் தனது மோட்டார்சைக்கிளை கொண்டு வந்து சுரேசிடம் கொடுத்து உடனடியாக பழுது நீக்கி தர வேண்டும், எனக் கேட்டுள்ளார். சத்யராஜை சிறிது நேரம் காத்திருக்குமாறு சுரேஷ் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த சத்யராஜ், சுரேசை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி உள்ளார்.

    தகராறை தடுக்க வந்த பெருமாளை, சத்யராஜ் தகாத வார்த்தைகளால் பேசி, கடையில் கிடந்த ஸ்பேனரால் தலையில் தாக்கி உள்ளார். அதில், படுகாயம் அடைந்த பெருமாள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்ந்தார்.

    இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மைக்கேல் என்ற சத்யராஜ் கைது செய்யப்பட்டார்.
    தமிழக மக்கள் பா.ஜ.க.வை ஆதரிக்க தொடங்கிவிட்டனர் என்று மாநில இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாநில வர்த்தக அணி துணை தலைவர் தணிகைவேல் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து உலக நாடுகள் நடுங்குகின்றன. பா.ஜ.க. நடத்திய வேல் யாத்திரைக்கு பின்பு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் கலக்கமடைந்துள்ளனர்.

    திருவண்ணாமலை சிவ தலத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் அயராது பாடுபட வேண்டும். தமிழக மக்கள் இன்றைக்கு பாரதிய ஜனதாவை ஆதரிக்க தொடங்கிவிட்டனர்.

    இப்போது பாரதிய ஜனதா கட்சியின் அலை நாடு முழுதும் வீசிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசு திட்டங்களை நீங்கள் முனைப்போடு மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    அதிக கோவில்கள் நிறைந்த சிறப்புமிக்க மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இங்கு நாயன்மார்கள், கட்டபொம்மன், கொடிகாத்தகுமரன் போன்ற நல்லோர்கள் பிறந்துள்ளனர்.

    தமிழகத்தில் 6 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடியை மத்திய அரசு வளர்ச்சிப் பணிகளுக்காக வழங்கி உள்ளது.

    ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூ.90 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்பட்டது. எனவே தமிழகத்தின் மீது அக்கறை உள்ள அரசாக பாரதிய ஜனதா கட்சி திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    இதையெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் மாபெரும் வெற்றியடைய நீங்கள் அயராது பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.15½ கோடிக்கு மதுபானம் விற்பனை ஆனது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் மூலம் 218 கடைகள் செயல்பட்டு வருகிறது. இக்கடைகள் மூலம் வழக்கமாக ஒரு நாளைக்கு சுமார் ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பில் மதுபானம் விற்பனை நடைபெறும்.

    இந்த நிலையில் பொங்கலன்று ரூ.9 கோடியே 89 லட்சத்து 4 ஆயிரத்து 330 மதிப்பில் மதுபானம் விற்பனை நடைபெற்றுள்ளது.

    அதாவது வழக்கத்தை விட நேற்றுமுன்தினம் ஒரு நாளில் 3 மடங்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது.

    நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் மது பிரியர்கள் ஒரு நாளைக்கு முன்பே மதுபானங்களை வாங்கி இருக்கலாம். அதனால் மதுபான விற்பனை அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதேபோல் பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை அன்று ரூ. 5 கோடியே 60 லட்சம் மதிப்பில் மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கீழ்பென்னாத்தூர் அருகே படிக்கட்டில் தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள மேக்களூரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 56). நேற்று முன்தினம் இவரது மளிகை கடையில் குளிர்பான பாட்டில்களை மாட்டுவதற்காக ஸ்டூல் மீது ஏறி நின்றுகொண்டு மாட்டிக் கொண்டிருந்தார். அப்போது, கால் தவறி அருகிலிருந்த படிக்கட்டில் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தண்டராம்பட்டு அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட மல்லிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தீனதயாளன், விவசாயி. இவரது மனைவி இளவரசி (வயது 42). இவரும் இவரது மகன் லக்னேஸ் (16) ஆகிய இருவரும் பொங்கல் பண்டிகைக்கு துணி எடுப்பதற்காக திருவண்ணாமலைக்கு வந்தனர். துணிகளை வாங்கிக்கொண்டு இரவு வீட்டுக்கு திரும்பிச் சென்றனர். மேல்செட்டிப்பட்டு கிராமம் அருகே வந்தபோது ஹெல்மெட் அணிந்து இவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று இளவரசியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இந்த சம்பவத்தின் போது நிலைதடுமாறி தாய்-மகன் இருவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இருவரின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
    ஆரணி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த கல்லோரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது 60), கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு ஆரணி - வந்தவாசி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். கல்லோரிப்பட்டு கூட்ரோடு அருகே செல்லும் போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிச்சாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டி.தரணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் காலை தாமரைக் குளக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது குளக்கரையில் சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று திருவூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வரலாற்று கதை கூறப்படுகிறது. அதாவது பிருங்கி என்ற முனிவர் அருணாசலேஸ்வரரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில் அருணாசலேஸ்வரரும், அம்மனும் ஒன்றாக இருந்தபோது அவர் வண்டு உருவில் அருணாசலேஸ்வரரை மட்டும் சுற்றி வந்து வணங்கி இருக்கிறார். இதனால் சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த ஊடல் மற்றும் கூடலை விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவூடல் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது.

    மேலும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்திகளுக்கு வடை, அதிரசம், முருக்கு, காய், கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு, பூ மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    சாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் திருவூடல் விழாவுக்கு புறப்பட்டனர். அதிகாலையில் நந்திக்கு தரிசனம் கொடுத்து விட்டு திட்டி வாயிலில் சூரிய பகவானுக்கும் காட்சி கொடுத்து மாடவீதியை 3 முறை சுற்றி வந்தனர். அதைத்தொடர்ந்து இரவு சுமார் 7 மணி அளவில் திருவூடல் தெருவில் திருவூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருவூடல் திருவிழாவின் போது சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு அம்மன் மீண்டும் கோவிலுக்கு சென்று விட்டார். அருணாசலேஸ்வரர் மட்டும் குமரக்கோவிலுக்கு சென்று விட்டார். அங்கிருந்து இன்று (சனிக்கிழமை) பக்தர்கள் கிரிவலம் செல்வது போன்று அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்வார். கிரிவலம் முடித்து விட்டு கோவிலுக்கு வரும் போது சாமி சன்னதியில் மறுவூடல் நடக்கும். இதனுடன் திருவூடல் திருவிழா முடிகிறது.

    மேலும் விடுமுறை தினமான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    ஆரணி கோட்டை அறம் வளர்த்த நாயகி உடனுறை கைலாயநாதர் சிவன் கோவிலில் மாட்டுப் பொங்கலையொட்டி திருவூடல் விழா நடைபெற்றது. கோவில் வெளிப்புறத்தில் அமைந்துள்ள அதிகாரநந்திக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, தொடர்ந்து நந்திக்கு காய்கறிகள், மலர்கள், இனிப்பு, கார வகைகளால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சாமியை ராஜகோபுரத்தின் வழியாக அதிகார நந்தி காட்சிதரும்படி அலங்கரித்து வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் புதுகாமூர் பகுதியில் அமைந்துள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை பூமிநாதர் கோவில், மெய்யூர் மெய்கண்டீஸ்வரர் கோவில், சேவூர் - பையூர் பகுதியிலுள்ள விருபாட்சீஸ்வரர் கோவில், எஸ்.வி. நகரம் பகுதியில் உள்ள திரைகேபேஸ்வரர் சிவன் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் திருவூடல் விழா நடைபெற்றது.
    தூசி அருகே மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூசி:

    தூசி அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். அவரது மகன் அண்ணாதுரை (வயது 23), கட்டிட தொழிலாளி. இவர், மோட்டார் சைக்கிளில் சித்தாத்தூர் தண்ணீர் டேங்க் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென அண்ணாதுரை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அண்ணாதுரையின் மனைவி பிரியதர்ஷினி தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருவண்ணாமலை அருகே மின்சாரம் தாக்கி போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த அடிஅண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 25). அதேப் பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். இந்த நிலையில் அவர் தனது கடையின் பெயர் பலகையை புதுப்பிப்பதற்காக அதை கடையின் மீது ஏறி கழட்டியுள்ளார். அப்போது அவருடன் அதே பகுதியில் 2 பேர் இருந்து உள்ளனர். பெயர் பலகை கழட்டும் போது எதிர்பாரத வீதமாக கடைக்கு மேல் சென்ற மின்சார வயர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து லோகநாதன் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் லோகநாதன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்ற 2 பேரும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×