என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • திட்டமிட்டு வரவழைத்து எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை
    • எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க. மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவலர் சென்றுள்ளனர்.

    மோதலை தடுத்து எஸ்.ஐ. சண்முகவேல் சமாதானப்படுத்த முயன்றபோது அவர்கள் சண்முகவேல் வெட்டி கொன்றுள்ளனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது. சண்முகவேல் உடலுக்கு காவல் துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில், எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளனர். மேலும் மணிகண்டன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

    • வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்ற பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
    • பிரீத்திக்கு கடந்தாண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி சதீஷ்வர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

    திருப்பூர் மாவட்டத்தில் ரிதன்யா (வயது 27) என்ற பெண் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய ஆடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து, ரிதன்யா தற்கொலை செய்த விவகாரத்தில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், திருப்பூரில் வரதட்சணைக் கொடுமையால் மேலும் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்ற பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

    பிரீத்திக்கு கடந்தாண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி சதீஷ்வர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது கணவர் குடும்பத்திற்கு 120 சவரன், 25 லட்சம் ரொக்கம், இன்னோவா கார் உள்ளிட்டவை தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே, பெண்ணின் பூர்வீகச் சொத்து விற்பனையில் வந்த ரூ.50 லட்சத்தை கேட்டு கணவர் குடும்பத்தினர் பிரீத்தியை கொடுமைப்படுத்தியதாகி கூறப்படுகிறது

    இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    • மூர்த்தி 2ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த நிலையில், அவரது மகன்கள் ஒரு மாதத்திற்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்தனர்.
    • கொலை செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் சிறந்த அதிகாரி.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் குடும்பத்தினரை திருப்பூர் புறகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான சி.மகேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் மகேந்திரன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது தோட்டத்தில் வேலைக்கு சேர்ந்த மூர்த்தி, அவரது மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோரிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சரிபார்த்த பிறகே வேலையில் சேர்த்தேன். மூர்த்தி 2ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த நிலையில், அவரது மகன்கள் ஒரு மாதத்திற்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்தனர். கொலை செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் சிறந்த அதிகாரி.

    அவர் கொலை செய்யப்பட்டது எல்லோருக்கும் வருத்தத்தை அளிக்கிறது. அவரது மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.

    • அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவலர் சென்றுள்ளனர்.
    • மோதலில் ஈடுபட்ட 4 பேரும் திட்டமிட்டு வரவழைத்து எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டி கொன்றனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க. மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவலர் சென்றுள்ளனர்.

    மோதலை தடுத்து எஸ்.ஐ. சண்முகவேல் சமாதானப்படுத்த முயன்றபோது அவர்கள் சண்முகவேல் வெட்டி கொன்றுள்ளனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுபோதையில் மோதலில் ஈடுபட்ட 4 பேரும் திட்டமிட்டு வரவழைத்து எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டி கொன்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டிக் கொன்றதாக கூறப்படும் மணிகண்டன், அவரது சகோதரர், தந்தையும் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக மணிகண்டன் உள்ளிட்டோரை கைது செய்ய அமைக்கப்பட்டுள்ள 6 தனிப்படை போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வெட்டிக்கொலை.
    • 4 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச்செயலை செய்துள்ளது.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த நிலையில், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

    நேற்றிரவு அப்பாவுக்கும் மகனுக்கும்  இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. காவல் நிலையத்தில் இருந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான சண்முகவேலிடம் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவரும் ஒரு காவலரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தகராறு ஏற்பட்ட இருவரையும் அழைத்து பேசியுள்ளார். அவர்களை சமாதானம் செய்து வைத்துவிட்டு திரும்பியுள்ளார். அப்போது ஒருவர் திடீரென சப்-இன்ஸ்பெக்டர் மீது பயங்கரமாக தாக்கியுள்ளார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    • ஒவ்வொரு ஆண்டும் பலர் தன்னெழுச்சியாக ஆர்டர்கள் தருகின்றனர்.
    • சுதந்திர தினத்தை எழுச்சியாக கொண்டாடுவது எங்களுக்கு கிடைக்கும் ஆர்டர் வாயிலாகவே தெரிய வருகிறது.

    திருப்பூர்:

    வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாட நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் ஆயத்தமாகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் தேசியக்கொடி தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து திருப்பூரை சேர்ந்த கொடி உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-

    வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தையொட்டி, தேசியக்கொடி தயாரிப்புக்கான ஆர்டர்கள் வந்துள்ளது. ஆண்டுதோறும் தேசிய கொடிகளை தயாரித்து வருகிறோம். ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள தேசிய கொடிகளை இப்போது விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகிறோம்.

    ஆர்டர்களின் பேரில் பெற்ற கொடிகள் தயாரிப்பு பணி இரவு-பகலாக நடந்து வருகிறது. சில பின்னலாடை நிறுவனங்களும் இதில் ஈடுபட்டுள்ளன. பெண்கள் பலர் வீடுகளிலேயே வைத்து தயாரிக்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் பலர் தன்னெழுச்சியாக ஆர்டர்கள் தருகின்றனர். முன்பெல்லாம் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் தேசிய கொடியை பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது பலர் புதிதாகவே வாங்கி ஏற்றுகின்றனர். இதன் மூலம் எங்களுக்கு லட்சக்கணக்கான கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் கிடைக்கிறது.

    வீடுகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றி, சுதந்திர தினத்தை எழுச்சியாக கொண்டாடுவது எங்களுக்கு கிடைக்கும் ஆர்டர் வாயிலாகவே தெரிய வருகிறது.

    10க்கு 16 இன்ச், 18க்கு 22 இன்ச், 20க்கு 26இன்ச், 20க்கு 40 இன்ச், 40க்கு 60இன்ச் என பல்வேறு அளவுகளில் கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. ரூ.2 முதல் ரூ.300 வரை கொடிகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்டர்களுக்கு ஏற்றவாறு நீளமான கொடிகளும் தயாரிக்கப்படுகிறது. ஐதராபாத்தில் பிரிண்டிங் செய்து, அங்கிருந்து கொண்டு வந்து வெட்டி தைக்கிறோம். தற்போது தேசியக்கொடி தைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அனைவரும் 10-ந்தேதிக்குள் தைத்துத்தர கேட்டிருப்பதால் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன என்றார். 

    • கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து இரவு மாரி முத்துவின் உடலை பெற்றுக்கொண்டனர்.
    • சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மேல்குருமலை பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 58). இவர் புலிப்பல் வைத்திருந்ததாக கூறி, கடந்த 29-ந்தேதி உடுமலை வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

    இந்நிலையில் வனத்துறை அலுவலகத்தில் உள்ள குளியலறையில் மாரிமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என வனத்துறையினர் தெரிவித்தனர். தகவல் அறிந்த மாரிமுத்துவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வனத்துறையினர் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தியதால் மாரிமுத்து உயிரிழந்தார் என்று குற்றம் சாட்டினர். போலீசார், வருவாய் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனைக்காக மாரிமுத்து உடலை திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    நேற்று காலை உடுமலை மாஜிஸ்திரேட்டு நித்யகலா முன்னிலையில் மருத்துவர் குழுவினர் பிரேத பரிசோதனை நடத்தினர். பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. உடுமலை ஆர்.டி.ஓ., குமார், டி.எஸ்.பி., நமசிவாயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    மருத்துவமனை வளாகத்தில் மாரிமுத்துவின் உறவினர்கள் திரண்டிருந்தனர். அவரது குடும்பத்தினர் அடையாளம் உறுதிப்படுத்திய பின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது.

    பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் அங்கு திரண்டிருந்த மாரிமுத்துவின் உறவினர்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பிரேத பரிசோதனை கூடம் முன் அமர்ந்து உடலை வாங்க மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாரிமுத்துவின் உறவினர்கள், பிரேத பரிசோதனை வீடியோ பதிவுகளை வழங்க வேண்டும். இந்த வழக்கை வன்கொடுமை சட்டத்தில் சேர்க்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து இரவு மாரி முத்துவின் உடலை பெற்றுக்கொண்டனர்.

    இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தினர். இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரக வனவர் நிமல் குமார், வனக்காவலர் செந்தில்குமார் ஆகியோரை சஸ்பெண்டு செய்து திருப்பூர் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். 

    • போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
    • பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இங்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி நேற்று மாலை கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருந்த அசாம் மாநில வாலிபர் ஒருவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    இது குறித்து சிறுமி வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சிறுமி மாலை தனது தாயிடம் அடி வயிற்றில் வலி ஏற்படுவதாகவும், மேலும் பள்ளியில் நடந்த சம்பவத்தையும் கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த நபரை கைது செய்ய கோரி முழக்கங்களை எழுப்பினர்.

    இது குறித்து தகவலறிந்த கே.வி.ஆர் நகர் சரக உதவி கமிஷனர் ஜான் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய அசாமை சேர்ந்த ஜெய் (27) என்பவரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை 100க்கு மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி முன்பு ஒன்று கூடி பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளி நிர்வாகம் நடந்த சம்பவத்திற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .

    • மாரிமுத்து கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • மாரிமுத்துவை கொலை செய்து விட்டதாக மலைவாழ் மக்கள் குற்றச்சாட்டு.

    உடுமலை:

    உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மேல்குருமலை செட்டில்மெண்ட்டைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45).

    இவர் தமிழக கேரள எல்லையில் நேற்று இரவு புலிப்பல் கடத்தி வரும்போது வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் விசாரணைக்காக உடுமலை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணைக்கு பின்னர் அலுவலர்கள் வெளியே சென்றனர். அப்போது மாரிமுத்து கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

    கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் வன ஊழியர்கள் கழிவறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் மாரிமுத்து பிணமாக கிடந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த வன ஊழியர்கள் இதுகுறித்து உடுமலை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் உடுமலை டிஎஸ்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே, மாரிமுத்துவை கொலை செய்து விட்டதாக கருமுட்டி மேல் குருமலையைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    தொடர்ந்து தற்கொலை குறித்து வன அலுவலர் ராஜேஷ், வருவாய் கோட்டாட்சியர் குமார், உடுமலை டி.எஸ்.பி நமச்சிவாயம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் உடுமலையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

    • நான் என் சங்கரை இழந்த பின்பு யாரும் இல்லாத அனாதை போலவே நின்றேன்.
    • எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் நீதியின் பக்கம் என் காதலின் பக்கம் என்னால் உறுதி குலையாது வாழ முடிகிறது !

    பாளையங்கோட்டையில் ஐ.டி. ஊழியர் கவின் ஆணவ கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கவினின் காதலியின் சகோதரனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கைதான சுர்ஜித்தின் பெற்றோரும், சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி கவினின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கவினும், அந்த பெண்ணும் இருக்கும் புகைப்படத்தை அவரது உறவினர்கள் வெளியிட்டு, இதை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.

    இந்த நிலையில், ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கௌசல்யா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவினின் காதலிக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தோழி சுபாஷிணிக்கு,

    வணக்கம். நான் கெளசல்யா எழுதுகிறேன். முதலில் எனது வேண்டுகோள்: என்ன ஆனாலும் நீங்கள் கவின் பக்கம்தான் நிற்க வேண்டும்!

    இங்கு கொலையுண்டு கிடப்பது நீங்கள் நேசித்த, கரம் பிடித்த, கை கோர்த்து நடந்த காதலன்! நீங்கள் அழைத்ததற்காகத்தான் கவின் உங்கள் தம்பியிடம் பேச சென்றிருப்பான்! கவினுக்கான நீதியின் பக்கம் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும்! அப்படிச் செய்தால் என் வாழ்க்கை என்ன ஆகும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதை என்னால் புரிந்து கொள்ள இயலும்.

    நான் என் சங்கரை இழந்த பின்பு யாரும் இல்லாத அனாதை போலவே நின்றேன். ஒவ்வொரு பெரியாரிய அம்பேத்கரியத், மார்க்சிய தோழர்களும் அவர்களின் பிள்ளையைப் போல் என்னை அரவணைத்துக் கொண்டனர். இன்று வரை (10ஆண்டு ஆகப் போகிறது) சாதியைத் தூக்கிப் பிடித்த குடும்பத்துடன் எந்த உறவும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறது. அதற்குத் தோழர்கள் என்னை தங்கள் மகளாக பார்த்து கொண்டு என் சுயமரியாதையுடன் சொந்த காலில் நிற்க இன்று வரை உடன் இருக்கின்றனர்!

    எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் நீதியின் பக்கம் என் காதலின் பக்கம் என்னால் உறுதி குலையாது வாழ முடிகிறது ! காரணம் சங்கரின் வழக்கில் எந்த இடத்திலும் நான் பொய் சொல்லவில்லை! சமரசம் இப்போது வரை செய்து கொள்ளவில்லை ! இனியும் செய்து கொள்ள மாட்டேன். நான் தொடக்கத்தில் சந்தித்த நெருக்கடிகள் பெரிது. என்னைப் போல் உன்னையும் சாதி வெறியர்கள் பற்றிக் கொள்வார்கள்! எவராக இருந்தாலும் என்ன அழுத்தம் தரப்பட்டாலும் உன் கவினுக்காகத் துணிவோடு நில்! உன் பக்கம் நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்! நடந்ததை அப்படியே சட்டத்தின் முன் சொல்ல வேண்டும்! நீ கவினின் காதலுக்கு நேர்மையாக இருப்பாய் என்பதை உணர்வேன். கவினின் உயிருக்கு விடை எடுத்தாக வேண்டும். கவினுக்காக மட்டுமல்ல கவின்களுக்காகவும் உன்னிடம் இறைஞ்சுகிறேன். தோழி! எல்லாவற்றையும் தாண்டி நான் இருக்கிறேன். கவினின் நீதிக்கு நானும் உன்னோடு இணைந்து கொள்கிறேன். வா ! எதற்கும் அஞ்சாதே! உன்னைத் தாங்கிக் கொள்ள நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்!

    அன்புடன்,

    கெளசல்யா

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

    • உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.
    • கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்கிருந்து சுமார் 750 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.

    இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று அருவி பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அருவியை மூழ்கடித்தப்படி வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது.

    காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில், கன்னிமார் கோவில், மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது. கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிப்பதற்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. இன்றும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணையை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    கடந்த 3 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து 12 ஆயிரம் கன அடி உபரிநீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்தால் கூடுதலாக உபரி நீர் திறப்பதற்கும் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

    இதனால் அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளான உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், அரவக்குறிச்சி, மண்மங்கலம் மற்றும் கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் வசித்து வரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும் உடுமலையின் சுற்றுப்புற பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் முற்றிலுமாக குறைந்து குளுகுளு காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • முனியன் என்பவரது மனைவி பானுமதி 5 மாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • இன்று காலை நகர்நல அலுவலர் முருகன், டி.எஸ்.கே., மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் அவிநாசி சாலை பங்களா ஸ்டாப் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் டி.எஸ்.கே. மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்பூர் வடக்கு பகுதியை சேர்ந்த ஏராளமான கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்குப்பட்ட சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த முனியன் என்பவரது மனைவி பானுமதி 5 மாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நேற்று வழக்கமான பரிசோதனைக்கு சென்று இருந்த பானுமதிக்கு குளுக்கோஸ் பாக்கெட்கள் வழங்கி உள்ளனர். அதில் காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பானுமதி கேட்டபோது, ஆஸ்பத்திரி ஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து பானுமதி தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி உதவி நல அலுவலர் கலைச்செல்வன், ஆஸ்பத்திரிக்கு வந்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் ஆஸ்பத்திரியில் இருந்த குளுக்கோஸ் பாக்கெட்டுகளையும் ஆய்வு செய்தார்.

    அப்போது அதில் ஒரு சில காலாவதியான பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கவனக்குறைவாக நடந்து கொண்ட ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு அவர் கடும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் விசாரணை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை நகர்நல அலுவலர் முருகன், டி.எஸ்.கே., மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து விசாரணையின் அடிப்படையில் மருத்துவமனையின் மருந்தாளுனர் வீர பராசக்தி, ஆய்வக நுட்பனர் நாகஜோதி, செவிலியர் கோமதி உள்ளிட்டோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட்டுகள் அப்புறப்படுத்தப்பட்டது. அஜாக்கிரதையாக செயல்படாமல் கவனமாக செயல்பட மருத்துவர்கள் முன்னிலையில் மருத்துவ பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    ×