என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேயிலை நிர்வாகம் சார்பில் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    • தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர்.

    நெல்லை:

    மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை நிர்வகித்து வந்த பாம்பே பர்மா நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிவடைய உள்ளதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேயிலை நிர்வாகம் சார்பில் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக விசாரித்த ஐகோர்ட்டு, தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வரை அவர்களை மாஞ்சோலையில் இருந்து கீழே இறக்க கூடாது என்று உத்தரவிட்டது.

    இதுகுறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கடந்த மாதம் 20-ந்தேதி தேசிய மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி விஜய பாரதி சயானிடம் புகார் அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட மனித உரிமை ஆணையம் உடனடியாக தலைமை விசாரணை இயக்குனர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இந்த குழு மாஞ்சோலை பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்த நிலையில் தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை குழு அதிகாரிகளான ரவி சிங், யோகேந்திர குமார் திரிபாதி ஆகியோர் அடங்கிய குழு இன்று நெல்லை வந்துள்ளது. மொத்தம் 4 நாட்கள் நெல்லையில் முகாமிட்டு இந்த குழு விசாரிக்க உள்ளது. தொடக்க நாளான இன்று இந்த குழுவானது மாஞ்சோலைக்கு நேரில் சென்று மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மக்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து நாளையும் அந்த குழு மாஞ்சோலையில் விசாரணை நடத்துகிறது.

    அவர்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர். பின்னர் பர்மா தேயிலை நிர்வாகத்திடம் ஆய்வுகளை மேற்கொண்டு, மாஞ்சோலையில் அமைந்துள்ள தொழிற்சாலை, தேயிலை தோட்டம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்கிறார்கள்.

    முன்னதாக இன்று காலை தொழிலாளர் துறையின் தோட்டங்கள் பிரிவின் உதவி ஆணையர் விக்டோரியா மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா ஆகியோருடனும் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அந்த குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    தொடர்ந்து மாஞ்சோலை தொடர்பான முழு விவரங்கள், அது தொடர்பான நீதிமன்ற வழக்குகள், அரசு எடுத்துள்ள மறுவாழ்வு நடவடிக்கைகள், அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனிடம் விரிவாக கேட்டறிந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அம்பாசமுத்திரம் புலிகள் சரணாலய துணை இயக்குனர் இளையராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் சுமார் 1½ மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர்.

    அவர்களிடம் மாஞ்சோலை தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் அடங்கிய 1,125 பக்க அறிக்கையை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.

    • ஒவ்வொரு இடங்களிலும் ஒரு பட்டாலியன் என்று அழைப்பார்கள்.
    • ஆட்சியாளர்கள் மக்கள் நலன் சார்ந்தே முடிவெடுப்பார்கள்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் தேசிய பேரிடர் குழுவின் மண்டல மையத்தை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் இயற்கை பேரிடர்கள் அதிகமாக ஏற்பட்ட காலத்தில் பொதுமக்களை பாதுகாப்பதற்கு என்ன செய்யலாம் என்பதற்காக 2005-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி இந்த தேசிய பேரிடர் ஆணையம் ஒன்று இந்திய அளவில் உருவாக்கப்பட்டது.

    2006-ம் ஆண்டு , முதல் கட்டமாக 6 மாநிலங்களில் 6 இடங்களில் இந்த தேசிய பேரிடர் மேலாண்மை பட்டாலியன் அமைக்கப்பட்டது. முதல் முதலாக அசாம், மேற்கு வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் உட்பட 6 இடங்களில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இந்தியா முழுவதும் 16 இடங்களில் உள்ளது . ஒவ்வொரு இடங்களிலும் ஒரு பட்டாலியன் என்று அழைப்பார்கள்.

    பட்டாலியன் என்றால் 18 குழுக்கள் இருக்கும். ஒவ்வொரு குழுவிலும் 47 தேர்ந்தெடுக்கப்பட்ட படைவீரர்கள் இருப்பார்கள். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உட்பட இந்த பகுதிகளுக்கு ஏதேனும் பேரிடர் ஏற்பட்டால் இந்த குழுவினர் தான் முதன் முதலாக சென்று மீட்பு பணியில் ஈடுபடுவர்.

    அரக்கோணத்தில் இருந்து ஏற்கனவே ஒரு மையம், கேரள மாநிலம் திருச்சூரில் ஆரம்பிக்கப்பட்டது. 3-வது சென்னையில் ஒன்று ஆரம்பிப்பதற்கு உத்தரவிடப்பட்டு அதிவிரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது . இப்போது ராதாபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது நம்முடைய முதலமைச்சர் அனுமதியோடு நமது மாவட்ட கலெக்டர் கடுமையான முயற்சி செய்து இந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


    இதில் 30 வீரர்கள் தொடர்ந்து பணியில் இருப்பார்கள். இந்த பகுதியில் எந்த பிரச்சனையில் ஏற்பட்டாலும் உடனடியாக இவர்கள் அரக்கோணத்தில் இருக்கின்ற அந்த தலைமை அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு மீட்பு பணியை செய்வார்கள். மேலும் மாநில பேரிடர் குழு, மாவட்ட அளவிலும் பேரிடர் குழு உள்ளது. அதனுடனும் இணைந்து தேசிய பேரிடர் குழுவினர் செயல்படுவார்கள்.

    ராதாபுரத்தில் பேரிடர் மீட்பு குழு மண்டல மையம் அமைந்துள்ளதற்கு தமிழக அரசு சார்பிலும், இப்பகுதி மக்கள் சார்ரபிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மதுவிலக்கு விவகாரத்தில் முதலமைச்சரும், திருமாவளவனும் நாடகம் ஆடுவதாக மத்திய இணைமந்திரி எல்.முருகன் கூறினார். மது விலக்கு என்பது ஒருகட்சியின் கொள்கை. அவர்கள் மாநாடு நடத்தலாம். அதில் தப்பு இல்லை. மக்கள் விரும்புவர்களே ஆட்சிக்கு வருவார்கள். அந்த ஆட்சியாளர்கள் மக்கள் நலன் சார்ந்தே முடிவெடுப்பார்கள்.

    பிரதமர் மோடி இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டு வந்தால் தமிழகம் அதற்கு தடையாக இருக்காது. நிரந்தரமாக தேசிய பேரிடர் மையம் அமைவதற்கு நெல்லை மாவட்டம் வள்ளியூர் மற்றும் ராதாபுரம் பகுதிகளில் 5 ஏக்கர் இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோட்டார் சைக்கிள் நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
    • விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40).

    இவருக்கு மனைவி மற்றும் மாரீஸ்வரி (12), சமீரா (7) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதி பகுதியில் குடியிருந்து வருகிறார்.

    கண்ணன் இன்று காலை தனது 2 மகள்கள் மற்றும் மாமியார் ஆண்டாள் (67) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு நெல்லைக்கு புறப்பட்டார்.

    மோட்டார் சைக்கிள் நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது சேரன்மகாதேவியில் இருந்து நெல்லை தச்சநல்லூர் பகுதியில் உள்ள பெட்ரோல் கிடங்கில் டீசல் ஏற்றுவதற்காக ஒரு டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரி வடக்கு பைபாஸ் சாலையில் உலகம்மன் கோவில் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கண்ணன், மாரீஸ்வரி, சமீரா, ஆண்டாள் ஆகியோர் மீது மோதியது.

    இதில் கண்ணன் உள்பட 4 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

    இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் பலியான கண்ணன் உள்பட 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா, துணை கமிஷனர் கீதா, உதவி கமிஷனர் செந்தில் குமார் ஆகியோரும் வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் விபத்து தொடர்பாக டேங்கர் லாரியை ஓட்டி வந்த நெல்லை பத்தமடையை சேர்ந்த கணேசன் என்ற டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலியான இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சண்முக விலாசம் மண்டபம் முன்பு மனம் உருகி வேண்டிக் கொண்டார்.
    • ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நடிகர் விஷால் திருச்சி ஆதீனத்துடன் நேற்று வந்தார். அவர் கோவில் மூலவர் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து சுவாமி சண்முகர், சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் சண்முக விலாசம் மண்டபம் முன்பு மனம் உருகி வேண்டிக் கொண்டார்.

    வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதையடுத்து விஷால் திருச்சி ஆதீனத்துடன் பேட்டரி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிறுவன் தாக்கப்படும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ளவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இசக்கி ராணியை கைது செய்தனர். தலைமுறைவான ஜோதி கிளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவையை சேர்ந்தவர் ஜோதி கிளி. தொழிலாளி. இவரது மனைவி இசக்கிராணி. இவர்களது மகன் தருவையில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியில் இந்த மாணவனுக்கும், சக மாணவனுக்கும் இடையே சிறு பிரச்சனை ஏற்பட்டு அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

    இதில் சக மாணவர் தன்னை தாக்கியதாக ஜோதிகிளியின் மகன் தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த ஜோதி கிளி நேராக தனது மகனை தாக்கிய சக மாணவனை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். தொடர்ந்து ஜோதி கிளியின் மனைவி இசக்கிராணியும் சிறுவனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சிறுவன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக ஊர் பெரியவர்கள் பேசி இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

    இந்நிலையில் சிறுவன் தாக்கப்படும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ளவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதையடுத்து முன்னீர்பள்ளம் போலீசார் காயம் அடைந்த மாணவனின் தாயாரிடம் புகார் மனு பெற்று சிறுவனை தாக்கிய ஜோதி கிளி மற்றும் அவரது மனைவி இசக்கிராணி ஆகியோர் மீது சிறுவனையும், அவனது தாயாரையும் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் கொடுத்ததாகவும், சிறுவனை தாக்கியதாகவும் கூறி இந்திய தண்டனைச் சட்டம் 294 பி, 323, 506 (2), பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இசக்கி ராணியை கைது செய்தனர். தலைமுறைவான ஜோதி கிளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தப்பியோடிய பஞ்சாயத்து தலைவியின் கணவர் முருகேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
    • மண் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட டிராக்டர், ஜே.சி.பி எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இருக்கன்துறையை சேர்ந்தவர் முருகன் என்ற முருகேசன் (வயது 45). இவரது மனைவி இந்திரா. இவர் இருக்கன்துறை பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில் முருகேசன் அந்த பகுதியில் உள்ள குளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று அள்ளி வந்தார். ஆனால் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிய குளத்தில் மட்டு மல்லாது, அரசு விதிகளை மீறி அந்த குளத்தின் அருகே இருந்த சங்கனேரி குளத்திலும் திருட்டுத்தனமாக அவர் மண் எடுப்பதாக புகார்கள் எழுந்தது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட குளத்திற்கு சென்று மண்டல துணை தாசில்தார் பாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த குளத்திற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் டிராக்டர் மற்றும் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக மண் அள்ளப்பட்டது உறுதியானது.

    இதனைத்தொடர்ந்து மண்டல துணை தாசில்தார் பாலகிருஷ்ணன் கூடங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றார்.

    தொடர்ந்து அங்கு மண் திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வள்ளியூர் அருகே உள்ள திருமலாபுரத்தை சேர்ந்த தனராஜ், ஆனந்தகுமார் என்ற 2 டிரைவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். போலீசார் வருவதை கண்டதும் முருகேசன் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து முருகேசன் உள்பட 3 பேர் மீதும் போலீசார் மண் திருட்டு வழக்குப்பதிவு செய்து தனராஜ், ஆனந்த குமார் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய பஞ்சாயத்து தலைவியின் கணவர் முருகேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் மண் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட டிராக்டர், ஜே.சி.பி எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

    • குழந்தைகள் வார்டில் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளையங்கோட்டை செந்தில் நகரை சேர்ந்தவர் மாரி செல்வம். இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு சந்திரலிங்கம் (வயது 2), சூரியலிங்கம்(2) ஆகிய இரட்டை குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் மாரி செல்வம் இறந்து விட்டார்.

    இதனால் செந்தில்நகரில் உள்ள வாடகை வீட்டில் மஞ்சு தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். நேற்று காலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த இரட்டை குழந்தைகள் அங்கிருந்த கொசுவர்த்தி சுருளை மிட்டாய் என நினைத்து கடித்து தின்றதாகவும், அதனை அவரது தாயார் மஞ்சு கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்றிரவு குழந்தைகள் 2 பேரையும் மஞ்சு தூங்க வைத்தபோது, அவர்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கம் போட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சு உடனடியாக குழந்தைகள் 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார்.

    அங்குள்ள குழந்தைகள் வார்டில் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் 2 பேரும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மஞ்சு தனது முதல் கணவரை பிரிந்துவிட்டு, 2-வதாக மாரி செல்வத்தை திருமணம் செய்து கொண்டார். அவரும் சமீபத்தில் இறந்துவிட்டார்.

    இந்த நிலையில் தற்போது குழந்தைகள் விஷம் சாப்பிட்டதாக கூறப்படுவதால் பாளையங்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மார்க்கெட்டில் பாதி அளவு கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கடைகள் திறக்கப்படவில்லை.

    நெல்லை:

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் (வயது 76), உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் சென்னையில் மரணம் அடைந்தார்.

    அவரது உடல் இன்று அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பிச்சி விளையில் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    இதனையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. நெல்லை மாநகர பகுதியில் பாளை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்கத்தினர் கடைகளை அடைத்திருந்தனர்.

    இதில் தலைவர் சால மோன், பொதுச்செயலாளர் பெரிய பெருமாள், பொருளாளர் இசக்கி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமான கடைக்காரர்கள் வெள்ளையன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். அதேநேரத்தில் மார்க்கெட்டில் பாதி அளவு கடைகள் திறக்கப்பட்டிருந்தன.


    டவுனில் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் வாகையடி முனையில் வெள்ளையன் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் டவுன் வாகையடி முனையில் தொடங்கி டவுன், சேரன் மகாதேவி ரோடு, டவுன் வியாபாரிகள் நலச்சங்க அலுவலகம் வரை வியாபாரிகள் மவுன ஊர்வலம் சென்றனர். முன்னதாக அவர்கள், வெள்ளையன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    தூத்துக்குடி மாநகர பகுதியில் 90 சதவீதம் கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்தன. மாநகரில் தாளமுத்துநகர், புதுக்கோட்டை, முத்தையாபுரம், முள்ளக்காடு, திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதி சாலைகள் வெறிச்சோடியது. மாவட்டத்தில் ஆறுமுகநேரி, பழைய காயல், ஏரல், சாயர்புரம், நாசரேத், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களிலும் நூற்றுக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கடைகள் இன்று திறக்கப்படவில்லை.

    • எனக்கு எந்த சம்மனும் வரவில்லை.
    • எனது வக்கீல்கள் கடந்த 9-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். நான் உண்மையை மட்டுமே பேசுவேன்.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று நெல்லை மாவட்டத்தில் பாளை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது.

    இதனை சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் எனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நான் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் அது தொடர்பாக எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. எனது தனி பாதுகாவலரிடம் சம்மன் சென்றதாகவும், அதை அவர் வாங்காமல் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அதில் உண்மை இல்லை. எனினும் எனது வக்கீல்கள் கடந்த 9-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். நான் உண்மையை மட்டுமே பேசுவேன்.

    அ.தி.மு.க. வக்கீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக வருகிற 13-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் ஆத்துக்குறிச்சி கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அங்குள்ள ஒவ்வொரு வீடாக சல்லடைப்போட்டு தேடினார்கள்.
    • சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    ராதாபுரம்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 36). இவருடைய மனைவி ரம்யா. இவர்களது 3 வயது ஆண் குழந்தை சஞ்சய். அங்குள்ள அங்கன்வாடிக்கு சென்று வந்தான்.

    இவர்களின் எதிர்வீட்டில் வசிப்பவர் தங்கம்மாள்(49). இந்த 2 குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே குழாயில் தண்ணீர் பிடிப்பது உள்ளிட்டவை தொடர்பாக சிறிய, சிறிய தகராறுகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று காலையில் சஞ்சய் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்தான். பின்னர் பெற்றோர் தங்களது குழந்தையை அங்கன்வாடிக்கு அழைத்து செல்வதற்காக தேடினார்கள். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து விக்னேஷ் ராதாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில், போலீசார் ஆத்துக்குறிச்சி கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அங்குள்ள ஒவ்வொரு வீடாக சல்லடைப்போட்டு தேடினார்கள்.

    அப்போது, தங்கம்மாள் வீட்டிற்குள் போலீசார் நுழைந்தனர். அதை அறிந்த அவர் தனது வீட்டின் பின்பக்கமாக தப்பி ஓடினார். உடனடியாக போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை பிடித்தனர்.

    பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், வாஷிங் மெஷினை திறந்து பார்த்தனர்.

    அதில் சாக்கு மூட்டையில் கட்டி இருந்த சஞ்சயை பிணமாக மீட்டனர். அவனது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி துடித்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தங்கம்மாளின் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த விபத்தில் இறந்துவிட்டார். இதனால் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. தங்கம்மாள் மகனின் துக்க நிகழ்ச்சிக்கு விக்னேஷ் குடும்பத்தினர் வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் தனது மகன் இறந்ததற்கு விக்னேஷ் குடும்பத்தினர் செய்வினை வைத்ததே காரணம் என்றும், இதனால் அவரது குடும்பத்தினரை பழிவாங்க தங்கம்மாள் காத்துக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    நேற்று காலையில் தங்கம்மாள் வீட்டின் முன் சஞ்சய் விளையாடிக் கொண்டு இருந்தான். அவனை வீட்டிற்கு அழைத்து சென்ற தங்கம்மாள் ஒரு சாக்கு மூட்டையில் போட்டு கட்டினார். பின்னர் வாஷிங் மெஷினில் போட்டு மூடியைக்கொண்டு மூடினார். இதில் மூச்சுத்திணறிய குழந்தை பரிதாபமாக இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இந்த படுகொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தங்கம்மாளை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ராதாபுரம் அருகே சாக்குமூட்டையில் கட்டி வாஷிங் மெஷினில் போட்டு மூடி 3 வயது குழந்தை படுகொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • வருகிற 21, 28-ந் தேதி அடுத்தமாதம் 5, 12-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

    நெல்லை:

    புரட்டாசி மாதம் பிறப்பதையொட்டி நெல்லையில் இருந்து நவ திருப்பதி கோவில்களுக்கு சென்று வர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதன்படி நவ திருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி(2), பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது.

    அந்த வகையில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளான வருகிற 21, 28-ந் தேதி அடுத்தமாதம் 5, 12-ந் தேதி ஆகிய 4 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டலம் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.

    இந்த சிறப்பு பஸ்களானது புரட்டாசி மாத சனிக்கிழமை காலை 7 மணிக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நவ திருப்பதிகளுக்கு சென்று பின்னர் இரவில் மீண்டும் புதிய பஸ் நிலையம் வந்து சேரும்.

    இதற்காக ஒரு நபருக்கு கட்டணம் ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்புதிவு செய்ய விரும்புவோர் நெல்லை புதிய பஸ் நிலையம், தென்காசி மற்றும் சங்கரன்கோவில் பஸ் நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டண தொகையை முழுமையாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    அல்லது அரசு போக்கு வரத்து கழக இணையதளம் www.tnstc.in மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    இத்தகவலை அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல மேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    • ரூ.136 கோடி மதிப்பீட்டில் 89 குடியிருப்புகள், 500 வீடுகள் ஆகியவை அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ளது.
    • திருச்செந்தூரில் எச்.சி.எல். நிறுவனத்தின் மூலம் ரூ. 200 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலுடன் இணைந்த மானூா் அம்பலவாண சுவாமி கோவிலில் இன்று அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அதன் பின்னர் அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் 2021-22-ம் ஆண்டில் 1000 ஆண்டுகள் தொன்மையான கோவில்கள் மற்றும் போதிய வருமானம் இல்லாத கோவில்களில் குடமுழுக்கு நடத்த ரூ. 6 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியின் கீழ் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    தொடர்ந்து 2023-2024, 2024-2025 என 3 ஆண்டுகளில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உபயதாரர்கள் மூலம் ரூ. 142 கோடி பெறப்பட்டு 1000 ஆண்டுகள் பழமையான 37 கோவில்கள் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் இன்று வரை நெல்லை மானூர் அம்பலவாண சுவாமி கோவிலுடன் சேர்த்து 2098 கோவில்களில் கும்பாபிஷேகம் இதுவரை நடந்துள்ளது. இன்று மட்டும் 55 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 250 கோவில்களில் குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் திருத்தேர் பராமரிப்பு, தேர் கூடம் அமைத்தல், தெப்பக்குளம் பராமரித்தல் என நூற்றுக்கும் மேற்பட்ட திருப்பணிகள் நடந்து வருகிறது.

    மானூர் அம்பலவாண சுவாமி கோவிலுக்கு சொந்தமான 173 ஏக்கர் நஞ்சை, 28 ஏக்கர் புஞ்சை நிலங்கள் முழுவதும் குத்தகைக்கு விடப்பட்டு அந்த தொகை கோவிலின் அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நூறாண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான 16 கோவில்களுக்கும், நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட 60 கோவில்களுக்கும் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

    805 கோவில்களுக்கு சொந்தமான ரூ. 6 ஆயிரத்து 703 கோடி மதிப்புள்ள சுமார் 6 ஆயிரத்து 853 ஏக்கர் நிலம் தி.மு.க. ஆட்சியில் தான் கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இடங்களில் கோவிலின் பெயர்கள் இடம் பெறும் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் தான் ரூ.92 கோடி செலவில் 47 புதிய ராஜகோபுரங்கள் கட்டப்பட்டுள்ளது. ரூ.59 கோடி செலவில் புதிய மரத்தேர்கள் செய்யப்பட்டு வருகிறது. ரூ.11.93 கோடி செலவில் மரத்தேர் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

    ரூ.28 கோடியே 44 லட்சம் செலவில் 172 கோவில்களில் மரத்தேர் கொட்டகைகள் அமைக்கும் திருப்பணிகள் நடந்து வருகிறது. ரூ.29 கோடி செலவில் 5 புதிய தங்கத்தேர் செய்யும் பணி நடந்து வருகிறது.

    இன்னும் ஓரிரு மாதத்தில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் தங்கத்தேர் பணி நிறைவு பெறும். 9 வெள்ளித் தேர் சுமார் ரூ.27 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. ரூ.120.33 கோடி செலவில் 220 குளங்கள் பழுது பார்க்கப்பட்டுள்ளது.

    ரூ.321 கோடி மதிப்பீட்டில் 81 புதிய திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது. ரூ. 86.97 கோடி மதிப்பீட்டில் 121 அன்னதான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. ரூ. 187 கோடி மதிப்பீட்டில் 28 பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது. ரூ. 136 கோடி மதிப்பீட்டில் 89 குடியிருப்புகள், 500 வீடுகள் ஆகியவை அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ளது.

    ரூ.1530 கோடி செலவில் 19 கோவில்களில் பெருந்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருச்செந்தூர், பழனி உட்பட கோவில்களில் பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து இவ்வாறு திட்டங்களை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம். திராவிட மாடல் தி.மு.க. ஆட்சிதான் இந்து சமய அறநிலையத்துறையின் பொற்கால ஆட்சி.

    திருச்செந்தூரில் எச்.சி.எல். நிறுவனத்தின் மூலம் ரூ. 200 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு இந்து சமய அறநிலைத்துறை எவ்வித இடைஞ்சலும் கொடுக்கவில்லை.

    அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 7-ந்தேதிக்குள் பணிகள் அனைத்தையும் முடித்து விடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நாங்கள் அதற்கு உறுதுணையாக இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் கோவிலில் உள்ள வெள்ளித்தேர் மற்றும் உள்தெப்பம் அருகே கட்டப்பட்டு வரும் ஆராட்டு மண்டபத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து கோவிலுக்கு வெளியே ரத வீதியில் நிறுத்தப்பட்டிருக்கும் நெல்லையப்பர், காந்திமதியம்மன் உள்ளிட்ட 5 தேர்களை அவர் ஆய்வு செய்தார்.

    5 தேர்களையும் மழைக்காலத்தில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சிமெண்ட் தளம் அமைக்கும் பணியையும் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.

    ×