என் மலர்
தேனி
- கடந்த ஆண்டு மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 118.40 அடியாக இருந்தது.
- இன்று காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.15 அடியாக உள்ளது.
கூடலூர்:
முல்லை பெரியாறு அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 14,707 ஏக்கர் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப் தொடங்கி பழனிசெட்டிபட்டி வரை கம்பம் பள்ளத்தாக்கு பகுதியாக உத்தமபாளையம் வட்டத்தில் 1807 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர், தேனி வட்டத்தில் 2412 ஏக்கர் என மொத்தம் மாவட்டத்தில் 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் பெரியாறு அணையின் பாசனத்தின் மூலம் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் முதல் போகத்திற்கு ஜூன் மாதம் தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 118.40 அடியாக இருந்தது. இருப்பினும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்போக விவசாயத்திற்கு ஜூன் மாதம் முதல்நாள் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 119 அடியை கடந்தது.
இந்நிலையில் தேனி மாவட்ட முதல்போக பாசனத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை அணையிலிருந்து பாசனத்திற்கு 200 கனஅடி, தேனி மாவட்ட குடிநீருக்கு 100 கனஅடி என 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கபட்டது. தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள சுரங்க வாய்க்கால் ஷட்டர் பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் என யாரும் வரவில்லை. பொறியாளர் அன்புச்செல்வன் தண்ணீரை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் மயில்வாகணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.15 அடியாக உள்ளது. வரத்து 204 கன அடி. இருப்பு 2475 மி.கன அடி.
ஒவ்வொரு ஆண்டும் முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்போது விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு இங்குள்ள துர்க்கையம்மன் கோவிலில் வழிபாடு நடத்தி தண்ணீர் திறக்கப்பட்டதும் மலர்தூவி நன்றி தெரிவிப்பது வழக்கம். மேலும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ முறைப்படி மும்மத வழிபாடும் நடைபெறும். இந்த ஆண்டும் தண்ணீர் திறக்க பூஜைக்குரிய பொருட்களை வாங்கி வைத்தும் மும்மதத்தினரும் தயார் நிலையில் இருந்த நிலையில் அதிகாரிகள் அதற்கு தடைவிதித்தனர். மேலும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளையும் அழைக்கவில்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வைகை அணையின் நீர்மட்டம் 47.54 அடியாக உள்ளது. வரத்து 14 கன அடி, திறப்பு 69 கனஅடி. இருப்பு 1686 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.15 அடி. வரத்து 22 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. வரத்து மற்றும் திறப்பு 3 கன அடி.
- 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
- சிறப்பு நீதிமன்றம் உத்தரவின் பேரில் பாலமுருகனை பழனிசெட்டிபட்டி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
தேனி:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்தவர் சவுக்கு சங்கர். இவர் பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்ததாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தேனியில் கடந்த 4ம் தேதி கைது செய்தனர்.
தேனி அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் தனியார் விடுதியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த போது காரில் 400 கிராம் கஞ்சா இருந்தது தெரியவரவே அதனை பறிமுதல் செய்தனர். சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கைதான ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு ஆகிய 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி வழங்கியது தொடர்ந்து பரமக்குடி அருகே காரைக்குடியை சேர்ந்த மகேந்திரனிடம் கஞ்சா பெற்றுக் கொண்டதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து மகேந்திரனை கைது செய்த பழனிசெட்டிபட்டி போலீசார் அவரிடம் 2.600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை சிறையில் இருந்த பாலமுருகனிடம் இந்த கஞ்சாவை பெற்று விற்பனை செய்ததாக மகேந்திரன் தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
சிறப்பு நீதிமன்றம் உத்தரவின் பேரில் பாலமுருகனை பழனிசெட்டிபட்டி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலமுருகன், ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து தூத்துக்குடி துறைமுகத்தில் பரவலாக கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. நான் அங்கு பணிபுரியும் லாரி டிரைவர்களிடம் கஞ்சா பெற்று மகேந்திரனுக்கு கஞ்சா வழங்கினேன். அவர் அதனை சவுக்கு சங்கர் உதவியாளரிடம் வழங்கியுள்ளார். மற்றபடி சவுக்கு சங்கரை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை. சமூக வலைதளங்களில் தான் அவரது பேச்சை கேட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
- தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் அணையின் நீர் மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 118.80 அடியாக உள்ளது. வரத்து 44 கன அடி. திறப்பு 100 கன அடி.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசன தேவைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக இருந்தது. அப்போது ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு பூர்வீக பாசன தேவைகளுக்காக 3 கட்டங்களாக தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து இன்று காலை 47.64 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 199 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை குடிநீர் தேவைக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1498 மி.கன அடியாக உள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் அணையின் நீர் மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 118.80 அடியாக உள்ளது. வரத்து 44 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 2439 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.90 அடி. வரத்து 21 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. வரத்து 7 கன அடி. திறப்பு 3 கன அடி.
பெரியாறில் 5.4, தேக்கடியில் 0.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- கேரள அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
- விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்சனையாக உள்ளது. 152 அடி உயரமுள்ள இந்த அணையில் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
முல்லைப்பெரியாறு அணை 130 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதால் பலமிழந்து விட்டது என்றும், அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது.
இது குறித்து உச்சநீதிமன்றம் வல்லுனர் குழுவை அமைத்து அணை பலமாக உள்ளது. இதனால் அருகில் உள்ள பேபி அணையை பலப்படுத்திய பின்பு கூடுதல் தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.
இந்நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கேரள அரசு கடிதம் எழுதி புதிய அணை கட்ட இருப்பதால் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தது. கேரள அரசின் மனு மீது நாளை (28-ந் தேதி) விசாரணை நடைபெறுகிறது. 11 பேர் கொண்ட குழுவினர் இந்த மனு மீது விசாரணை நடத்த உள்ளனர்.
கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 5 மாவட்ட விவசாயிகள் இன்று தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர். பேரணியாக சென்று பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில் அஞ்சலி செலுத்தி பின்னர் கேரள எல்லையான குமுளியில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இதனால் தமிழக-கேரள எல்லைப்பகுதியான குமுளி நெடுஞ்சாலையில் நேற்று இரவு முதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இன்று காலை லோயர் கேம்ப் பஸ் நிலையத்தில் முல்லைப்பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் விவசாயிகள் சங்க தலைவர் பொன்காட்சி கண்ணன் முன்னிலையில் திரண்ட விவசாயிகள் அங்கிருந்து பென்னிகுவிக் மணிமண்டபத்துக்கு சென்றனர். அதன் பின்பு பேரணியாக செல்ல முயன்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது கேரள அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்து முல்லைப்பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், கேரளாவில் எந்த அரசு அமைந்தாலும் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கடந்த சட்டசபை தொடரின் போதே கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தது. அப்போது தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருந்து விட்டது. உச்சநீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பையே மதிக்காதது கேரள அரசு. சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணைக்கட்டி வந்த போது பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து அதனை தடுத்து நிறுத்தியுள்ளது. அதே போல உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி புதிய அணை கட்ட முடியாது என்று தெரிந்தும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசு மனு அளித்துள்ளது. எனவே உச்சநீதிமன்றமும் தாமாக முன் வந்து கேரள அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.
இதற்கு பின்பும் முல்லைப்பெரியாறு அணையை வைத்து கேரளா அரசியல் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.
- தமிழக விவசாயிகளின் உணர்வு பூர்வமான விஷயம்.
- கேரள அரசு தாங்கள் நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த அணை பலம் இழந்து வருவதாகவும், அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்கு தமிழக அரசு மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு கேரள அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் அணை பலமாக இருப்பதாகவும், அதனை இடித்து புதிய அணை கட்டத் தேவையில்லை எனவும் உத்தரவிட்டனர். மேலும் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும் அருகில் உள்ள பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தலாம் எனவும் உத்தரவிட்டது.
அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யும் சமயங்களில் நீர்வரத்து, தண்ணீர் திறப்பு, கசிவு உள்ளிட்டவற்றை பார்வையிட மத்திய நீர்வளத்துறை ஆணையர் தலைமையில் தமிழக, கேரள பிரதிநிதிகளை உள்ளடக்கிய மூவர் குழுவும், அவர்களுக்கு உதவ 5 பேர் கொண்ட துணைக்குழுவும் உருவாக்கப்பட்டது. இந்த குழுவினர் அவ்வப்போது அணை பகுதியை பார்வையிட்டு அதன் அறிக்கையை சமர்ப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடந்த கேரள சட்டசபைக் கூட்ட தொடரில் முல்லைப்பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் புதிய அணை கட்டுவதற்கான பணிகளை தொடங்க கடந்த ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை நிபுணர் குழுவுக்கு அறிக்கை அளித்தது.
இதன் மீதான விசாரணை நாளை மறுநாள் (28-ந் தேதி) வர உள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்த விவகாரம் வெளியில் தெரியாத நிலையில் தற்போதுதான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசின் கடிதம் விசாரணைக்கு வர உள்ள தகவல் தமிழக விவசாயிகளிடம் தெரிய வந்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு அணை நீரினை பயன்படுத்தும் 5 மாவட்ட விவசாயிகள் நாளை (27-ந் தேதி) மாபெரும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்தில் ஒன்று திரண்டு விவசாயிகள் அங்கிருந்து கேரள எல்லையான குமுளிக்கு பேரணியாக சென்று போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
ஆனால் விவசாயிகளின் போராட்டத்தை முடக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் வருகிற ஜூன் 4-ந் தேதி வரை அமலில் இருப்பதால் எந்தவித போராட்டமும் நடத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி நாளை லோயர் கேம்ப்பில் விவசாயிகள் போராட்டத்துக்கு திரண்டால் அதனை தடுத்து நிறுத்தி கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் எந்தவித அமைப்பினரோ, குழுவினரோ போராட்டம் நடத்தக்கூடாது. இது வரை விவசாயிகள் அமைப்போ, வேறு எந்த அமைப்போ போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு கடிதம் அளிக்கவில்லை. அவ்வாறு கடிதம் அளித்தாலும் போராட்டத்துக்கு அனுமதி அளிக்கமாட்டோம் என்றனர்.
இது குறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், தனிப்பட்ட காரணங்களுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை. இது தமிழக விவசாயிகளின் உணர்வு பூர்வமான விஷயம். எங்கள் எதிர்ப்பை போராட்டத்தின் மூலம் மட்டுமே தெரிவிக்க முடியும். தமிழக அரசு கடிதம் எழுதி விட்டால் அனைத்தும் நடந்து விடும் என்று நினைக்கின்றனர். இது தவறு. கேரள அரசு தாங்கள் நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பையே மதிக்காதவர்கள். எனவே அவர்களிடம் கடிதம் எழுதினால் நடந்து விடும் என்று தமிழக அரசு நினைப்பது தவறு. விவசாயிகள் போராட்டத்தை தடுத்தால் அது மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என்றனர்.
இதனிடையே பேரணிக்கு திட்டமிட்டுள்ள லோயர் கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
- போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
- குடும்பத்துடன் அப்பகுதியில் சுற்றித்திரிந்து சிறுவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்ததும் தெரிய வந்தது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே கணேசபுரம் மெயின்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கண்டமனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்கேத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர்கள் கண்டமனூர் தெற்கு தெருவை சேர்ந்த பூவநாதன் மனைவி ரத்தினம்மாள் (70), அவரது மகன் பழனிச்சாமி, மருமகள் முருகேஸ்வரி என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் குடும்பத்துடன் அப்பகுதியில் சுற்றித்திரிந்து சிறுவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் 90 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது.
- போராட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள்.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்து வருகிறது. கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை 999 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் தமிழக நீர் வளத்துறை பராமரிப்பில் உள்ளது.
பூகோள அடிப்படையில் கேரளாவில் இருந்தாலும் அணை பராமரிப்பு முழுவதும் தமிழக அரசே மேற்கொண்டு வருகிறது.
அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் அணையை உறுதி செய்யும் தன்மையை உச்சநீதிமன்றமே வல்லுனர் குழுவை 11 முறை அனுப்பி உறுதி செய்தது. அணையின் கீழ் பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்தி முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கிக் கொள்ள உத்தரவிட்டது. அதன்படி 10.5 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையில் 7.86 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தற்போது வரை தேக்கப்படுகிறது. அணையில் முழு கொள்ளளவு நீரை சேமிக்க முடியாததால் 5 மாவட்டங்களின் பாசன பரப்பை அதிகரிக்க முடியாமலும், குடிநீர் வழங்கும் பணியை விரிவாக்கம் செய்வதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.
இது தவிர அணையை பலப்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள கேரள வனத்துறை பல ஆண்டுகளாக முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த சூழலில்தான் புதிய அணை கட்ட வேண்டும் எனவும், தற்போதுள்ள முல்லைப்பெரியாறு அணை பலமிழந்து விட்டதால் இடிந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள அணைகள் முழுவதும் சேதமாகும் என்றும், வீண் வதந்தி பரப்பி வருகிறது.
இந்நிலையில் முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி கேட்டு கேரள அரசு கடந்த ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் மனு அளித்தது. அதில் முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆகி விட்டதால் அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், வன விலங்குகள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தற்போதுள்ள அணைக்கு 1200 அடி கீழே புதிய அணையை கட்டிய பின்பு பழைய அணையை இடிக்க அனுமதிக்க வேண்டும். புதிய அணை கட்டும் போதும், கட்டி முடிக்கப்பட்ட பின்பும் தமிழகத்துக்கான நீர் பகிர்வு தற்போதைய நிலையிலேயே தொடரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை ஆய்வு செய்த அமைச்சகம் அதனை நிபுணர் மதிப்பீட்டுக்குழுவுக்கு கடந்த 14-ந் தேதி அனுப்பியது.
மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு வருகிற 28-ந் தேதிக்கு இது தொடர்பான கூட்டத்தை நடத்த உள்ளது. கேரளாவின் இந்த நடவடிக்கை தமிழக விவசாயிகளிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே கேரள அரசை கண்டித்து வருகிற 27-ந் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:-
முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை வைத்து கேரளாவில் எந்த அரசு வந்தாலும் அரசியல் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது. அணையை எப்படியாவது இடித்து விட்டு அந்த அணை தண்ணீர் முழுவதையும் இடுக்கி அணைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் நிலைப்பாடாக உள்ளது. உச்சநீதிமன்றம் தலைசிறந்த வல்லுனர் குழுவை அமைத்து அணை பலமாக இருப்பதாகவும் பூகம்பம் ஏற்பட்டால் கூட எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி செய்த பின்பே 142 அடி வரை தண்ணீர் தேக்க உத்தரவிட்டது.
அதனையும் மீறி கேரள அரசு புதிய அணை கட்டுவதில் உறுதியாக இருப்பது 152 அடி வரை உயர்த்த முட்டுக்கட்டை போடுவதற்காகத்தான். மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தை பணிய வைத்து முல்லைப்பெரியாறு அணையை அழித்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டும் கேரளாவின் கனவு ஒருபோதும் பலிக்காது. எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் மென்மையான போக்கை கைவிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசை கண்டித்து வருகிற 27-ந் தேதி காலை 10 மணியளவில் மாபெரும் போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள்.
பென்னி குவிக் நினைவிடத்தில் இருந்து திரண்டு பேரணியாக சென்று கேரள மாநில எல்லையில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
- திற்பரப்பு என்று அழைக்கப்படும் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு தடுப்பணைகளை தாண்டி ஓடியது.
- அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டமும் உயரத் தொடங்கி உள்ளது.
கூடலூர்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரம் அடைந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் குறிப்பிட்ட சில இடங்களில் லேசான மழை மட்டுமே பெய்து வந்தது.
இதனிடையே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான குரங்கணி, ஊத்தாம்பாறை, கொட்டக்குடி, பிச்சாங்கரை போன்ற பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.
மேலும் போடியின் திற்பரப்பு என்று அழைக்கப்படும் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு தடுப்பணைகளை தாண்டி ஓடியது.
ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் விட்டு விட்டு கன மழை பெய்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டமும் உயரத் தொடங்கி உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் நேற்று 48.10 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 48.39 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 292 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 877 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 472 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1790 மி. கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.65 அடியாக உள்ளது. வரத்து 621 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 2024 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.40 அடி. வரத்து 280 கன அடி. இருப்பு 328 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 3-வது நாளாக முழு கொள்ளளவை எட்டி 126.28 அடியில் உள்ளது. இதனால் அணைக்கு வரும் 88 கனஅடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.
சோத்துப்பாறை அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வராகநதிக்கரையில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திற்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கும்பக்கரை, மேகமலை, சுருளி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அருவிகளில் நீராட வந்து வனத்துறை கட்டுப்பாட்டால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
பெரியாறு 9.6, தேக்கடி 21.8, கூடலூர் 3.6, உத்தமபாளையம் 4.8, சண்முகாநதி அணை 4.4, போடி 3.2, வைகை அணை 74.8, மஞ்சளாறு 21, சோத்துப்பாறை 31, பெரியகுளம் 4.6, அரண்மனைபுதூர் 1.8, ஆண்டிபட்டி 25.4 மி.மீ. மழை அளவு பதிவானது.
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.40 அடியாக உள்ளது. 308 கனஅடி நீர் வருகிறது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. 135 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தமிழக அரசு உத்தரவுப்படி முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 5 நாட்களில் 915 மில்லியன் கனஅடி திறக்கப்பட்டது. 2ம் கட்டமாக சிவகங்கை மாவட்டத்திற்கு 4 நாட்களில் 376 மி.கனஅடி திறக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு இன்று காலை 10 மணிமுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
வினாடிக்கு 400 கனஅடி நீர் ஆற்றில் அதிகாரிகள் திறந்துவிட்டனர். இதனால் வைகை கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, வேறு தேவைக்காகவோ ஆற்றுக்குள் இறங்கக்கூடாது என அவர்கள் எச்சரித்து உள்ளனர்.
வருகிற 27ம் தேதி வரை 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 48.13 அடியாக உள்ளது. 292 கனஅடி நீர் வருகிறது. பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 472 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.40 அடியாக உள்ளது. 308 கனஅடி நீர் வருகிறது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. 135 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 40.98 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
பெரியாறு 13.6, தேக்கடி 1.2, போடி 1.6, மஞ்சளாறு 17, சோத்துப்பாறை 2, வீரபாண்டி 5, அரண்மனைபுதூர் 1.8 மி.மீ. மழையளவு பதிவானது.
- 10 நாட்கள் கழித்து திறந்து பார்த்தால் பணம் இரட்டிப்பாக மாறி இருக்கும் எனவும் உறுதி அளித்தார்.
- விக்னேஷ்மூர்த்தியிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை வங்கி மேலாளர் ஆய்வு செய்தபோது அவை கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் என கண்டறியப்பட்டது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்தவர் விக்னேஷ்மூர்த்தி (வயது31). இவருக்கு திருணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
பெரியகுளம் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த முருகன் மனைவி ஜோதிமணி (வயது38). இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.
இருவரும் கோர்ட்டுக்கு பணி நிமித்தமாக வந்தபோது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஜோதிமணி தன்னிடம் வெளிநாட்டு நபர் ஒருவர் இருப்பதாகவும் அவரிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் ரூ.20 ஆயிரம் தருவதாக கூறுகிறார். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதனை இரட்டிப்பாக்கி தருகிறார். தன்னிடம் போதுமான அளவு பணம் இல்லாததால் உங்களிடம் பணம் இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் என கூறி உள்ளார்.
அதன்படி கடந்த 12-ந்தேதி திண்டுக்கல்லில் இருந்து ரெயில் மூலம் ஜோதிமணியும், விக்னேஷ்மூர்த்தியும் பெங்களூரு சென்றனர். அங்கு ஒரு லாட்ஜில் தங்கி இருந்தபோது வெளிநாட்டை சேர்ந்த ஒரு நபர் அங்கு வந்தார். அப்போது விக்னேஷ்மூர்த்தி தான் கொண்டு வந்த ரூ.44,500 பணத்தை அவரிடம் கொடுத்தார். அந்த நபர் ஒரு பெட்டியில் பவுடர்களை கொட்டி அதனுடன் பணக்கட்டுகளையும் வைத்து சீல் வைத்து உங்கள் ஊருக்கு சென்றவுடன் இதை திறந்து பார்க்கவும் என கூறி உள்ளார்.
10 நாட்கள் கழித்து திறந்து பார்த்தால் பணம் இரட்டிப்பாக மாறி இருக்கும் எனவும் உறுதி அளித்தார். அதனை நம்பி விக்னேஷ்மூர்த்தி நேற்று அந்த பெட்டியை திறந்து பார்த்தார். அதில் ரூ.35 ஆயிரம் மட்டுமே இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தன்னுடன் வந்த வக்கீல் ஜோதிமணியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் முறையான பதில் அளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து தன்னிடம் இருந்த 76 எண்ணிக்கை கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் பணத்தை பெரியகுளத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் செலுத்த சென்றார். அப்போது அந்த நோட்டுகள் கள்ள நோட்டுகள் என சம்மந்தப்பட்ட வங்கி மேலாளருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து வங்கி நிர்வாகம் சார்பில் வடகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக அங்கு வந்து கள்ளநோட்டுகளை செலுத்த முயன்ற விக்னேஷ்மூர்த்தியை பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
போலீசார் விசாரணையில் நடந்த விபரங்களை அவர் கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து பணம் மோசடி வழக்கில் உடந்தையாக இருந்த பெண் வக்கீல் ஜோதிமணியையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விக்னேஷ்மூர்த்தியிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை வங்கி மேலாளர் ஆய்வு செய்தபோது அவை கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் என கண்டறியப்பட்டது. தன்னிடம் பேசிய வெளிநாட்டு நபர் இதுவரை தொலைபேசி மூலம் மட்டுமே தன்னை தொடர்பு கொண்டதாகவும் அவருடன் வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும் வக்கீல் ஜோதிமணி கூறினார்.
இருந்தபோதும் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் தனிப்படை போலீசார் பெங்களூருவில் இவர்கள் தங்கி இருந்த லாட்ஜில் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட வெளிநாட்டு நபர் இதுபோன்ற வேறு யாரிடமாவது பண மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி கள்ளநோட்டுகளை கோர்ட்டு ஊழியரே பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வராகநதி ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- மக்கள் ஆற்றில் குளிக்கவோ கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சோத்துப்பாறை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் முற்றிலும் மழை பெய்யாது போனதால் அணைக்கு நீர் வரத்து இல்லாமல் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கோடை மழையின் காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.
இதனைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கிய நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் அணையின் முழு கொள்ளவான 126.28 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்களம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வராகநதி ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது அணைக்கு நீர் வரத்து 49.63 கன அடியாக உள்ள நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கும் நிலை உள்ளது. இதனால் ஆற்றங்கரையோர பகுதி மக்கள் ஆற்றில் குளிக்கவோ கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோடை மழை பெய்து சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சவுக்கு சங்கரை கோவை போலீசார் கஞ்சா வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.
- சவுக்கு சங்கர் ஜாமின் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அப்போது, சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ சஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீசார் வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.
இந்நிலையில், தேனி மாவட்ட காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமின் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜாமின் கோரிய சவுக்கு சங்கரின் மனு வரும் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.






