என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கையில் இன்று காலை மழை நீடித்ததையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.
    சிவகங்கை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வானம் பார்த்த பூமியான சிவகங்கை மாவட்டத்தில் சில ஆண்டுகளாக பருவமழை ஏமாற்றி வந்தது. இந்த ஆண்டு பருவமழை கை கொடுத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சிவகங்கையில் நேற்று காலையில் அவ்வப்போது தூரல்மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் மாலை முதல் விடிய, விடிய தொடர் மழை பெய்தது. சிவகங்கை நகர், காளையார்கோவில், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு 3 மணிநேரம் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    இன்று காலை மழை நீடித்ததையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம், கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    ராமேசுவரத்தில் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. ராமேசுவரம் கோவிலில் மழைநீர் புகுந்தது. அதனை உடனே ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். நேற்று முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தனுஷ்கோடி, அரிச்சல் முனை பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

    விருதுநகர் மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழை காரணமாக பேயனாறு, அய்யனார் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தொடர் மழையால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் பல ஆலைகள் மூடப்பட்டன.

    மதுரையில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் பெய்த மழையால் நகரின் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இன்று காலையும் மழை நீடித்தது.
    மானாமதுரை பகுதியில் பெய்து வரும் மழையால் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆண்டு முழுவதும் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு தயாராகும் பொருட்கள் தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் கேரளா, அந்தமான், மாலத்தீவு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. 

    வருகிற 11-ந் தேதி கார்த்திகை தீபத்திருநாள் ஆகும். இதற்காக தினமும் ஆயிரக்கணக்கான கிளியான், தீப விளக்குகள், அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது மானாமதுரை பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் உற்பத்தி செய்த மண்பாண்ட பொருட்களை உலர்த்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 

    மழைக்காலங்களில் மண்பாண்ட பொருட்களை உலர்த்த எந்திரம் மற்றும் புதிதாக தொழிற்கூடங்கள் அமைக்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
    சாலை விதிகளை பின்பற்றி விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். சாலைகளை பொறுத்தவரை தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு இணைப்புச் சாலைக்கும் இடையே கட்டாயம் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதா என அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும்.

    அதேபோல் சந்திப்பு சாலைகளில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும், சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பதாகைகள் வைக்க வேண்டும்.

    வாகன ஓட்டிகள் தெரிந்துகொள்ளும் விதமாக எச்சரிக்கை விளக்குகள் மற்றும் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஆங்காங்கே வைக்க வேண்டும். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் அவ்வப்போது சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாலை விதிகளை பின்பற்றி விபத்துகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அப்துல்கபூர், அண்ணாத்துரை, கலெக்டரின் நோ்முக உதவியாளா் ராமபிரதீபன், வட்டார போக்குவரத்து அலுவலா் கல்யாணகுமார் மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். 
    கல்லல் அருகே ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    கல்லல்:

    கல்லலை அடுத்த செம்மனூரில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு காய்ச்சல் தடுப்பு பிரிவு ஒரு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு செம்மனூர், கல்லல், கூமாச்சிபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

    மேலும் இங்கு உள்நோயாளியாகவும், வெளி நோயாளிகளாகவும் தினமும் 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் பிரசவம் மற்றும் பொது மருத்துவத்திற்கு தனித்தனியாக கட்டிடங்கள் உள்ளன. தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் ஏராளமானவர்கள் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வருகின்றனர்.

    காய்ச்சலுக்காக தனிபிரிவு ஆரம்பிக்கப்பட்டு, அது ஒரு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த தனிப்பிரிவு கட்டிடத்தில் காய்ச்சலுக்காக சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 100 கணக்கான கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்த நிலையில் இந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் காரை திடீரென பெயர்ந்து கீழே விழுந்தது. மேலும் இந்த சம்பவத்தின் போது அங்கு நோயாளிகள் யாரும் சிகிச்சை பெற வராததால், அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.

    மேல்பகுதியில் கம்பிகள் வெளியில் தெரியும்படி கட்டிடம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே கட்டிடத்தை சீரமைக்கவும் , நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தகுந்த நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    வாகனத்தில் அடிபட்டு நடக்கமுடியாமல் கிடந்த கன்றுக்குட்டியை சுற்றிசுற்றி தாய்ப்பசு வந்தது. சமூக ஆர்வலர்கள் கன்றுக்குட்டியை தூக்கி சென்ற போது பின்னாலேயே கால்நடை மருத்துவமனை வரை சென்றது.
    காரைக்குடி:

    காரைக்குடி நகரின் பிரதான சாலையான முடியரசனார் சாலையில் நகராட்சி பூங்கா உள்ளது. இதன் எதிரே ஒரு பசுவும் அதன் கன்றும் நின்று கொண்டிருந்தன. அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் கன்றுக்குட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் காலில் பலத்த காயமடைந்த கன்றுக்குட்டி கீழே விழுந்து எழமுடியாமல் கிடந்தது. 

    இதைக்கண்ட தாய்ப்பசு அதனை சுற்றிசுற்றி வந்து சத்தமிட்டு கொண்டே இருந்தது. இந்த சம்பவம் அங்கு பார்ப்போரை நெகிழ்ச்சியடைய செய்தது. அப்போது அவ்வழியாக வந்த அக்னி சிறகுகள் மக்கள் நல சங்க செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அவரது குழுவினர் அந்த விபத்தில் காயமடைந்த கன்றுக்குட்டியை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சைக்காக கன்றுக்குட்டியை கொண்டு செல்லும்போது தாய்ப்பசுவும் பின்னால் கத்திக் கொண்டே சென்றது பார்ப்போரை பரிதாபப்பட வைத்தது.

    காரைக்குடி நகரில் அனைத்து பகுதி சாலைகளிலும் கால்நடைகள் சுற்றி திரிவதும், இரவு நேரங்களில் சாலைகளிலேயே கூட்டம் கூட்டமாக படுத்திருப்பதும் அன்றாடம் நடந்து வருகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் கால்நடைகளும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர். முன்பெல்லாம் இவ்வாறு வீதிகளில் திரியும் கால்நடைகளை நகராட்சி நிர்வாகத்தினர் பிடித்து பட்டியில் அடைத்துவிடுவார்கள். அதன்பின் அவைகளின் உரிமையாளர்களை அழைத்து அபராதம் விதித்து அதனை கட்டியபிறகுதான் கால்நடைகளை அழைத்துச் செல்ல அனுமதிப்பார்கள். இனியாவது வீதிகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    சிவகங்கை அருகே ஊருணியில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்புவனம்:

    சிவகங்கையை அடுத்த அரசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் அபிஸ்ரீ (வயது 12). அதே பகுதியைச் சேர்ந்தவர் மழைமேகம். இவரது மகள் பிரியதர்ஷினி (13).

    அபிஸ்ரீயும், பிரியதர்ஷினியும் அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    சிறுமிகள் இருவரும் நேற்று மாலை பள்ளி முடிந்து அரசனூர் ஊருணியில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர்.

    இதனைப் பார்த்ததும் அந்த வழியாக வந்தவர்கள் ஓடிச் சென்று 2 சிறுமிகளையும் மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் இல்லாததால் உடனடியாக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிரியதர்ஷினியும், அபிஸ்ரீயும் பரிதாபமாக இறந்து விட்டனர்.

    சிறுமிகளின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுதது மிகவும் பரிதாபமாக இருந்தது.

    2 சிறுமிகள் ஊருணியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    புலிகுளம் மற்றும் காங்கேயம் காளைகளை பாதுகாக்க வேண்டும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள புலிகுளம் மாட்டின ஆராய்ச்சி மையத்தை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் பாலச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்த அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    புலிகுளம் மாடு என்பது தமிழகத்தில் இருக்கின்ற உள்ளூர் நாட்டினங்களில் பிரசித்தி பெற்றவை. அதே போல் காங்கேயம் காளை நாட்டினமும் சிறப்பு வாய்ந்தது. இவைகளை பாதுகாக்க வேண்டும்.

    இந்த ஆராய்ச்சி மையம் மூலமாக புலிகுளம் காளைகள், பசுக்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.

    புலிகுளம் காளைகள் தான் மற்ற காளைகளை விட சிறந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.

    தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அழிந்து வரும் மாட்டினங்களை காப்பதற்கு முதல்- அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இந்த மையத்துக்கு ரூ.2 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு 40 பசுக்களும், 5 காளை மாடுகளும் இங்கு உள்ளன. புலிகுளம் மாடுகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளன.

    இவைகளை அதிகளவில் உற்பத்தி செய்து அவற்றை விவசாயிகளிடம் கொடுத்து அதனுடைய எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

    புலிகுளம் காளைகள் ஜல்லிக்கட்டுக்கும், மஞ்சு விரட்டுக்கு பெயர் போன காளைகளாக இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் வகையில் தரமானதாக உற்பத்தி செய்ய வேண்டும். நமது அடையாளத்தை மீட்டு எடுக்கும் முயற்சியை எடுத்து வருகிறோம்.

    அந்த வகையில் குறைந்து வரும் புலிகுளம் மாட்டினை அதிகரிக்க இந்த ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன், நாகராஜன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பாண்டி செய்திருந்தார்.

    சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ‘வேலைவாய்ப்பு வெள்ளி” என்ற தலைப்பின் கீழ் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். வேலைநாடுநர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.

    அதன் அடிப்படையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

    கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை . (ஐ.டி.ஐ, டிப்ளமோ உட்பட).

    விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    இந்த முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டது.

    இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.
    எஸ்.கோட்டையூர் மற்றும் குணப்பனேந்தல் ஊராட்சிகளில் புதிய கால்நடை மருந்தகங்களை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.
    இளையான்குடி:

    இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் எஸ்.கோட்டையூர் மற்றும் குணப்பனேந்தல் ஆகிய ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தகங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மானாமதுரை எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ெஜயலலிதா, விவசாயிகள் மற்றும் பெண்கள் கால்நடை வளா்ப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு திட்டங்களை வழங்கி வந்தார். அந்த வகையில் விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்குதல் போன்ற திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வந்தார். மேலும், கால்நடைகளை சிறந்த முறையில் பராமாிக்க தேவையான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டு நடத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அதிக அளவில் கால்நடைகள் வளா்க்க தேவையான உதவிகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    தேவைக்கேற்ப புதிய கால்நடை மருந்தகங்களும் உருவாக்க திட்டமிட்டதுடன் தற்போது முதல்-அமைச்சா் உத்தரவின்படி கால்நடை களுக்கான அம்மா அவசர சிகிச்சை வாகனம் துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று எஸ்.கோட்டையூர் மற்றும் குணப்பனேந்தல் ஊராட்சிகளில் புதிதாக கால்நடை மருந்தகங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் கால்நடை பராமாிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முருகேசன், துணை இயக்குனர் ராஜதிலகம், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர்கள் முகமதுகான், ராம்குமார், கால்நடை மருத்துவர் ராஜேஷ், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சுத்துறை சங்கத்தலைவர் சசிக்குமார், இளையான்குடி வட்டாட்சியர் ரமேஷ், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் ராஜா, பலராமன், மோகன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    காரைக்குடியில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டின் கதவுகளை உடைத்து 200 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி-செக்காலை சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் இளங்கோ மணி. இவரது வீடு மகர் நோன்பு திடல் பகுதியில் உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கோமணி, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றார். தைவான் நாட்டுக்குச் சென்று விட்டு அவர்கள் நேற்று நள்ளிரவு வீடு திரும்பினர்.

    வீட்டின் கதவை திறக்க முயன்ற போது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த இளங்கோமணி மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

    வீட்டின் 6 அறைகளிலும் பொருட்கள் தாறுமாறாக சிதறிக்கிடந்தன. பீரோவும் திறந்து கிடந்தது. இதனால் கொள்ளை நடைபெற்று இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து இளங்கோமணி காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அருணுக்கு தகவல் கொடுத்தார். அவர் வடக்கு காவல் நிலைய போலீசாருடன் விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டார். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    வீட்டில் இருந்த 200 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் இளங்கோமணி தெரிவித்தார்.

    போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் மூலம் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு, யாரோ திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இளங்கோமணி வீடு மற்றும் ஜவுளிக்கடையில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    பக்தியுள்ள பெண்கள் சபரிமலை செல்ல மாட்டார்கள் என்றும் சபரிமலை கோவில் விவகாரத்தில் இன்னும் 2 வருடத்துக்குள் நல்ல தீர்ப்பு வரும் என்றும் பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.
    காரைக்குடி:

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா மகள் திருமணம் காரைக்குடியில் இன்று நடைபெற்றது. திருமணத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மணமக்களை வாழ்த்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, மனித உயிர் மலிவாக போய்விட்டது. மதுபோதைக்கு இளைஞர்கள் அடிமையாகிறார்கள். இதனை தமிழக அரசு தடுக்க வேண்டும். இந்தியா முழுவதும் பா.ஜனதா மாநில தலைவர் பதவியிடங்கள் காலியாக உள்ளது.

    சபரிமலை

    பக்தியுள்ள பெண்கள் சபரிமலை செல்ல மாட்டார்கள். சபரிமலை கோவில் விவகாரத்தில் இன்னும் 2 வருடத்துக்குள் நல்ல தீர்ப்பு வரும். தமிழகத்தில் தலைமை தாங்கும் பண்பு நிறைய பேரிடம் உள்ளது. வெற்றிடம் என்பது மாயை ஆகும் என்றார்.

    திருமணத்தில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய மந்திரி சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பா.ஜனதா வரவேற்கிறது. ரஜினிக்கு காவி சாயம் பூச விரும்பவில்லை. ரஜினி அரசியலுக்கு வந்தால் கூட்டணி குறித்து பா.ஜனதா தனது நிலைப்பாட்டை அறிவிக்கும்.

    ஆன்மீக அரசியலும், அறம் சார்ந்த அரசியலும் தமிழகத்துக்கு தேவை. சபரிமலை தீர்ப்பு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

    விஜயகாந்த் அரசியலுக்கு வந்து சாதித்தது என்ன? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் பாஸ்கரன், இனி அரசியலுக்கு நடிகர்கள் வந்தாலும் ஒன்றும் சாதிக்க முடியாது என்று கூறினார்.
    சிவகங்கை:

    சிவகங்கையில் கால்நடைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு கால்நடை தீவனங்கள் மற்றும் தீவனங்கள் தயாரிக்கும் எந்திரங்களை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சிவகங்கையில் பாதாள சாக்கடை பணிகள் உள்ளாட்சி தேர்தலுக்குள் முடிவடையும். காரைக்குடியை தலைமையிடமாக கொண்டு சிவகங்கை மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை.

    விஜயகாந்த்

    நடிகர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்தார்கள். விஜயகாந்த்தும் கட்சி ஆரம்பித்தார். அரசியலுக்கு வந்து அவர் சாதித்தது என்ன? இனி அரசியலுக்கு நடிகர்கள் வந்தாலும் ஒன்றும் சாதிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×