என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • சாக்கடை கால்வாயில் அதிகாலையில் நாய் ஒன்று விழுந்துள்ளது
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நாயை உயிருடன் மீட்டனர்

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலறைக்கேட் அருகே பண்ணக்காடு பகுதியில் அதிக ஆழமுள்ள சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் அதிகாலையில் நாய் ஒன்று விழுந்துள்ளது. பின்னர் சாக்கடையில் இருந்து வெளியே வரமுடியாததால் தொடர்ந்து சத்தமிட்டு கொண்டே இருந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற கணேஷ் புவன் என்பவர் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சதீஷ்குமார், ஹரிஹரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நாயை உயிருடன் மீட்டனர். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறை வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு கிராமத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் கலெக்டர் டாக்டர்.உமா தலைமையில் நடைபெற்றது.
    • குமாரபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் வாய்க்காலில் பேரூராட்சி மற்றும் இந்த பகுதியில் உள்ள ஊராட்சி பகுதியில் இருந்து சாக்கடை கழிவு நீர் கலக்கிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு கிராமத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் கலெக்டர் டாக்டர்.உமா தலைமையில் நடைபெற்றது.

    இந்த குறை தீர்ப்பு முகாமில் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில துணை செயலாளர் பொன். ரமேஷ் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமாரபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் வாய்க்காலில் பேரூராட்சி மற்றும் இந்த பகுதியில் உள்ள ஊராட்சி பகுதியில் இருந்து சாக்கடை கழிவு நீர் கலக்கிறது. அதேபோல் தனியார் மற்றும் பொது கழிப்பறையில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீரும் வாய்க்கால்களில் கலக்கிறது. சாக்கடை கழிவு நீர் வாய்க்காலில் கலப்பதை தடை செய்ய வேண்டும். வாய்க்கால்களில் அதிக அளவு செடி, கொடிகள் முளைத்துள்ளதால் கடைமடை வரை தண்ணீர் செல்ல முடியாமல் பணப்பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதேபோல் நச்சுத்தன்மை உள்ள சாக்கடை கழிவு நீர் கலந்து செல்வதால் மகசூல் பாதிக்கிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    இதில் நஞ்சை இடையாறு மோகனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பிரதாப், நஞ்சை இடையாறு சுமதி விசுவநாதன், உழவர் பேரியக்கத்தின் மாவட்ட செயலாளர், பொன்மலர்பாளையம் பா.ம.க., மோகனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், நஞ்சை குமார், வினோத், கபிலன், கிருஷ்ணமூர்த்தி, மோகன்ராஜ், சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மினி பஸ் கருக்கம்பாளையத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததால் அதில் பயணித்த மொத்தம் 35 பயணிகளில் 2 பள்ளி மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
    • மேலும், வாகன ஓட்டுநருக்கு இடுப்பு பகுதியில் அடிப்பட்டதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், அ.கொந்தளம் கிராமம், கருக்கம்பாளையம் வழியாக வேலூர் சென்ற மினி பஸ் கருக்கம்பாளையத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததால் அதில் பயணித்த மொத்தம் 35 பயணிகளில் 2 பள்ளி மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளனர். மேலும், வாகன ஓட்டுநருக்கு இடுப்பு பகுதியில் அடிப்பட்டதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பான முறையில் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருபவர்களை கலெக்டர் டாக்டர். உமா வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து, நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவும் உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கிடவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் விபத்து ஏற்பட்டுள்ள இடத்தில் இனிவரும் காலங்களில் இது போன்று விபத்து ஏற்படாத வகையில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு பதாகைகள் அமைக்க வேண்டுமென வட்டார போக்குவரத்து அலுவலர், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

    இந்நிகழ்வில், இணை இயக்குநர் (மருத்துவம்) (பொ) வாசுதேவன், கோட்ட பொறியாளர் (நெடுஞ்சாலை) குணா, வட்டார போக்குவரத்து அலுவலர் (நாமக்கல் தெற்கு) முருகன், போலீஸ் துணை சூப்பிரண்டு (பரமத்தி) ராஜ முரளி மற்றும் மருத்துவர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலம் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை கலெக்டர் டாக்டர்.உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகளின் விவரங்கள் வேளாண் அலுவலர்கள் மூலம் பெறப்படும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் பிலிக்கல் பாளையத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலம் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை கலெக்டர் டாக்டர்.உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    விவசாயிகளிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள வேளாண் பணிகள், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் வழங்கப் பட்ட மானிய தொகை, நிலம் மேம்பாடு உள்ளிட்ட விபரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

    நிலத்தடி நீர்

    இதையடுத்து கலெக்டர் உமா கூறியதாவது:-

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்று சேர்ந்து 15 ஏக்கர் தரிசு நிலத் தொகுப்பினை ஏற்படுத்தி குழுவாக சாகுபடி செய்வதற்கு உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகளின் விவரங்கள் வேளாண் அலுவலர்கள் மூலம் பெறப்படும். பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தரிசு நிலத் தொகுப்புகளில் நிலத்தடி நீர் மட்டம், நீர் ஆதாரங்களை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் தரிசு நிலத்திலும் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் வருவாய் ஈட்டலாம்.

    அந்த வகையில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் 2021 -– 2022- ன் கீழ் கபிலர்மலை வட்டம் பிலிக்கல்பாளையத்தில் 15 விவசாயிகளை உள்ளடக்கி 15.50 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலம் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தரிசு நிலத் தொகுப்பில் ஆழ்துளை கிணறு, மின் இணைப்பு மற்றும் மின் மோட்டர் முழு மானியத்தில் வழங்கப்பட்டு நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வில் வேளாண் இணை இயக்குநர் துரைசாமி, தோட்டக்கலைத்துறை (துணை இயக்குநர்) கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், கபிலர் மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பிலிக்கல் பாளையம் ஊராட்சி தலைவர் மணிமேகலை லோக நாதன் மற்றும் பயனாளிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • வேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் பள்ளி சாலையில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடந்தது.
    • பயிற்சி முகாமிற்கு வேலூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    வேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் பள்ளி சாலையில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடந்தது. பயிற்சி முகாமிற்கு வேலூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    இந்த முகாமில் வேலூர், பரமத்தி, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை டவுன் பஞ்சாயத்துகளைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர். முகாமில் தூய்மை பணியாளர்கள் செயல்படுவது குறித்து பயிற்சி அளித்தனர்.

    இதற்கு முன்னதாக வேலூர் டவுன் பஞ்சாயத்தில் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணி புரிந்து வரும் செந்தில்குமார் (45), மற்றும் 8 ஆண்டுகளாக பணிபுரியும் குப்பாயி (45)ஆகிய இருவருக்கும் மாலை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.

    இந்த பயிற்சியில் பரமத்தி செயல் அலுவலர் சுப்பிரமணி, பாண்டமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் திலகராஜ், வெங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன்,எருமப்பட்டி செயல் அலுவலர் வசந்தா மற்றும் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நல்லம்மாள் இறந்துவிட்ட நிலையில், சண்முகம் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகத்தின் வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள குப்பிச்சிபாளையம் கொட்டக்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (70). இவர் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி நல்லம்மாள் என்கிற சின்னப்பிள்ளை (65).

    இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இவர்களின் பேத்திக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக சண்முகம்-நல்லம்மாள் ஆகியோர் திருமண அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் வந்த மர்மநபர்கள் வீட்டின் சுற்றுச்சுவர் அருகே இருந்த மரத்தின் மீது ஏறி வீட்டிற்குள் குதித்தனர். பின்னர் அதிகாலையில் வீட்டிற்குள் நுழைந்து அங்கு தூங்கி கொண்டிந்த நல்லம்மாளின் கழுத்தை கத்தியால் அறுத்தும், சண்முகத்தை இரும்பு கம்பியாலும் பலமாக தாக்கினர்.

    இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கினர். அதை பார்த்த மர்மநபர்கள் இருவரும் இறந்து விட்டதாக எண்ணி வீட்டில் இருந்த பீரோ மற்றும் பல்வேறு பகுதிகளில் பணம், நகை உள்ளதா என தேடி பார்த்துள்ளனர். மேலும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக வீட்டுக்குள் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இன்று காலை உறவினர்கள் சிலர் சண்முகத்தின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    நல்லம்மாள் இறந்துவிட்ட நிலையில், சண்முகம் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சண்முகத்தை நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மர்மநபர்களால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதேபோல் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பல்வேறு பகுதிகளில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளை முயற்சியின் போது கொலை சம்பவம் நடந்ததா? அல்லது முன்விரோத தகராறில் யாராவது கொலை செய்ய வந்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகத்தின் வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. இதை பார்த்த சண்முகம் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் தங்களது வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டுள்ளது என்றும், எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதாகவும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவியை மர்மநபர்கள் தாக்கியதில் மனைவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகத்தின் ஒட்டுமொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 ‌விழு‌க்கா‌ட்டை பூ‌ர்‌த்‌தி செய்கிறது.
    • ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் முட்டைகள் மிக முக்கிய உணவு பொருளாக இடம் பிடித்துள்ளது.

    நாளை அக்டோபர் (13-ந் தேதி) உலக முட்டை தினமாக கொண்டாடப்படுகிறது.

    கடந்த 1996-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வரும் 2-வது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாக கொண்டாடப்படுகிறது.

    முட்டையின் நன்மைகள் குறித்து அதில் உள்ள சத்துக்கள் மற்றும் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்துவதுதான் இந்த நாளின் நோக்கம். குறைந்த விலையில் அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவாக முட்டை திகழ்கிறது. புரதச்சத்து அதிகம் இருக்கும் கோழி முட்டை ஏற்றுமதியில் இந்தியாவில் நாமக்கல் மண்டலம் முதலிடம் வகிக்கிறது.

    குறைந்த விலையில் கிடைக்கும் அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவு முட்டை மட்டும் தான், வளரும் குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    ஊட்டச்சத்து மட்டுமின்றி உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் முட்டையில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வைட்டமின் ஏ, பி 12, பி 2, பி 5, இ கோலின், சியாந்தீன் போன்ற கனிம சத்துகளும் முட்டையில் நிறைந்துள்ளன.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த முட்டைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதில் இந்தியாவில் நாமக்கல் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் சிறப்பு வாய்ந்த முட்டை ஏற்றுமதிக்கு சொந்தமான நாமக்கல் மாவட்ட மக்களை பெருமையடைய செய்துள்ளது என்றால் மிகையாகாது.

    நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 1100-த்திற்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த முட்டை கோழிப்பண்ணைகளில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினசரி 5 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த முட்டைகள் தரமானதாக கிடைப்பதால் தமிழகத்தின் சத்துணவு திட்டம் மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகள், கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கும் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. நாமக்கல் முட்டைகளுக்கு தனி சிறப்பு உண்டு என்பதால் உலகம் முழுவதும் இந்த முட்டைகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    தமிழகத்தின் ஒட்டுமொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 விழுக்காட்டை பூர்த்தி செய்கிறது. இதில் உள்ளூர் தேவைக்கு போக மீதம் உள்ள 40 லட்சம் முட்டைகள் தினசரி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    முட்டை ஏற்றுமதி தொழிலில் முதலிடத்தில் உள்ள நாமக்கல் மண்டலத்தில் இருந்து உற்பத்தியாகும் முட்டைகள் மஸ்கட், குவைத், கத்தார், பக்ரைன், லைபீரியா, துபாய், சிரியா, ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல்களில் கண்டெய்னர்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி முதல், நாமக்கல் பகுதிகளில் இருந்து விமானம் மூலம் மலேசியா நாட்டிற்கு முட்டைகள் ஏற்றுமதி தொடங்கி உள்ளது. இதில் இரண்டு கரு அடங்கிய முட்டைகள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த முட்டைகளில் சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளதாகவும் பண்ணையாளர்கள் கூறுகிறார்கள். இதனால் வெளிநாடுகளில் இந்த முட்டைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    அனைத்து ஓட்டல்களில் மற்றும் வீடுகளில் முட்டைகள் மிக முக்கிய உணவு பொருளாக இடம் பிடித்துள்ளது. குறிப்பாக ஆம்லெட், ஆப்பாயில், முட்டை தோசை, முட்டை குழம்பு, முட்டை புரோட்டா, முட்டை பிரியாணி என பல்வேறு வகையில் அனைவரும் விரும்பும் வகையில் உணவு பொருளாக இந்த முட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.

    இத்தகைய பெருமை வாய்ந்த முட்டைகளை உற்பத்தி செய்யும் கோழிக்குஞ்சுகள் பிறந்து ஒரு நாள் குஞ்சுகளாக பண்ணையில் விடப்படுகிறது. தொடர்ந்து அதற்கு தீவனம் கொடுத்து வளர்த்து 8 வாரங்களில் முட்டையிடும் கோழிகளாக மாறுகின்றன. இந்த கோழிகள் அதிகபட்சமாக 72 வாரங்கள் முட்டையிடுகிறது. பின்னர் கறிக்காக குறைந்த விலையில் இந்த முட்டை கோழிகள் விற்கப்படுகிறது. முட்டை கோழிகளுக்கு சத்து வாய்ந்த மக்காச்சோளம், ராகி மாவு, தானியங்கள் அரைத்த மாவு உணவாக வழங்கப்படுகிறது.

    கோழிப்பண்ணை

    கோழிப்பண்ணை

    நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கோழிகளை வளர்க்க தீவனம் போடுவது, தண்ணீர் கொடுப்பது, கோழிகள் போடும் முட்டைகளை எடுத்து அட்டையில் அடுக்குவது, லாரியில் ஏற்றி வெளியூர்களுக்கு அனுப்புவது, கோழிப்பண்ணைகளை பராமரிப்பது, சுத்தம் செய்வது, முட்டைகளை வாகனங்களில் எடுத்து செல்வது, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்பட வடமாநிலங்களில் இருந்து தீவனங்கள் கொண்டு வருவது, முட்டைகளை உள்நாடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என இந்த தொழிலை நம்பி 5 லட்சத்திற்கும் அதிகமாக தொழிலாளர்கள் உள்ளனர். இதில் நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    ஏற்கனவே நாமக்கல்லில் முட்டை உற்பத்தி 6 கோடியாக இருந்த நிலையில் தற்போது தீவன விலை உயர்வால் பல பண்ணைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் முட்டை உற்பத்தி 5 கோடியாக குறைந்துள்ளது. இதனால் பலர் பண்ணைகளை மூடிவிட்டு வேறு வேலைக்கு சென்றதால் இதனை நம்பி இருந்த பலர் வேலை இழந்துள்ளனர்.

    எனவே கோழி தீவனத்தை மானிய விலையில் பண்ணையாளர்களுக்கு வழங்க வேண்டும், வங்கி கடன்களை நிபந்தனையில்லாமல் வழங்கி சிறப்பு வாய்ந்த இந்த தொழிலை காப்பாற்ற வேண்டும் என்பது கோழிப்ப ண்ணையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்கிறது. அதன்படி நாமக்கல் மண்டலத்தில் தற்போது முட்டை விலை 510 காசுகளாக உள்ளது. வழக்கமாக முட்டை விலை புரட்டாசி மாதங்களில் குறைவாக இருக்கும், ஆனால் இந்தாண்டு தற்போதும் முட்டை விலை குறையவில்லை. நிர்ணயிக்கும் விலையில் இருந்து மைனஸ் விலை இல்லாமல் விற்பனை செய்ய பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படியே விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    தினசரி 1 கோடி முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் புரட்டாசி மாதத்திலும் முட்டை விலை அதிகரித்தே காணப்படுகிறது.

    • போலி ரசீது, போலி க்யூ.ஆர்.கோடு பயன்படுத்தி மணல் விற்பனை செய்துள்ளதை அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது.
    • மணல் அள்ளிய பகுதிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் டிரோன் மூலம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ஒருவந்தூரில் அரசு மணல் குவாரி செயல்படுகிறது. இங்கிருந்து மணல் எடுத்து வரப்பட்டு வளையப்பட்டி சாலை செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அரசு மணல் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

    இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், சட்ட விரோதமாக மணல் விற்பனை மேற்கொள்வதாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி 2 கார்களில் வந்த அமலாக்கத்துறையை சேர்ந்த 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழு மணல் சேமிப்பு கிடங்கில் சோதனை நடத்தினர்.

    ஆற்றில் இருந்து எவ்வளவு மணல் அள்ளி வந்து சேமிக்கப்படுகிறது. எவ்வளவு மணல் விற்கப்பட்டுள்ளது. அதற்காக எவ்வளவு பணம் பெறப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் முறையாக உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    35 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் மணல் சேமிப்பு கிடங்கு அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ரசீதுகள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றில் கிடைக்கப் பெற்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் போலி ரசீது, போலி க்யூ.ஆர்.கோடு பயன்படுத்தி மணல் விற்பனை செய்துள்ளதை அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது.

    ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மணல் வழங்கப்பட்ட விபரம், ஆற்றிலிருந்து எவ்வளவு மணல் அள்ளி வரப்பட்டது, தற்போது சேமிப்பு கிடங்கில் இருப்பு விபரம், எந்தெந்த வாகனங்களுக்கு மணல் விற்பனைக்கு வழங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை செய்தனர்.

    அதேபோல் அரசு நிர்ணயித்த 3 யூனிட் மணலுக்கு 7,950 ரூபாய் தொகையை விட கூடுதலாக 6,500 ரூபாய் எவ்வளவு பேரிடம் வாங்கப்பட்டது என்பது பற்றியும் விசாரணை செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள என்.புதூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மணல் குவாரிகளை ஏலம் எடுத்த நபர்கள் எவ்வளவு மணல் அள்ளிச் சென்றுள்ளனர் என்பது குறித்து நேற்று காலை முதல் மதியம் வரை அமலாக்கத்துறையினர் ஆய்வு நடத்தி குழிகளை அளந்து பார்த்து மதிப்பிட்டனர்.

    தொடர்ந்து மாலை 4 மணியளவில் 7 கார்களில் வந்த அமலாக்கத்துறையினர் 9 பேர், 2 குழுக்களாக பிரிந்து நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் காவிரி ஆற்றில் மணல் அள்ளிய பகுதிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் டிரோன் மூலம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அவர்களுடன் கோரக்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் தலைமையில் 10 பேர் கொண்ட அளவீட்டாளர்கள், திருச்சி பொதுப்பணித்துறை உதவி கோட்ட அலுவலர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் சங்கீதா ஆகியோர் வந்திருந்தனர்.

    அப்போது ஆற்றுக்குள் இறங்கி அரசு அனுமதித்த அளவை விட முறைகேடாக மணல் அள்ளப்பட்டுள்ளதா? மணல் அள்ளிய குழிகளின் நீளம், அகலம், ஆழம் ஆகியவற்றை சுமார் 2 மணி நேரம் எவ்வளவு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பதை டிஜிட்டல் முறையில் கணக்கீடு செய்து அதனை குறித்துக் கொண்டனர். பின்னர் 6 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இந்த சோதனையின் போது 20 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் குவாரியை சுற்றி துப்பாக்கியுடன் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் பொதுப்பணி துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.

    கடந்த முறை அமலாக்கத்துறை மணல் குவாரிகளில் ஆய்வு நடத்தியதை தொடர்ந்து மணல் குவாரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
    • நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பூர்ணிமா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    நாமக்கல்:

    பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பூர்ணிமா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி முன்பு தொடங்கி மணிக்கூண்டு, திருச்சி சாலை, டாக்டர் சங்கரன் சாலை, மோகனூர் சாலை வழியாக மீண்டும் பள்ளியை பேரணி வந்தடைந்தது.

    பேரணியில் பெண்குழந்தை களை பாதுகாப்போம், அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கல்வியை உறுதி செய்வோம். பாலின தேர்வு அடிப்படையில் கருவில் பெண் குழந்தைகள் அழிவதை தடுக்க வலியுறுத்தி பேரணியில் ஈடுபட்ட மாணவிகள் கோஷங்கள் எழுப்பினர். இப் பேரணியில் பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி, உதவி தலைமை ஆசிரியர் கற்பகம், போக்குவரத்து ஆய்வாளர் ஷாஜஹான், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம், அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் சுமதி, லட்சுமி, பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 50-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதில் அனைவரும் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
    • அதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அப்பகுதியில் உள்ள கோவில் நிலம் வழியாக சென்று வந்ததாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி அண்ணா நகர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 50-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதில் அனைவரும் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அப்பகுதியில் உள்ள கோவில் நிலம் வழியாக சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த கோவில் இடத்திற்கு தற்போது கம்பி வேலி அமைத்து வழக்கமாக செல்லும் பாதை மறிக்கப்பட்டதால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் செல்ல முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் உடனடியாக அந்த கம்பி வேலியை அகற்ற வலியுறுத்தி ஜேடர்பாளையம்- திருச்செங்கோடு பிரதான சாலையில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் ½ மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • மின்சார விநியோகம் செய்வதற்காக ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

    நாமக்கல்:

    நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் கோட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை 12-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்சார விநியோகம் தடை செய்யப்படும். அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுஉள்ளது.

    • பரமத்திவேலூர் நோக்கி 15- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் சென்று கொண்டிருந்தது.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் அருகில் இருந்த கோரை புற்கள் குவியலாக முளைத்திருந்த வயலுக்குள் கவிழ்ந்தது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா பொன்மலர் பாளையத்திலிருந்து மினி பஸ் ஒன்று பரமத்திவேலூர் நோக்கி 15- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் சென்று கொண்டிருந்தது. மினி பஸ் கொந்தளம் அருகே உள்ள கருக்கம்பாளையத்தில் சென்றபோது எதிரே சைக்கிளில் வந்தவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் மினி பஸ்சை இடது புறமாக திருப்பினார்.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் அருகில் இருந்த கோரை புற்கள் குவியலாக முளைத்திருந்த வயலுக்குள் கவிழ்ந்தது. இதனால் உள்ளே இருந்த பள்ளி மாணவிகள் மற்றும் பெரியவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் அடியில் மாட்டிக் கொண்டு அலறினர். அவர்களது அலறல் கேட்டு அங்கு விவசாயம் நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து பஸ்சில் மாட்டிக் கொண்டவர்களை மீட்டனர்.

    இந்த விபத்தில் மினி பஸ் டிரைவர் சந்தோஷ், பாண்டமங்கலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் பொன்மலர்பாளையத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி (17), தேசிகா (15), உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் டிரைவர் சந்தோஷ், மாணவி ஸ்ரீமதி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பார்மசி பயிலும் கொந்தளத்தை சேர்ந்த மகிமா(21), லலிதா(42), சின்னத்தம்பி(21), கனகா(26), ஜோதி(26), அண்ணாமலை(32), மற்றும் நாகம்மாள் (21) ஆகியோர் லேசான காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×