என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை சார்பாக சுகாதார விழிப்புணர்வு முகாம் தளவா பாளையத்தில் நடைபெற்றது.
    • முகாமிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை தாங்கினார்.

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம் மன்மங்கலம் அருகே பண்டுதகாரன் புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை சார்பாக சுகாதார விழிப்புணர்வு முகாம் தளவா பாளையத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ஷாலினி பிரியா மற்றும் டாக்டர் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தளவாபாளையம் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். இந்த முகாமில் வேதியியல் துறை தலைவர் சாந்தி வரவேற்றார். பேராசிரியர்கள் செவ்வந்தி, கவிபிரியா, முதுகலை முதலாம் ஆண்டு மற்றும் இளங்கலை 3-ம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 4 மாதங்களுக்கு மேலாக வீடுகள், வெல்ல ஆலைகள் மற்றும் அங்கிருந்த குடியிருப்புகளுக்கு தீ வைப்பது, விவசாய கருவிகள், வாழை மற்றும் 3200-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பது போன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • மீண்டும் நேற்று முன்தினம் இரவு தர்மலிங்கம், நல்லசிவம், புலவர் சுப்பிரமணி ஆகியோரது தோட்டத்தில் இருந்த 2000-க்கும்‌ மேற்பட்ட வாழை மரங்கள், பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்தி உள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக வீடுகள், வெல்ல ஆலைகள் மற்றும் அங்கிருந்த குடியிருப்புகளுக்கு தீ வைப்பது, விவசாய கருவிகள், வாழை மற்றும் 3200-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பது போன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இதனை தடுக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் அப்பகுதியில் 600-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். மேலும் கோவை மண்டல போலீஸ் துறைத் தலைவர் சுதாகர் தலைமையில் சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் இரவு ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் தர்மலிங்கம், நல்லசிவம், புலவர் சுப்பிரமணி ஆகியோரது தோட்டத்தில் இருந்த 2000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா பரமத்திவேலூர் எம்.எல்.ஏ. என்ஜினீயர் சேகர், பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ சுகந்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் விசாரணை நடத்தி இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    மரங்கள் வெட்டி சாய்த்த மர்ம நபர்களை கண்டுபிடிக்கும் வகையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புது மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு நவராத்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
    • இந்த வருடமும் 49-ம் ஆண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் நேற்று நவராத்திரி விழா தொடங்கியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள புது மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு நவராத்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த வருடமும் 49-ம் ஆண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் நேற்று நவராத்திரி விழா தொடங்கியது.

    நவராத்திரி விழாவை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி வரை தினந்தோறும் அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. 23-ந் தேதி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், 24-ந் தேதி மாலை 6 மணிக்கு புது மாரியம்மன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் புறப்பட்டு பேட்டை பகவதியம்மன் கோவிலை சென்றடைகிறது. பின்னர் அங்கு அம்பு சேர்வை நடைபெறுகிறது.

    இதேபோல் கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி முதல் நாளை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • வக்கீல் சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் இருந்த 200 பாக்கு மரங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.
    • பாக்கு மரம் மற்றும் வாழை மரங்கள் வெட்டப்பட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து வீடுகள், வாகனங்களுக்கு தீ வைப்பு, வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல், விவசாய பயிர்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனை தடுக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் அப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதனிடையே மீண்டும் ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் தர்மலிங்கம் (வயது 56), நல்லசிவம் (62), புலவர் சுப்பிரமணி, வக்கீல் சுப்பிரமணி (68) ஆகியோரது தோட்டத்தில் இருந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு வெட்டி சாய்த்தனர்.

    மேலும் வக்கீல் சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் இருந்த 200 பாக்கு மரங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இதனால் அந்த பகுதிகளில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையிலான போலீசார் வாழை மரங்கள் மற்றும் பாக்கு மரங்கள் வெட்டப்பட்ட தோட்டத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாக்கு மரம் மற்றும் வாழை மரங்கள் வெட்டப்பட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    வாழை மரங்கள் மற்றும் பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. ஜேடர்பாளையம் பகுதியில் தொடரும் இச்சம்பவத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீண்ட காலமாக இக்கோவில்களில் ஆண்டு தோறும் விமரிசையாக திரு விழாக்கள் நடத்தப்பட்டது.
    • பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் ஏற்பட வில்லை. இதையடுத்து வருவாய்த் துறையினர் கோவில்களை பூட்டி சீல் வைத்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட தும்மங்குறிச்சியில் 3 சமூகத்தினருக்கு பாத்தி யப்பட்ட கூத்தாண்டம்மன், கொங்களாயி அம்மன், விநாயகர், நல்லாயி, காமாட்சி அம்மன், நல்லேந்தி ரன், வீரமாத்தியம்மன், கம்பராயன், பட்டதளச்சி அம்மன், கனாமரத்தான் கோவில்கள் உள்ளன.

    நீண்ட காலமாக இக்கோவில்களில் ஆண்டு தோறும் விமரிசையாக திரு விழாக்கள் நடத்தப்பட்டது. இக்கோவில்களில் பூஜை செய்வது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு இரு சமூகத்தினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதையடுத்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் ஏற்பட வில்லை. இதையடுத்து வருவாய்த் துறையினர் கோவில்களை பூட்டி சீல் வைத்தனர். கடந்த 7 ஆண்டுகளாக 10 கோவில்களிலும் எவ்வித பூஜைகளும் நடத்தப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி வருவாய் துறையினர் கோவில்களுக்கு பாத்தி யப்பட்ட சமூகத்தினரி டையே சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டது.

    இதையடுத்து 7 ஆண்டுகளாக பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்த 10 கோவில்களும் நாமக்கல் தாசில்தார் சக்திவேல் முன்னிலையில் சீல் அகற்றி திறக்கப்பட்டது.

    தொடர்ந்து, ஹோமம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமிகளை வழிபட்டனர். அசம்பாவிதம் தவிர்க்க நல்லிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    7 ஆண்டுகளுக்கு பின் கோவில் திறக்கப்பட்ட தையடுத்த, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக பட்டாசுகளை வெடித்தனர். அப்போது அப்பகுதியில் பரம சிவம் (42) என்பவரது குடிசை வீட்டில் தீப்பொறி விழுந்து தீப்பிடித்தது. அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர்.

    • ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் மின் வினியோகம் இருக்காது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    இதனால் பரமத்திவேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், வி.சூரியாம்பாளையம், வீராணம் பாளையம், கோப்பணம்பாளையம், குப்பிச்சிபாளையம், ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரைப்பாளையம், கண்டிப்பாளையம், வடுகபாளையம், நஞ்சப்ப கவுண்டம்பாளையம், நாயக்கனூர், சிறுநல்லி கோவில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பள்ளம் ஆகிய ஊர்களுக்கும் மேலும் மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

    • கூட்டுறவுத் துறையின் கீழ் 892 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 115 மொபைல் ரேசன் கடைகள் நடைபெற்று வருகின்றன.
    • மொபைல் ரேசன் கடைகள் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 12,893 ரேசன் கார்டுதாரர்கள் பயன் பெறுகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 892 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 115 மொபைல் ரேசன் கடைகள் நடைபெற்று வருகின்றன. மொபைல் ரேசன் கடைகள் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 12,893 ரேசன் கார்டுதாரர்கள் பயன் பெறுகின்றனர். சிலுவம்பட்டி, பொம்மைகுட்டைமேடு, ஆரியூர், அணியாபுரம், லத்துவாடி உள்ளிட்ட பகுதிகளில் மொபைல் ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    ஆய்வு

    மொபைல் ரேசன் கடைமூலம் நாமக்கல் சிலுவம்பட்டி, போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மொபைல் ரேஷன் கடை மூலம் பயன்பெறும் ரேசன் கார்டுகள், வழங்கப்படும் பொருட்கள் உள்ளிட்ட விவரங்களை கலெக்டர் உமா கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும், தரமான உணவுப் பொருட்களை சரியான அளவில் வழங்கிட வேண்டும் என விற்பனையாளருக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக திருச்செங்கோடு தாலுகா, புத்தூர் கிராமத்தில் ஆன்லைன் மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக நிலங்கள் வரன்முறைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • தென்னை மரங்களில் புதுவகையான ஒரு நோய் தாக்கப்பட்டு குருத்துகள் அழுகி காய்ப்பு இல்லாமல் போவதோடு புதிதாக நடவு செய்யப்பட்ட தென்னங்கன்றுகளில் இந்த நோய் தாக்கி குருத்துகள் வளராமல் கன்று அழுகிப்போகிறது.
    • இந்த நோய் பரவி தென்னை விவசாயம் பாதிக்கப்படுமோ என அஞ்சிய விவசாயி நடேசன் வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது.

    தற்போது கொல்லபட்டி பகுதியில் விவசாயி நடேசன் என்பவரது தோட்டத்தில் தென்னை மரங்களில் புதுவகையான ஒரு நோய் தாக்கப்பட்டு குருத்துகள் அழுகி காய்ப்பு இல்லாமல் போவதோடு புதிதாக நடவு செய்யப்பட்ட தென்னங்கன்றுகளில் இந்த நோய் தாக்கி குருத்துகள் வளராமல் கன்று அழுகிப் போகிறது. இந்த நோய் பரவி தென்னை விவசாயம் பாதிக்கப் படுமோ என அஞ்சிய விவசாயி நடேசன் வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

    தகவலறிந்து திருச்செங்கோடு வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் லோகநாதன், திருச்செங்கோடு வேளாண்மை அலுவலர் பவித்ரா மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நோயியல் துறை இணை பேராசிரியர் மருதாசலம், சேலம் சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியில் துறை இணைப்பேராசிரியர் ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் நடேசன் தோட்டத்தில் ஆய்வுப்பணி மேற்கொண்டனர்.

    மேலும் இது குறித்து சேலம் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் ரவி மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக இணை பேராசிரியர் மருதாசலம் ஆகியோர் கூறியதாவது:-

    கன்றுகள் நடும்போது காண்டாமிருக வண்டுகள் குறித்து சுமார் 3 வருடங்கள் கவனமாக இருக்க வேண்டும். காண்டாமிருக வண்டுகள் தாக்காமல் இருக்க குறுமணல் வேப்பங்கொட்டை ஆகியவற்றை இணைத்து அரைத்து குருத்துகளில் தூவ வேண்டும் அல்லது நாத்தாலியின் உருண்டைகளை குருத்துகளில் போட்டு வைத்தால் காண்டாமிருக வண்டிகள் தாக்காது. இந்த வண்டுகள் குப்பை, குழிகள் எரு குழிகள், கம்போஸ்ட் யார்டுகள், உள்ள பகுதிகளில் அதிகமாக உற்பத்தியாகும். இதனை தடுக்க மெட்ராரைசியம் அனி சோபில் பேட் என்ற பூஞ்சானத்தை ஊற்றினால் காண்டாமிருக வண்டுகள் புழுக்கள் பருவத்திலேயே அழிக்கப்படும். இதனால் வண்டுகளில் உற்பத்திகள் குறைந்து விடும், அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் காண்டாமிருக வண்டுகளின் உற்பத்தியை குறைக்க முடியும்.

    இந்த பூஞ்சான்கள் நெட்டை மர தென்னைகளில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் அதிகமாக தாக்காது. ஆனால் நெட்டை மர வகை கன்றுகளை அதிகமாக தாக்கும் ஆகவே மூன்று ஆண்டுகள் கன்று பருவத்தில் இதனை கண்காணிக்க வேண்டும். கன்றுகளை நடும்போது நீர் பாய்ச்சும் போது மண்கள் குருத்துகளில் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர் ஆகிய மழைக்காலங்களில் தான் இந்த பூஞ்சான்கள் பரவும் காப்பர் ஆக்சிட் மருந்துகளை லிட்டருக்கு 3 கிராம் கலந்து தெளித்தால் இந்த பூஞ்சான்கள் வளராது. போட்டோ கலவை ஒரு சதவீத அளவுக்கு நாமே உற்பத்தி செய்து தெளித்து வந்தாலும் வளராது. காண்டாமிருக வண்டுகளால் ஏற்படும் குழிகள் காயங்களில் தான் இந்த பூஞ்சான் பரவும்.

    இது குருத்து அழுகல், பூஞ்சான் நோய் எனப்படும் வழக்கமான குறுத்தழுகள் நோய் போல் அல்லாமல் இது மாறுபட்டு இருக்கும். பாதிக்கப்பட்ட குருத்துகளை பிடுங்கி நெருப்பு வைத்து எரித்து விட வேண்டும். இல்லை என்றால் இது காற்றில் பரவக்கூடியது பல மரங்களையும் பாதிக்கும். இதனால் காய்ப்பு இருக்காது கன்றுகள் குருத்துகள் அழிந்து போகும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாடார் திருமண மண்டபத்தில் சுமார் 5 டன் எடையுள்ள மணம் உள்ள மலர்களை மாலைகளாக தொடுக்கும் விழா நடந்தது
    • ருச்செங்கோடு சுற்றுபகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழங்கிய சம்பங்கி, மஞ்சள், சிவப்பு, சாமந்தி பூக்கள், மரிக்கொழுந்து உள்ளிட்ட சுமார் 5 டன் எடையுள்ள பல வண்ண பூக்களை

    திருச்செங்கோடு:

    திருப்பதியில் ஆண்டு தோறும் நடக்கும் பிரம்மோற்சவத் திருவிழா வுக்கு திருச்செங்கோட்டில் இருந்து பூமாலைகள் அனுப்பபட்டு வருகிறது.

    இதன்படி இந்த ஆண்டு பிரமோற்சவ விழா நாளை தொடங்குகிறது. இதற்காக இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாடார் திருமண மண்டபத்தில் சுமார் 5 டன் எடையுள்ள மணம் உள்ள மலர்களை மாலைகளாக தொடுக்கும் விழா நடந்தது. திருச்செங்கோடு சுற்றுபகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழங்கிய சம்பங்கி, மஞ்சள், சிவப்பு, சாமந்தி பூக்கள், மரிக்கொழுந்து உள்ளிட்ட சுமார் 5 டன் எடையுள்ள பல வண்ண பூக்களை திருச்செங்கோடு, சேலம், கொங்கணாபுரம், ராசிபுரம், ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட பெண்கள் மாலைகளாக தொடுத்தனர்.

    இது குறித்து கொங்கணா புரத்தை சேர்ந்த திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் நிர்வாகிகள் சுகந்தி, கனகராஜ் ஆகியோர் கூறியதாவது:-

    கொங்கணாபுரத்தை சேர்ந்த திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பில் ரதசப்தமி, வைகுண்ட ஏகாதசி, உகாதி, பிரம்மோற்சவத் திருவிழா ஆகியவற்றுக்கு பூமாலைகள் வருடம்தோறும் தொடுத்து அனுப்பி வருகின்றோம். இறைப்பணியில் அதிக ஆர்வமுள்ள பக்தர்கள் மாலை தொடுக்கும் பணியை செய்தனர்.

    மேலும் மாலைகளோடு கரும்பு, தென்னம்பாளை, தென்னங் குருத்து, இளநீர், பாக்கு குழைகள், மாங்கொத்துகள் சுமார் ரூ.2 1/2 லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரம் ரோஜாசெடிகள் ஆகி யவற்றையும் சிறப்பு பூஜைகள் செய்து அனைத்தை யும் 3 லாரிகள் மூலம் திருமலைக்கு அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • குருசாமிபாளையத்தில்கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
    • சங்கத்திற்கு சென்று மானேஜர் பிரகாஷிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில் நெ.எஸ்.844 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தற்போது 260-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர்.

    இந்த சங்கத்தில் 3 பேர் ஊழியர்களாக இருந்து வருகின்றனர். சங்க உறுப்பினர்களுக்கு பாவு கொடுத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் இலவச வேட்டி சேலைகள் வாங்கி அரசுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் சேலைகள் கோவாப்ரேடிவ் நிறுவனத்திற்கும் அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் குருசாமிபாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் (32) சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் சங்கத்தின் மேனேஜர் (பொறுப்பு) பிரகாஷிடம் பாவு நூல் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் மேனேஜர் பிரகாஷ் ஒரு வேட்டிக்கு ரூ.5 தர வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விருப்பமில்லாத லோகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் லோகநாதன் சங்கத்திற்கு சென்று மானேஜர் பிரகாஷிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் உடனடியாக சங்கத்திற்குள் நுழைந்து கையும் களவுமாக மேனேஜர் பிரகாஷை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவரிடமிருந்து லஞ்சமாக வாங்கிய ரூ.3 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கணக்கில் வராத ரூ.49 ஆயிரம் வைத்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது பற்றி அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சங்க உறுப்பினர்களிடமிருந்து வசூலித்ததாக மேனேஜர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து லஞ்சம் வாங்கிய பிரகாஷை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பழனிச்சாமி (51) டிரைவர். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் இவருக்கும், அவரது மனைவி துளசிமணிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தபோது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (51) டிரைவர். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் இவருக்கும், அவரது மனைவி துளசிமணிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தபோது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பழனிச்சாமி மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் மனைவி துளசிமணி வெளியில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தபோது பழனிச்சாமி வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
    • அதன்படி புரட்டாசி மகாளய அமாவாசையான இன்று நாமக்கல் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்று படிக்கட்டு துறையில் அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர்.

    பரமத்திவேலூர்:

    ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். மேலும் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது இந்துக்களின் ஐதீகமாகும்.

    மோகனூர் காவிரி

    அதன்படி புரட்டாசி மகாளய அமாவாசையான இன்று நாமக்கல் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்று படிக்கட்டு துறையில் அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்களது முன்னோர்களை வழிபட்டு தர்ப்பணம் அளித்தனர்.

    இதற்காக சிவாச்சாரி யார்கள் பக்தர்களை வரிசையாக அமர வைத்து அவர்களுக்கு முன் தலைவாழை இலை போட்டு அந்த இலையில் அகத்திக்கீரை, பழம், பூ, புனிதநீர், எள், அரிசிமாவு மற்றும் கடலை கலந்த உருண்டை மற்றும் பல்வேறு பொருட்களை வைத்து வேத மந்திரம் ஓதினர்.

    புனித நீராடினர்

    தொடர்ந்து பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றின நடுப்பகுதிக்கு சென்று இலையுன் விட்டு புனித நீராடினர். பின்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் தரிசனம் செய்தனர்.

    நாமக்கல், வளையபட்டி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, ராசிபுரம், மல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் காவிரி ஆற்று படுகையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக இருந்தது.

    அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க தீயணைப்பு துறையினர் மற்றும் மோகனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    குமாரபாளையம்

    இதேபோல் குமாரபாளையம் காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு நீராடினர்.

    மேட்டூர்

    சேலம், மேச்சேரி நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மேட்டூருக்கு குவிந்தனர். இங்குள்ள மேட்டூர் அணையின் காவிரி பாலம், படித்துறை, எம்.ஜி.ஆர். பாலம் ஆற்றங்கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களின் பெயரை கூறி பல்வேறு பொருட்களை படையலிட்டு வழிபாடு நடத்தினர்கள். பின்னர் தர்ப்பண பொருட்களை ஆற்றில் கரைத்து புனித நீராடி வழிபட்டனர்.

    இந்த நிலையில் திதி கொடுக்க வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தவும், உடைகள் மாற்ற அறை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.

    எடப்பாடி

    பூலாம்பட்டி படகு துறை, படித்துறை, கூடக்கல், குப்பனூர், மோளப்பாறை உள்ளிட்ட பல்வேறு காவிரி கரை பகுதிகளில் இன்று அதிகாலையில் திரண்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி கரைப்பகுதியில் தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

    புரட்டாசி மகாளய அமாவாசை திதியை ஒட்டி பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில், காவிரி கரை பகுதிகளில் உள்ள பிரம்மாண்ட நந்திகேஸ்வரர் சன்னதி, காவிரித்தாய் கோவில், காவிரி கரை படித்துறை விநாயகர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    காவிரி பகுதியில் திரண்டு இருந்த பக்தர்களுக்கு பூலாம்பட்டி வாசுதேவர், ஸ்ரீவர்ஷன் உள்ளிட்டோர் தலைமையிலான ஆன்மீக குழுவினர் வழிகாட்டு ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர். அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை தந்ததால் இங்கு கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    ×