search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவராத்திரி முதல் நாளை முன்னிட்டு பரமத்திவேலூர் பகுதியில் கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு பூஜை

    • புது மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு நவராத்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
    • இந்த வருடமும் 49-ம் ஆண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் நேற்று நவராத்திரி விழா தொடங்கியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள புது மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு நவராத்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த வருடமும் 49-ம் ஆண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் நேற்று நவராத்திரி விழா தொடங்கியது.

    நவராத்திரி விழாவை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி வரை தினந்தோறும் அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. 23-ந் தேதி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், 24-ந் தேதி மாலை 6 மணிக்கு புது மாரியம்மன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் புறப்பட்டு பேட்டை பகவதியம்மன் கோவிலை சென்றடைகிறது. பின்னர் அங்கு அம்பு சேர்வை நடைபெறுகிறது.

    இதேபோல் கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி முதல் நாளை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×