search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜேடர்பாளையம் அருகே 2000 வாழை, 200 பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு: பதட்டம்- போலீஸ் குவிப்பு
    X

    கொத்தமங்கலம் தர்மலிங்கம் என்பவரது தோட்டத்தில் வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளதை காணலாம்.

    ஜேடர்பாளையம் அருகே 2000 வாழை, 200 பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு: பதட்டம்- போலீஸ் குவிப்பு

    • வக்கீல் சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் இருந்த 200 பாக்கு மரங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.
    • பாக்கு மரம் மற்றும் வாழை மரங்கள் வெட்டப்பட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து வீடுகள், வாகனங்களுக்கு தீ வைப்பு, வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல், விவசாய பயிர்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனை தடுக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் அப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதனிடையே மீண்டும் ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் தர்மலிங்கம் (வயது 56), நல்லசிவம் (62), புலவர் சுப்பிரமணி, வக்கீல் சுப்பிரமணி (68) ஆகியோரது தோட்டத்தில் இருந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு வெட்டி சாய்த்தனர்.

    மேலும் வக்கீல் சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் இருந்த 200 பாக்கு மரங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இதனால் அந்த பகுதிகளில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையிலான போலீசார் வாழை மரங்கள் மற்றும் பாக்கு மரங்கள் வெட்டப்பட்ட தோட்டத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாக்கு மரம் மற்றும் வாழை மரங்கள் வெட்டப்பட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    வாழை மரங்கள் மற்றும் பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. ஜேடர்பாளையம் பகுதியில் தொடரும் இச்சம்பவத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×