search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் அருகே மூதாட்டி கழுத்தை அறுத்து படுகொலை: கணவர் உயிருக்கு போராட்டம்
    X

    கொலை நடந்த வீட்டின் முன்பு போலீசார் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

    பரமத்திவேலூர் அருகே மூதாட்டி கழுத்தை அறுத்து படுகொலை: கணவர் உயிருக்கு போராட்டம்

    • நல்லம்மாள் இறந்துவிட்ட நிலையில், சண்முகம் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகத்தின் வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள குப்பிச்சிபாளையம் கொட்டக்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (70). இவர் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி நல்லம்மாள் என்கிற சின்னப்பிள்ளை (65).

    இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இவர்களின் பேத்திக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக சண்முகம்-நல்லம்மாள் ஆகியோர் திருமண அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் வந்த மர்மநபர்கள் வீட்டின் சுற்றுச்சுவர் அருகே இருந்த மரத்தின் மீது ஏறி வீட்டிற்குள் குதித்தனர். பின்னர் அதிகாலையில் வீட்டிற்குள் நுழைந்து அங்கு தூங்கி கொண்டிந்த நல்லம்மாளின் கழுத்தை கத்தியால் அறுத்தும், சண்முகத்தை இரும்பு கம்பியாலும் பலமாக தாக்கினர்.

    இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கினர். அதை பார்த்த மர்மநபர்கள் இருவரும் இறந்து விட்டதாக எண்ணி வீட்டில் இருந்த பீரோ மற்றும் பல்வேறு பகுதிகளில் பணம், நகை உள்ளதா என தேடி பார்த்துள்ளனர். மேலும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக வீட்டுக்குள் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இன்று காலை உறவினர்கள் சிலர் சண்முகத்தின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    நல்லம்மாள் இறந்துவிட்ட நிலையில், சண்முகம் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சண்முகத்தை நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மர்மநபர்களால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதேபோல் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பல்வேறு பகுதிகளில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளை முயற்சியின் போது கொலை சம்பவம் நடந்ததா? அல்லது முன்விரோத தகராறில் யாராவது கொலை செய்ய வந்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகத்தின் வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. இதை பார்த்த சண்முகம் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் தங்களது வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டுள்ளது என்றும், எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதாகவும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவியை மர்மநபர்கள் தாக்கியதில் மனைவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×