என் மலர்tooltip icon

    மதுரை

    • ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது.
    • நிலத்தை ஒதுக்கி கொடுத்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.

    மதுரை:

    மதுரை தனியார் கல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் பாரதம் என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் நடுவராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் 2,200 ஏக்கரில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது இதற்காக பிரதமர் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியா உலக நாடுகளில் முன்னணி நாடாக வேகமாக வளர்ந்து வருகிறது. சொந்த நாட்டு சிறப்புகளை மட்டுமின்றி பல்வேறு வெளிநாடு சேர்ந்த செயற்கைக் கோளையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

    ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது. தற்போது தேவை அதிகரித்து இருந்ததால் வேறு இடங்களை தாண்டி அமைக்க முடிவு செய்தது. அப்போது பூகோள ரீதியாக ராக்கெட் ஏவுதளம் அமைக்க உகந்த இடமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கடற்கரை தேர்வானது.

    அப்போது எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தார். நான் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தேன். இதற்கு தேவையான இடத்தை தருமாறு இஸ்ரோ சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் 2,223 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. அதனை கையகப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி தனியாக மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டார். மேலும் 8 வட்டாட்சியர்களும், தேவையான சர்வேர்களும் நிலம் எடுப்பு பணிகள் தீவிரமாக செய்து கொடுத்தனர்.

    இந்த பணியினை அப்போதைய கலெக்டர் சந்தீப் நந்தூரி செய்து கொடுத்தார். இதற்காக நிலத்தை ஒதுக்கி கொடுத்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். மின்னல் வேகத்தில் நில ஆர்ஜித பணிக்கு எடப்பாடியார் அரசு அப்போது செயல்படுத்தி கொடுத்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆட்டோமொபைல் துறையில் உலக அளவில் தமிழகம் தன்னிகரற்று சிறப்பாக விளங்கி வருகிறது.
    • நாம் தரத்திலும், நீடித்த நிலையான உற்பத்தி இலக்கிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    மதுரை:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் "என் மண் என் மக்கள்" நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதுரை வந்தார். மதுரை வீரபாஞ்சானில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட் மைதானத்துக்கு வந்திறங்கிய அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அப்பள்ளியில் நடைபெற்ற சிறு, குறு தொழில் முனைவோர் டிஜிட்டல் செயலாக்க திட்ட மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக வாகன தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த சிறு, குறு தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    நாட்டின் பொருளாதாரத்தில் ஆட்டோமொபைல் தொழில் முக்கிய அம்சமாக விளங்குகிறது. ஒவ்வொரு தொழிலையும் மேம்படுத்த இந்திய அரசு தோளோடு தோள் கொடுத்து ஆதரவு அளித்து வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதத்தை ஆட்டோ மொபைல் தொழில் பகிர்ந்து கொள்கிறது. இது தேசம் தன்னிறைவுடன் திகழ்வதற்கு ஆதாரமான அம்சமாக இத்தொழில் விளங்கி வருகிறது. உற்பத்தியிலும் கண்டுபிடிப்புகளிலும் ஆய்வுகளை ஊக்குவிப்பதில் ஆட்டோ மொபைல் துறையின் பங்கு அளப்பரியது.

    குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் உலக அளவில் தமிழகம் தன்னிகரற்று சிறப்பாக விளங்கி வருகிறது. உலக அரங்கில் இத்தொழிலில் தமிழகம் தனது திறமையை நிரூபித்துள்ளது. இத்தொழிலில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் பங்களிப்பு மிகவும் அபரிமிதமானது. ஆகையால் தான் 45 லட்சத்துக்கும் அதிகமான கார்கள், 2 கோடி மோட்டார் சைக்கிள்கள், 10 லட்சம் வர்த்தக வாகனங்கள், ஒன்றரை லட்சம் ஆட்டோக்கள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    ஒவ்வொரு வாகனத்திலும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தையும் தயாரிப்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள்தான். உலகில் உள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் தொழில் முனைவோர்களால் உற்பத்தி செய்யப்படும் உதிரி பாகங்களை பயன்படுத்துகின்றன. உலக அளவிலான விநியோக சங்கிலியில் நமது தொழில் முனைவோர்கள் முக்கிய அங்கமாக செயல்பட்டு அதை வலுவானதாக மாற்றி வருகின்றனர்.

    எனவே நாம் தரத்திலும், நீடித்த நிலையான உற்பத்தி இலக்கிலும் கவனம் செலுத்த வேண்டும். அதே வேளையில் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத "குறைவான கார்பன் வெளிப்பாடு, மாசற்ற உற்பத்தி" என்ற கொள்கையோடும் செயல்பட வேண்டும். கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் தொழில் முனைவோர்களின் பங்கு மிகவும் கவனிக்கத்தக்கதாக விளங்கியது. தொழில் முனைவோர்களின் வளர்ச்சிக்காக முத்ரா, விஸ்வகர்மா போன்ற கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் பல லட்சம் தொழில் முனைவோர்கள் பயனடைந்து வருகின்றனர். சிறுதொழிலின் தரத்தை உயர்த்திட இந்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தொழில் நுட்பத்தையும், திறன்களின் தேவையிலும் தொழில் முனைவோர்கள் கவனம் செலுத்தி எதிர்காலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்களிக்க வேண்டும். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் மத்திய அரசு அதற்கென தனியான ஒரு அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது. மின்சார வாகனங்களுக்கான தேவை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

    ஒரு கோடி வீடுகள் பயன் பெறும் வகையில் இலவச மின்சாரம், கூடுதல் வருவாய் அளிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அவை மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற (சார்ஜிங்) மையங்களாகவும் திகழும் வாய்ப்பும் உருவாகும். ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்திக்காக ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான பி.எல்.ஐ. திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல். முருகன், மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லத்திடலும், மதுரையில் அளவற்ற அன்பைப் பெற்றேன்.
    • தூத்துக்குடி செல்லும் பிரதமர் மோடி 17 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில் அவர் மதுரையில் தங்கினார்.

    பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பல்லத்திடலும், மதுரையில் அளவற்ற அன்பைப் பெற்றேன்.

    தூத்துக்குடி மற்றும் நெல்லையில் நடைபெற உள்ள இன்றைய நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    சற்று நேரத்தில் தூத்துக்குடி செல்லும் பிரதமர் மோடி 17 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

    இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு புறப்படுகிறார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கல், ரூ.124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

    • பிரதமர் மோடி, தமிழில் பேசி தனது உரையை துவங்கினார்.
    • மதுரை நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.

    தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மண் என் மக்கள் நடைபயணத்தின் நிறைவு விழா மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி, தமிழில் பேசி தனது உரையை துவங்கினார்.

    பிரசார கூட்டத்தை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்த பிரதமர் மோடி சிறு, குறு தொழிலதிபர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது, தொழில் முனைவோருக்கான ஸ்டார்ட்அப் திட்டம், மத்திய அரசின் மானியம், கடன் உதவி, சிறு-குறு தொழில்கள் வளர்ச்சி என பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார்.

     


    இதைத் தொடர்ந்து தனியார் நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிரதமர் மோடி அங்கிருந்து காரில் பயணம் செய்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி சன்னதி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து கோவிலில் வழக்கமாக நடைபெறும் பள்ளியறை பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

     


    முன்னதாக பிரதமர் மோடி வருகையை ஒட்டி மதுரை நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும் பிரதமர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதால், பாதுகாப்பு காரணங்களால் இன்று மாலையில் இருந்து பொது மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் இன்று இரவு பசுமலை நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

    • பிரதமர் மோடி மதுரை வந்து தங்கி இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது இது 2-வது முறையாகும்.
    • பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மதுரை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' யாத்திரையை ராமேசுவரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 28-ந்தேதி தொடங்கினார். இதை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை இன்று பல்லடத்தில் யாத்திரையை நிறைவு செய்கிறார். இதற்கான நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாலை 4 மணி அளவில் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மாலை 5 மணி அளவில் மதுரை வந்தடைகிறார். மதுரையில் உள்ள வீரபாஞ்சான் என்ற இடத்தில் அமைந்திருக்கும் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் மைதானத்தில் வந்து இறங்குகிறார்.

    அதே பள்ளியில் மாலையில் நடைபெறும் சிறு, குறு தொழில் அதிபர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அங்கு மத்திய அரசின் தொழில் முனைவோருக்கான ஸ்டார்ட்அப் திட்டம், மத்திய அரசின் மானியம், கடன் உதவி, சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தொழில் அதிபர்களுடன் பேசுகிறார்.

    இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சிவகங்கை ரோடு, ரிங் ரோடு, கப்பலூர் வழியாக திருநகர் அருகே உள்ள பசுமலையில் அமைந்திருக்கும் தனியார் நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பின்பு அங்கிருந்து காரில் புறப்பட்டு இரவு 8 மணிக்கு பசுமலை, பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் சாலை, தெற்கு வெளிவீதி வழியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகிறார்.

    அங்கு சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்கிறார். அதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு வழக்கமாக நடைபெறும் பள்ளியறை பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார். பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவதை முன்னிட்டு மதுரை நகருக்குள் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அதே வழியில் மீண்டும் பசுமலை நட்சத்திர விடுதிக்கு சென்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.


    பிரதமர் மோடி மதுரை வந்து தங்கி இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது இது 2-வது முறையாகும். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மதுரை வந்திருந்தார். அப்போது அவர் மதுரையில் இரவு தங்கினார். இந்த பயணத்தின்போது பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்தார். அதேபோல் தற்போது 2-வது முறையாக மதுரையில் தங்கி இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரதமர் மோடியின் பயணத்தை முன்னிட்டு இந்த பகுதிகளில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பயணம் செய்யும் சாலைகளில் மத்திய கமாண்டோ படை போலீசாருடன் மாநில போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் தலைமையில் தென்மண்டல ஐ.ஜி. கண்ணன், போலீஸ் கமிஷனர் லோகநாதன், டி.ஐ.ஜி.க்கள் ரம்யா பாரதி, அபிநவ் குமார் மற்றும் 7 போலீஸ் சூப்பிரண்டுகள், 40 துணை சூப்பிரண்டுகள், 300 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், 8-க்கும் மேற்பட்ட வெடி குண்டு தடுப்பு நிபுணர்கள் உள்பட 7 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    மதுரை வருகை தரும் பிரதமர் மோடி இன்று இரவு தங்க இருக்கும் பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியின் நுழைவு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காட்சி.


     மதுரை விமான நிலையம், பிரதமர் தங்கும் தனியார் விடுதி, திருப்பரங்குன்றம் சாலை, தொழில் அதிபர்கள் மாநாடு நடைபெறும் தனியார் பள்ளி, மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி வருகையையொட்டி பிரதமர் வந்து இறங்கும் தனியார் பள்ளி ஹெலிபேட் மைதானம், ரிங் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரும், மாநில போலீசாரும் வாகன ஒத்திகையில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம், ஓட்டல் போன்ற இடங்களுக்கு காரில் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் மோடியின் மீனாட்சி அம்மன் கோவில் வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    முன்னதாக நேற்று கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார், சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆகியோர் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அங்கு பிரதமர் மோடி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் வந்து செல்லும் பகுதிகளில் அவர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தனியார் விடுதியில் தங்கும் பிரதமர் மோடி நாளை அதிகாலை இயற்கை எழில் சூழ்ந்த மலை குன்றில் அமைந்துள்ள ஓட்டலில் தியானம், யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்கிறார். காலை 8 மணி அளவில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு காரில் விமான நிலையம் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி செல்லும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    • கீழடியில் 2 கட்ட அகழாய்வு குறித்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும்
    • மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கீழடியில் 2 கட்ட அகழாய்வு குறித்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பிரபாகர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு பணி மேற்கொண்டார். இந்த அகழாய்வின் போது 5000-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தன. இந்நிலையில், திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் நடைபெற்ற 3-ம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும்படியான கண்டுபிடிப்புகள் இல்லை.

    முதல் 2 கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசிடம் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் கீழடியில் நிலவிய கலாச்சாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரீகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாக தெரிவித்துள்ளார். கீழடியில் கிடைத்த பொருட்களை ரேடியோ கார்பன் எனும் பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்ததில் அந்த பொருட்கள் கிட்டத்தட்ட 2600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரியவந்துள்ளது.

    கீழடியில் தற்போது 4 முதல் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை மாநில அரசு மேற்கொண்டு அதுதொடர்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கையை இதுவரை வெளியிடப்படவில்லை. 982 பக்கமுடைய அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடர்பான தெளிவான வரலாற்று முடிவுகள் கிடைக்கும். எனவே, கீழடியில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

    • பிரதமரின் மதுரை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
    • கடந்த 3 நாட்களாக கருப்பாயூரணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டரை இறக்கி விமானப் படை அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர்.

    மதுரை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு 'என் மண், என் மக்கள்' என்ற யாத்திரையை தொடங்கினார். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்ட அவர் நாளை (27-ந்தேதி) திருப்பூரில் யாத்திரையை நிறைவு செய்கிறார். இதனை தொடர்ந்து பல்லடம் அருகே உள்ள மாதாப்பூரில் பா.ஜ.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதற்காக நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து சூலூர் விமானப் படை தளத்திற்கு மதியம் 2.30 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து பொதுக்கூட்டம் நடக்கும் மாதாப்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் செல்கிறார்.

    கூட்டத்தில் பங்கேற்ற பின் மாலை 5 மணி அளவில் பல்லடத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வரும் மோடி பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் கருப்பாயூரணி அருகே உள்ள வீரபாஞ்சான் டி.வி.எஸ். பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்குகிறார்.

    அதனைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெறும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சி முடிந்தபின் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி மதுரை பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு தமிழக பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

    பின்னர் அங்கு இரவு தங்கி விட்டு மறுநாள் (28-ந்தேதி) காலை 8.40 மணிக்கு தனியார் ஓட்டலில் இருந்து சாலை மார்க்கமாக காரில் விமான நிலையம் செல்லும் அவர், அங்கிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு செல்கிறார்.


    பிரதமரின் மதுரை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக மதுரை விமான நிலையம், மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ள தனியார் பள்ளி இடம், தங்கும் ஓட்டல் ஆகியவை மத்திய போலீஸ் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. அங்கு மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் நாளை இரவு மோடி தங்க உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த ஓட்டலுக்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் ஆலோசனையின் பேரில் டி.ஐ.ஜி. ரம்யா பாரதி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, நகர் போலீஸ் கமிஷனர் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மாலை 6 மணிக்கு கருப்பாயூரணி நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் சாலை மார்க்கமாக பசுமலை தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு செல்ல இருப்பதால் வழி நெடுகிலும் பாதுகாப்புக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அந்த வழியில் உள்ள கடைகளை அடைக்கவும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    கடந்த 3 நாட்களாக கருப்பாயூரணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டரை இறக்கி விமானப் படை அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர். பசுமலை தனியார் ஹோட்டலில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் அதிகாரிகள் நேற்று மாலை காரில் சென்று ஒத்திகை பார்த்தனர்.

    பிரதமர் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பசுமலை தனியார் நட்சத்திர ஓட்டல், கருப்பாயூரணி டி.வி.எஸ். பள்ளி மற்றும் பிரதமர் பயணிக்கும் சாலை, மாநகர, மாவட்ட எல்லைகளில் டிரோன்கள் பறக்க நாளை மற்றும் மறுநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் மறுநாள் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

    தேசிய பாதுகாப்பு பிரிவு தொழில் பாதுகாப்பு படையினர் ஆகியோர் பிரதமர் வந்து செல்லும் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மொத்தத்தில் 5 ஆயிரம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் மதுரை நகரம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    • விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேமுதிகவினர் தீர்மானம்
    • திருமங்கலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேமுதிகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

    தேமுதிகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பாக மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், விஜயகாந்தின் மனைவியும் தேமுதிகவின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பாக மதுரை திருமங்கலத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜய பிரபாகரன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென தேமுதிகவினர் விருப்பங்களை தெரிவித்தனர். பின்னர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டுமென தேமுதிகவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

    • விழாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • பிரியாணி திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு நோய் எதுவும் ஏற்படாது என்பது ஐதீகம்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டியில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் பிரியாணி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு வழக்கம்போல் பிரியாணி திருவிழா 89-வது ஆண்டாக நடைபெற்றது.

    இதில் ரெட்டியார் சமூகத்தினர் வெள்ளிக்கிழமை காலை விரதம் மேற்கொண்டு பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்த பால்குடத்தை சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    கோவில் நிலைமாலையுடன் இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக செல்ல பெண்கள் தங்களது வீடுகளில் இருந்து எடுத்து வந்திருந்த தேங்காய், பூ, பழம் தட்டுகளை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.


    கோவிலில் தேங்காய் உடைத்து சுவாமிக்கு பூவை சமர்ப்பித்து வழிபாடு நடத்தினர். இந்த விழாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் விழாவின் நிறைவாக முனியாண்டி சுவாமிக்கு ஆடு, கோழிகளை படையலிட்டனர்.

    இந்த திருவிழாவில் அவ்வாறு படையலிடப்பட்ட 150-க்கும் மேற்பட்ட ஆடுகள், 300-க்கும் மேற்பட்ட கோழிகளை கொண்டு பிரியாணி தயார் செய்யப்பட்டது. இதற்காக 2500 கிலோ பிரியாணி அரிசியில் மிக பிரமாண்டமான முறையில் பிரியாணி தயார் செய்யப்பட்டது. இன்று காலை பிரியாணியை கருப்பசாமிக்கு படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    திருவிழாவை முன்னிட்டு ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்த பிரியாணி அண்டாக்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. விழா நிறைவாக பிரியாணி பக்தர்களுக்கு சுடச்சுட வழங்கப்பட்டது. அவ்வாறு நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் தங்கி இருந்து முனியாண்டி சுவாமியை வழிபட்டு திருவிழாவில் தங்களது வேண்டுதல் மற்றும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இந்த பிரியாணி திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு நோய் எதுவும் ஏற்படாது என்பது ஐதீகம். விழாவையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    • தற்போது நான் 70 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன்.
    • மனுதாரர் மீதான வழக்கு விசாரணைக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் சுரேஷ்பாபுவிடம் ஒரு வழக்கு சம்பந்தமாக அவருக்கு சாதகமான நடவடிக்கை எடுக்க ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்து உள்ளனர்.

    இவர் ஏற்கனவே தனக்கு ஜாமீன் கேட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், சட்டத்துக்கு புறம்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் என்னை கைது செய்து உள்ளனர்.

    தற்போது நான் 70 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். எனக்கு ஜாமீன் அளிக்கும்பட்சத்தில் உரிய நிபந்தனைகளை பின்பற்றி ஒத்துழைப்பேன். எனவே எனக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி விவேக் குமார் சிங் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் வக்கீல் திருவடிக்குமார் ஆஜராகி, மனுதாரர் மீதான வழக்கு விசாரணைக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. அதனால் தான் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

    இந்த வழக்கில் குற்றபத்திரிகை தயாராக உள்ளது. இந்த சமயத்தில் மனுதாரருக்கு ஜாமீன் அளித்தால் அது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பக்கூடும் என்று வாதாடினார்.

    பின்னர் ஆஜரான மனுதாரர் வக்கீல், சுப்ரீம் கோர்ட்டு முடிவு எடுக்கும் வரை மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க வேண்டும் என கோரினார். விசாரணை முடிவில், மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை மார்ச் மாதம் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • போராட்டம் தொடர்பாக தமிழக அரசு நேரடியாக தலையிட்டு சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
    • சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    மதுரை:

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பணி ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் சங்கம், ஆசிரியர் சங்கம், ஓய்வூதியர் சங்கத்தினர் இணைந்து கடந்த 14-ந்தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பதிவாளரோ, துணைவேந்தரோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது சம்பளம் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவோ முன்வரவில்லை. இதனால் பேராசிரியர்கள் அலுவலர்கள் ஓய்வூதியர்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் சான்றிதழ் வழங்கும் பணிகள் தினசரி வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதால் மாணவ-மாணவிகள் சான்றிதழ் பெற காலதாமதமாகிறது. இதனால் தேர்வு முடிவுகள் அறிவிப்பும் தள்ளி போகிறது.

    மேலும் விடைத்தாள் திருத்தும் பணிக்காகவும், சான்றிதழ் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் மாணவ-மாணவிகளும் இப்போராட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போராட்டம் தொடர்பாக தமிழக அரசு நேரடியாக தலையிட்டு சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    • அரசு அறிவித்துள்ளதை காட்டிலும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவ்வப்போது புகார்கள் எழுந்துள்ளன.
    • கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    மதுரை:

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது. அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி அரசு கடந்த மாதம் அறிவித்தது.

    இந்த உத்தரவின் பேரில் பிப்ரவரி 1-ந்தேதி முதல் அனைத்து மதுபானங்களின் விலையும் அதன் அளவுக்கேற்ப விலை உயர்த்தி விற்கப்பட்டு வருகிறது. இதில் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மது வகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது. இதற்கேற்ப 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அரசு அறிவித்துள்ளதை காட்டிலும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவ்வப்போது புகார்கள் எழுந்துள்ளன. எனவே அரசு நிர்ணயித்துள்ள விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

    இந்த சூழலில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் மற்ற மாவட்டங்களை சேர்ந்த மேலாளர்கள் அடங்கிய சிறப்புக்குழு 3 நாட்கள் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மதுபான பாட்டில்களை அரசு நிர்ணயித்த விலையை விட 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 4 கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்களான சுரேஷ், பொன்முத்துமாரி, சக்தி மோகன், சுப்ரமணியன் ஆகிய 4 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மதுரை முதுநிலை மண்டல மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    ×