search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முனியாண்டி கோவிலில் பிரியாணி திருவிழா: 150 ஆடுகள்-300 கோழிகள் பலியிட்டு பிரமாண்ட அசைவ விருந்து
    X

    முனியாண்டி கோவிலில் பிரியாணி திருவிழா: 150 ஆடுகள்-300 கோழிகள் பலியிட்டு பிரமாண்ட அசைவ விருந்து

    • விழாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • பிரியாணி திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு நோய் எதுவும் ஏற்படாது என்பது ஐதீகம்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டியில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் பிரியாணி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு வழக்கம்போல் பிரியாணி திருவிழா 89-வது ஆண்டாக நடைபெற்றது.

    இதில் ரெட்டியார் சமூகத்தினர் வெள்ளிக்கிழமை காலை விரதம் மேற்கொண்டு பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்த பால்குடத்தை சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    கோவில் நிலைமாலையுடன் இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக செல்ல பெண்கள் தங்களது வீடுகளில் இருந்து எடுத்து வந்திருந்த தேங்காய், பூ, பழம் தட்டுகளை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.


    கோவிலில் தேங்காய் உடைத்து சுவாமிக்கு பூவை சமர்ப்பித்து வழிபாடு நடத்தினர். இந்த விழாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் விழாவின் நிறைவாக முனியாண்டி சுவாமிக்கு ஆடு, கோழிகளை படையலிட்டனர்.

    இந்த திருவிழாவில் அவ்வாறு படையலிடப்பட்ட 150-க்கும் மேற்பட்ட ஆடுகள், 300-க்கும் மேற்பட்ட கோழிகளை கொண்டு பிரியாணி தயார் செய்யப்பட்டது. இதற்காக 2500 கிலோ பிரியாணி அரிசியில் மிக பிரமாண்டமான முறையில் பிரியாணி தயார் செய்யப்பட்டது. இன்று காலை பிரியாணியை கருப்பசாமிக்கு படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    திருவிழாவை முன்னிட்டு ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்த பிரியாணி அண்டாக்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. விழா நிறைவாக பிரியாணி பக்தர்களுக்கு சுடச்சுட வழங்கப்பட்டது. அவ்வாறு நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் தங்கி இருந்து முனியாண்டி சுவாமியை வழிபட்டு திருவிழாவில் தங்களது வேண்டுதல் மற்றும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இந்த பிரியாணி திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு நோய் எதுவும் ஏற்படாது என்பது ஐதீகம். விழாவையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    Next Story
    ×