என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை மாவட்டம் அழகர் கோவில் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கருவனுர், தேத்தாம்பட்டி, மந்திக்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அழகர் கோவில் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொய்கை கரைப்பட்டி, நாயக்கன்பட்டி, அழகர் கோவில், கெமிக் கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, தூய நெறி, மாத்தூர், வெள்ளியங்குன்றம் புதூர், கடவூர், தொண்டமான் பட்டி, மஞ் சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாத்தூர் பட்டி, தொப்ப லாம்பட்டி, கொடிமங்கலம், கருவனுர், தேத்தாம்பட்டி, மந்திக்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இந்த தகவலை அழகர் கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் இசக்கி தெரிவித்துள்ளார்.

    • வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    • கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவர் திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    இதனிடையே, அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, அஜித்குமார் கொலை வழக்கில் அவரது குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தி நீதிபதிகள் வழக்கில் நீதிமன்ற உத்தரவை அரசு முறையாக நிறைவேற்றி வருவதாகவும், அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாகவும் தெரிவித்தனர். 

    • தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையிலேயே உறுப்பினர்களை சேர்க்கிறோம்.
    • தற்போது உறுப்பினர் சேர்க்கை பணி மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டில் நேற்று தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் ஓரணியில் தமிழ்நாடு நிகழ்வின் மானாமதுரை தொகுதி ஒருங்கிணைப்பாளர் வினோத் சார்பில் வக்கீல் லஜபதிராய் என்பவரும், தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் வில்சன் ஆகியோர் நீதிபதிகள் முன்பாக ஆஜராகி, பொதுமக்களிடம் தி.மு.க.வினர் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற பேரில் ஆதார் விபரங்கள் பெறப்படவில்லை.

    அ.தி.மு.க. தரப்பில் ஆதார் எண்ணை பயன்படுத்தி ஓ.டி.பி. பெறுவதாக தவறான தகவலை இந்த கோர்ட்டில் தெரிவித்து தடை உத்தரவு பெற்று இருக்கின்றனர். தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையிலேயே உறுப்பினர்களை சேர்க்கிறோம்.

    உறுப்பினர் சேர்க்கை சம்மதம் பெறுவதற்காகவே ஓ.டி.பி. பெறப்பட்டது. வேறு எந்த ஆவணத்தையும் யாரிடமும் வாங்கவில்லை. தவறான தகவலை அளித்து, வழக்கு தாக்கல் செய்துள்ளனர். தற்போது உறுப்பினர் சேர்க்கை பணி மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இது சம்பந்தமான வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையிட்டனர்.

    அதற்கு நீதிபதிகள், நேற்று விசாரிக்கப்பட்ட பிரதான வழக்கில் இடையீட்டு மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

    • கடந்த வாரம் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கினர்.
    • சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை மற்றும் திருப்புவனத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவர் திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் வழக்கின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார்.

    அதன்படி கடந்த வாரம் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக திருப்புவனம் போலீஸ் நிலையத்திலிருந்து அவர்கள் வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொண்டனர்.

    தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை மற்றும் திருப்புவனத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில், அஜித்குமாரை அடைத்து வைத்து தாக்கிய இடங்களில் ஆய்வு செய்து நேரடி விசாரணை மேற்கொண்டனர்.

    கடந்த 19-ந்தேதி அஜித்குமார் தாக்கப்பட்டது குறித்து அவரது சகோதரரிடம் செய்து காண்பிக்குமாறு கூறி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தில் தொடர்புடைய திருப்புவனம் பகுதியில் உள்ள பேக்கரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

    இந்த நிலையில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் திருப்புவனத்தில் சாட்சிகளிடம் 2-வது முறையாக விசாரணை நடத்தினர். அதன்படி தனிப்படை போலீசாருடன் அஜித்குமாரை வேனில் அழைத்து சென்ற போலீஸ்காரர் ராமச்சந்திரன், அஜித்குமார் சகோதரர் நவீன்குமார், கோவில் ஊழியர்கள் பிரவீன் மற்றும் வினோத், ஆட்டோ டிரைவர் அருண் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஜெகதீப் தன்கர் ராஜினாமா கடிதம் வெளியாகி பல மணிநேரம் கடந்துவிட்டது.
    • அதிகாலையிலேயே தனது அலுவல் பணிகளைத் தொடங்குவதாகக் கூறிக்கொள்ளும் பிரதமருக்கு இன்னுமா செய்தி சென்றடையவில்லை?

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார்.

    அவர் ராஜினாமா கடிதம் வெளியாகி பல மணிநேரம் கடந்துவிட்டது. அதிகாலையிலேயே தனது அலுவல் பணிகளைத் தொடங்குவதாகக் கூறிக்கொள்ளும் பிரதமருக்கு இன்னுமா செய்தி சென்றடையவில்லை?

    பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாநாட்டு திடலில் அமைக்கப்பட உள்ள அலங்கார வளைவுகள், பேனர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
    • உணவு வினியோகம் உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    மதுரை:

    த.வெ.க.வின் 2வது மாநில மாநாடு மதுரையில் அடுத்த (ஆகஸ்டு) மாதம் 25-ந்தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இதற்காக 500 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இதற்கான கால்கோள் விழா கடந்த 16-ந்தேதி நடைபெற்றது. இதில் கலந்த கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அன்றைய தினமே மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாநாட்டுக்கு அனுமதி வேண்டியும், உரிய பாதுகாப்பு அளிக்க கோரியும் மனு வழங்கினார். அந்த மனுவில், மாநாடு தொடர்பான மற்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் த.வெ.க. நடத்தும் மாநாடு தொடர்பாக பல்வேறு விபரங்களை அளிக்குமாறு அந்த கட்சிக்கு மதுரை மாவட்ட காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். அதன்படி மாநாடு நடைபெறும் இடத்தின் உரிமையாளர் யார்? அவரிடம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? மாநாடு தொடங்கும் நேரம் மற்றும் முடிவடையும் நேரம், மாநாட்டு மேடையில் எத்தனை இருக்கைகள் போடப்படுகிறது? தொண்டர்கள் அமருவதற்காக எத்தனை நாற்காலிகள் கொண்டு வரப்படும்?

    மாநாட்டு திடலில் அமைக்கப்பட உள்ள அலங்கார வளைவுகள், பேனர்களின் எண்ணிக்கை எவ்வளவு? மாநாட்டிற்கு எத்தனை பேர் வருவார்கள்? என்ற தோராயமான எண்ணிக்கை, மாநாடு நடைபெறும் இடத்தில் நிறைவேற்றப்பட உள்ள அடிப்படை வசதிகள் குறித்த விபரங்கள், மருத்துவ வசதி, கழிப்பிட வசதி, தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுப்பதற்காக என்னென்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட உள்ளது? உணவு வினியோகம் உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    இதுதொடர்பாக விரைவில் மதுரை மாவட்ட போலீசாருக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • தி.மு.க.வில் சேரவில்லை என்றால் அரசின் பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும் எனவும் அச்சுறுத்துகின்றனர்.
    • வாக்காளர்களின் தனி நபர் விபரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம்.

    மதுரை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

    அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் வகையில் தி.மு.க. பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில், வாக்குச்சாவடி தோறும் 30 சதவீதம் வாக்கா ளர்களை தி.மு.க. உறுப்பினர்களாக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். கடந்த 1-ந்தேதி இந்த திட்டம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினர். அப்போது வாக்காளர்களின் தொலைபேசி எண் மூலம் ஓ.டி.பி. பெறப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டது.

    இந்தநிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராஜ்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க., 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தி வருகிறது. இதற்காக தி.மு.க.வினர் வீடு, வீடாக செல்கின்றனர். அப்போது அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு தொல்லை செய்கின்றனர்.

    எங்கள் வீட்டிற்கு தி.மு.க.வினர் 10 பேர் வந்து, அனுமதி இல்லாமல் தமிழக முதலமைச்சர் படத்துடன் கூடிய 'ஓரணியில் தமிழ்நாடு' என அச்சிடப்பட்ட சுவரொட்டியை வீட்டில் ஒட்டினர்.

    பின்னர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் உள்பட அடையாள அட்டைகளை கேட்டனர். அதனை தர மறுத்தபோது, வீட்டுப் பெண்கள் மாதந்தோறும் அரசிடம் பெற்று வரும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை நிறுத்தி விடுவோம் என மிரட்டினர். அதோடு அனைவரின் தனிப்பட்ட செல்போன் எண்களை கேட்டு வாங்கி, தி.மு.க.வில் சேர்த்து வருகின்றனர்.

    தி.மு.க.வில் சேரவில்லை என்றால் அரசின் பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும் எனவும் அச்சுறுத்துகின்றனர். அரசியல் பிரசாரத்துக்காக ஆதார் போன்ற தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவது தவறானது. இது, அரசியலமைப்பு வழங்கும் சுதந்திரம் மற்றும் தனியுரிமையை மீறுவதாகும். எனவே இந்த நடவடிக்கைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

    பொதுமக்களிடம் தி.மு.க.வினர் சட்ட விரோதமாக ஆதார் விவரங்களை சேகரித்தது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை செயல் அதிகாரி விசாரணை நடத்தி, தி.மு.க. பொதுச்செயலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கே.ஆர்.பாரதி கண்ணன், ஆயிரம் செல்வகுமார், மகேந்திரன் ஆகியோர் ஆஜராகி, அது தொடர்பான வீடியோவும் சமர்ப்பித்தனர்.

    அதையடுத்து நீதிபதிகள், ஓ.டி.பி. எண்ணை எதற்காக கேட்கிறார்கள்? ஓ.டி.பி. விபரங்களை பகிர வேண்டாமென, காவல்துறையினர் அறிவுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளிப்படையாக விளம்பரம் செய்யப்படும்போது, எதற்காக ஓ.டி.பி.யை கேட்கிறார்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அரசுத்தரப்பில், தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்காக இந்த பிரசாரம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், நீங்கள் அரசு வழக்கறிஞரா? அல்லது தி.மு.க. வழக்கறிஞரா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ஆதார் விபரங்களை சேகரிக்கும் தனியார் நிறுவனம், அமெரிக்க நிறுவனத்திற்கு இதனை விற்பனை செய்தால் என்ன செய்வது? இந்திய மக்கள் இவ்வாறு தான் கையாளப்படுவார்களா?

    தனது கட்சியின் உறுப்பினர் விபரங்களை சேகரிப்பதில் தவறில்லை. ஆனால் அந்த விபரங்கள் எவ்வாறு கையாளப்படும்? எவ்வாறு பாதுகாக்கப்படும்? எவ்வாறு அழிக்கப்படும்? என்பது தொடர்பான எந்த திட்டமும், விபரங்களும் இல்லை. மக்களின் தரவுகளை பாதுகாப்பது தொடர்பான தொழில்நுட்ப தகவல் பாதுகாப்பு விதிகள் இன்னமும் உருவாக்கப்படவில்லை.

    இது மிகவும் ஆபத்தானது என குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழகத்தின் பிரபல அரசியல் கட்சி, ஓரணியில் தமிழ்நாடு எனும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையை நடத்துகிறது. தனிநபர் விபரங்களை பாதுகாப்பது அரசியலமைப்பின் கடமை. தனிநபர் விபரங்களை சேகரிக்க தனியார் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

    வாக்காளர்களின் தனி நபர் விபரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம். அந்த விஷயங்கள் வெளிநாட்டுக்கு விற்கப்பட்டு விட்டால் என்ன செய்வது?

    ஆகவே ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையின்போது ஓ.டி.பி.யை பெற இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம். ஆனால் ஓ.டி.பி. விபரங்களை கேட்கக் கூடாது என குறிப்பிட்டனர்.

    மேலும் இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்ப்பதாக அறிவித்தனர். டிஜிட்டல் முறையில் தனிநபர் தகவல் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? என்பது குறித்தும், வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக் கினை நீதிபதிகள் 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

    • சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் போலீசார் மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் தேசிக பரமாச்சாரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
    • விசாரணையின்போது ஆதீனத்தை தவிர வேறு யாரும் ஆதீன மடத்திற்குள் இருக்கக் கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுரை வழங்கியிருந்தனர்.

    மதுரை:

    மதுரை ஆதீன மடத்தின் 293-வது ஆதீனம் ஞான சம்பந்தர் தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் கடந்த மே மாதம் 2-ந்தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் தனது காரில் புறப்பட்டு சென்றார்.

    அப்போது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் தன் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும், தன்னை சிலர் கொலை செய்ய முற்பட்டதாகவும் கூறி மதுரை ஆதீனம் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதில் குறிப்பாக "குல்லா மற்றும் தாடி வைத்த நபர்கள்" கொலை செய்ய முயற்சித்ததாக கூறியிருந்தார். இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை பகுதியில் நடைபெற்ற விபத்து குறித்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டு தவறான தகவல்களை மதுரை ஆதீனம் தரப்பினர் வெளியிடுவதாக, கூறி அறிக்கை வெளியிட்டனர்.

    வாகன விபத்து குறித்து தவறான தகவல்களை பரப்பி மத மோதலை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை எழுப்பூர் அருகே உள்ள அயனாவரத்தைச் சேர்ந்த ஐகோர்ட்டு வக்கீல் ராஜேந்திரன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் போலீசார் மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் தேசிக பரமாச்சாரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே முன்ஜாமின் கோரி மதுரை ஆதீனம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். அப்போது மதுரை ஆதீனத்திற்கு 60 வயதுக்கு மேலே ஆனதால் நேரில் ஆஜராக கட்டாயம் இல்லை, போலீசார் நேரில் சென்று விசாரணை செய்து கொள்ளலாம் எனவும் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில் மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்துவதற்காக சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் போலீசார் மீனாட்சியம்மன் கோவில் அருகே தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் அமைந்துள்ள மதுரை ஆதீன மடத்திற்கு நேரில் வருகை தந்தனர். முன்னதாக விசாரணையின்போது ஆதீனத்தை தவிர வேறு யாரும் ஆதீன மடத்திற்குள் இருக்கக் கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுரை வழங்கியிருந்தனர்.

    அதன்படி ஆதீன மடத்தில் இருந்த ஊழியர்கள், பணியார்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து மதுரை ஆதீனத்திடம் விசாரணை தொடங்கியது.

    சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் பத்மகுமாரி தலைமையிலான 3 போலீசார் விசாரணையை தொடங்கினர். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் முதன்முறையாக மதுரை ஆதினத்திடம் விசாரணை நடத்தி வருகிறார். சைபர் கிரைம் போலீசாரின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விளக்குத்தூண் போலீஸ் உதவி கமிஷனர் சூரக்குமரன் மதுரை ஆதின மடத்திற்குள் சென்றார்.

    அப்போது அங்கு திரண்ட பா.ஜ.க. நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. 

    • திருமணத்தின்போது 60 பவுன் நகை கொடுத்த போதிலும், கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை.
    • மனைவியை தாக்கியதை சகோதரிடம் சிரித்துக் கொண்டு கூறும் ஆடியோ வெளியானது.

    மதுரை அப்பன்திருப்பதி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் பூபாலன் (வயது 38). இவருக்கும் தேனியை சேர்ந்த தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த பெண்ணுக்கும் கடந்த 2018-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில், தனது கணவர் மற்றும் மாமனார் ஆகியோர் தினமும் கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமை செய்வதாக அப்பெண் புகார் தெரிவித்து உள்ளார்.

    திருமணத்தின்போது 60 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் மற்றும் சீர்வரிசை உள்ளிட்டவைகளை வழங்கினோம். ஆனால், மேலும் வரதட்சணை வேண்டும் என்று கூறி 2 தினங்களுக்கு முன்பு போலீஸ்காரர் பூபாலன் தன்னை கடுமையாக தாக்கினார் எனவும் அப்பெண் புகார் தெரிவித்து உள்ளார்.

    கணவர் தாக்கியதில் காயம் அடைந்த அந்த ஆசிரியை, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, ஆசிரியையின் குடும்பத்தினர், அப்பன் திருப்பதி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டராக சாத்தூரில் பணியாற்றி வந்தார்.

    இதற்கிடையே, வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கியது குறித்து, தனது சகோதரியிடம் போலீஸ்காரர் பூபாலன் சிரித்து சிரித்து பேசுவது போன்ற ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் அவர் மனைவியை கடுமையாக தாக்கியது பற்றி சிறிதும் கவலை இல்லாமல், நகத்தால் கடுமையாக கீறியதாகவும், முகத்தில் காயம் ஏற்படுத்தியதாகவும், தொண்டையை இறுக்கினேன் என்றும், கால்களில் தாக்கி நடக்க முடியாமல் செய்தேன், உதட்டில் காயம் ஏற்படுத்தினேன் எனவும் பேசி இருப்பது போன்று அந்த ஆடியோ உள்ளது.

    இந்த ஆடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து அது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, பூபாலன் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக கருதி அவரை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார் உத்தரவிட்டார்.

    இதேபோல் வரதட்சணை கொடுமை புகாரில் அப்பெண்ணின் மாமனாரான இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இருவரும் தலைமறைவாகினர்.

    இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரையும், தலைமை காவலர் பூபாலனையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தனிப்படை போலீசார் பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • காவலர் பூபாலன் தனது மனைவிக்கு வெகு நாட்களாக வரதட்சணை கொடுமை அளித்து வந்தார்.
    • அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    மதுரை மாவட்டத்தில் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பூபாலன். இவரது மனைவி தங்கபிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

    இந்த நிலையில் காவலர் பூபாலன் தனது மனைவிக்கு வெகு நாட்களாக வரதட்சணை கொடுமை அளித்து வந்தார். இதனால் கணவன் மனைவி இருவரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதில், கணவன் மனைவியிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த பூபாலன் தனது மனைவியை கொடூரமான முறையில் தாக்கி சித்தரவதை செய்துள்ளார்.

    இதை தொடர்ந்து பலத்த காயமடைந்த அந்த பெண் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில், காவலர் பூபாலன், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பூபாலனின் தந்தை செந்தில்குமரன், அவரது மனைவி விஜயா, மகள் அனிதா ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான காவல் ஆய்வாளர் மற்றும் அவரது தந்தையை பிடிக்க 3 தனிப்படை அமைத்து அவர்களை தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • கூடுதல் வரதட்சணை வாங்கி வராவிட்டால், உன்னை கொன்றுவிட்டு வேறு திருமணம் செய்து கொள்வேன் என்று கணவர் பூபாலன் மிரட்டி உள்ளார்.
    • பலத்த காயமடைந்த தங்கபிரியா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மதுரை:

    மதுரை காதக்கிணறு பகுதியை சேர்ந்தவர் தங்கபிரியா, தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும், மதுரையை அடுத்த அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் பூபாலன் என்பவருக்கும் கடந்த 3.7.2017 அன்று திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். பூபாலனின் தந்தை செந்தில்குமரன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    தங்கபிரியா திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 60 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவை சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு மாமனார் செந்தில் குமரன், கணவர் பூபாலன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோர் சேர்ந்து தங்கபிரியாவை பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கியுள்ளனர்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் புதிதாக வீடு வாங்குவதற்காக உன் தந்தையிடம் இருந்து பணம் வாங்கி வருமாறு கூறி தங்கபிரியாவை அடித்து உதைத்துள்ளனர். மேலும் கூடுதல் வரதட்சணை வாங்கி வராவிட்டால், உன்னை கொன்றுவிட்டு வேறு திருமணம் செய்து கொள்வேன் என்று கணவர் பூபாலன் மிரட்டி உள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த தங்கபிரியா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தங்கபிரியா தனது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள் அளித்த புகாரின்பேரில் தங்கபிரியாவின் கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோர் மீது அப்பன் திருப்பதி போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சமீபத்தில் திருப்பூர் ரிதன்யா, குமரி மாவட்டம் ஜெபிலா போன்ற பல பெண்கள் வரதட்சணை கொடுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் உலுக்கிய நிலையில், காவல்துறை குடும்பத்தில் இருந்து இவ்வாறான செயல் வந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அதிகாரிகள் கேள்வி கேட்டு விளக்கங்களை பெற்றனர்.
    • இன்று மாலை வரை விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 29) சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரமாக மதுரை மற்றும் திருப்புவனத்தில் முகாமிட்டு வழக்கு தொடர்பாக மடப்புரம் கோவில் அலுவலகம், கோவில் கோ சாலை, வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் அஜித்குமாரின் தம்பி நவீன்குமார், கோவில் கார் டிரைவர் கார்த்திவேல், ஆட்டோ டிரைவர் அருண்குமார், அஜித் குமாருடன் பணியாற்றிய வினோத்குமார், பிரவீன் ஆகிய 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.

    அதில் 5 பேரும் மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி இன்று காலை அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் உள்பட 5 பேர் ஆஜராகினர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அதிகாரிகள் கேள்வி கேட்டு விளக்கங்களை பெற்றனர். இன்று மாலை வரை விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

    இதற்கிடையில் இந்த வழக்கில் சிறையில் உள்ள போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரின் செல்போன்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இதனை தொழில் நுட்ப அதிகாரிகளின் உதவியோடு, அதில் உள்ள தரவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். சம்பவம் நடந்த சமயங்களில் 5 பேரும் யாருடன் செல்போனில் பேசினார்கள்? இவர்களிடம் பேசியது யார்? என்ன பேசினார்கள்? என்பது குறித்து செல்போன் தரவுகளை சேகரிக்கவும், சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தால் அஜித்குமார் கொலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    ×