என் மலர்
கன்னியாகுமரி
- சாலையில் இருந்து மிக உயரத்தில் ரெயில் தடம் தற்பொழுது அமைந்துள்ளது.
- ரெயில்வே மேம்பாலம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.
கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் சுக்குபாறை தேரிவிளை மற்றும் கொட்டாரம், அகஸ்தீஸ்வரம் சாலையில் உள்ள வடுகன்பற்று ஆகிய இடங்களில் ரெயில்வே கீழ்பாலம் (சுரங்க பாதை) அமைக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே பொது மேலாளரை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் கல்லூரி சாலையில் ரெயில்வே கேட் LC18 அமைந்துள்ளது. இந்த சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை. மேலும் இந்த வழியாக செல்லும் ரெயில் தடம், இரட்டிப்பு பாதை பணிகள் காரணமாக உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் சாலையில் இருந்து மிக உயரத்தில் ரெயில் தடம் தற்பொழுது அமைந்துள்ளது.
ஆகவே போக்குவரத்துக்கு சிரமமாக இருக்கும் இந்த பகுதியில் ரெயில்வே பாதையின் கீழ்பாலம் அமைக்க வேண்டும். அது போன்று கொட்டாரம் அகஸ்தீஸ்வரம் சாலையில் உள்ள வடுகப்பற்றில்; உள்ள ரெயில்வே கேட் LC16 சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவதால் இங்கும் ஒரு ரெயில்வே பாதையின் கீழ்பாலம் அமைக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.
மேலும் நெடுநாட்களாக கிடப்பில் கிடக்கும் கோரிக்கையான கொரோனா காலத்திற்கு முன்பிருந்த ரெயில் நிறுத்தங்களில் மீண்டும் ரெயில்களை நிறுத்த வேண்டும் எனவும், கன்னியாகுமரி திப்ருகார் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான ராணுவ வீரர்கள் பயணம் செய்வதை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் இன்னுமொரு நிறுத்தம் (குழித்துறை) அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
- மீன் பிடி இறங்கு தளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
- நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கீழ மணக்குடி கிராமத்தில் மீனவர் மற்றும் மீன்வளத்துறை சார்பில் 29.5 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட மீன் பிடி இறங்கு தளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாவட்ட ஆட்சியர், நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ், துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பெரியோர்கள் கலந்து கொண்டனர்.
- முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடுகிறார்கள்.
- கடற்கரையை ஒட்டி கடல் நடுவே உள்ள ஆபத்தான பாறைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம், பத்ம நாபபுரம் அரண்மனை, வட்டக்கோட்டை, சங்கு துறை-சொத்தவிளை, கணபதிபுரம் உள்ளிட்ட கடற்கரைகள் என ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை என பல இடங்கள் இருக்கும் கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பல மாநிலங்களை சேர்ந்த வர்கள், வெளிநாட்டினர் சுற்றுலாவாக வருகிறார்கள்.
சூரிய உதயம், அஸ்தமனம் இரண்டையுமே கன்னியாகுமரியில் பார்க்கலாம். குமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வருபவர்கள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்க்க தவறுவதில்லை. அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடுகிறார்கள்.
மேலும் கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து மகிழ்வார்கள். அது மட்டுமல்லாமல் சிறந்த ஆன்மீக தலமாகவும் கன்னியாகுமரி திகழ்கிறது. இங்குள்ள பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கும் சுற்றுலா பயணி கள் செல்கின்றனர். கன்னியாகுமரியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் இந்த மாதங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மிக அதிக அளவில் இருக்கும். அதோடு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வருகையும் இந்த மாதங்களில் அதிகமாக இருக்கும்.
இந்த ஆண்டும் சீசன் காலமான தற்போது கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதுவும் சபரிமலைக்கு செல்லக்கூடிய அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் கன்னியாகுமரியில் திரும்பிய இடமெல்லாம் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது.
அவர்கள் விவேகானந்தர் மண்டபத்தை காண படகு போக்குவரத்து தொடங்கு வதற்கு முன்பே படகு குழாம் முன்பு நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். பராமரிப்பு மற்றும் பாலம் பணிகள் காரணமாக திருவள்ளுவர் சிலையை பார்க்க சுற்றுலா பயணிகள் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை.
சுற்றுலாவை ஆனந்தமாக கொண்டாடும் நோக்கத்தில் கன்னியாகுமரிக்கு வருபவர்களில் சிலர் ஆபத்தை உணராமல் செயல்படுவது தான் அதிர்ச்சிகரமான விஷயமாக உள்ளது. கன்னியாகுமரி கடலில் அவ்வப்போது ராட்சத அலைகள் எழும். காற்றின் வேகமும் அதிகமாகும்.
இதனால் கடற்கரையை ஒட்டி கடல் நடுவே உள்ள ஆபத்தான பாறைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பாறைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி சிலர் அங்கு சென்று விடுகிறார்கள்.
அவ்வாறு தடையை மீறி செல்பவர்கள் பாறைகளில் அமர்ந்தும், நின்று கொண்டும் செல்போனில் செல்பி எடுக்கின்றனர். மேலும் சிலர் குரூப்பாக நின்று போட்டோ எடுக்கிறார்கள். அவர்கள் பாறைகளுக்கு செல்லும் வழியும், பாறைகள் மீது நிற்பதும் ஆபத்தானது என போலீசார் எச்சரித்துள்ள போதிலும் பலர் கண்டு கொள்வதில்லை.
தற்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்று அதிகமாக அடித்து வரும் நிலையிலும் இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப, இளைஞர்கள் பலரும் ஆபத்தான பகுதிகளுக்கு சர்வசாதாரணமாக சென்று வருகின்றனர். அதனை தடுக்க அந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்த விஷயத்தில் போலீசார் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பது ஒரு புறம் இருந்தாலும், ஆபத்து என தெரிந்தும் அந்த பகுதிகளுக்கு செல்வோர் தங்களின் எதிர்காலம், குடும்பம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு கவனமாக செயல்படவேண்டும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.
- ஓவியர் தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம், நகை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
- ஓவியர் மனைவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு வேகமாக தப்பிச் சென்றார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள முதலார் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய வாலிபர் ஓவியராக உள்ளார். இவர் வீடுகளில் அலங்கார ஓவியம் வரையும் வேலை செய்து வருகிறார். இவரும் அணைக்கரையை சேர்ந்த 23 வயதுடைய பட்டதாரி இளம்பெண்ணும் கடந்த 2021-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் ஓவியர் தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம், நகை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இளம்பெண் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அவர் ஆற்றூர் பகுதியில் உள்ள ஒரு கல்வியியல் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கும் ஸ்கூட்டரில் சென்று வருவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் அந்த இளம்பெண் கல்லூரியில் இருந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு உள்ள சாலையில் ஓவியர் காருடன் நின்று கொண்டிருந்தார். அவர் மனைவி வந்ததும் அவரை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்தார்.
தகராறு முற்றிய நிலையில் மனைவியின் ஸ்கூட்டர் சாவியை பிடுங்கி கொண்டு காரில் ஏறினார். அவரை இளம்பெண் தடுக்க முயன்றபோது காரில் கிடந்த கம்பியால் அவரை தாக்கிவிட்டு காரில் புறப்பட தயாரானார். உடனே அந்த இளம்பெண் கார் ஜன்னல் வழியாக தனது ஸ்கூட்டர் சாவியை வாங்க முயன்றார்.
அப்போது ஓவியர் காரை இயக்கி மனைவியை தரதரவென இழுத்துச்சென்றார். இதனால் அந்த பெண் அலறினார். இதை பார்த்து அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் சில இளைஞர்கள் காரைத் துரத்தி சென்றனர். உடனே ஓவியர் மனைவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு வேகமாக தப்பிச் சென்றார். இதில் அந்த இளம்பெண் கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஓவியரை தேடி வருகின்றனர். இதற்கிடையே ஓவியர் மனைவியை காரில் தரதரவென இழுத்து சென்ற பதைபதைக்க வைக்கும் காட்சி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சென்னை- திருநெல்வேலி வந்தே பாரத் ரெயில் அறிவிக்கப்பட்ட தருணத்திலேயே இந்த ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்.
- மத்திய ரெயில்வே துறை அமைச்சர் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினேன்.
கன்னியாகுமரி:
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாகர்கோவில் நகருக்கு முதன் முறையாக வருகை தந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை இன்று ரெயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து வரவேற்றேன்.
சென்னை- திருநெல்வேலி வந்தே பாரத் ரெயில் அறிவிக்கப்பட்ட தருணத்திலேயே இந்த ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்.
மத்திய ரெயில்வே துறை அமைச்சர் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தினேன். தொடர் முயற்சிகளின் பலனாக இன்று வந்தே பாரத் ரெயில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தடைந்தது.
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
- கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 5,77,803 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வெள்ள நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
- விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள், நியாய விலைக்கடைகளுக்கு சென்று தங்களது நிவாரண உதவித்தொகையினை பெற்று கொள்ளலாம்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய இரண்டு நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் முதலமைச்சர் வெள்ள நிவாராணத் தொகையாக தலா ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, உதவித்தொகை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 5,77,803 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வெள்ள நிவாரண உதவித்தொகை கடந்த 29.12.2023 அன்று முதல் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுநாள் வரை நிவாரணத்தொகை வாங்காத விடுப்பட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நாளை (03.01.2024) வழங்கப்படும். எனவே விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகளுக்கு சென்று தங்களது நிவாரண உதவித்தொகையினை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
- அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சி தெள்ளத் தெளிவாக தெரியவில்லை.
கன்னியாகுமரி:
ஆங்கில வருடமான 2023-ம் ஆண்டு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்து 2024-ம் ஆண்டு மலர்ந்து. இந்த புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.
அந்த அடிப்படையில் இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள உலகபுகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் ஆடல், பாடல் மற்றும் குத்தாட்டத்துடன் கோலாகலமாக நடந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் இரவு விடுதிகளில் தங்கி இருந்தனர்.
இன்று அதிகாலை இந்த புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருந்தது.
மேகமூட்டத்தினால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சி தெள்ளத் தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பலர் காலை 7 மணி வரை காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 7.30 மணிக்கு சூரியன் மேகக் கூட்டத்துக்கு இடையில் இருந்து வெளியே தெரிந்தது. அதனையே சுற்றுலா பயணிகளால் பார்க்க முடிந்தது.
கடலுக்கு அடியில் இருந்து சூரியன் உதயமான காட்சியை புத்தாண்டில் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- படகுத்துறையில் நீண்ட வரிசை காணப்பட்டது.
- கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் சீசன் களை கட்டி உள்ளது. கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை இந்த ஆண்டின் கடைசி சூரிய உதய காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் திரண்டதால் கடற்கரை பகுதி போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது.
அதேபோல முக்கடல் சங்கமத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் கடலில் ஆனந்த குளியல் போட்டனர். பின்னர் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். இதனால் கோவிலில் இன்று அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசை காணப்பட்டது.
இதேபோல கன்னியாகுமரி விவேகானந்தபுரம் கடற்கரையில் உள்ள திருப்பதி வெங்கடேஷ்வர பெருமாள் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் பயணம் செய்து பார்வையிட்டு திரும்பினர். இதனால் படகுத்துறையில் நீண்ட வரிசை காணப்பட்டது. விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் சுமார் 3 மணி நேரம் நீண்ட கியூவில் காத்திருந்தனர். இந்த கியூ சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருந்தது. மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், மியூசியம் போன்ற அனைத்து பொழுது போக்கு இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அதுமட்டுமின்றி கன்னியாகுமரியில் சன்னதி தெரு, தேரோடும் 4 ரதவீதிகள், மெயின்ரோடு பார்க்வியூ பஜார், காந்தி மண்டப பஜார், கடற்கரை சாலை, சன்செட் பாயிண்ட் கடற்கரைப்பகுதி போன்ற அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் கன்னியாகுமரியை சுற்றி உள்ள மற்ற சுற்றுலா தலங்களான வட்டக்கோட்டை பீச், சொத்த விளை பீச், திக்குறிச்சி பீச், திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, ஆசியாவிலேயே மிக நீளமான மாத்தூர் தொட்டிப்பாலம் போன்ற அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஒரே நேரத்தில் ஏராளமான பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலும் இரு சக்கர வாகனங்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து குவிந்ததால் கன்னியாகுமரியில் இன்று அதிகாலை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீசாருடன் சுற்றுலா போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இணைந்து பணியாற்றினார்கள்.
- நூலகத்திற்கு தாய், தந்தையின் பெயரான ரெத்தினம்மாள்-செல்லப்பன் பெயரை சூட்டியுள்ளார்.
- மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தினால் வேலைவாய்ப்பிற்கு பயன்னுள்ளதாக இருக்கும்.
கன்னியாகுமரி:
தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு. இவர் தன்னுடைய பணிக்காலத்தில் பணியை திறம்பட செய்ததோடு படிப்பின் அவசியம் தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். போட்டி தேர்வில் சாதிப்பது எப்படி? என்பது தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விளக்கம் அளித்துள்ளார். இதுதவிர சைக்கிள் பயிற்சி, மாரத்தான் ஓட்டத்திலும் பங்கேற்று உடல் வலிமை, மனவலிமையின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.
இந்தநிலையில் குமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள தனது பூர்வீக வீட்டை அவர் நவீன வசதிகளுடன் கூடிய நூலகமாக மாற்றியுள்ளார். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த நூலகத்திற்கு அவருடைய தாய், தந்தையின் பெயரான ரெத்தினம்மாள்-செல்லப்பன் பெயரை சூட்டியுள்ளார்.
மேலும், இந்த நூலகத்தை தன்னுடைய தாயார் ரெத்தினம்மாளை வைத்து திறக்கவும் ஏற்பாடு செய்தார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு நூலகத்தை பயன்படுத்துவதற்கான உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் பங்கேற்று அனைவரையும் வரவேற்றார்.
இது தவிர இந்த நூலகத்தில் டிஎன்.பி.எஸ்.சி, சிவில் சர்வீஸ், நீட், வங்கி தேர்வு, மத்திய, மாநில அரசு சார்ந்த போட்டி தேர்வுகளுக்கு சிறப்பு வல்லுனர்களை கொண்டு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. போட்டி தேர்வுக்கான புத்தகங்கள், பள்ளி, கல்லூரி புத்தகங்கள் உள்ளிட்ட பல புத்தகங்கள் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.
இதுதொடர்பாக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது:-
மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தினால் வேலைவாய்ப்பிற்கு பயன்னுள்ளதாக இருக்கும். தற்போது உள்ள மாணவர்களிடம் விளையாட்டு, சினிமா ஆர்வம் இருக்கிறது. ஆனால் அறிவியல், கணிதம், மொழி உள்ளிட்டவற்றை கற்க வேண்டும் என்ற ஆர்வம் குறைவாக உள்ளது. அந்த ஆர்வத்தை அதிகப்படுத்த இந்த நூலகம் பயன்பெறும்.
நான் இந்த வீட்டில் இருந்து படித்து தான் பதவிக்கு வந்தேன். அதே போன்று இந்த பகுதி இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்க இந்த நூலகம் வழிகாட்டியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்தது. 9-ம் திருவிழாவான நேற்று காலையில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையொட்டி ரிஷப வாகனத்தில் தாணுமாலய சாமியும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், கருட வாகனத்தில் திருவேங்கட விண்ணவரான பெருமாளும் வீதி உலா வந்து கோவிலை வந்தடைந்தனர். அதன் பிறகு மருங்கூர் முருகன், கோட்டார் வலம்புரி விநாயகர், வேளிமலை குமாரசுவாமி எதிரெதிரே காட்சியளித்தனர்.
பிறகு அனைத்து தெய்வங்களுக்கும் ஒன்றுபோல் தீபாராதனை நடந்தது. அப்போது தாணுமாலய சாமி ரிஷப வாகனத்தில் அமர்ந்து தனது மக்களை பிரிய மனமில்லாமல் கோவில் சன்னிதானத்தில் முன்னும் பின்னுமாக அசைந்து அசைந்து செல்வதும், திரும்புவதுமாக பலமுறை நடந்தது. இந்த காட்சியை காண நள்ளிரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
பெண்கள் குலவையிட்டு, மங்கல ஒலி எழுப்பிடவும், மேளதாளம் முழங்கவும் வாகனங்களில் இருந்து தாய்-தந்தையர் கோவிலை சென்றடைந்தனர். இந்த காட்சியை காண வந்த பக்தர்கள் பலரும் இரவு கோவிலிலேயே தங்கி தொடர்ந்து இன்று அதிகாலை நடந்த ஆருத்ரா தரிசனத்தை கண்டுகளித்தனர்.
இன்று (27-ந்தேதி) மாலை 5 மணிக்கு நடராஜர் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இதைத்தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
- பலியான 414 பேர் உடல்களும் குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாக்கத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
- பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கல்லறை தோட்டத்தில் மலர்கள் தூவியும், மெழுகு வர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
குளச்சல்:
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பேரலை தாக்கியது. இந்திய கடல் பகுதியையும் சுனாமி விட்டு வைக்கவில்லை. இதில் தமிழகத்தின் குமரி மாவட்டம் பெரும் உயிர்சேதம் மற்றும் பொருட் சேதத்தை சந்தித்தது. சுனாமி பேரலையில் சிக்கி கடற்கரை கிராமங்கள் சின்னாபின்னமாகின.
மணக்குடி, அழிக்கால், கன்னியாகுமரி சொத்த விளை, குளச்சல் கொட்டில் பாடு, பிள்ளை தோப்பு உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் ஏராளமானோர் சுனாமியின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்தனர். கொட்டில்பாடு பகுதியில் 199 பேர் பலியாகினர். அவர்களது உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப் பட்டன. சுனாமி பேரலை தாக்கியதன் நினைவாக கடற்கரை கிராமங்களில் நினைவு ஸ்தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு ஆண்டு தோறும் மீனவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி 19-ம்ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி கொட்டில் பாடு சுனாமி காலணியில் இருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறை தோட்டத்தில் பிரார்த்தனை நடைபெற்றது. நினைவு ஸ்தூபியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் புதிதாக கட்டப்பட்டுள்ள புனித அலெக்ஸ் ஆலயத்தில் 199 பேர் நினைவாக நினைவு திருப்பலி நடந்தது. ஆலய பங்குத்தந்தை ராஜ், மற்றும் பங்குத் தந்தை சர்ச்சில் உள்பட ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்தும், பூக்கள் தூவியும், மெழுகு வர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுனாமியின் போது குளச்சல் பகுதியில் பலியான 414 பேர் உடல்களும் குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாக்கத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் நினைவாக இன்று இரவு 7 மணிக்கு உதவி பங்குத் தந்தை தலைமையில் நினைவு திருப்பலி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து கல்லறை மந்திரிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும் பலியானவர்கள் நினைவாக அந்த நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இதுபோல் சுனாமியில் ஏராளமான முஸ்லிம்கள் பலியானார்கள். அவர்களின் உடல்கள் ரிபாய பள்ளி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல் 118 பேரை பலி கொண்ட மணக்குடியிலும் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. புனித அந்திரேயா ஆலயத்தில் பங்கு தந்தை அந்தோணியப்பன் தலைமையில் நினைவு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆலயத்தில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக 118 பேர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டம் சென்றனர். அங்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கல்லறை தோட்டத்தில் மலர்கள் தூவியும், மெழுகு வர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுனாமி நினைவு தினத்தையொட்டி மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
- சுனாமி குடியிருப்பு பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக தண்ணீர் புகுந்து தேங்கியது.
- இரண்டு நாட்களுக்கு முன் இந்த பகுதிக்கு விஜய் வசந்த் எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி கோவளம் சுனாமி குடியிருப்பு பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக தண்ணீர் புகுந்து தேங்கியது. மற்ற பகுதிகளில் தண்ணீர் வடிந்த போதிலும் இந்த பகுதியில் மட்டும் வடியாமல் தேங்கியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் இந்த பகுதிக்கு விஜய் வசந்த் எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.

இதைதொடர்ந்து நேற்று மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளை வரவழைத்து நீரை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தண்ணீர் தேங்குவதற்கான காரணங்களை ஆராய்ந்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக் கொண்டார்.






