என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • 77 மீட்டர் நீளத்திலும் 10 மீட்டர் அகலத்திலும் பாலம் அமைக்கப்பட உள்ளது.
    • இரு பக்கங்களிலும் கல் மண்டபம் அமைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடிஉயர திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் இரண்டுக்கும் இடையே நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழையிலான கூண்டு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    77 மீட்டர் நீளத்திலும் 10 மீட்டர் அகலத்திலும் பாலம் அமைக்கப்பட உள்ளது. அதிகபட்சம் கடல் அலைக்கு மேல் 7 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.

    இந்த பாலத்தின் ஆர்ச் உயரம் 11 மீட்டர் ஆகும். முற்றிலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகளால் வடிவமைக்கப்பட்ட கூண்டின் மீது 2.40 மீட்டர் அகலத்தில் கண்ணாடி பகுதி அமைகிறது. இரு பக்கங்களிலும் கல் மண்டபம் அமைக்கப்படுகிறது.

    இந்த பாலத்தில் 101 கூண்டுகள் பொருத்தப்பட உள்ளன. இவை புதுச்சேரியில் இருந்து கண்டெய்னர் லாரிகள் மூலம் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து முதல் கட்டமாக 30 கூண்டுகள் படகு மூலம் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் கொண்டு சென்று இறக்கி வைக்கப்பட்டுள்ளது.

    கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பதற்காக திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையிலும் விவேகானந்தர் பாறையிலும் ராட்சத கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு இரு பக்கத்தையும் இணைக்கும் வகையில் ஆர்ச் போன்ற கூண்டு அமைப்பை பொருத்து வதற்காக இரும்பு தூண்கள் மூலம் சாரமும் அமைக் கப்பட்டுள்ளது.

    திருவள்ளுவர் பாறை மற்றும் விவேகானந்தர் பாறையில் அமைக்கப்பட்டு உள்ள 2 ராட்சத தூண்களுக்கு இடையே இரும்பு கம்பிகளால் வடம் போன்று தயாரிக்கப்பட்ட ரோப்புகள் அமைக்கப்பட்டு அந்த ரோப்புகள் வழியாக தொழில் நுட்ப வல்லுநர்கள் விஞ்சு மூலம் சென்று இந்த கூண்டு ஆர்சுகளை பொருத்தி வருகின்றனர்.

    இந்த இரு பாறைகளிலும் தலா 4 ஆர்ச்சுகள் பொருத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெறும் வெள்ளி விழா அடுத்த மாதம் வர உள்ளது.

    இதனை முன்னிட்டு வருகிற ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு பிறக்கும் போது வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கண்ணாடி இழை கூண்டு பாலத்தை திறந்து வைப்பார் என கூறப்படுகிறது.

    • குடும்ப சொத்து பிரச்சனை தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக கோர்ட்டில் நடந்து வருகிறது.
    • பிடிபட்ட 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி:

    நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் கீழூரை சேர்ந்தவர் பொன்னையா. இவரது மகன் இசக்கிமுத்து (வயது 32). தற்போது திருப்பதிசாரம் அரசு விதைப்பண்ணை அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இசக்கிமுத்து மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இசக்கி முத்துவின் தந்தைக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வருகிறது.

    இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை தக்கலையை சேர்ந்த வக்கீல் கிறிஸ்டோபர் சோபி என்பவர் பொன்னையாவுக்கு ஆதரவாக நடத்தி வருகிறார். இந்த வக்கீலை இசக்கிமுத்து ஏற்பாடு செய்திருந்தார். வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் வழக்கு முடிவுக்கு வரவில்லை. இதனால் வக்கீல் கிறிஸ்டோபர் சோபிக்கும், இசக்கி முத்துவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கை விரைந்து முடிக்குமாறு கிறிஸ்டோபர் சோபிடம் இசக்கிமுத்து கூறி வந்தார். இந்த நிலையில் கிறிஸ்டோபர் சோபி திருப்பதிசாரம் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு வைத்து இசக்கிமுத்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.

    பின்னர் உடலை பீமநகரி சந்தியான் குளக்கரையில் தீ வைத்து எரித்தார். பின்னர் இசக்கிமுத்து ஆரல்வாய்மொழி போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் குளத்தங்கரைக்கு சென்று பார்த்தபோது கிறிஸ்டோபர் சோபி எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    பிணத்தை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்ந்து இசக்கி முத்துவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கொலை செய்யப்பட்ட இசக்கிமுத்து போலீசாரிடம் கூறியதாவது:-

    எனது தந்தையின் குடும்ப சொத்து பிரச்சினை தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு செலவுக்கு கிறிஸ்டோபர் சோபி லட்சக்கணக்கில் பணம் வாங்கினார். இந்த சொத்து பத்திரத்தையும் வக்கீல் தான் வைத்திருந்தார். கிறிஸ்டோபர் சோபி தங்களுக்கு எதிராக செயல்பட்டதால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் சொத்து பத்திரத்தை திருப்பி தரும்படி கேட்டேன். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். இதனால் எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. எனது மனைவியையும் தகாத வார்த்தைகளால் பேசி வந்தார். இந்த நிலையில் வக்கீல் கிறிஸ்டோபர் சோபி என்னைதொடர்பு கொண்டு தனக்கு வாழைக்கன்று வேண்டும் என்று கேட்டார்.

    இதையடுத்து அவரை எங்களது ஊருக்கு வரவழைத்து அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினேன். அவரும் மோட்டார் சைக்கிளில் எங்கள் ஊருக்கு வந்தார். அங்கு வைத்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன். பின்னர் எனது நண்பர்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் அவரை சந்தியான் குளக்கரையில் வீசியதுடன் தீ வைத்து எரித்ததாக கூறினார்.

    தனிப்படை போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலை வழக்கில் அவரது நண்பர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் இசக்கிமுத்து நண்பர்கள் 4 பேரை பிடித்துள்ளனர். பிடிபட்ட 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    விசாரணையில் வக்கீலை கொலை செய்து விட்டு 2 மோட்டார் சைக்கிள்களில் அவரது உடலை குளத்தின் கரையில் வீசி சென்றவுடன் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் கூறினார்கள். தொடர்ந்து 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீசார் அவர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயலில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சாலையில் ஏற்பட்டுள்ள குண்டு, குழிகளை மூட உத்தரவிட்டார்.
    • நிரந்தரமாக தேசிய நெடுஞ்சாலை சரி செய்யப்படும்.

    கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அங்குள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது சாலையை சீரமைக்க 14.87 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், தற்போது சாலை மிகவும் பழுதடைந்து மக்கள் பயணிக்க சிரமப்படுகின்றனர்.

    எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஒப்பந்தக்காரர் இறுதி செய்வதற்கு முன் சாலையில் ஏற்பட்டுள்ள குண்டு குழிகளை மூட வேண்டும், உடனடியாக சாலைகளை செப்பனிடவும் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று குழித்துறை பகுதியில் சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.


    மேலும் நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் விஜய் வசந்த் எம்பி பேசி சாலையை நல்ல முறையில் சீரமைக்க அறிவுறுத்தினார்.

    இதையடுத்து ஓடையில் நீர் செல்ல முடியாமல் மழை நீர் சாலையில் தங்குவதால் சாலை சேதமடைவதை உணர்ந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஓடையை தூர் வாரவும் கோரினார்.


    இது தற்காலிகமான தீர்வு தான் எனவும் கூடிய விரைவில் நிரந்தரமாக தேசிய நெடுஞ்சாலை சரி செய்யப்படும் எனவும் உறுதி அளித்தார்.


    • சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • வக்கீலான கிறிஸ்டோபர் சோபி, இசக்கிமுத்துவின் சொத்து தொடர்பான வழக்கை நடத்தி வருகிறார்.

    ஆரல்வாய்மொழி:

    குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பீமநகரி விதை ஆராய்ச்சி மையம் அருகே சந்தியான் குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் இன்று காலை வாலிபர் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    அவரை யாரோ கொன்று உடலை எரித்துள்ளனர். இறந்து கிடந்தவரின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்த நிலையில் கிடந்ததால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் முதலில் தெரியவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது திருப்பதி சாரம் கீழூர் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 21) என்பவர் ஒருவரை அழைத்து செல்வது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீசார் இசக்கிமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பிணமாக கிடந்தவரை இசக்கிமுத்து கொன்றதும், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தக்கலை குமாரபுரம் சரல்விளை பகுதியை சேர்ந்த வக்கீல் கிறிஸ்டோபர் சோபி(50) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பிணமாக கிடந்த கிறிஸ்டோபர் சோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வக்கீல் கிறிஸ்டோபர் சோபியை கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து இசக்கி முத்துவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிறிஸ்டோபர் சோபி கொலைக்கான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    வக்கீலான கிறிஸ்டோபர் சோபி, இசக்கிமுத்துவின் சொத்து தொடர்பான வழக்கை நடத்தி வருகிறார். அந்த வழக்கை விரைந்து முடிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் இசக்கி முத்து தனது சொத்து பத்திரங்களை தன்னிடம் தருமாறு கிறிஸ்டோபர் சோபியிடம் கூறியுள்ளார்.

    ஆனால் பத்திரங்களை கொடுக்க அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் வக்கீல் கிறிஸ்டோபர் சோபியை தீர்த்துக்கட்ட இசக்கிமுத்து முடிவு செய்துள்ளார் . இந்த நிலையில் நேற்று கிறிஸ்டோபர் சோபி தனக்கு வாழைக் கன்றுகள் வேண்டுமென்று இசக்கிமுத்துவிடம் கேட்டுள்ளார்.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிறிஸ்டோபர் சோபியை தீர்த்துக்கட்ட இசக்கிமுத்து திட்டமிட்டுள்ளார். தங்களது ஊரில் வாழைக்கன்றுகள் இருப்பதாகவும், அங்கு வருமாறும் கிறிஸ்டோபர் சோபியிடம் கூறியுள்ளார். அதனை நம்பி அவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் இசக்கிமுத்து வீட்டிற்கு வந்துள்ளார்.

    சந்தியான் குளக்கரை பகுதியில் உள்ள தோட்டத்தில் வாழைக்கன்று இருப்பதாக கூறி அங்கு கிறிஸ்டோபர் சோபியை தனது மோட்டார் சைக்கிளில் இசக்கிமுத்து அழைத்து சென்றார். அங்கு வைத்து கிறிஸ்டோபர் சோபியை தன்னிடம் இருந்த அரிவாளால் இசக்கிமுத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். கொலை செய்யப்பட்ட கிறிஸ்டோபர் சோபியை அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை எரித்துவிட முடிவு செய்தார். அதற்காக தனது மோட்டார் சைக்கிளில் இருந்தே பெட்ரோலை எடுத்து, கிறிஸ்டோபர் சோபி உடலில் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.

    பின்பு அங்கிருந்து இசக்கிமுத்து அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததால் இசக்கிமுத்து சிக்கினார். கைது செய்யப்பட்ட இசக்கி முத்துமிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வக்கீல் வெட்டிக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தால் ஆரல்வாய்மொழி மற்றும் தக்கலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உப்பு உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    • உப்பு உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் சாமிதோப்பு, புத்தளம், கோவளம், மணக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் அமைக்கப்பட்டு உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் வேலைசெய்து வருகின்றனர்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்புகள் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக உப்பளங்களில் வெள்ளம் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது.

    இதனால் உப்பு உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த காலங்களை போல நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் குமரி மாவட்டத்தில் தொடர் மழை இருக்கும் என உப்பு உற்பத்தியாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் புத்தளம், சாமி தோப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உப்பு உற்பத்தி தொழில் பாதிப்படைந்துள்ளது. இதனால் உப்பளங்கள் அனைத்தும் தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் உப்பு உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • 4 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம், ஆஸ்ரமம், பதினெட்டாம்படி, அக்கரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

    • 2 குழந்தைகளுக்கு தாயான தனது மனைவி மாயமாகி விட்டதாக 4-வது கணவர் போலீசில் கூறினார்.
    • விவாகரத்து செய்யாத நிலையில் திருமணம் செய்வது தவறானது என போலீசார் அறிவுரை கூறினர்.

    இரணியல்:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது உறவினர்களுடன் குமரி மாவட்டம் இரணியல் வந்தார். அவர் போலீஸ் நிலையம் சென்று ஒரு புகார் கொடுத்தார். அதில் தான் கட்டிட வேலை பார்த்து வருவதாகவும் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது 2 குழந்தைகளுக்கு தாயான தனது மனைவி மாயமாகி இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதுபற்றி விசாரித்த போது, தற்போது குமரி மாவட்டம் பேயன்குழி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் தனது மனைவி வந்ததும், அவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பது தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்போஸ்கோ மற்றும் போலீசார், அந்த வாலிபரை போனில் தொடர்பு கொண்ட போது தான் யாரையும் அழைத்து வரவில்லை என்று அவர் கூறி உள்ளார். இருப்பினும் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்த போது ஒரு கோவிலில் வைத்து வாலிபருக்கும் திண்டுக்கல் பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணையும், வாலிபரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது அந்த பெண், திண்டுக்கல் தொழிலாளி தனக்கு 4-வது கணவர் என்றும், அவர் மது அருந்தி விட்டு வந்து தாக்குதல் நடத்தியதாகவும் அவரது செயல்பாடுகள் பிடிக்காமல் தான், தன்னுடன் வேலை செய்த குமரி மாவட்ட வாலிபர் உடன் இணைந்து வாழ விரும்பி வந்ததாகவும் கூறினார். ஆனால் அவர் முறைப்படி விவாகரத்து செய்யாத நிலையில் திருமணம் செய்வது தவறானது என அவருக்கு அறிவுரை கூறிய போலீசார், கணவர் மற்றும் குழந்தைகளுடன் இணைந்து வாழ அறிவுரை வழங்கினர்.

    ஆனால் அந்த பெண், கணவர் மற்றும் மகன்களை உதறிவிட்டு பேயன் குழி வாலிபருடன் சென்று விட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
    • பேச்சிப்பாறை‌ அணை நீர்மட்டம் இன்று காலை 42.43 அடியாக இருந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் இதமான குளிர் காற்று வீசி வருகிறது. தினமும் காலையில் இதமான வெயில் அடித்து வரும் நிலையில் மதியத்துக்கு பிறகு மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நேற்றும் மதியத்துக்கு பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இரவும் மழை நீடித்தது. அடையாமடை பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 84.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. முள்ளங்கினா விளை, குருந்தன்கோடு, கோழிப்போர்விளை, அடையாமடை, ஆணைகிடங்கு, களியல், நாகர்கோவில் பகுதியிலும் மழை பெய்தது.

    மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியிலும் மழை பெய்தது. பேச்சிபாறை அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டதையடுத்து திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வரு கிறார்கள். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 1014 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் திறந்து விடப்பட்டுள்ளது. சானல்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.43 அடியாக இருந்தது. அணைக்கு 457 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 504 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 67.51 அடியாக உள்ளது. அணைக்கு 512 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 510 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாம்பழத்துறையாறு, முக்கடல் அணையை தொடர்ந்து முழு கொள்ள ளவான முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. முக்கடல் அணையில் இருந்து மறுகால் பாய்ந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் மழைக்கு ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து இருந்த நிலையில் நேற்று மேலும் 5 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

    இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொடர் மழையின் காரணமாக தடிக்காரன்குணம், குலசேகரம், கீரிப்பாறை பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டை களிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    • காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் வயநாட்டில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி இருவரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசினர்.

    வயநாடு எம்.பி. பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்ததால், காலியான அந்த தொகுதிக்கு வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா போட்டியிடுகிறார்.

    தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரியங்கா நேற்று வயநாடு வந்தார். அவருடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தார்.

     

    கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் வயநாட்டில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வயநாட்டில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி இருவரும் மானந்தவாடி காந்தி பார்க் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசினர்.

     

    இந்நிலையில் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • விஜய் வசந்த் எம்.பி. நாகர்கோவிலில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
    • இந்நிகழ்ச்சியில் பலர் உடன் இருந்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் மாவட்ட, வட்டார நிர்வாகிகள், மாவட்ட பொருளாளர், செயற்குழு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ்களை பாராளுமன்ற காங்கிரஸ் பொருளாளரும், வர்த்தக காங்கிரஸ் மாநில தலைவருமான விஜய் வசந்த் எம்.பி. நாகர்கோவிலில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

    நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் செயல் தலைவர் ஆரோக்கிய ராஜன், பொதுச் செயலாளர் பால் டேனியல், செயலாளர் கிங்ஸ்லின், துணைத்தலைவர் ராம் மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமன் லட்சுமணன், வர்த்தக காங்கிரஸ் ஆலோசகர் முகமது சாகுல் அமீது மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் மற்றும் தொகுதிக்கு உட்பட்ட ஏராளமான இளைஞர்கள் காங்கிரசில் இணைந்தனர்.
    • நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களியக்காவிளை பகுதியை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் மற்றும் தொகுதிக்கு உட்பட்ட ஏராளமான இளைஞர்கள் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

     


    குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த தினவிழா நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி குமரி தந்தை மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

    குமரி தினத்தை முன்னிட்டு குமரி தந்தை மார்ஷல் நேசமணி சிலைக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தனர்.
    • அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் மழை வெளுத்து வாங்கிய நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. தக்கலை, மாம்பழத்துறையாறு, ஆணை கிடங்கு பகுதியில் நேற்று மதியத்துக்கு பிறகு சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது.

    தக்கலையில் அதிகபட்சமாக 85.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மயிலாடி, கன்னிமார், பூதப்பாண்டி, இரணியல், ஆணைக்கிடங்கு, குழித்துறை, சுருளோடு, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தால் அங்கு ரம்மியமான சூழல் நிலவியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

    மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பேச்சிப்பாறை, சிற்றாறு-1, மாம்பழத்துறையாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கோதை ஆறு, குழித்துறை ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தனர். அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.71 அடியாக உள்ளது. அணைக்கு 404 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மதகுகள் வழியாக 506 கன அடி தண்ணீரும், உபரிநீராக 492 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 67.16 அடியாக உள்ளது. அணைக்கு 422 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 510 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 14.04 அடியாக உள்ளது. அணைக்கு 66 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதையடுத்து அணையிலிருந்து 62 கன அடி உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 7, பெருச்சாணி 23.6, சிற்றார் 1-9.6, சிற்றார் 2-3.8, மயிலாடி 5.2, பூதப்பாண்டி 8.2, முக்கடல் 39.2, பாலமோர் 14.4, தக்கலை 85.4, குளச்சல் 8, இரணியல் 24, அடையாமடை 61.6, குருந்தன்கோடு 6, கோழிப்போர்விளை 10.8, மாம்பழத்துறையாறு 83, ஆனைக்கிடங்கு 82.2, களியல் 5.8, குழித்துறை 8, சுருளோடு 7.2, புத்தன் அணை 22.2, திற்பரப்பு 47.2, முள்ளங்கினாவிளை 8.6. 

    ×