என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உப்பு உற்பத்தி பாதிப்பு"

    • 3 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.
    • தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பகல் வேலைகளில் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று, பகலில் மீண்டும் வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து, மாலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யத் தொடங்கி கனமழையாக மாறியது.

    இதனால் தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் மூலம் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது.

    தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் உப்பு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் உற்பத்தியாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

    அத்திமரப்பட்டி, காலங்கரை, கோரம்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த நெல் அறுவடை பணியும் பாதிப்படைந்துள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கிடங்குகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    குறிப்பாக திருச்செந்தூர் சாலையில் வடிகால் இல்லாததால் முழு தண்ணீரும் சாலையில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கீழே இறங்கி வாகனத்தை உருட்டி சென்று அவதி அடைந்தனர்.

    இதுபோல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளான திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் , கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டி னத்தில் 96 மில்லிமீட்டர், தூத்துக்குடி 16.20 மி.மீ, திருச்செந்தூர் 55 மி.மீ, குலசேகரப்பட்டினம் 6 மி.மீ, சாத்தான்குளம் 6.40 மி.மீ, கோவில்பட்டி 18 மி.மீ, கழுகுமலை 80 மி.மீ, கயத்தார் 70 மி.மீ, கடம்பூர் 1.50 மி.மீ, எட்டையாபுரம் 5.10 மி.மீ, விளாத்திகுளம் 17 மி.மீ, காடல்குடி 5 மி.மீ, வைப்பார் 9 மி.மீ, சூரங்குடி 20 மி.மீ, ஓட்டப்பிடாரம் 73.50 மி.மீ, மணியாச்சி 9 மி.மீ என மாவட்டத்தில் மொத்தம் 487.70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 25.67 மில்லி மீட்டர் மழைப்பொழிவு இருந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    புதியம்புத்தூர் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1½ மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. 

    • 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
    • மழையால் உப்பு பாத்திகள் கரைந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினவயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் வேதாரண்யத்தில் கடந்த 2 நாட்களாக திடீரென்று பெய்த மழையால் உப்பு பாத்திகளில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் உப்பு பாத்திகள் கரைந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது.

    உப்பளங்களில் சேமித்து வைத்துள்ள உப்பு மழையில் கரைந்து விடாமல் பாதுகாக்க தார்ப்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். மழையால் உப்பளங்கள் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான உப்பு தொழிலாளர்களுக்கு வேலை இழந்துள்ளனர்.

    இந்த திடீர் மழையால் உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்க ஒரு வார காலமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • சுட்டெரிக்கும் வெயிலால் கடுமையாக அவதிக்குள்ளான மக்கள் இன்று பெய்த கனமழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
    • தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த கடுமையான வெயிலின் காரணமாக பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் கொளுத்திய நிலையில், இன்று அதிகாலை முதல் திடீரென கனமழை பெய்தது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய மழை முதலில் மிதமாக பெய்தது. பின்னர் சுமார் 2 மணி நேரம் கனமழையாக பொழிந்தது.

    தூத்துக்குடி நகர் பகுதியான முத்தையாபுரம், பழைய காயல், ஆறுமுகநேரி, முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக இந்த பகுதிகளில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. கடந்த 2 நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் அடித்த நிலையில் உப்பளங்களில் உப்பு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று காலை பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த கோடை மாதங்களில் தான் உப்பு உற்பத்தி தாராளமாக நடைபெறும். ஆனால் இந்த நேரத்தில் மழை பெய்துள்ளதால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பெய்துள்ள மழையின் காரணமாக அடுத்த 10 நாட்களுக்கு உப்பு உற்பத்தி பணியை மேற்கொள்ள முடியாது என உற்பத்தியாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

    அதேநேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் கடுமையாக அவதிக்குள்ளான மக்கள் இன்று பெய்த கனமழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேல தட்டப்பாறை, கீழ தட்டப்பாறை, தளவாய்புரம், வாகைகுளம் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக தூத்துக்குடியில் 40 மில்லிமீட்டரும், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 28 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. கருப்பாநதியில் 13 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. அதே நேரத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன் கோவில், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம்போல் வெயில் அடித்தது.

    நெல்லையில் நேற்று மதியம் திடீரென சாரல் மழை பெய்தது. வண்ணார்பேட்டை, சந்திப்பு, பாளை, சமாதானபுரம், மார்க்கெட் பகுதி, பாளை பஸ் நிலைய பகுதிகளில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் சிறிது நேரம் குளிர்ந்த காற்று வீசியது.

    • உப்பு உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    • உப்பு உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் சாமிதோப்பு, புத்தளம், கோவளம், மணக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் அமைக்கப்பட்டு உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் வேலைசெய்து வருகின்றனர்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்புகள் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக உப்பளங்களில் வெள்ளம் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது.

    இதனால் உப்பு உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த காலங்களை போல நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் குமரி மாவட்டத்தில் தொடர் மழை இருக்கும் என உப்பு உற்பத்தியாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் புத்தளம், சாமி தோப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உப்பு உற்பத்தி தொழில் பாதிப்படைந்துள்ளது. இதனால் உப்பளங்கள் அனைத்தும் தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் உப்பு உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மலைநம்பி கோவிலுக்கு இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை பக்தர்கள் செல்லவும், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.
    • சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்களில் பாதிப்பு ஏற்பட்டதால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கினர்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இந்த மாவட்டங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை மாவட்டத்தில் மழை எச்சரிக்கை காரணமாக, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் அதிகாரிகள் குழுவினர் நீர் நிலைகளில் பார்வையிட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதலே மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. தொடர்ந்து நேரம் செல்ல செல்ல மிதமான மழையில் தொடங்கி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது.

    காலை 7 மணி முதல் சுமார் 1 மணி நேரம் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாநகரில் பேட்டையில் தொடங்கி டவுன், சந்திப்பு, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, புதிய பஸ் நிலையம், பாளை பஸ் நிலையம், பாளை மார்க்கெட், சமாதான புரம், கே.டி.சி. நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    மாநகரை ஒட்டி உள்ள கிருஷ்ணாபுரம், சிவந்திபட்டி, கீழநத்தம், சீவலப்பேரி, தாழையூத்து, கங்கைகொண்டான், மூன்றடைப்பு சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    சாலைகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. காலையிலேயே மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். பாளையில் அதிகபட்சமாக 5 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மாவட்டத்தில் இன்று காலையில் இருந்து சேரன்மகாதேவி, களக்காடு, அம்பை சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்தது. திசையன்விளை, நாங்குநேரி பகுதியில் சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டமாக காட்சியளித்ததோடு, குளிர்ந்த காற்றும் வீசியது. தொடர் நீர்வரத்து அதிகரிப்பால் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், திருக்குறுங்குடி வனச்சரகத்திற்குட்பட்ட மலைநம்பி கோவிலுக்கு இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை பக்தர்கள் செல்லவும், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி எஸ்டேட் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. ஊத்தில் 28 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 23 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 18 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை ஒட்டப்பிடாரம், குளத்தூர், கீழதட்டப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக ஒட்டப்பிடாரத்தில் 25 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. தூத்துக்குடி மாநகர பகுதியில் அதிகாலை முதல் பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    முத்தையாபுரம், அண்ணாநகர், பழைய பஸ் நிலையம், முள்ளக்காடு, புதுக்கோட்டை, திரேஸ்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்களில் பாதிப்பு ஏற்பட்டதால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கினர். சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இப்போது தான் உப்பு உற்பத்தி மீண்ட நிலையில், இன்று பெய்த மழையால் உரிமையாளர்கள் மிகவும் சோகம் அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்திலும் இன்று காலை முதலே ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், சிவகிரி, கடையம், குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் அறுவடை பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் மழையால் வயல்களில் சாய்ந்துள்ளது.

    ×