என் மலர்tooltip icon

    ஈரோடு

    தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1500 தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

    அதன் பிறகு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வழக்கம் போல் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி தான் கீழ் பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் முதன் முறையாக 1-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.



    தமிழகத்தில் நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பி உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மலர்ச்சி ஏற்பட்டு உள்ளது. இது இந்த அரசுக்கு கிடைத்த பெரிய வெற்றி ஆகும்.

    தமிழகம் முழுவதும் உள்ள 1500 தலைமை ஆசிரியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும். இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது.

    ஆகவே விரைவில் 1500 தலைமை ஆசிரியர்கள் பணி நிரப்பப்படும்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டம் பற்றிய ஆய்வு பணி நடந்து வருகிறது. விரைவில் இது நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பாண்டியாறு, புன்னம் புழா திட்டம் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலம் வனப்பகுதி தாளவாடியில் பெய்யும் மழை தண்ணீர் எல்லாம் கர்நாடகத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

    இதை தடுத்து தாளவாடியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
    காவலாளியிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் வன சரகருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    ஈரோடு:

    கோபி வரப்பாளையம் அடுத்த எம்மாம்பூண்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் அந்த பகுதியில் உள்ள காவலாளியாக இருந்தார். இரவு பணி செய்ய வேண்டி இருந்ததால் அவர் பாதுகாப்பு பணிக்காக துப்பாக்கி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தார்.

    அவருக்கு துப்பாக்கி வழங்குவது தொடர்பாக விசாரிக்க சத்தியமங்கலம் வன அலுவலகத்துக்கு கடந்த 2-9-2005 அன்று உத்தரவு வந்தது.

    வன சரகராக இருந்த விஸ்வநாதன் இது பற்றி விசாரித்தார். அப்போது துப்பாக்கி வழங்க பாலசுப்பிரமணியத்துக்கு அனுமதி கடிதம் கொடுக்க விஸ்வநாதன் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

    ஆனால் லஞ்சம் கொடுக்க பாலசுப்பிரமணியத்துக்கு விருப்பம் இல்லை. எனவே அவர் இது தொடர்பாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். அதன்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் பாலசுப்பிரமணியம் சத்தியமங்கலம் வன அலுவலகத்துக்கு சென்றார்.

    அந்த பணத்தை வனசரகர் விஸ்வநாதனிடம் கொடுத்தார். அதை விஸ்வநாதன் பெற்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் விஸ்வ நாதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு ஈரோடு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மாஜிஸ்திரேட்டு மோகன் இன்று தீர்ப்பு கூறினார்.

    லஞ்சம் பெற்ற வழக்கில் வன சரகர் விஸ்வநாதனுக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், அரசு பணியை முறையாக செய்யாததால் 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு மோகன் தீர்ப்பு கூறினார்.

    இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.
    ஈரோடு மாநகர் பகுதியில் தொடர்ந்து நடந்துவரும் கொள்ளையால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் சமீபகாலமாக ரோட்டில் தனியாக நடந்து செல்லும் பெண்கள் வீடு முன்பு கோலம் போடும் பெண்கள் இவர்களை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.

    இதுதவிர பூட்டிக்கிடக்கும் வீட்டை உடைத்து பணத்தை திருடுவது பூட்டிக்கிடக்கும் கடைகள் மேல் கூரைகளை உடைத்து பணம் பொருட்களை திருடுவது என சமீப காலமாக ஈரோடு பகுதியில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.

    மக்கள் அதிகம் நடமாடும் உள்ள பகுதியில் மிகவும் துணிச்சலாக வந்து தங்கள் தங்களது கைவரிசையை காட்டி கொண்டு செல்கின்றனர் இதில் பெரும்பாலான கொள்ளைகளில் இன்னும் துப்புத் துலங்கவில்லை நேற்று கூட சூரம்பட்டி நால் ரோட்டில் உள்ள அடுத்தடுத்த இரண்டு கடைகளின் மேற்கூரையை பிரித்து ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்

    மேலும் அருகிலுள்ள மற்றொரு கடையிலும் கொள்ளையர்கள்புகுந்து கொள்ள அடிக்க முயன்றுள்ளனர் ஆனால் முடியவில்லை கொலை நடந்த இரண்டு கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை இதனால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த மாதத்திலும் இதே சூரம்பட்டி நால்ரோடு அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு தொடர்ந்து நடந்துவரும் கொள்ளையால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    போலீசார் ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது கொள்ளை சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். குறிப்பாக அடுக்கு மாடி குடியிருப்புகள் வணிக வளாகங்கள் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் ஆனால் பெரும்பாலானோர் அவ்வாறு செய்வதில்லை பெரிய பெரிய திருட்டு கொலை வழக்குகளில் சிசிடி கேமரா ஆதாரங்களை வைத்து பல்வேறு சமயங்களில் குற்றவாளியை பிடித்துள்ளோம் பொதுமக்களின் பயத்தைப் போக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வருகிறோம் பொதுமக்களும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    ஈரோடு சென்னிமலை ரோட்டில் கார் பழுது பார்க்கும் கடையில் பணம், கம்ப்யூட்டரை திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை ரோட்டில் ரெயில்வே டீசல் லோகோ ஷெட் எதிரே கார் பழுது பார்க்கும் நிறுவனம் உள்ளது.

    இங்கு டயர்களும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் கார் டயர் அலைன் மெண்ட்டும் இங்கு பார்க்கப்படுகிறது.

    இதன் உரிமையாளராக சசிகலா (வயது 31) என்பவர் உள்ளார். நேற்று இரவு வேலை முடிந்ததும் கடையை மூடி விட்டு சென்றனர்.

    இன்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தகர ஷீட் உடைக்கப்பட்டு இருந்தது. அதன் வழியாக யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.37 ஆயிரம் பணம், கார் டயர் அலைன் மெண்ட் சரி பார்க்கும் நவீன கம்ப்யூட்டர் ஆகியவை திருடப்பட்டிருந்தன.

    மேலும் 30 டயர்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அங்கு 3 கண்காணிப்பு கேமிராக்கள் இருந்தன. அந்த 3 கேமிராக்களையும், கேமிரா காட்சிகளை பதிவு செய்யும் மிஷினையும் திருடி சென்றுவிட்டனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

    கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    ஈரோட்டில் மாற்றுத்திறனாளியின் வீட்டுக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே காலனி பள்ளிவாசல் பின்புறத்தில் வசிப்பவர் சிவசங்கரன் (வயது 34). மாற்றுத்திறனாளி வாலிபர். இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் ரெயில்வேயில் பேரேஜ் மெக்கானிக் ஆக பணி புரிந்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை 1.30 மணி அளவில் அடையாளம் தெரியாத 2 மர்ம ஆசாமிகள் அங்கு வந்தனர். சிவசங்கரன் வீட்டு கதவை பலமாக தள்ளினர். இதில் கதவு திறந்தது. சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சிவசங்கரனுக்கு வீட்டுக்குள் 2 ஆசாமிகள் நுழைந்ததை கண்ட திடுக்கிட்டார்.

    பிறகு 2 ஆசாமிகளும் அவரை தாக்கினர். பிறகு அவரிடமிருந்து செல்போன் மற்றும் வீட்டில் இருந்த 8 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து ஓடி விட்டனர்.

    கொள்ளையர்களின் தாக்குதலில் நிலை குலைந்த சிவசங்கரன் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது பற்றிய புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
    பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்துவிடப்படும் நீரை வைத்து 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை மற்றும் காளிங்கராயன் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் உற்சாகம் அடைந்து பாசன பகுதியில் வேளாண் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்கள்.

    பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனப்பகுதியில் 25 ஆயிரத்து 500 ஏக்கரும், காளிங்கராயன் பாசனப் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரும் சாகுபடி பணிகள் நடந்து வருகிறது.

    நடப்பாண்டு மழைப் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 97 அடியை கடந்துள்ளது. பவானி ஆற்றில் இருந்து வினாடிக்கு 1,650 கன அடி வீதம் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் சாகுடி பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்கள்.

    இது பற்றி வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-

    நடப்பாண்டில் மாவட்ட அளவில் 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் பாசனப் பகுதியில் 5 ஆயிரம் ஹெக்டேர் நடவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

    இது தவிர வாழை, ஆயிரம் ஹெக்டேர், கரும்பு 500 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். கீழ் பவானி பாசனப் பகுதியில் மீதமுள்ள 14 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் நெல் சாகுபடியாகும்.

    இயந்திர முறை நெல் நடவால் நேரம், செலவு, வேலையாட்கள் குறைவு நன்மைகள் உள்ளன. சாதாரண நாற்றங்கால் முறையில் 30 நாட்களுக்கு பின் வயலில் நடவு பணி செய்ய வேண்டும். பாய் முறை நாற்றங்காலால் 15 நாளில் நடவு செய்யலாம்.

    இதன் மூலம் அறுவடை காலம் 15 நாட்கள் குறையும். 5 முதல் 10 சதவீத மகசூல் அதிகரிக்கும். சாதாரண நடவில் ஹெக்டேருக்கு 7 டன் மகசூல் கிடைத்தால், இயந்திர நடவில் கூடுதலாக 1 டன்னுக்கு மேல் மகசூல் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    சென்னிமலை அருகே போலி பதிவு எண்ணில் கிராவல் மண் கடத்திய லாரியை பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமி பறிமுதல் செய்தார்.
    சென்னிமலை:

    நேற்று முன் தினம் இரவு வெள்ளோடு அடுத்த புங்கம்பாடி பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் கொண்ட லாரியை நிறுத்தி பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமி விசாரணை செய்தார். இந்த லாரியை அரச்சலூரை சார்ந்த பழனிசாமி என்பவர் ஓட்டி வந்தார். சென்னிமலை பகுதியில் குவாரியில் இருந்து மண் எடுத்து வந்ததாகவும் மேட்டுக்கடை பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்வதாகவும் கூறினார்.

    மேலும் இந்த லாரியில் இரண்டு பதிவெண்கள் ஒட்டப்பட்டு இருந்தது கண்டு தாசில்தார் அதிர்ச்சி அடைந்தார். தாசில்தார் அலுவலகத்திற்கு லாரி கொண்டுவரப்பட்டது. கிராவல் மண்ணுக்கு அபராதம் விதிக்க கோட்டாச்சியருக்கு பரிந்துறை செய்த தாசில்தார் போலி பதிவெண் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட ரமணியிடம் புகார் தெரிவித்தார்.

    இதனடிப்படையில் ஆய்வு செய்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஒட்டப்பட்ட இரண்டு எண்களுமே போலியானது என்பதால் லாரி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யும்படி வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். லாரியில் உள்ள இரண்டு எண்களுமே போலி என்பதால் வண்டியில் உள்ள சேஸ் நம்பரை வைத்து தான் லாரி உரிமையாளரை அடையாளம் காணும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். #tamilnews
    கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக பாதுகாப்பு கருதி ஈரோடு மாவட்டத்தில் போலீசார் இரவு பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    ஈரோடு:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தொற்று நோய் காரணமாக உடல்நிலை திடீர் பின்னடைவும் பிறகு தீவிர சிகிச்சையால் சீரான நிலையையும் அடைந்து வருகிறார். இந்தநிலையில் தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்திலும் நேற்றுமுதல் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு நகரில் ரெயில்நிலையம், பஸ் நிலையம், மணிக்கூண்டு வீதி,கடைவீதி, கரூர் பைபாஸ் ரோடு (சோலார் கொல்லம்பாளையம், மூலப் பாளையம்) சூரம்பட்டி நால்ரோடு, வீரப்பன்சத்திரம், கருங்கல் பாளையம், காவேரி மேம்பாலம் உள்பட முக்கிய இடங்களில் போலீசார் இரவும்-பகலுமாக பாதுகாப்புபணியில் ஈடுட்டு வருகிறார்கள்.

    ஈரோடு பஸ்நிலையம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கூட்டமாக நின்று கொண்டு யாரும் பேசினால் கலைந்து போகும்படி சொல்கிறார்கள்.

    இதேபோல் கோபி பஸ்நிலையம், கடைவீதி, மார்க்கெட், சத்தியமங்கலம் பஸ்நிலையம், மைசூர் ரோடு, தினசரி அங்காடி, புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர்,கவுந்தப்பாடி, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, கொடுமுடி, சிவகிரி உள்பட அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நேற்று இரவு கருணாநிதி உடல் திடீர் பின்னடைவு என்ற செய்தி பரவியதும் ஈரோடு உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீர் என கடைகளும், ஓட்டல்களும் அடைக்கப்பட்டன. இதையொட்டி பரபரப்பு நிலவியது.
    பவானி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் மெக்கானிக் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பவானி:

    பவானி அம்மன் நகர் பழனிபுரம் 1-வது வீதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மகன்முருகேசன் (வயது 31) மோட்டார் மெக்கானிக்.

    நேற்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குரும்பநாயக்கன் பாளையம் விதை பண்ணை அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த அடிபட்டது.

    இதில் படுகாயம்அடைந்த முருகேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினர். விபத்தில் பலியான முருகேசன் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கருணாநிதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிசிச் பெற்று வருகிறார். இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் ஈரோடு மாவட்டத்தில் 2 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். #karunanidhi #dmk

    ஈரோடு:

    தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தி.மு.க தொண்டர்கள் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டி கொண்டிருக்கிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஆயிகாரன்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 47). தீவிர தி.மு.க. தொண்டர்.

    கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதிலிருந்தே இவர் சரியாக சாப்பிடாமல் இருந்தார். மேலும் சகநண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டு கொண்டே இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கிய ஜனார்த்தனன் இன்று எழுந்திருக்கவே இல்லை.

    அருகே சென்ற அவரை பார்த்தபோது மாரடைப்பு ஏற்பட்டு ஜனார்த்தனன் இறந்தது தெரியவந்தது.

    ஈரோடு கனிராவுத்தர் குளம் காந்தி நகர் முதல் வீதியை சேர்ந்தவர் கணேஷ் இவரது மனைவி ராஜேஸ்வரி (33). கூலி தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.

    இவர்களுக்கு நந்தினி, செம்பருத்தி என்ற 2 மகள்களும் குருமூர்த்தி என்ற ஒரு மகனும் உள்ளனர்.

    ராஜேஸ்வரி தி.மு.க. மகளிர் அணியில் உறுப்பினராக உள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது மிகுந்த பற்று கொண்டவர் கடந்த 2 நாட்களாக கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததை டி.வி.யில் பார்த்து ராஜேஸ்வரி மிகவும் வேதனையுடன் காணப்பட்டார்.

    நேற்று இரவு கருணாநிதி உடல்நிலை திடீர் பின்னடைவு என்ற செய்தியை கேட்டதும் மிகவும் உடைந்து போனார்.

    கலைஞர் ஐயா.. நம்மை விட்டு போய் விடுவாரோ. என சத்தம் போட்டபடி நேற்று இரவு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.  #karunanidhi #dmk

    கோபியில் தி.மு.க. கொடி கம்பத்தையும், பெயர் பலகையையும் சேதப்படுத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #DMK
    கோபி:

    கோபியில் சத்தி-ஈரோடு ரோட்டில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இதன் முன் தி.மு.க. சார்பில் தி.மு.க.தொழிலாளர் முன்னேற்ற சங்க கல்வெட்டும் கொடி கம்பமும் உள்ளது.

    இந்த கல்வெட்டை இரவு யாரோ சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அருகே உள்ள தி.மு.க. கொடி கம்பமும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. கொடி கம்பத்தை அடித்து தாக்கியதில் வளைந்து உள்ளது. அதில் உள்ள உதய சூரியன் சின்னமும் சேதப்படுத்தப்பட்டது. கொடியும் கிழிக்கப்பட்டது.

    இன்று காலை வந்து பார்த்தபோது தி.மு.க. தொழிற்சங்க பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    நேற்று நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமிகள் குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து தி.மு.க. தொழிற்சங்கத்தினர் கோபி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி கொடி கம்பத்தையும், பெயர் பலகையையும் தாக்கியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். #DMK
    ஈரோட்டில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் காவேரி ரோடு நேதாஜி நகரைச் சேர்ந்தவர் கவுதமன் (வயது 39). இவரது மனைவி சுமித்ரா (29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    கவுதமன் தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது இதை சுமித்ரா கண்டித்து வந்ததாக தெரிகிறது.

    கடந்த 18-ந் தேதி கவு தமன் வீட்டிற்கு மது குடித்து விட்டு வந்ததார். அப்போது சுமித்ரா தட்டி கேட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் மனவேதனை அடைந்த சுமித்ரா வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

    அவர்கள் சுமித்ராவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுமித்ரா நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×