என் மலர்
கடலூர்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பழைய கூடலூரை சேர்ந்தவர் முத்தமிழன் (வயது 19). இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் உடற் கல்வி இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் அண்ணாமலை நகரில் ஒரு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பல்கலைக்கழகத்துக்கு சென்று வந்தார். நாகை மாவட்டம் கதிராமங்கலம் நடுவெளி கிராமத்தை சேர்ந்த சுசித்ரா (19) என்பவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற் கல்விதுறையில் பி.பி.எஸ். பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அங்குள்ள பல்கலைக்கழக வளாகத்தில் தாமரை விடுதியில் தங்கி படித்து வந்தார்.
மாணவர் முத்தமிழனும், மாணவி சுசித்ராவும் உறவினர்கள். இருவரும் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் மாணவி சுசித்ரா திடீரென்று முத்தமிழனுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். அந்த பல்கலைக் கழகத்தில் படிக்கும் மற்றொரு மாணவருடன் பழகி வந்தார். இந்த விபரம் முத்தமிழனுக்கு தெரிய வந்ததும் மனவேதனை அடைந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்தமிழன் தனது சொந்த ஊருக்கு சென்றார். அப்போது அங்கு அவர் வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்தார். பின்னர் திடீரென்று அவர் விஷத்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் உயிர் பிழைத்தார்.
இந்த நிலையில் நேற்று காலை முத்தமிழன் தான் படிக்கும் பல்கலை கழகத்துக்கு வந்தார். மிகுந்த சோகத்துடன் இருந்தார். தனது நண்பர்கள் யாருடனும் பேசாமல் அமைதியாக காணப்பட்டார். மாலையில் வகுப்பு முடிந்ததும் முத்தமிழன் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தனத்துக்கு சென்றார். அங்கு சுசித்ரா விளையாட்டு பயிற்சியை முடித்து விட்டு வெளியே வந்தார்.
அப்போது முத்தமிழன், சுசித்ராவிடம் என்னுடன் ஏன் பேச மறுக்கிறாய்? வேறு ஒரு மாணவருடன் ஏன் பழகுகிறாய்? என்று கேட்டார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்பு அவர் திடீரென்று ஆவேசம் அடைந்து மாணவி சுசித்ராவின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினார். மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை திறந்து சுசித்ரா மீது வீசினார். இதில் மாணவியின் முகம், முதுகு, கை, உதடு ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. அவர் கூச்சல் போட்டு அலறினார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஓடி வந்து மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் மாணவி மீது ஆசிட் வீசிய முத்தமிழனை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதில் அவரும் படுகாயம் அடைந்தார்.
இந்த தகவல் அறிந்ததும் அண்ணாமலைநகர் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் இருந்து முத்தமிழனை மீட்டு ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவி சுசித்ராவுக்கும், பொதுமக்களால் தாக்கப்பட்ட மாணவன் முத்தமிழனுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிகிச்சை பெற்றுவரும் மாணவி சுசித்ரா, மாணவன் முத்தமிழன் ஆகியோரை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.
இந்த ஏரியின் மூலம் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு முக்கிய நீர் ஆதாரமாக வீராணம் ஏரி உள்ளது.
கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்டு 13-ந்தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணை வந்தடைந்ததும் அங்கிருந்து கொள்ளிடத்தின் வழியாக கீழணைக்கு ஆகஸ்டு 20-ந் தேதி தண்ணீர் வந்தடைந்தது.
கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்தது. அதன் பின்னர் சென்னைக்கு குடிநீருக்கு அனுப்பும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் கீழ்அணைக்கு வந்தது.
இதையடுத்து கீழ் அணையில் இருந்து நேற்று 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதில் 790 கனஅடி தண்ணீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று ஏரியின் நீர் மட்டம் 45.80 அடியாக இருந்தது. இன்று அது 46.62 அடியாக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவும் கூட்டப்பட்டுள்ளது. சென்னைக்கு நேற்று 48 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று 49 கனஅடி தண்ணீர் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தால் ஏரி இன்று அல்லது நாளை நிரம்பும். ஏரியில் தண்ணீர் நிரம்பிவிட்டால் சென்னைக்கு கூடுதலாக தண்ணீர் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது அழகுசமுத்திரம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது70) முந்திரி விவசாயி. அதே கிராமத்தில் உள்ள குளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் அசோகன் (54).
இவரது விவசாய நிலமும் சுப்பிரமணியன் விவசாய நிலமும் அருகருகே உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி நிலத்தகராறு ஏற்பட்டுவந்தது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை அசோகன் அவரது நிலத்தில் விவசாய வேலையில் ஈடுபட்டுகொண்டிருந்தார். அப்போது பிரச்சினைக்குரிய நிலத்தில் உள்ள வரப்பில் இருந்த கல்லை அவர் அகற்றினார். அந்த நேரத்தில் அங்கு வந்த சுப்பிரமணியன் கல்லை ஏன் அகற்றுகிறாய் என்று அசோகனிடம் தட்டிகேட்டார்.
இதனால் அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் அசோகனின் மனைவி செந்தமிழ் செல்வி (55), மகன் மருதுபாண்டி (24 ) ஆகியோரும் அங்கு வந்தனர். அவர்களும் சுப்பிரமணியனிடம் தகராறு செய்தனர். அப்போது ஆத்திரமடைந்த அசோகன் கையில் வைத்திருந்த கத்தியால் சுப்பிரமணியன் தலையில் வெட்டினார்.
மேலும் செந்தமிழ்செல்வியும், மருது பாண்டியும் உருட்டு கட்டையால் சுப்பிரமணியனை தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியன் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதை அறிந்ததும் அசோகனும் அவரது மனைவி மற்றும் மகன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
விவசாய நிலத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சுப்பிரமணியனை அங்கிருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவரது உடலை பரிசோதித்து பார்த்தபோது. அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் காடாம்புலியூர் போலீசாருக்கு தெரியவந்தது. உடனே பண்ருட்டி துணைபோலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் மலர்விழி, மற்றும் போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து செந்தமிழ்செல்வி அவரது மகன் மருதுபாண்டி ஆகியோரை இன்று காலை கைது செய்தனர். அசோகன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நிலத்தராறில் முந்திரி விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர் தாமஸ் நேற்று முன்தினம் தள்ளாடியபடியே வகுப்பறைக்கு பாடம் நடத்த சென்றார். இதைப்பார்த்த மாணவர்கள் அவர் மதுபோதையில் இருந்ததை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி பள்ளி முதல்வரிடம் புகார் செய்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்து போதையில் இருந்த ஆசிரியர் தாமசை அழைத்து சென்று அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.
ஆசிரியர் தினத்தன்று ஆசிரியரே மதுபோதையில் பள்ளிக்கூடத்துக்கு வந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை தருமாறு கடலூர் கல்வி மாவட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கடலூர் கல்வி மாவட்ட அதிகாரி சுந்தரமூர்த்தி அந்த பள்ளிக்கூடத்துக்கு சென்று விசாரணை நடத்தி முதன்மை கல்வி அதிகாரியிடம் அறிக்கையை சமர்ப்பித்தார்.
விசாரணையில் ஆசிரியர் தாமஸ் மதுபோதையில் வகுப்பறைக்கு வந்தது உறுதியானதை அடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய பள்ளி முதல்வருக்கு முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆசிரியர் தாமசை பணியிடை நீக்கம் செய்து பள்ளி முதல்வர் அருள்நாதன் நடவடிக்கை மேற்கொண்டார்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 19 வயது இளம்பெண் பெரம்பலூரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பேஸ்புக்கில் அடிக்கடி கருத்துக்களை பரிமாறி வந்தார். இதன் விளைவாக மாணவிக்கும் தர்மபுரி அருகே உள்ள மணலூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (25) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது.
தினசரி இவர்கள் அடிக்கடி தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். கடந்த ஓராண்டாக பேஸ்புக்கில் பழகி வந்தனர். 10-ம் வகுப்பு வரை படித்து உள்ள பாலமுருகன் பேஸ்புக்கில் மாணவியை கவரும் வகையில் வார்த்தை ஜாலங்களை பதிவு செய்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலமுருகன் மாணவியிடம் மணலூர் வருமாறு காதல் மொழியில் பேசினார். இதில் மயங்கிய மாணவி பாலமுருகனை தேடி மணலூர் சென்றார். ஆனால் அங்கு அவர் மாணவியை பாலியல் சீண்டல் செயலில் ஈடுபட்டார். அதிர்ச்சி அடைந்த மாணவி பாலமுருகனை எச்சரித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
உடனே மாணவி அவரது பிடியில் இருந்து நழுவி திட்டக்குடி வந்து விட்டார். அதன்பின்னர் பாலமுருகனிடம் உள்ள தொடர்பை துண்டித்து விட்டார். அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் மாணவியை எவ்வளவோ தொடர்பு கொண்டும் பேச முடியவில்லை.
எனவே அவர் மாணவியிடம் எடுத்துக்கொண்ட போட்டோக்களை பேஸ்புக்கில் வெளியிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி பாலமுருகனை செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்தார். ஆனால் அவர் என்னை திருமணம் செய்யவில்லை என்றால் கையில் இருக்கும் போட்டோக்களை பேஸ்புக்கில் மீண்டும் வெளியிடுவேன் என்று மிரட்டினார்.
ஆனால் மாணவி உன் போக்கு சரி இல்லை. எனவே நான் உன்னை திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று கூறி போனை துண்டித்தார். இதில் ஆத்திரம் கொண்ட பாலமுருகன் மேலும் மாணவியின் போட்டோக்களை பேஸ்புக்கில் பதிவுசெய்தார்.
பதறி போன அந்த மாணவி நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார். உடனடியாக அவர்கள் திட்டக்குடி போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீப்ரியா வாலிபர் பாலமுருகன் மீது சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
கைதான பாலமுருகன் திட்டக்குடி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.
இந்த ஏரியின் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதிலும் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகித்துள்ளது.
கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. ஆரம்பத்தில் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.
ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கியதும் சென்னைக்கு அனுப்பும் தண்ணீர் அளவும் குறைக்கப்பட்டது. 28 கன அடி தண்ணீர் மட்டுமே அனுப்பப்பட்டது.
கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் மேட்டூர் அணை வந்தடைந்தது. அங்கிருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணை வந்தடைந்ததும் அங்கிருந்து கொள்ளிடத்தின் வழியாக கீழணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கீழணையில் இருந்து ஆரம்பத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. இதனால் வீராணம் ஏரி நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது. கடந்த வாரம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.44 அடியாக உயர்ந்தது.
இந்த நிலையில் கீழணையில் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று நிறுத்தப்பட்டது. வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை.
நேற்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.75 அடியாக இருந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி 46.72 அடியாக குறைந்தது. ஆனாலும் சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. சென்னை நகரின் குடிநீருக்காக நேற்று வினாடிக்கு 44 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. இன்று காலை அது 46 கனஅடி தண்ணீராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, கீழணையில் தற்போது தண்ணீர் இல்லை. எனவே அங்கிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. கல்லணையில் இருந்து கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டால்தான் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும். மேலும் வீராணம் ஏரியை சுற்றி அதிக அளவு மழை பெய்தால் ஏரியின் நீர்மட்டம் கூடும். ஏரி முழு கொள்ளளவை எட்டினால் சென்னைக்கு கூடுதலாக தண்ணீர் அனுப்பப்படும் என்றார்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கொடிக்கால்தெருவை சேர்ந்த முத்துக்கருப்பன். இவரது மனைவி சாந்தி (வயது 51). இவர் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மேலராதாம்பூரில் அரசு தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த பள்ளியில் ரூ.8 லட்சம் மதிப்பில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டிட பணி பாதியில் நிற்கிறது. கட்டிடம் கட்ட பணம் இல்லாததால் சாந்தி தனது சொந்த பணத்தை வங்கியில் எடுக்க முடிவு செய்தார். நேற்று மதியம் அவர் காட்டுமன்னார்கோவில் சென்றார்.
அங்கு ஒரு வங்கியில் ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்து பையில் வைத்திருந்தார். ஸ்ரீமுஷ்ணம் செல்வதற்காக பஸ்நிலையத்தில் காத்திருந்தார். 3 மணி நேரம் ஆகியும் பஸ் வரவில்லை. அதன்பின்பு ஒரு பஸ் வந்தது. அதில் அங்கு நின்ற பயணிகள் அனைவரும் முண்டியடித்து பஸ்சில் ஏறினர். சாந்தியும் கூட்ட நெரிசலில் பஸ்சில் ஏறினார்.
பின்பு டிக்கெட் எடுப்பதற்காக சாந்தி பையை பார்த்தார். அப்போது பை திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே இருந்த ரூ.50 ஆயிரமும், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்லும் திருட்டுபோய் இருந்தது. உடனே அவர் கூச்சல் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம்கேட்டு டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
சாந்தி தன் பையில் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன் திருடுபோய் விட்டது என்றார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ அபேஸ் செய்துவிட்டது தெரியவந்தது.
பின்பு சாந்தி பஸ்சில் இருந்து இறங்கி காட்டுமன்னார் கோவில் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பஸ்சில் தலைமை ஆசிரியையிடம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதனை தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு ஒருவர் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி பாடிய விழிப்புணர்வு பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிதம்பரம் அருகே உள்ள மருதூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றுபவர் பொன் சிவபெருமாள். இவர் சாலை விதிகளை மதிப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு பாடலை பாடி உள்ளார்.
சாலை விதிகளை மதித்து தான் ஓட்டு, சாவே இல்லாமல் வாழ்ந்து தான் காட்டு, செல்போனில் பேசிக்கிட்டே வாகனத்தை நீ ஓட்டாதே...ஓடும் பேருந்தில் ஓடிப்போய் ஏறாதே, நேரம் சரியில்லைனா 108-ல் போவ டா, ஓசியில் வண்டியை வாங்கி ஓவர் ஸ்பீடா ஓட்டாதீங்க... என்ற விழிப்புணர்வு வரிகள் அடங்கிய அவரது பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு வாகன ஓட்டிகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கடலூர்:
கடலூர் மந்தராக்குப்பம் முத்தையா நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 55) இவர் அரசு பஸ்சில் கண்டக்ராக பணியாற்றி வந்தார். நேற்று விருத்தாசலத்திலிருந்து கடலூர் செல்லும் அரசு பஸ்சில் கண்டக்ராக சென்றார். பஸ்சை பண்ருட்டி அருகே உள்ள காணாங்குப்பத்தை சாரங்கபாணி என்பவர் ஓட்டி சென்றார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
அப்போது திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் பழனிவேல் என்பவர் பஸ்சில் ஏறினார்.
அவர் சாதாரண உடை அணிந்திருந்தார். அவரிடம் கோபிநாத் டிக்கெட் எடுக்கும் படி கேட்டுக் கொண்டார்.
அப்போது அவர் தான் போலீஸ்காரர் என்று கூறினார். உடனே கோபிநாத் உங்களது அடையாள அட்டையை காட்டுங்கள் என்றார். இதை தொடர்ந்து போலீஸ்காரர் பழனிவேலுக்கும் கண்டக்டர் கோபிநாத்துக்கும் இடையே ஓடும்பஸ்சில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஊமங்கலம் அருகே பஸ் வந்தபோது திடீரென்று கோபிநாத் நெஞ்சை பிடித்துக்கொண்டி மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து விட்டார்.
அதனை தொடர்ந்த கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீகாரர் பழனிவேலை பஸ்சில் இருந்த பொதுமக்கள் பிடித்து மந்தாரக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இறந்து போன கோபிநாத்தின் உடலை பிரேதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நேற்று இரவு பிரேத பரிசோதனை முடிந்ததும் கோபிநாத்தின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே டிக்கெட் எடுக்காமல் கண்டக்டரிடம் வாக்குவாத்ததில் ஈடுபட்ட போலீஸ்காரர் பழனிவேலை கைது செய்ய கோரி இன்று மதியம் 12 மணியளவில் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ சங்கத்தை சேர்ந்த பாஸ்கர் தலைமையில் நிர்வாகிகள் கருப்பு கொடியுடன் ஏராளமானோர் திரண்டனர்.
பின்பு அவர்கள் பணிமனை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டக்டர் சாவுக்கு காரணமான போலீஸ்காரர் பழனிவேலை கைது செய்ய கோரி கோஷமிட்டனர்.
இந்த மறியல் பேராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திவருகின்றனர்.
இறந்துபோன கோபிநாத் பணிஓய்வு பெற இன்னும் 8 மாதங்களே உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
கோபிநாத்துக்கு கலைவாணி என்ற மனைவியும் 2 மகன் 1 மகள் உள்ளனர்.
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வீரமுடையான்நத்தம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதி. அவரது மனைவி ரேவதி (வயது 33).
கடந்த சில நாட்களாக ரேவதியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த ஜோதி நேராக தனது மாமனார் கண்ணனிடம் சென்று உங்கள் மகள் நடத்தை சரி இல்லை. அவளுக்கு புத்திமதி சொல்லுங்கள் என்று கூறி ஊருக்கு வந்து விட்டார்.
அதிர்ச்சி அடைந்த கண்ணன் தனது மகள் ஜோதியை வீரமுடையான் நத்தத்தில் இருந்து வெளியூருக்கு காரில் அழைத்து சென்றார். பின்னர் வீரமுடையான் நத்தத்துக்கு காரில் திரும்பினார். காரில் ரேவதி பிணமாக கிடந்தார். இதனை பார்த்த கிராம மக்களிடம் எனது மகள் திடீர் என இறந்து விட்டாள் என்று கூறினார்.
சந்தேகம் அடைந்த கிராம மக்கள் சேத்தியாதோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று ரேவதியின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின்னர் ரேவதியின் தந்தை கண்ணனிடம் போலீசார் கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது மகளை அடித்து கொன்றதை கண்ணன் ஒப்புக்கொண்டார்.
ரேவதிக்கும், அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் தினேஷ்குமாருக்கும் பழக்கம் இருந்து உள்ளது. இதனை அறிந்ததும் தனது மகளை காரில் அழைத்து சென்று கண்ணன் கண்டித்து உள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஆத்திரம் அடைந்த கண்ணன் கைகளால் ரேவதியை அடித்து உள்ளார். இதில் அவர் இறந்து போனார்.
மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து கண்ணனை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.கொத்தங்குடியை சேர்ந்தவர் ஜெயபால் மகன் நவீன்ராஜ். இவர் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கீழ்புவனகிரி லிங்கபைரவர் நகரை சேர்ந்த சங்கீதபிரியா(வயது 22) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின்னர் நவீன்ராஜ் தனது மனைவி மற்றும் தந்தை ஜெயபால், தாய் சகிலா, தங்கை வினோதினி, தம்பி கேசவராஜ் ஆகியோருடன் மகாராஷ்டிர மாநிலத்திற்கு சென்றார். அங்கு அனைவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் சங்கீதபிரியா கர்ப்பமானார். இவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த வாரம் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் மகாராஷ்டிரத்தில் இருந்து சி.கொத்தங்குடிக்கு வந்தார்.
அப்போது நவீன்ராஜ் தனது மனைவியிடம், உன் பெற்றோர் வீட்டுக்கு சென்று தனக்கு கார் வாங்கித்தருமாறு கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த நவீன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கருக்கலைப்புக்கான மாத்திரை வாங்கி சங்கீதபிரியாவுக்கு கொடுத்தனர். அதை அவர் சாப்பிட மறுத்துள்ளார். இருப்பினும் வலுக்கட்டாயமாக அந்த மாத்திரையை அவருக்கு கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட சில மணி நேரங்களில் அவரது வயிற்றில் வளர்ந்த கரு கலைந்து விட்டது.
இதையடுத்து உன்னுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்று நவீன்ராஜ் கூறி, சங்கீதபிரியாவை கீழ்புவனகிரி லிங்கபைரவர் நகரில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து சங்கீதபிரியா புவனகிரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் நவீன்ராஜ், அவருடைய தந்தை ஜெயபால், தாய் சகிலா, தங்கை வினோதினி, தம்பி கேசவராஜ் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






