என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான பாலமுருகன்
    X
    கைதான பாலமுருகன்

    திருமணத்துக்கு மறுத்ததால் கல்லூரி மாணவி போட்டோக்களை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன்

    திட்டக்குடியில் திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த காதலன் கல்லூரி மாணவியுடன் எடுத்த போட்டோக்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 19 வயது இளம்பெண் பெரம்பலூரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பேஸ்புக்கில் அடிக்கடி கருத்துக்களை பரிமாறி வந்தார். இதன் விளைவாக மாணவிக்கும் தர்மபுரி அருகே உள்ள மணலூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (25) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது.

    தினசரி இவர்கள் அடிக்கடி தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். கடந்த ஓராண்டாக பேஸ்புக்கில் பழகி வந்தனர். 10-ம் வகுப்பு வரை படித்து உள்ள பாலமுருகன் பேஸ்புக்கில் மாணவியை கவரும் வகையில் வார்த்தை ஜாலங்களை பதிவு செய்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலமுருகன் மாணவியிடம் மணலூர் வருமாறு காதல் மொழியில் பேசினார். இதில் மயங்கிய மாணவி பாலமுருகனை தேடி மணலூர் சென்றார். ஆனால் அங்கு அவர் மாணவியை பாலியல் சீண்டல் செயலில் ஈடுபட்டார். அதிர்ச்சி அடைந்த மாணவி பாலமுருகனை எச்சரித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    உடனே மாணவி அவரது பிடியில் இருந்து நழுவி திட்டக்குடி வந்து விட்டார். அதன்பின்னர் பாலமுருகனிடம் உள்ள தொடர்பை துண்டித்து விட்டார். அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் மாணவியை எவ்வளவோ தொடர்பு கொண்டும் பேச முடியவில்லை.

    எனவே அவர் மாணவியிடம் எடுத்துக்கொண்ட போட்டோக்களை பேஸ்புக்கில் வெளியிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி பாலமுருகனை செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்தார். ஆனால் அவர் என்னை திருமணம் செய்யவில்லை என்றால் கையில் இருக்கும் போட்டோக்களை பேஸ்புக்கில் மீண்டும் வெளியிடுவேன் என்று மிரட்டினார்.

    ஆனால் மாணவி உன் போக்கு சரி இல்லை. எனவே நான் உன்னை திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று கூறி போனை துண்டித்தார். இதில் ஆத்திரம் கொண்ட பாலமுருகன் மேலும் மாணவியின் போட்டோக்களை பேஸ்புக்கில் பதிவுசெய்தார்.

    பதறி போன அந்த மாணவி நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார். உடனடியாக அவர்கள் திட்டக்குடி போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீப்ரியா வாலிபர் பாலமுருகன் மீது சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    கைதான பாலமுருகன் திட்டக்குடி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

    Next Story
    ×