என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மீன் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.
கோவிலுக்கு சென்றபோது நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள், லாரி ஓட்டுநர் பலியாகி உள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
மத்திய அரசின் பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டம் மூலம் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணையாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.6 ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோர் பணம் பெற்று முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகளவு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி மாவட்ட கலெக்டர் சந்திரசேகர்சாகமூரி தலைமையில் வேளாண் குழுவினர் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.
விசாரணையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 31-ந்தேதி வரை மாவட்டத்தில் 80 ஆயிரத்து 752 பேர் கிசான் நிதி உதவி திட்டத்தில் சேர்ந்தனர். இத்திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்களும் சேர்ந்து உதவித்தொகை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து நடந்த ஆய்வில் 37 ஆயிரம் பேர் விவசாயிகள் அல்லாதவர்கள் என்று தெரிந்தது. இதைத்தொடர்ந்து அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும் அவர்களை இந்த திட்டத்தில் சேர்த்த அட்மாதிட்ட ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது தவிர பணியில் திறமையில்லாத மேலும் 10 ஒப்பந்த ஊழியர்களையும் கலெக்டர் பணி நீக்கம் செய்தார்.
இதற்கிடையில் விவசாயிகள் அல்லாதவர்களிடம் இருந்து முதல் கட்டமாக ரூ.4 கோடியே 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பறிமுதல் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக கடலூர் வேளாண்மை துறை இணை இயக்குனர் முருகன் கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த திட்டத்தில் முறைகேடு தொடர்பாக கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் இறங்கினர்.
அப்போது விருத்தாசலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தை சேர்ந்த மார்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்க தலைவர் ஆராமுதன், மருதுபாண்டியன், அவரது மனைவி வெண்ணிலா, அரங்கநாதன், மனோகரன், அருள்குமார், ராஜசேகர் உள்பட 8 பேரை பிடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடலூர் அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இவர்கள் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்வதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்:
கடலூரில் புதிதாக 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடந்தது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியை ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிற மாநிலங்கள், பிறநாடுகளை போல் இல்லாமல் கொரோனா வைரஸ் நம்நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம்தான் முன்மாதிரியாக உள்ளது.
பல்வேறு வளர்ந்த நாடுகளிலேயே கொரோனா தொற்று முடிவுகள் தெரிய 7 நாட்கள் ஆகும். ஆனால், தமிழகத்தில் 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்குள் முடிவுகள் தெரிய வருகிறது.
கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர். கொரோனா தொற்றை தமிழகத்தில் சமூக பரவலாக அறிவிக்க வில்லை.
தளர்வுகள் அதிகம் அறிவிக்கப்பட்டாலும் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை தொடர வேண்டும். அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கும் முறை அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் கொரோனா மருந்து தட்டுப்பாடு கிடையாது.
கொரோனாவை தடுப்பதற்காக லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் இருந்து தமிழகத்துக்கு 300 தடுப்பூசி மருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து இன்னும் 2 நாட்களில் போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் ஆரோக்கியமாக உள்ள தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






