என் மலர்tooltip icon

    சென்னை

    • அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் எம்.ஜி.ஆர். கனவு நிறைவேறும்.
    • பிரதமரின் கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் மேடையேற்றப்பட உள்ளனர்.

    சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

    எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளான இன்று அவரது திருவுருவ சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் எம்.ஜி.ஆர். கனவு நிறைவேறும்.

    * பிரதமர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு எனக்கு அழைப்பில்லை.

    * பிரதமரின் கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் மேடையேற்றப்பட உள்ளனர்.

    * யாருடன் கூட்டணி என்பது பற்றி ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்.

    * அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு குறித்து வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.

    * எந்த காலத்திலும் தனிக்கட்சி தொடங்கப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 150நாட்களாக உயர்த்தப்படும்.
    • 5 லட்சம் மகளிருக்கு ரூ.25,000 மானியத்தில் அம்மா இரு சக்கர வாகன திட்டம்.

    சென்னை:

    தமிழகத்தில் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெறுவது வழக்கம்.

    அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன் கூட்டியே முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அதிரடியாக வெளியிட்டார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் இன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி திடீரென நிருபர்களை அழைத்து சட்டசபை தேர்தல் தொடர்பான வாக்குறுதி பற்றி பேட்டியளித்தார்.

    எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய அம்சமாக ஒவ்வொரு மாதமும் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும் இந்த தொகை குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட 5 தேர்தல் வாக்குறுதிகள் விவரம் வருமாறு:-

    தமிழ்நாட்டில் 17-வது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அ.தி.மு.க.வின் சார்பில் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்படுகிறது.

    1. மகளிர் நலன் : (குல விளக்குத் திட்டம்)-சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

    2. ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்: நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    3. அனைவருக்கும் வீடு 'அம்மா இல்லம் திட்டம்' மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப்பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி 'அம்மா இல்லம் திட்டம்' மூலம் விலையில்லாமல் வழங்கப்படும்.

    அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

    4. 100 நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.

    5. அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம்: மகளிருக்கு ரூ. 25 ஆயிரம் மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக...
    • பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில்...

    சென்னை :

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த தினத்தையொட்டி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழக மக்களின் நெஞ்சங்களில்

    பொன்மனச் செம்மலாக,

    ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக,

    பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என கூறியுள்ளார். 



    • எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
    • தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது.

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது.

    தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனையானது.
    • தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,230-க்கும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனையானது.

    தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 310 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    16-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840

    15-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,320

    14-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

    13-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,360

    12-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,960

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    16-1-2026- ஒரு கிராம் ரூ.306

    15-1-2026- ஒரு கிராம் ரூ.310

    14-1-2026- ஒரு கிராம் ரூ.307

    13-1-2026- ஒரு கிராம் ரூ.292

    12-1-2026- ஒரு கிராம் ரூ.287

    • தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்த ஆயத்தக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.
    • காங்கிரசிற்கு சாதகமான தொகுதிகளுடன் மாநில நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளனர்.

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியின் பிரதான கட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், நடிகர் விஜய் த.வெ.க. என்னும் புதிய கட்சியை தொடங்கியது முதல் காங்கிரஸ் கட்சிக்குள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடங்களில் போட்டி என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இதற்கிடையே ராகுல்காந்தியின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுனர் மற்றும் தரவு பகுப்பாய்வு துறை தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி அவ்வப்போது நடிகர் விஜய்யை சந்தித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி தலைமையில் ஜனநாயகன் பொங்கல் விழா கொண்டாடி தி.மு.க. கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக இடங்களில் போட்டி கோரிக்கையை மேலும் வலுப்படுத்தி உள்ளார்.

    இந்தநிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்த ஆயத்தக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.

    அகில இந்திய காங்கிரஸ் தலைமையகமான டெல்லி, இந்திரா பவனில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்த ஆயத்தக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழகத்தை சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் துணை அமைப்புகளின் தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தியை சந்திக்க உள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்தால் கூடுதல் சீட் கேட்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது. காங்கிரசிற்கு சாதகமான தொகுதிகளுடன் மாநில நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளனர்.

    ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் சென்னையில் 19-ந்தேதி காங்கிரஸ் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இன்று எடுக்கப்படும் முடிவு செயற்குழுவில் தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

    செயற்குழுவிற்கு பின்னர் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை மறுநாள் காங்கிரஸ் வெளியிடுகிறது. 2029 பாராளுமன்ற தேர்தலையும் மனதில் வைத்து கூட்டணி முடிவை எடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    • தற்போது உறுப்பினர்கள் பணம் பெற கட்டாயமாக கோரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.
    • ஆண்டுதோறும் 5 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படுகின்றன.

    சென்னை:

    வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், தற்போது தங்களது கணக்கில் உள்ள பணத்தை வங்கி மூலம் பெறுகின்றனர். இந்தநிலையில் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் தங்களுடைய தொகையை 'யு.பி.ஐ.' மூலம் நேரடியாக வங்கிக்கணக்கில் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளது.

    இதற்கான பணிகளை தொழிலாளர் அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுமார் 8 கோடி வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் பயன் அடைவார்கள். தற்போது வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் பணத்தை பெற ஆன்லைன் விண்ணப்பம் தாக்கல் செய்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ள நிலையில், அந்த நடைமுறை தேவையற்றதாக ஆகிறது.

    புதிய முறைப்படி, வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், கணக்கில் இருந்து பெற தகுதியான தொகையை உறுப்பினர்கள் தங்களது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட 'யு.பி.ஐ.' மூலம் நேரடியாக மாற்றிக்கொள்ள முடியும். பாதுகாப்பை உறுதி செய்ய, 'யு.பி.ஐ.' 'பின்' பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இந்த பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்ட பிறகு, அதை டிஜிட்டல் கட்டணமாகவோ, ஏ.டி.எம். மூலம் பணமாகவோ எடுத்துக்கொள்ள முடியும்.

    இந்த திட்டத்தை சீராக செயல்படுத்த, வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தங்களது மென்பொருள் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து வருகிறது.

    தற்போது உறுப்பினர்கள் பணம் பெற கட்டாயமாக கோரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். ஆண்டுதோறும் 5 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படுகின்றன. இந்த நடைமுறை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துக்கு கூடுதல் நிர்வாக சுமையை ஏற்படுத்தி வருகிறது. இதனை தவிர்க்கவே, நேரடி பணப்பரிமாற்ற முறை உருவாக்கப்பட்டு வருகிறது.

    இந்த புதிய மாற்றம், வருங்கால உறுப்பினர்களின் வாழ்க்கை எளிமையாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்கிகளுக்கு இணையான சேவைகளை வழங்கும் அமைப்பாக வருங்கால வைப்பு நிதியை மேம்படுத்துவதற்கான முக்கிய பணியாக இந்த 'யு.பி.ஐ.' மூலம் நேரடி பணம் பெறும் திட்டமாகும் என்றார். 

    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.

    இதனிடையே இன்று முதல் 20-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கரூர், கோவை, நீலகிரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பொங்கல் பரிசுத்தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு, ரொக்கப்பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது.
    • பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக டோக்கன்கள் முறையாக வினியோகம் செய்யப்பட்டு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.

    பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், ரொக்கப்பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 8-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

    பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக டோக்கன்கள் முறையாக வினியோகம் செய்யப்பட்டு அதன்படி பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது. இந்தநிலையில், பொங்கல் பண்டிகை முடிந்தபோதும் சுமார் 90 சதவீத ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசுத்தொகை ரூ.3 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.

    எனவே, விடுபட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணமும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றும் விடுபட்டவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அடுத்த அறிவிப்பு வரும் வரை பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடரும் என்றும் ரேஷன்கடை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கண்டெடுத்த மக்கள் திலகம்
    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் அமைத்திட சூளுரைப்போம்!

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த தினத்தையொட்டி அ.தி.மு.க. தலைமை கழகம் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி,

    மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்

    என்றும் எங்கள் வாத்தியார் MGR

    அவர்களின் பிறந்தநாள்!

    தீயசக்தியின் பிடியில் இருந்து மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க,

    அ.தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கண்டெடுத்த மக்கள் திலகம்,

    திரை ஆளுமையாக தத்துவங்களையும்,

    முதல்வராக மக்கள் நலத் திட்டங்களையும்

    அள்ளித் தந்த பொன்மனச் செம்மல்,

    இன்றும், என்றும், நம் இதயதெய்வமாக நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் நம் புரட்சித் தலைவர் அவர்களின் பிறந்தநாளில்,

    புரட்சித் தலைவர் அவர்கள் கூறிய மக்களாட்சியை, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் அமைத்திட சூளுரைப்போம்!

    வாழ்க புரட்சித்தலைவர் நாமம்!

    வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்! என்று கூறப்பட்டுள்ளது. 



    • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் சென்னை வந்துள்ளார்.
    • நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார் சச்சின் பைலட்.

    சென்னை:

    காங்கிரஸ் கட்சித் தலைவரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவருமான சச்சின் பைலட் நேற்று சென்னை வந்தார். அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சச்சின் பைலட் கூறியதாவது:-

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பலம் வாய்ந்ததாக உள்ளது.

    பாரம்பரியமாக தமிழகத்தில் காங்கிரசுக்கு தனி வாக்கு சதவீதம் உள்ளது.

    காங்கிரஸ் கட்சி எப்போதும் தமிழ்நாடு மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறது.

    தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பல முயற்சிகளைச் செய்தாலும் ஒருபோதும் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது.

    பா.ஜ.க.வை எதிர்க்க எப்போதும் கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் ஒருங்கிணைந்து செயல்படும்.

    என்ன நடந்தாலும் வருங்காலத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரக்கூடாது.

    நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.

    தமிழ்நாடு சட்டசபை தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

    • மனமகிழ் மன்றங்கள் மூலம் 14ம் தேதி ரூ.33.16 கோடிக்கு விற்பனை.
    • மனமகிழ் மன்றங்கள் மூலம் 15ம் தேதி ரூ.49.43 கோடிக்கும் மது விற்பனை.

    தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் மட்டும் ரூ. 518 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

    டாஸ்மாக் மூலம் 14ம் தேதி ரூ.184.05 கோடிக்கும், 15ம் தேதி ரூ.251.23 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

    மனமகிழ் மன்றங்கள் மூலம் 14ம் தேதி ரூ.33.16 கோடிக்கும், 15ம் தேதி ரூ.49.43 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

    சென்னை மண்டல டாஸ்மாக் கடைகளில் மட்டும் ரூ.98 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

    கடந்த பொங்கல் விடுமுறையின்போது 4 நாளில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையான நிலையில் இந்தாண்டு 2 நாளிலே ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×