என் மலர்tooltip icon

    சென்னை

    பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

    2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

    சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    இதில், பொன்னியின் செல்வன்-1 படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், விருது அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    பொன்னியின் செல்வன் -1 படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு திரைப்பட விருது பெறுவதில் பெருமை கொள்கிறேன்.

    இந்த அங்கீகாரம் அளித்த தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி. விருது பெறும் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.600 குறைந்து ரூ.16,200-க்கு விற்பனை செய்யப்பட்டனது.

    தங்கம், வெள்ளி விலை தினமும் புதிய உச்சம் என்ற பாணியை கையில் எடுத்துவிட்டது. விலை உயர்ந்தாலே உச்சம் என்ற போக்கிலேயே 'கிடுகிடு'வென அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.

    அந்த வகையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.5,200 அதிகரித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து காணப்பட்டது.

    நேற்றும் தங்கம் கிராமுக்கு ரூ.1,190-ம், சவரனுக்கு ரூ.9 ஆயிரத்து 520-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்கப்பட்டது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்த நிலையில் சவரன் ரூ.1,26,000-க்கு விற்பனையாகிறது.

    சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,800 குறைந்து ரூ.1,29,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.600 குறைந்து ரூ.16,200-க்கு விற்பனை செய்யப்பட்டனது.

    சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,800 குறைந்த நிலையில் தற்போது மேலும் ரூ.2,800 குறைந்துள்ளது.

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்க ரூ.950 குறைந்த நிலையில் ரூ.15,850க்கு விற்பனையாகிறது.

    தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை காலை மற்றும் மாலை என இருவேளையும் தலா ரூ.10,000 ஒரு கிலோ ரூ.405 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

    • 2011-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து அந்த கட்சி தோல்வியையே தழுவி வந்துள்ளது.
    • வருகிற சட்டமன்றத் தேர்தல் அந்த கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும்.

    சென்னை:

    தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக தே.மு.தி.க. தீவிரமாக தயாராகி வருகிறது.

    கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த் அடுத்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலேயே களமிறங்கினார்.

    இந்த தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. 8.4 சதவீத வாக்குகளை பெற்றது. முதல் தேர்தலிலேயே விஜயகாந்த் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க. சாதித்து காட்டியது. அந்தக் கட்சியின் வாக்கு சதவீதம் பாராளுமன்ற தேர்தலில் 10 சதவீதமாக கூடியது.

    இப்படி 2 தேர்தல்களில் பெரிய அளவில் வாக்குகளைப் பெற்ற தே.மு.தி.க. 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. இந்தத் தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. 29 இடங்களில் வெற்றி பெற்றது. தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் அப்போது 7.9 சதவீதமாக இருந்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் அமர்ந்தார்.

    இப்படி கட்சியை தொடங்கிய பிறகு தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் கவனம் ஈர்த்த தே.மு.தி.க. இதன் பின்னர் நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் வெற்றி பெறவில்லை. 2011-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து அந்த கட்சி தோல்வியையே தழுவி வந்துள்ளது.

    2016-ம் ஆண்டு தேர்தலில் அமைக்கப்பட்ட மக்கள் நல கூட்டணி தே.மு.தி.க.வுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

    அந்த தேர்தலில் விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை களமிறங்கின. 103 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அந்தக் கட்சியின் வாக்கு சதவீதம் 2.4 ஆக குறைந்தது.

    இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் நடத்தப்பட்ட கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதன் காரணமாக டி.டி.வி. தினகரனுடன் கூட்டணி அமைத்து தே.மு.தி.க. தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் மொத்தம் 60 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. வாக்கு சதவீதம் 0.43 ஆக அடியோடு சரிந்தது.

    இப்படி தமிழக தேர்தல் களத்தில் தே.மு.தி.க. எப்படி எழுச்சி பெற்றதோ அதே போன்று வீழ்ச்சியையும் சந்தித்திருக்கிறது.

    இது போன்ற சூழலில் தான் வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தே.மு.தி.க. தயாராகி வருகிறது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அந்தக் கட்சிக்கு மீண்டும் தோல்வியே பரிசாக கிடைத்தது. மேல் சபை எம்.பி. பதவியை தருவதாக அ.தி.மு.க. உறுதி அளித்திருந்த நிலையில் அதனை அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் அ.தி.மு.க. மீது தே.மு.தி.க. கடும் கோபத்திலேயே உள்ளது.

    இது போன்ற சூழலில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தே.மு.தி.க.வுக்கு பெரும் சவாலாக மாறி இருக்கிறது. எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று இன்னும் முடிவெடுக்காத அந்த கட்சி தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

    வருகிற சட்டமன்றத் தேர்தல் அந்த கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். இதனை கருத்தில் கொண்டு சட்டமன்றத் தேர்தலில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் தே.மு.தி.க. என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    அ.தி.மு.க, தி.மு.க. 2 கட்சிகளிடமும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும், ஒரு மேல் சபை எம்.பி. பதவியை ஒதுக்கி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தே.மு.தி.க. பிரதானமாக முன் வைத்திருக்கிறது. இதுவே 2 கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதற்கு தடைக்கல்லாகவே இருந்து வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    தே.மு.தி.க.வுக்கு 10 இடங்கள் வரையில் ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. முன் வந்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும் தே.மு.தி.க.வோ, பா.ம.க.வுக்கு இணையாக தங்களுக்கு 17 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் பல்வேறு சிறிய கட்சிகள் இடம் பெற்றிருப்பதால் அவற்றுக்கெல்லாம் தொகுதிகளை ஒதுக்கி கொடுக்க வேண்டி இருப்பதால் 10 தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொள்ளுமாறு தே.மு.தி.க.விடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அதனை அந்த கட்சி ஏற்றுக்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

    அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகள் வரை ஒதுக்கி தருவதாக தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள தே.மு.தி.க. தயங்குவதாகவும் கூறப்படுகிறது. இப்படி ஒரே நேரத்தில் தே.மு.தி.க. 2 கட்சிகளுடனும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாலேயே தே.மு.தி.க. இன்னும் கூட்டணி முடிவை எடுக்காமல் இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் பலரும் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

    இதன் காரணமாக வருகிற சட்டமன்றத் தேர்தலில் பிரேமலதா எடுக்கும் முடிவு அந்த கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லுமா? என்கிற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

    இது தொடர்பான கேள்விகளுக்கெல்லாம் தொடர்ந்து ஒரே வரியிலேயே பிரேமலதா பதில் அளித்து வருகிறார்.

    இன்னும் கூட்டணிக்கு கால அவகாசம் உள்ளது. பொறுத்திருந்து பாருங்கள் என்பதே அவரது பதிலாக இருந்து வருகிறது.

    • இந்தியாவிலேயே ஆவின் நிறுவனம் தான் மிகக் குறைந்த விலைக்கு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து வருகிறது.
    • ஆவின் நிறுவனத்தை நம்பியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் குறைவான விலையில் பால் கிடைக்கும்போது, அதை முழுமையாக கொள்முதல் செய்யாமல், கர்நாடகத்திலிருந்து அதிக விலை கொடுத்து பால் கொள்முதல் செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக பால் உற்பத்தியாளர் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. தமிழ்நாட்டு உழவர்களுக்கு துரோகம் செய்து விட்டு, அண்டை மாநிலத்திலிருந்து அதிக விலை கொடுத்து பால் வாங்குவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

    பால் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலங்களின் ஒன்றாகத் திகழும் தமிழ்நாட்டில் தினமும் 1.70 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இதில் தினமும் 30 லட்சம் லிட்டர் முதல் 34 லட்சம் லிட்டர் வரை தான் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது தமிழகத்தின் மொத்த பால் உற்பத்தியில் 17.60% முதல் 20% வரை தான். ஆவின் நிறுவனம் நினைத்தால் தமிழ்நாட்டில் அதன் பால் கொள்முதல் அளவை இரட்டிப்பாக்குவது கூட சாத்தியம் தான். ஆனால், அதைச் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அண்டை மாநிலமான கர்நாடகத்திலிருந்து பால் கொள்முதல் செய்யும் முயற்சியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

    இந்தியாவிலேயே ஆவின் நிறுவனம் தான் மிகக் குறைந்த விலைக்கு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து வருகிறது. இதை பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்ததைத் தொடர்ந்து பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35 , எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 என்ற கொள்முதல் விலையுடன் கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் கூட கட்டுபடியாகக்கூடிய விலை அல்ல.

    அதே நேரத்தில் கர்நாடகத்தில் பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42 கொள்முதல் விலையுடன், ரூ.5 ஊக்கத் தொகை சேர்த்து ரூ.47 வழங்குகிறது. தமிழ்நாட்டில் ஊக்கத்தொகையுடன் சேர்த்து ரூ.38-க்கும் ஒரு லிட்டர் பசும்பால் கிடைக்கும் நிலையில், அதைக் கொள்முதல் செய்யாமல் கர்நாடகத்தில் லிட்டருக்கு ரூ.2 அதிக விலை கொடுத்து பசும்பாலை கொள்முதல் செய்வதும், அதை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர போக்குவரத்துச் செலவாக லிட்டருக்கு ரூ.3 செலவழிப்பதும் வணிகரீதியாக அறிவார்ந்த செயல் அல்ல. ஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டர் பாலை கர்நாடகத்திலிருந்து ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்வதாக வைத்துக் கொண்டால் தினமும் ரூ.50 லட்சமும், மாதத்திற்கு சுமார் ரூ.15 கோடியும் ஆவின் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படும்.

    ஏற்கனவே ஆவின் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.525 கோடிக்கும் கூடுதலாக இழப்பை சந்தித்து வரும் நிலையில், கர்நாடகத்திடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டால், ஆண்டு இழப்பு மேலும் ரூ.200 கோடி வரை அதிகரிக்கக் கூடும். அதுமட்டுமின்றி ஆவின் நிறுவனத்தை நம்பியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தமிழக பால் உற்பத்தியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி, ஆவின் நிறுவனத்திற்கும் இழப்பை ஏற்படுத்தும் வகையில் இப்படி ஒரு முடிவை ஆவின் நிறுவனமும், தமிழ்நாடு அரசும் எதற்காக எடுத்தன? என்பதை உழவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    ஒருவேளை ஆவின் நிறுவனத்திற்குத் தேவையான பால் தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை என்றால், அதற்கான காரணங்கள் என்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றை சரி செய்வது தான் பயனுள்ள நடவடிக்கையாக இருக்கும். பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது தான் பால் கொள்முதலை அதிகரிப்பதற்கு வகை செய்யும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரே ஒரு முறை தான் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. அதன்பின் 2023-ஆம் ஆண்டு லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஊக்கத்தொகையும் கூட முறையாக வழங்கப்படுவதில்லை. கடைசியாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு 25 மாதங்களாகும் நிலையில், அதன்பின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை.

    அதேநேரத்தில் ஆவின் நிறுவனத்தை விட தனியார் பால் நிறுவனங்கள் அதிக கொள்முதல் விலை வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுவும் கூட ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவு குறைந்ததற்கு காரணமாக இருக்கக்கூடும். சிக்கலுக்குத் தீர்வு என்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக அண்டை மாநிலத்திற்கு சென்று அதிக விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்வது சிக்கலைத் தீர்ப்பதற்கு பதிலாக மேலும் சிக்கலாக்கவே வகை செய்யும். எனவே, கர்நாடகத்தில் இருந்து பால் கொள்முதல் செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்; மாறாக, பசும் பால் கொள்முதல் விலையை கர்நாடகத்திற்கு இணையாக லிட்டருக்கு ரூ.45 வீதம் உயர்த்தி வழங்குவதன் மூலம் கொள்முதலை அதிகரிக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • 4 மற்றும் 5-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    1-ந்தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    2-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    3-ந்தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    4 மற்றும் 5-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • கடந்த 25-ந்தேதி அன்று கொலை நடைபெற்ற நிலையில் 26-ந்தேதி கொலையாளிகள் சிக்கினார்கள்.
    • ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு பெண்ணின் உடலை தேடும் பணி நடைபெற்றது.

    சென்னை:

    சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வைத்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கவுரவ்குமார், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் 2 வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 26-ந்தேதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் சேர்ந்து இந்த கொடூர கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    காவலாளி சிக்கந்தரிடம் வேலை கேட்டு அடைக்கலமான நிலையில் கவுரவ் குமாரின் மனைவி முனிதா குமாரி மீது சிக்கந்தருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து மது போதையில் சிக்கந்தர் தனது நண்பர்களோடு சேர்ந்து முனிதா குமாரியை கற்பழிக்க முயற்சி செய்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து சண்டை போட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் தான் சிக்கந்தரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கவுரவ் குமார், முனிதா குமாரி, 2 வயது ஆண் குழந்தை ஆகிய 3 பேரையும் கொடூரமாக கொன்று தனித்தனியாக மூட்டை கட்டி வீசியது தெரிய வந்தது.

    முனிதா குமாரியின் உடலை பெருங்குடி குப்பை கிடங்கில் வீசிய கொலையாளிகள் கவுரவ் குமாரின் உடலை நடுரோட்டில் போட்டுச் சென்றதால் இந்த கொலை சம்பவம் உடனடியாக வெளியில் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து குழந்தையின் உடலை அதே பகுதியில் கூவத்தில் மீட்ட போலீசார் கடந்த 4 நாட்களாக பீகார் வாலிபரின் மனைவி முனிதா குமாரியின் உடலை பெருங்குடி குப்பை கிடங்கில் தேடி வந்தனர்.

    கடந்த 25-ந்தேதி அன்று கொலை நடைபெற்ற நிலையில் 26-ந்தேதி கொலையாளிகள் சிக்கினார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் முனிதா குமாரியும், குழந்தையும் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்கள் அளித்த தகவலின் பேரிலேயே கடந்த 4 நாட்களாக பெருங்குடி குப்பை கிடங்கில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

    பெருங்குடி குப்பை கிடங்கில் தெரு நாய்கள் புகுந்து உடலை தூக்கி சென்று விடக்கூடாது என்பதற்காக இரவு, பகலாகவும் அந்த பகுதியில் போலீசார் கண்காணித்தனர்.

    ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு பெண்ணின் உடலை தேடும் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பீகார் வாலிபரின் மனைவியான முனிதா குமாரியின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.

    பீகார் வாலிபர் மற்றும் அவரது 2 வயது ஆண் குழந்தையின் உடல் ஏற்கனவே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ள நிலையில் முனிதா குமாரின் உடலும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதற்காக பீகார் வாலிபர் மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளனர். 3 பேரின் உடல்களும் ஒரே நேரத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் நாளை ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

    கொலையுண்ட முனிதா குமாரி காவலாளி சிக்கந்தர் மற்றும் அவரது கூட்டாளிகளால் கற்பழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் கற்பழிப்பு முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முனிதா குமாரியின் பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர் கற்பழிக்கப்பட்டாரா? இல்லையா? என்பது தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே இந்த கொலை வழக்கில் 5 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    பீகார் வாலிபரின் மனைவி உடல் கிடைத்ததை தொடர்ந்து இந்த வழக்கில் உரிய முறையில் துப்பு துலக்கி கொலையாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கி கொடுப்பதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    3 பேர் கொலை வழக்கில் வீடியோ பதிவு காட்சிகள் முக்கிய ஆதாரங்களாக உள்ளன. இதுபோன்று மேலும் பல தகவல்களை சேகரித்து கொலையாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி தருவோம் என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ஒரே குடும்பத்தில் 3 பேரை கொன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

    இதையெல்லாம் கருத்தில் கொண்டு மாநகர போலீசார் இந்த வழக்கு விசாரணையை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிப்பதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, இன்னும் 3 மாதத்தில் விசாரணையை முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி தருவோம் என்றார்.

    • இந்த பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும்.
    • இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

    சென்னை :

    தி.மு.க. அரசின் பதவிக்காலம் முடிந்து சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. எனவே, இந்த பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும். அந்த வகையில், தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 13 அல்லது 14-ந்தேதியன்று தாக்கல் செய்யலாமா? என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி மாதம் 5-ந்தேதி கூடுகிறது.

    இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உள்ள இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. 

    • அரசு ஊழியங்களின் போராட்டங்களில் தற்காலிக ஊழியர்கள் பணி என்பது வருடத்திற்கு 11 மாதம் என்பது மட்டுமே.
    • இதுபோன்ற தூண்டுதல்களை மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது.

    சென்னை:

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தற்காலிக ஊழியர் கள் போராட்டம் தொடர்வது பற்றி நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    அரசு ஊழியங்களின் போராட்டங்களில் தற்காலிக ஊழியர்கள் பணி என்பது வருடத்திற்கு 11 மாதம் என்பது மட்டுமே. அது மீண்டும் தொடரும்போது இடையில் ஒரு நாள் விடுமுறை வழங்கி விட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பணிபுரிவார்கள்.

    இதுபோன்று பணியில் இருப்பவர்களை எந்த அரசும் பணி நிரந்தரம் செய்ய முடியாது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநில அரசும் பணிநிரந்தரம் செய்ய முடியாது. அண்ணாமலையிடம் வேறு மாநிலத்தில் பணி நிரந்தரம் செய்திருக்கிறார்களா என்று பத்திரிகையாளர்களாகிய நீங்களே கேட்டு சொல்லவும்.

    பணி நிரந்தரம் செய்தால் நீதிமன்றம் தலையிடும். 'கம்யூனல் ரொட்டேசன்' இல்லாமல் எந்த பணியாளரையும் பணிநிரந்தரம் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் கூறும். இந்த நிலையில் இதனை தெரிந்து கொண்டே போராட்டம் செய்வது என்பது ஒரு சிலர் தூண்டிவிட்டு நடத்துவது. அரசு ஊழியர் போராட்டம் அல்ல, இன்னொன்று ஊழியர் சங்கங்கள் அல்ல, தனிநபரின் தூண்டுதல் இருக்கிறது என்று ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். பெங்களூருவை சேர்ந்த ஒருவர் இங்கு போராட்டத்தை தூண்டி விட்டார், நாங்கள் அவர் மீது புகார் கொடுத்து இருக்கிறோம்.

    இதுபோன்ற தூண்டுதல்களை மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும். தேர்தல் நடக்கும் சூழ்நிலையில் அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் நிலையில் இதுபோன்று தூண்டிவிடப்படும் போராட்டங்கள் குறைக்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கத்தில் சொல்லியிருந்தேனே தவிர போராட்டங்களை கொச்சைப்படுத்துவது என்பது தி.மு.க. அரசாங்கத்தின் நோக்கம் அல்ல.

    நான் இப்போது அரசியல்வாதியாக இருக்கலாம், இதற்கு முன்பு ஒரு யூனியன் தலைவராக இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறேன். 1980களிலே நான் ஏற்கெனவே சட்டமன்றத்தில் பதிவு செய்திருந்தேன். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது அவரது அரசை எதிர்த்து தலைமைச் செயலகத்திலேயே போராட்டம் நடத்தி எம்.ஜி.ஆரையே கீழே வரவழைத்து 500 பெண் தொழிலாளர்கள் முன் பேச வைத்து அவருக்கு நேராக விவாதம் செய்தவன் நான். அதனால் தொழிற்சங்கத்தைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதவெறியை மாய்ப்போம்! மகாத்மாவைப் போற்றுவோம்!
    • நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நிலைத்து வாழ்வார்!

    மகாத்மா காந்தியின் 79-வது நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மதவெறியை மாய்ப்போம்! மகாத்மாவைப் போற்றுவோம்!

    அமைதிவழியின் வலிமையை உலகுக்குக் காட்டி, ஒற்றுமையுணர்வு தழைக்கப் பாடுபட்டதால், கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள், ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நிலைத்து வாழ்வார்!

    மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டி, காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம்!

    #வெல்வோம்_ஒன்றாக!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன்.
    • பி.டி. உஷாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். தங்களின் அன்புக்குரியவரை இழந்து தவிக்கும் பி.டி. உஷாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • டாக்டர்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டுமென 4 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறோம்.
    • தற்போது நடைபெறுகின்ற இந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

    சென்னை:

    அரசு டாக்டர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் 48 மணி நேரம் உண்ணாவிரத போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

    அதன் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்து வந்த டாக்டர்களிடம் அரசு உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் சுமுக உடன்பாடு ஏற்படாததால் இன்று முதல் மீண்டும் போராட்டத்தை தீவிரபடுத்தியுள்ளனர்.

    ஒத்துழையாத போராட்டம் என்ற அடிப்படையில் அரசு டாக்டர்கள் பல்வேறு பணிகளைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்து உள்ளனர்.

    அரசு ஆஸ்பத்திரியில் பயோமெட்ரிக் வருகை பதிவை புறக்கணிப்பது வாட்ஸ் அப் குழு, ஆன்லைன் மற்றும் நேரடியாக நடைபெறும் அலுவல் சார்ந்த கூட்டங்களை புறக்கணித்தல், மருத்துவ மாணவர்களின் வகுப்புகள் புறக்கணிப்பு என அரசுக்கு ஒத்துழைக்காமல் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் குறித்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    டாக்டர்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டுமென 4 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறோம். சம்பள உயர்வு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர்களுக்கு ரூ.3000 படி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினோம்.

    அதனை நிறைவேற்றவில்லை. பொதுமக்கள் நலன் பாதிக்கக்கூடாது என்பதற்காக நாங்கள் போராட்டத்தை மேற்கொள்ளாமல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் நிறைவேற்ற முன்வரவில்லை.

    இன்று முதல் எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளோம். 4 பணிகளை புறக்கணித்து உள்ளோம். பிப்ரவரி 4-ந் தேதி வரை ஒத்துழையாமை போராட்டம் நடைபெறும். அதன் பின்னர் மாநில செயற்குழு கூடி அடுத்தகட்ட போராட்டத்தை முடிவு செய்வோம்.

    தற்போது நடைபெறுகின்ற இந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மருத்துவர்கள் சேவையில் எந்த குறைவும் இருக்காது. அடுத்த வாரம் புதன்கிழமை மீண்டும் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகாத்மா காந்தி திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    மகாத்மா காந்தியின் 79-வது நினைவுநாளையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவரது திருவுருவப் படத்திற்கு  மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    ×