என் மலர்
சென்னை
- ஆகஸ்ட் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது
- வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னை:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.
அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 34 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.1,789-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1,823.50-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.
- முதல்வர் உடனான சந்திப்பில் அரசியல் இல்லை என ஓ.பி.எஸ். தெரிவித்திருந்தார்.
- உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி என முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவு.
முன்னாள் முதல்வரான ஓ. பன்னீர் செல்வம் இன்று காலை நடை பயிற்சியின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு சென்று முதல்வரை சந்தித்தார்.
ஆழ்வார்பேட்டைக்கு முதல்வர் வீட்டிற்குச் சென்ற ஓ.பி.எஸ்.-ஐ உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். ஓ.பி.எஸ். உடன் அவரது மூத்த மகன் ரவீந்திரநாத்தும் உடன் சென்றிருந்தார். இந்த சந்திப்பின்போது, முதலமைச்சர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ்., முதல்வர் உடனான சந்திப்பில் அரசியல் இல்லை எனத் தெரிவித்தார். இந்த நிலையில்தான் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் "உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி" என ஓ.பி.எஸ்.க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை. அரசியல் தொடர்பாக ஏதும் பேசவில்லை.
- அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று மாலை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை ஓ. பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.
அப்போது ஓ. பன்னீர் செல்வம் கூறியதாவது:-
* முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை. அரசியல் தொடர்பாக ஏதும் பேசவில்லை.
* அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை.
* கல்வி நிதியை நிறுத்தி வைப்பது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல.
* பா.ஜ.க. வில் இருந்து தற்போது எந்த அழைப்பும் வரவில்லை.
* அரசியலில் எனக்கென்று சுயமரியாதை உள்ளது. ஜெயலலிதாவின் மேற்பார்வையில் 25 வருடங்கள் பணியாற்றியுள்ளேன்.
* நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த பாஜக- அதிமுக தற்போது இணைந்துள்ளன. தற்போது இரு கட்சிகளும் கூட்டணி வைத்ததற்காக வாழ்த்துகள்.
இவ்வாறு ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
- இன்று காலை நடைபயிற்சியின்போது சந்தித்து பேசினார்.
- தற்போது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் ஓ. பன்னீர் செல்லும் இன்று நடைபயிற்சியின் போது சந்தித்து பேசினார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் வீட்டிற்கு சென்ற ஓ. பன்னீர் செல்வம் மீண்டும் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளார். ஓ.பி.எஸ்.-ஐ வாசலுக்கு வந்து உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார்.
ஒரு நாளில் இரண்டு முறை சந்தித்துள்ள நிலையில் திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே த.வெ.க. உடன் இணைந்து தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பெரும்பாலான சிலைகள் சென்னை கொசப்பேட்டையில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.
- 10 அடிக்கு மிகாமலேயே விநாயகர் சிலைகளை தயாரித்து வருவதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை:
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் லட்சக்கணக்கான விநாயகர் சிலைகள் அன்றைய தினம் பூஜைக்காக வைக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும் பல்லாயிரக்கணக்கான சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது.
சென்னையில் வைக்கப்படும் பெரிய விநாயகர் சிலைகள் வாலாஜாபாத், கடலூர் உள்ளிட்ட இடங்களில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்தே கொண்டு வரப்படுகின்றன. இவைகளில் பெரும்பாலான சிலைகள் சென்னை கொசப்பேட்டையில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.
இது தொடர்பாக விநாயகர் சிலைகளை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள சத்திய நாராயணன் என்பவர் கூறும்போது, முதல்கட்டமாக வாலாஜாபாத்தில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் விற்பனைக்கு வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
கொசப்பேட்டையில் சாலையில் வைத்தே சிலைகளை விற்பனை செய்வதால், வெயில், மழையால் பாதிக்காத வகையில் பிரத்யேகமான பெரிய கவர் போட்டே மூடி வைப்பதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இது தவிர எண்ணூர் மற்றும் எர்ணாவூரிலும் விநாயகர் சிலைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னை மாநகரில் பல இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள், பல்வேறு பாகங்களாக எடுத்து வரப்பட்டு மேற்கண்ட இடங்களில் வைத்தே இறுதி வடிவம் பெறுகின்றன.
எண்ணூர், எர்ணாவூர் ஆகிய 2 இடங்களிலும் 800-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளின் பாகங்களை ஒன்று சேர்த்து வர்ணம் பூசும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் வழிமுறைகளை கடைபிடித்து 10 அடிக்கு மிகாமலேயே விநாயகர் சிலைகளை தயாரித்து வருவதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
- மருத்துச் சேவைகள் மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு வழங்கப்பட உள்ளன.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2021-ம் ஆண்டு நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற உன்னதமான நோக்கத்தை நமது திட்டங்கள் வழியாகச் செயல்வடிவத்தில் கொண்டுவந்து, தமிழ்நாட்டை அனைத்துத் துறையிலும் முன்னேறிய மாநிலமாக உயர்த்திக் காட்டியிருக்கிறோம்.
அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்டத்து வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி என்ற அடிப்படையில், ஒவ்வொரு மனிதரின் தேவைகள், கோரிக்கைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைச் செய்து தரும் வகையில், அனைத்துத் திட்டங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்களைத் தொடர்ந்து, மருத்துவச் சேவைகளைக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணத்தைச் செயல்வடிவமாக்க, பல்வேறு ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு, ஒரு திட்டத்தை உருவாக்கினோம்.
அதனடிப்படையில், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர், கடந்த 21.04.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், "உயர் மருத்துவ சேவைகள் வழங்க ரூ.12.78 கோடி செலவில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, எதிர்வரும் ஆகஸ்ட் 2-ஆம் நாளன்று "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாம்களை, சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்க உள்ளேன்.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள இந்தச் சிறப்பு மருத்துவ முகாம்களில் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒருமுகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள்தொகை 10 லட்சத்திற்குக் குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் என மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன.
இம்முகாம்கள் சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன. 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக்கல்வி துறை, உயர்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரி வளாகங்களில் இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இம்முகாம்களில் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அனைத்துப் பயனாளிகளுக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான ரத்த அணுக்களின் எண்ணிக்கை, இரத்த சர்க்கரை, சிறுநீரகச் செயல்பாட்டு பரிசோதனைகள் (யூரியா, கிரயாட்டினின்) செய்யப்பட்டு, மருத்துவ முகாமிலேயே பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக தெரிவிக்கப்படும்.
அனைத்துப் பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு (ம) தொண்டை மற்றும் பல் மருத்துவச் சேவைகள் வழங்கப்படவுள்ளது. மேலும், பொது மருத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின்படி எக்ஸ்-ரே, எக்கோகார்டியோகிராம், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் (ம) மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளன.
இம்முகாமில் பங்கு கொள்ளும் பயனாளர்களுக்குக் கீழ்க்கண்ட மருத்துச் சேவைகள் மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு வழங்கப்பட உள்ளன.
பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், இயன்முறை மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு நோய் மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம் பரிசோதனைகள் மற்றும் மருத்துவச் சேவைகள் மட்டுமின்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ் இம்முகாமிலேயே வழங்கப்பட உள்ளன. இம்முகாம்களின் விரிவான தரவுத் தொகுப்பு, தொடர் கண்காணிப்பு மற்றும் பின்தொடர் சிகிச்சை நடவடிக்கைகள், நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை வாயிலாகக் கண்காணிக்கப்பட உள்ளன.
ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு, பெண்களுக்கான கருப்பை வாய்ப்புற்று (ம) மார்பக புற்றுநோய் ஆகியவற்றை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவச் சேவைகள் நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை மூலம் கண்காணிக்கப்படும் இம்முழு உடல்பரிசோதனை முகாமானது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக உயர்தரமான மருத்துவச் சேவைகள் பொதுமக்களுக்கு அவர்கள் வாழுமிடங்களுக்கு அருகிலேயே கிடைக்க இருக்கின்றன.
இந்த முகாமை அனைத்து பொதுமக்களும், குறிப்பாக "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் நடத்தப்படும் முதற்கட்ட பரிசோதனையின் அடிப்படையில் மருத்துவ நிபுணர்களின் விரிவான பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் இந்த முகாமில் அவசியம் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பொதுமக்கள் பலர் ‘செயலி’ மூலம் கட்சியி்ல் ஆர்வமுடன் சேர தொடங்கினர்.
- கட்சியில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினர்.
சென்னை:
த.வெ.க.வில் 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் பல்வேறு வசதிகளுடன் 'மை டி.வி.கே.' செயலி உருவாக்கப்பட்டது. பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை கட்சி தலைவர் விஜய் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
செயலி மூலம் 1 நொடிக்கு 18 ஆயிரம் உறுப்பினர்கள் சேர வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பூத் நிர்வாகிகளை விஜய் நேரடியாக கண்காணித்து அறிவுரை வழங்கவும் வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
முதல் 15 நாட்களுக்கு கட்சியில் உள்ள பூத் முகவர்கள், நிர்வாகிகள் இணைவதற்கும் 15 நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் இணையவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
செயலி மூலம் புதிதாக த.வெ.க.வில் இணைவதற்கு பொதுமக்களிடையே தீவிர ஆர்வம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முதல் பொதுமக்களும் இணைந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் பலர் 'செயலி' மூலம் கட்சியி்ல் ஆர்வமுடன் சேர தொடங்கினர். நேற்று முதல் இன்று காலை வரை சுமார் 3 லட்சம் பேர் த.வெ.க.வில் இணைந்து உள்ளனர்.
கட்சியில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினர். த.வெ.க. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து பொதுமக்களுக்கு மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி நேர்மையான முறையில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கட்சி தலைவர் விஜய் உத்தரவின் பேரில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வலியுறுத்தி வருகிறார்.
- செங்கல்பட்டில் மிகப்பெரிய பஸ் நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது.
- குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
சென்னை:
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.
சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கட்டப்பட்டு வரும் திரு.வி.க. நகர் மற்றும் பெரியார் நகர் புதிய பஸ் நிலையம், சேத்துப்பட்டில் கட்டப்பட்டு வரும் நவீன சலவை கூடத்தில் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அந்த வகையில் பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பஸ் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குத்தம்பாக்கம் பஸ் நிலையம் அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டில் மிகப்பெரிய பஸ் நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. மகாபலிபுரத்தில் பஸ் நிலையம் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆவடியில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பெரியார் நகர் பஸ் நிலையம், திரு.வி.க.நகர் பஸ் நிலையத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
முடிச்சூர் பஸ் நிலையம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதை விரைவுபடுத்த எங்களது சட்டப் பிரிவிடம் பேசி உள்ளோம். விரைவில் அதற்கு ஒரு முடிவை ஏற்படுத்துவோம்.
ஆம்னி பஸ் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்றுதான் ஆம்னி பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இப்பொழுது அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர மறுக்கிறார்கள். குத்தம்பாக்கம் பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வரும்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி ஏற்படும்.
கிளாம்பாக்கம் ரெயில் நிலையப்பணிகளை விரைவுபடுத்த தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் எங்கள் செயலாளர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ரெயில் நிலையத்திற்கான தொகை ரூ.20 கோடி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கியுள்ளது. அந்த பணி விரைவுபடுத்தப்பட்டு, செப்டம்பர் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் என்று உறுதி அளித்துள்ளார்கள்.
தி.மு.க., கூட்டணி கட்சிகளை நம்பித்தான் தேர்தலை சந்திக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்கிறார். நாங்கள் யாரையாவது கூட்டணிக்கு வருமாறு அழைக்கிறோமா? இல்லை. அவர்களது கூட்டணியில் உள்ள யாரையாவது விமர்சனம் செய்கிறோமா? எடப்பாடி பழனிசாமி மைக்கை பிடித்தாலே கம்யூனிஸ்ட்களை விமர்சனம் செய்வது, வி.சி.க.வை அழைப்பது என்று தேடித்தேடி அழைத்துக் கொண்டிருக்கிறார்.
புலிக்கு பயந்தவன்தான் தன் மேல் படுத்துக்கொள், தன் மேல் படுத்துக்கொள் என்று கூறுவான். எடப்பாடி பழனிசாமி தினமும் ஒன்று பேசிக் கொண்டிருக்கிறார்.
எங்கள் கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி கிடையாது. இந்த கூட்டணிக்கு தலைமை தாங்கும் முதல்வரை கூட்டணி கட்சிகள் நம்புகின்றன. மக்கள் நல பணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றியத்தில் முதன்மையாக இருக்கிறார். 2026-ம் ஆண்டு மீண்டும் கிரீடத்தை சூட மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
1967, 1977 போன்று 2026-ல் மாற்றம் வரும் என்று விஜய் கூறுகிறார். நிச்சயமாக மாற்றம் வரும். இன்றைக்கு அரசியலுக்கு வருகிறோம் என்று சொன்னவர் 2026-க்கு பிறகு, மீண்டும் நான் சினிமாவிற்கு செல்கிறேன் என்ற மாற்றத்தை ஏற்படுத்துவார். த.வெ.க. வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு பிரசாரத்தை தொடங்கட்டும். அந்தர் பல்டி, ஆகாச பல்டி அடித்தால் கூட, எவ்வளவு வித்தை காட்டினாலும் மக்களிடம் காசு பெறுகிற போது இறங்கி வந்துதான் ஆக வேண்டும். ஓட்டு என்ற மகத்தான சக்தி மக்களிடம் உள்ளது. அந்த மகத்தான சக்தி எங்கள் முதலமைச்சரின் பக்கம் உள்ளது. நிச்சயம் வென்று காட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ், மாநகராட்சி துணை ஆணையர் கவுசிக் கலந்து கொண்டனர்.
- விஜய் பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்று கூறினாலும் அவர் எப்போதும் என் தம்பிதான்.
- தி.மு.க. ஆட்சியில் எத்தகைய தவறுகள் நடக்கிறது என்பது விஜய்க்கு நன்றாக தெரியும்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் பட்டியல் நேற்று வெளியானது. இதில் நடிகை குஷ்புவுக்கு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள குஷ்பு கூறியதாவது:-
இந்தப் பதவி நான் எதிர்பாராதது. எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. இதற்காக கட்சிக்கு எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ஜ.க.வை பொறுத்தவரை முன்பு சரியான பதவி தரப்படவில்லை என்று சொல்வது ஏற்புடையதல்ல. நான் பா.ஜ.க.வில் இணைந்த உடனேயே சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள்.அதன்பிறகும் தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற பதவிகளை எல்லாம் வழங்கினார்கள்.
என்னைப் பொருத்தவரை பா.ஜ.க.வில் கொடுக்கும் பொறுப்பில் இருந்து தனது வேலையை அமைதியாக செய்தாலே போதும் கட்சித் தலைமை மகுடம் சூட்டி மகிழும்.
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி மாநில தலைவர் முறையான பயிற்சிகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்குவார். அதன்படி மக்களிடம் கட்சியை வளர்க்கவும் பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ள நல்ல திட்டங்கள் பற்றியும், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்திற்கும் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்கள் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
முன்பெல்லாம் வறுமை, ஊழல் மலிந்த தேசமாகவே இந்தியாவை மற்ற நாடுகள் பார்த்தன. ஆனால் இப்போது இந்தியாவின் வளர்ச்சியையும், கட்டமைப்பையும் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்கின்றன.உலக அளவில் முதலாவது 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ந்துள்ளது.
பிரதமர் மோடியை பார்த்து இப்படி ஒரு தலைவரை பார்த்தது இல்லை என்று உலக நாடுகள் எல்லாம் வியக்கின்றன. பிரதமர் மோடி பற்றி நான் தமிழகம் முழுவதும் சென்று பேசுவேன்.
தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி நிறைய செய்து இருக்கிறார். இதுபற்றி அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பேசுவேன்.
நடிகர் விஜய் பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்று கூறினாலும் அவர் எப்போதும் என் தம்பிதான். அரசியல் ரீதியாக அவர் வேறு இடத்தில் இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் தேர்தலில் அவர் வெற்றி பெறுவாரா? என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.
அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கூட்டணிக்கு மேலும் கட்சிகள் வருவது பற்றி அ.தி.மு.க.-பா.ஜ.க. மேலிட தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள். மற்றபடி கூட்டணி விவகாரங்கள் பற்றி நான் மேலிட அனுமதி இல்லாமல் பேச இயலாது.
என்றாலும் தம்பி என்ற முறையில் விஜய்க்கு அழைப்பு விடுக்கிறேன். விஜய் கட்சியின் முக்கிய குறிக்கோளே தி.மு.க.வை வருகிற தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான்.
இதே கொள்கையுடன்தான் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியும் இருக்கிறது. நீங்கள் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால் நாம் அனைவரும் ஒரே அணியில் கைகோர்க்க வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில் எத்தகைய தவறுகள் நடக்கிறது என்பது விஜய்க்கு நன்றாக தெரியும். தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவி இருப்பதும் தெரியும். எனவே அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய் வருவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.
இந்த தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். ஆனால் இப்போதும் முதல்வர் கண்ணை கட்டிக்கொண்டு சுற்றி இருப்பவர்கள் சொல்லிக் கொடுப்பதை கேட்டு எல்லாம் நன்றாக நடக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த 4 ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகள் என்ன? தினமும் கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள், போதை பழக்கங்கள் அதிகரிப்பு என்று தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது போதும் எங்கள் வெற்றிக்கு என்று தி.மு.க.வினர் கூறுகிறார்கள். ஆனால் பெண்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கு வரும்போது அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் சொன்னபடி செய்தார் களா? பலருக்கு அந்த பணம் கிடைக்கவில்லை.
இப்போது கணக்கெடுக்கும் போது தான் கள நிலவரம் கலவரமாக இருக்கிறதே என்று கலங்கி போய் இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் கணக்கெடுப்பதை ஆட்சிக்கு வந்ததும் முறையாக கணக் கெடுத்து எல்லா பெண்களுக்கும் வழங்கி இருக்கலாமே. ஏன் செய்யவில்லை? இதுதான் தி.மு.க.வின் தேர்தல் ஏமாற்று வேலை. ஆனால் இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள்
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. அரசு எப்போதும் ஏழை எளிய மக்களின் குறிப்பாக வணிகர்களுக்கு துணைநிற்கும் அரசாகும்.
- புதிய சட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும்.
சென்னை:
கிராம பகுதிகளில் தொழில் செய்பவர்கள் கட்டாயம் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றும், இது டீக்கடை முதல் அனைவருக்கும் பொருந்தும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார்.
அவருக்கு பதில் அளிக்கும் வகையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழில் உரிமம் பெறுவதற்கான சட்டப்பிரிவு பல ஆண்டுகளாக இருந்த போதும் முறையான விதிகள் இல்லாததால் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் தங்களது தீர்மானத்தின் அடிப்படையில் பல்வேறு விதமான கட்டணங்கள் நிர்ணயம் செய்து அதிக அளவில் கட்டணங்களை வசூலித்து வந்தன.
இந்த குறைகளை நீக்கும்பொருட்டு பல்வேறு வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்று இப்போது புதிதாக விதிகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு எப்போதும் ஏழை எளிய மக்களின் குறிப்பாக வணிகர்களுக்கு துணைநிற்கும் அரசாகும். வணிகர் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ள திராவிட மாடல் அரசின் நல்லெண்ணத்தின் மீது பழிபோட பழனிசாமி பகல் கனவு காண வேண்டாம்.
இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த அதில் லைசென்ஸ் விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக துறை அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளை கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக்குழு, கிராமப்புறங்களில் சிறு வணிகர்கள் வணிக உரிமம் பெறுவது குறித்த நடைமுறையை எளிமைப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும். அதன் அடிப்படையில் புதிய சட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கிராமங்களில் தொழில் செய்ய லைசென்ஸ் வாங்க வேண்டும் என்ற அரசு உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆலோசனை குழு சமர்ப்பித்த பிறகு இதில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
- தற்போது வரை எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை.
சென்னை:
சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இதன்பின் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:-
* இன்று காலை முதல் நடைபெற்ற ஆலோசனையில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
* தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்பு குழு விலகுகிறது.
* தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
* தற்போது வரை எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்றார்.
எதிர்கால கூட்டணி குறித்து காலசூழலுக்கு ஏற்ப முடிவு என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
- வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகமாகி வருகிறது. இதனால் தினந்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, தஞ்சாவூர், தெனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.
எனவே டெங்கு பாதிப்பு அதிகமாகும் என்பதால் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து துரிதமாக செயல்பட்டு ATS கொசுக்களை அழிக்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.






