என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • என் பெற்றோரின் பிறந்தநாள் கூட எனக்கு தெரியாது. அப்படியிருக்க என் பெற்றோரின் சான்றிதழ்களை அவர்கள் கேட்டால் என்னால் எப்படி அவற்றை கொடுக்க முடியும்.
    • குடியுரிமை திருத்த சட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வில்லை என்றால் நீங்கள் வெளிநாட்டினராக மாறி விடுகிறீர்கள்.

    மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அக்கூட்டத்தில் பேசிய அவர், "தேசிய குடிமக்கள் பதிவேட்டை நான் அனுமதிக்க மாட்டேன். அசாமில் 19 லட்சம் இந்து வங்காளிகளின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

    என் பெற்றோரின் பிறந்தநாள் கூட எனக்கு தெரியாது. அப்படியிருக்க என் பெற்றோரின் சான்றிதழ்களை அவர்கள் கேட்டால் என்னால் எப்படி அவற்றை கொடுக்க முடியும்.

    குடியுரிமை திருத்த சட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வில்லை என்றால் நீங்கள் வெளிநாட்டினராக மாறி விடுகிறீர்கள்.

    50 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றிதழை அவர்கள் கொண்டு வர சொன்னால், முதலில் பாஜக வேட்பாளர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தில் சான்றிதழ்கள் கொடுத்து குடியுரிமைக்கு விண்ணப்பிக்க சொல்லுங்கள்.

    பாஜகவினரே குடியுரிமை திருத்த சட்டத்தில் விண்ணப்பிக்கவில்லை என்றால் நாம் ஏன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டையும் நான் அனுமதிக்க மாட்டேன்" என்று மம்தா தெரிவித்தார். 

    • மேற்கத்திய நாடுகள் இன்று அன்னையர் தினத்தை கொண்டாடுகின்றன.
    • பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் படேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பேரணியில், அன்னையர் தின பரிசாக பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபென் மோடியுடன் இருக்கும் உருவப்படத்தை தொண்டர்கள் பரிசாக வழங்கியுள்ளனர்.

    மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த தாய் ஹீராபென் மோடியின் உருவப்படத்தை பரிசாகப் பெற்றார்.

    பரிசுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, "மேற்கத்திய நாடுகள் இன்று அன்னையர் தினத்தை கொண்டாடுகின்றன, ஆனால் இந்தியாவில் நாங்கள் ஆண்டு முழுவதும் தாய், காளி, துர்கா மற்றும் தாய் இந்தியாவுக்காக பிரார்த்தனை செய்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

    கடந்த 2022ம் ஆண்டில் டிசம்பர் 30ம் தேதி அன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் படேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சமீபத்தில், 3ம்கட்ட தேர்தலில் அகமதாபாத் வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்த பின்னர், தனது மறைந்த தாயை நினைவு கூர்ந்தபோது உணர்ச்சிவசப்பட்டார்.

    2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் தனது தாயார் இல்லாமல் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ராமர் பெயரை எடுத்துக் கொண்டு ராம நவமியை கொண்டாட மக்களை அனுமதிக்கவில்லை.
    • பாகீரதி நதியில் இந்துக்களை மூழ்கடிப்போம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கூறியுள்ளார்.

    கொல்கத்தா:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இதுவரை 282 தொகுதிகளுக்கு 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. 4-வது கட்டமாக 96 தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கு வங்காளத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவர் இன்று 4 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    காலை 11.30 மணிக்கு வடக்கு 24 பர்கான்சில் உள்ள பராக்பூரில் பாரதிய ஜனதா வேட்பாளர் அர்ஜூன் சிங்குக்கு ஆதரவாக மோடி ரோடு ஷோவில் ஈடுபட்டார். பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    மேற்கு வங்காளத்தில் பராக்பூர் நிலம் வரலாற்றை எழுதியது. சுதந்திரத்தில் முக்கிய பங்கு வகித்தது. திரிணாமுல் காங்கிரஸ் இங்கு என்ன செய்தது என்று பாருங்கள். வங்காள தேசத்தின் பொருளாதா ரத்தை வலுப்படுத்துவதில் மேற்கு வங்காளம் முக்கிய பங்காற்றிய காலம் ஒன்று இருந்தது.

    இன்று திரிணாமுல் காங்கிரஸ் ஊழல்களின் மையமாக மாறியுள்ளது. மேற்கு வங்காளத்தில் ஒரு காலத்தில் அறிவியல் கண்டு பிடிப்புகள் இருந்தன. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மாநிலம் முழுவதும் வெடிகுண்டு தயாரிக்கும் உள்நாட்டு தொழில் உள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ராமர் பெயரை எடுத்துக் கொண்டு ராம நவமியை கொண்டாட மக்களை அனுமதிக்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்காளத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக்கப்பட்டனர்.

    சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் காலம் இங்கு இருந்தது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி பாதுகாப்பின் கீழ் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் செழித்து வருகின்றனர்.

    மேற்கு வங்காளத்தில் 2019-ம் ஆண்டை விட இந்த பாராளுமன்ற தேர்தலில் பெரிய வெற்றியை பெறுவோம்.

    இன்று நான் மேற்கு வங்காள மக்களுக்கு 5 உத்தரவாதங்களை வழங்குகிறேன். நான் இருக்கும் வரை மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது.

    எஸ்.சி., எஸ்.டி.க்கான இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது. நான் இங்கும் வரை நீங்கள் ராமரை வணங்குவதையும், ராமநவமி கொண்டாடுவதையும் யாராலும் தடுக்க முடியாது. ராமர் கோவில் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை யாராலும் ரத்து செய்ய முடியாது. நான் இங்கு இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை (சி.ஏ.ஏ.) ஒழிக்க முடியாது.

    மோடிக்கு எதிராக ஜிகாத் வாக்கு கேட்கிறார்கள். பாகீரதி நதியில் இந்துக்களை மூழ்கடிப்போம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கூறியுள்ளார். அவர்களின் தைரியத்தை கற்பனை செய்து பாருங்கள். அவர்களின் தைரியத்துக்கு யார் ஆதரவு கொடுத்தார்கள்.

    சந்தேஷ்காலி குற்றவாளிகளை பாதுகாக்க திரிணாமுல் காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் செய்கிறது. அந்த கட்சியின் குண்டர்கள் சந்தேஷ் காலி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அச்சுறுத்தினார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    அதைத் தொடர்ந்து 1 மணியளவில் அவர் ஹூக்ளி சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். 3-வதாக பிரதமர் மோடி ஆரம்பாக்கில் நடந்த பொதுக் கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர் அருப்குமாரை ஆதரித்து ஓட்டு சேகரித்தார்.

    இன்று மாலை 4 மணிக்கு அவுராவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதி களுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதுவரை 10 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது. நாளை நடைபெறும் தேர்தலில் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

    மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தை முடித்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி பீகார் செல்கிறார். மாலை 6.45 மணிக்கு பாட்னாவில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்தி பா.ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    • இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
    • ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அமலாக்கதுறை கைது செய்தது செல்லாது என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் தேர்தலை கணக்கில் கொண்ட இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை நேற்று மனுதாக்கல் செய்திருந்தது.

    இந்த நிலையில் இன்று கெஜ்ரிவால் தொடர்பான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

    இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய பாராளுமன்ற தேர்தல் சூழ்நிலைக்கு ஜாமின் வழங்கி இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

    • கவர்னர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
    • சிசிடிவி காட்சிகளை பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பிக்க இருப்பதாக கவர்னர் தெரிவித்திருந்தார்.

    மேற்கு வங்காள கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம்பெண் ஒருவர் கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் போலீசார் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

    ஆனால் சிசிடிவி காட்சிகள் 100 பொதுமக்களுக்கு காண்பிக்கப்படும். ஆனால் மம்தா பானர்ஜி மற்றும் மேற்கு வங்காள போலீசாரிடம் வழங்கப்படமாட்டாது என கவர்னர் மாளிகை நேற்று தெரிவித்திருந்தது.

    இ-மெயில் அல்லது டெலிபோன் மூலமாக வேண்டுகோள் விடுக்கும் முதல் 100 பொதுமக்களுக்கு கவர்னரை மாளிகையில் இன்று காலை சிசிடிவி காட்சிகள் திரையிடப்படும் எனத் தெரிவித்திருந்தது.

    அந்த வகையில் இன்று காலை பொதுமக்களுக்கு சிசிடிவி வீடியோ காட்சியகள் திரையிடப்பட்டன.

    இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தில் "92 பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளை பார்வையிட வேண்டுகோள் விடுத்திருந்தனர். எனினும் சிலர்தான் சிசிடிவி காட்சிகளை பார்க்க வந்தனர். இந்த விவகாரத்தில் மக்கள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது." எனத் தெரிவித்துள்ளது.

    அந்த பெண் ஏப்ரல் 24-ந்தேதி மற்றும் மே 2-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் கவர்னர் மாளிகையில் வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

    மே 2-ந்தேதி மாலை 5 மணியளவில் வடக்குப் பகுதியில் உள்ள முதன்மை வாசல் பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் திரையிடப்பட்டன.

    பிரதமர் மோடி மே 3-ந்தேதி மேற்கு வங்காளத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அதற்கு முன்பாக மே 2-ந்தேதி கவர்னர் மாளிகையில் தங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாஜக நிர்வாகிகள் தன்னை மிரட்டி, திரிணமுல் கட்சியினருக்கு எதிராக போலியாக பாலியல் புகார் கொடுக்க வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
    • பாஜகவினரால் தனக்கு ஏற்பட வாய்ப்புள்ள அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு கோரி தனியாக ஒரு புகாரையும் அப்பெண் பதிவு செய்துள்ளார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் பெண்களில் சொத்துகளை அபகரித்ததாகவும், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் புகார் கொடுத்தனர்.

    இதனிடையே பாலியல் புகார் தொடுத்த பெண் ஒருவர் , காவல்நிலையத்தை அணுகி தனது புகாரை திரும்ப பெற்றுள்ளார்.

    பாஜக மகிளா மோர்ச்சா நிர்வாகிகள் தன்னை மிரட்டி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக போலியாக பாலியல் புகார் கொடுக்க வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    பாஜகவினர் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்துக்காக தன்னிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிய பாஜகவினர், பின்னர் அதனை தவறாகப் பயன்படுத்திக் கொண்டனர். எனக்கு எவ்வித பாலியல் வன்கொடுமையும் நடக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் தனது இந்த முடிவால் பாஜகவினரிடம் இருந்து தனக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது . ஆகவே அதிலிருந்து தனக்கு பாதுகாப்பு கோரி தனியாக ஒரு புகாரையும் அப்பெண் பதிவு செய்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்த ஸ்டிங் ஆபரேஷனில், பாஜக உள்ளூர் தலைவர் ஒருவர் சந்தேஷ்காலி விவகாரம் தங்கள் கட்சியின் நாடக நடவடிக்கை என்று பேசும் வீடியோ வெளியானது.

    இதனையடுத்து சந்தேஷ்காலி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

    • கவர்னர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார்.
    • காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    மேற்கு வங்காள கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம்பெண் ஒருவர் கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் போலீசார் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை 100 பொதுமக்களுக்கு காண்பிக்கப்படும். ஆனால் மம்தா பானர்ஜி மற்றும் மேற்கு வங்காள போலீசாரிடம் வழங்கப்படமாட்டாது என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக கவர்னர் மாளிகை தெரிவித்திருப்பதாவது:-

    பெண் புகார் கொடுத்த சம்பவம் தொடர்பாக சட்டவிரோதம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான மேற்கு வங்காள மாநில போலீசார் விசாரணையின் கீழ் சிசிடிவி காட்சிகளை கவர்னர் மாளிகை வழங்காது.

    பொதுமக்கள் இ-மெயில் அல்லது டெலிபோன் மூலமாக பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தால், முதல் 100 பொதுமக்களுக்கு கவர்னர் மாளிகையில் வைத்து சிசிடிவி காட்சிகள் காண்பிக்கப்படும். இது நாளை காலை நடைபெறும்.

    அரசியல்வாதி மம்தா பானர்ஜி மற்றும் அவரது காவல்துறையைத் தவிர, சிசிடிவி காட்சிகளை மேற்கு வங்கத்தில் உள்ள எந்த குடிமகனும் பார்க்க முடியும் என்று ஆளுநர் முடிவு செய்துள்ளார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக,

    மேற்கு வங்காள கவர்னராக இருப்பவர் ஆனந்த போஸ். இவர், கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம்பெண் ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த இளம்பெண் கடந்த 3-ந்தேதி முன்தினம் பரபரப்பு குற்றச்சட்டை தெரிவித்தார்.

    மேலும் இது குறித்து அவர் போலீசிலும் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பதவியில் இருக்கும் கவர்னர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள கவர்னர் ஆனந்த போஸ், இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த விவகாரத்தில் வாய்மையே வெல்லும் எனக்கூறி இருந்த அவர், இந்த குற்றச்சாட்டுகளால் அரசின் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான தனது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

    அதேநேரம் தனக்கு எதிராக இன்னும் அதிகமான புகார்களை எதிர்பார்ப்பதாக கவர்னர் ஆனந்தபோஸ் கூறியுள்ளார்.

    • தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதி கேலித்கூத்தாக மாறி வருகிறது.
    • அதற்கு மோடி நடத்தி விதி என மறுபெயரிட வேண்டும்.

    பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் வெறுப்பு பேச்சில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் மவுனம் காத்து வருகிறது. பா.ஜனதா ஆட்சியில் தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதி மோடி நடத்தை விதியாக மாறிவிட்டது என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    மோடி மற்றும் மற்ற பா.ஜனதா தலைவர்களின் வெறுப்பு நிறைந்த பேச்சுகள் குறைந்த சாதி இந்துக்கள், சிறுபான்மையினர், மற்ற விளிம்பு நிலையில் உள்ள பிரிவுகளில் உள்ள மக்களை மிரட்டுவதுபோன்று உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் மவுனம் காத்து வருகின்றது.

    தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதி கேலித்கூத்தாக மாறி வருகிறது. அதற்கு மோடி நடத்தி விதி என மறுபெயரிட வேண்டும். இருந்தபோதிலும், நாட்டு மக்களின் உரிமைகளை மீறும் ஒவ்வொரு செயலுக்கு எதிராகவும் நாங்கள் குரல் கொடுப்போம்.

    2014-ல் ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?. சமையல் எரிவாயு இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? பெண் குழந்தைகளை பாதுகாப்பதாக கூறிய அவருடைய "Beti Banchao Beti Padao" என்ன ஆனது?.

    அன்னபூர்னா பந்தர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் ஏழை பெண்களுக்கு 3 ஆயிரம் கொடுப்பதாக போலி வாக்குறுதியை அளித்து வருகிறார்கள். பா.ஜனதா 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்தவர்களுக்கான சம்பளத்தை மூன்று வருடங்களாக நிறுத்தி வைத்துள்ளது. பா.ஜ.க.வும் அரிசிக்கு ஒரு பைசா கூட விடுவிக்கவில்லை, எங்கள் ஏழைகள் நெருக்கடியை உணரக்கூடாது என்பதற்காக முழுத் தொகையையும் நாங்கள் தோளில் சுமந்துள்ளோம்.

    பா.ஜனதா 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால், தலித்கள் மற்றும் மற்ற சமூகத்தினரை நாட்டில் இருந்து வெளியேற்றும். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி தலித்கள், எஸ்டிகள், ஓபிசிக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் அடையாளத்தை இழக்க சதி செய்கிறது.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • மம்தா பானர்ஜியின் மந்திரி வீட்டில் இருந்து 50 கோடி பறிமுதல் செய்யப்பட்டள்ளது.
    • ஜார்க்கண்டில் காங்கிரஸ் எம்.பி. வீட்டில் இருந்து 350 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

    பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா இன்று மேற்கு வங்காள மாநிலம் புர்பா பர்தமான் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    மம்தா பானர்ஜி (Didi) பா.ஜனதாவை தோற்கடிக்க துர்காபூரில் 15 நாட்களாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 5 வருடங்கள் அவர் அங்கே தங்கியிருந்தாலும் துர்காபூரில் வெற்றி பெற முடியாது என மம்தா பானர்ஜிக்கு சவால் விடுகிறேன். தொழில்துறை நகரமான துர்காபூரில் குற்றவாளிகளுக்காக புதிய தொழிற்சாலை தொடங்கி வைத்துள்ளார். இந்தியா கூட்டணி 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது.

    மம்தா பானர்ஜியின் மந்திரி வீட்டில் இருந்து 50 கோடி பறிமுதல் செய்யப்பட்டள்ளது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் எம்.பி. வீட்டில் இருந்து 350 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

    நேற்றிரவு ஜார்க்கண்டில் மந்திரி வீட்டில் இருந்து 50 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி முதல்வர் மற்றும் பிரதமர் என 23 வருடங்கள் இருந்துள்ளார். அவர் மீது சிங்கிள் குற்றச்சாட்டு கிடையாது. அவர் மீது 25 பைசா அளவிற்குக் கூட குற்றச்சாட்டு கிடையாது.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது, மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரது மருமகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் வரவில்லை. ஏனென்றால், அவர்களுக்கு வாக்கு வங்கி குறித்து பயப்பட்டார்கள். ஊடுருவியவர்கள் அவர்களுடைய வாக்கு வங்கி. அவர்களை பார்த்து மம்தா பானர்ஜி பயப்பட்டார்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் ஷாஜகான் ஷேக் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது
    • சந்தேஷ்காலி ஸ்டிங் ஆபரேஷன் என்று ஒரு வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது

    மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் பெண்களில் சொத்துகளை அபகரித்ததாகவும், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    ஆனால் மேற்கு வங்காள மாநில போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பெண்கள் ஆயுதங்களுடன் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் இந்த விசயம் பூதாகரமாக வெடித்தது. இதனால் ஷாஜகான் ஷேக் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    தலைமறைவான அவரை மேற்கு வங்காள போலீசார் கைது செய்தனர். சந்தேஷ்காலி விவகாரத்தில் கைது செய்யவில்லை. ஜனவரி மாதம் சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவித்தது.

    இந்நிலையில் சந்தேஷ்காலி ஸ்டிங் ஆபரேஷன் என்று ஒரு வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், சந்தேஷ்காலியில் பாலியல் வன்கொடுமை சம்பவம் எதுவும் நடக்கவில்லை, மேற்கு வங்காள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் பொய்யாக ஏற்பாடு செய்யப்பட்டது என்று இருவர் பேசுகின்றனர்.

    அதில், "வங்காளத்தை அசிங்கப்படுத்த பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை இந்த வீடியோ அம்பலப்படுத்துகிறது. கொடூரமான பாலியல் வன்கொடுமைகள் முதல் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படுவது வரை அனைத்தையும் செய்வது மேற்கு வங்காள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரிதான். இதனை வங்காள மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்" என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோவை முதலமைச்சர் மம்தா பேனர்ஜி பகிர்ந்துள்ளார். அதில், சந்தேஷ்காலி ஸ்டிங் ஆபரேஷனை பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது. வங்காளத்தின் முற்போக்கு சிந்தனை மற்றும் கலாச்சாரத்தின் மீதான வெறுப்பில், நமது மாநிலத்தை இழிவுபடுத்துவதற்காக பாஜக சதித்திட்டத்தை தீட்டியுள்ளது. இந்தியாவை ஆண்ட எந்த கட்சியும் ஒரு மாநிலத்தையும் அதன் மக்களையும் இழிவுபடுத்த இந்த அளவுக்கு முயன்றதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

    • கவர்னர் மாளிகையில் இன்னும் மோசமான சதி தீட்டப்பட்டு உள்ளது.
    • கவர்னர் மாளிகைக்கு வந்த பிரதமர் மோடி இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள கவர்னராக இருப்பவர் ஆனந்த போஸ். இவர், கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம்பெண் ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த இளம்பெண் நேற்று முன்தினம் பரபரப்பு குற்றச்சட்டை தெரிவித்தார்.

    மேலும் இது குறித்து அவர் போலீசிலும் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பதவியில் இருக்கும் கவர்னர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள கவர்னர் ஆனந்த போஸ், இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த விவகாரத்தில் வாய்மையே வெல்லும் எனக்கூறி இருந்த அவர், இந்த குற்றச்சாட்டுகளால் அரசின் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான தனது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

    அதேநேரம் தனக்கு எதிராக இன்னும் அதிகமான புகார்களை எதிர்பார்ப்பதாக கவர்னர் ஆனந்தபோஸ் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு எதிரான தாராளமான குற்றச்சாட்டுகள் மற்றும் சில அரசியல் சக்திகளால் என் மீது அடிக்கடி வரும் இழிவுபடுத்தல்களை நான் வரவேற்கிறேன்.

    ஆனால் ஊழலை அம்பலப்படுத்துவதற்கும், வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கும் நான் எடுக்கும் உறுதியான முயற்சிகளில் இருந்து இந்த அபத்தமான நாடகங்கள் எதுவும் என்னைத் தடுக்கப் போவதில்லை.

    கவர்னர் மாளிகையில் இன்னும் மோசமான சதி தீட்டப்பட்டு உள்ளது.

    உங்கள் ஆயுதக் கிடங்கில் இருந்து அனைத்து ஆயுதங்களையும் வெளியே கொண்டு வாருங்கள். எனக்கு எதிராக பயன்படுத்துங்கள். நான் தயாராக இருக்கிறேன். எனது வங்காள சகோதர சகோதரிகளின் கண்ணியம் மற்றும் மரியாதைக்காக எனது போராட்டத்தை தொடர்வேன்.

    இவ்வாறு கவர்னர் ஆனந்த போஸ் கூறியிருந்தார்.

    ஆனால் இளம்பெண்ணின் பாலியல் குற்றச்சாட்டுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் மறுத்து உள்ளது. இது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

    இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தொழில்துறை மந்திரியுமான சஷி பஞ்சா கூறுகையில், 'இந்த பாலியல் குற்றச்சாட்டு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அதுவும் கவர்னர் மாளிகைக்கு உள்ளேயே நடந்திருப்பதை நம்பவே முடியவில்லை' என்று கூறினார்.

    ஒரு கவர்னர் மீது இத்தகைய புகார் இதுவரை நடந்ததில்லை எனக்கூறிய பஞ்சா, இது நிச்சயமாக கவர்னர் பதவியின் மாண்பை இழிவுபடுத்துவதாகவும், இது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இதற்கிடையே இளம்பெண் மீது தவறாக நடந்து கொண்டதற்காக கவர்னர் ஆனந்த போசுக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    புர்பா பர்தமான் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கவர்னர் மாளிகையில் பணியாற்றும் இளம்பெண் ஒருவர் நேற்று (நேற்று முன்தினம்) வெளியே வந்து, கவர்னரின் பாலியல் தொல்லை குறித்து பேசியிருக்கிறார். அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்தேன். அந்த பெண்ணின் கண்ணீர் என் நெஞ்சை நொறுக்கி விட்டது.

    கவர்னர் மாளிகையில் இனி வேலை செய்ய பயமாக இருப்பதாக கூறி அந்த பெண் அழுது கொண்டே வெளியே சென்றார். தான் அடிக்கடி அழைக்கப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

    பா.ஜனதாவினர் சந்தேஷ்காலி குறித்து பேசுவதற்கு முன், கவர்னர் மாளிகையில் பணியாற்றும் பெண்ணிடம் கவர்னர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பதற்கு பதிலளிக்க வேண்டும். இவர்கள் தான் நம் தாய், சகோதரிகளின் மானம் பற்றி பேசுகிறார்களா?

    கவர்னர் மாளிகைக்கு நேற்று (நேற்று முன்தினம்) இரவு வந்த பிரதமர் மோடி இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    கவர்னர் மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டு மேற்கு வங்காள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ஜிஹாத்துக்கு வாக்களியுங்கள். பா.ஜனதா அரசை வெளியேற்ற இது ஒன்றுதான் வழி- மரியம் ஆலம்.
    • மோடிக்கு எதிரான வாக்கு ஜிஹாத் அழைப்புக்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அமைதி காப்பதன் மூலம் அவர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலம் பர்தாமன்-துர்காபூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் இங்கே அனுபவிப்பதற்கான வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்கான என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புகிறேன். மேற்கு வங்காளத்தில் இந்துக்களை திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாம் தர குடிமக்களாக்கியுள்ளது. காங்கிரஸ் அரசியலமைப்பை மாற்றி தலித் மற்றும் ஓபிசி இடஒதுக்கீடுகளை பறித்து ஜிஹாதி வாக்கு வங்கிக்கு வழங்க விரும்புகிறது.

    மதம் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக அளிக்க முடியுமா? என காங்கிரஸ்க்கு சவால் விட்டிருந்தேன். ஆனால், அவர்கள் அமைதியாக உள்ளனர். காங்கிரசின் இளவரசர் பயந்து ரேபரேலியில் போட்டியிடுகிறார். மேற்கு வங்காள அரசுக்கு மனிதாபிமானத்தை விட சமரச அரசியல்தான் மிகவும் முக்கியமானது. இதனால் சந்தேஷ்காளி குற்றவாளி ஷேக் ஷாஜகானை பாதுகாத்து வருகிறது. மோடிக்கு எதிரான வாக்கு ஜிஹாத் அழைப்புக்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அமைதி காப்பதன் மூலம் அவர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சி 2024 தேர்தலில் இதுவரை எந்த காலத்திலும் மிகவும் குறைவான எண்ணிக்கை என்ற வகையில் மக்களவை தேர்தலில் வெற்றி பெறும்.

    காங்கிரஸ் தலைவர் மக்களவை உறுப்பினர் பதவியை விட்டுவிட்டு மாநிலங்களை மூலும் பாராளுமன்றத்திற்கு நுழைந்துள்ளார். இதன்மூலம் அக்கட்சியின் உடனடித் தோல்வியை முன்னதாகவே கண்டேன். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சமரச அரசியலுக்காக சிஏஏ-வை எதிர்க்கிறது. எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் சமரச அரசியலை மட்டுமே நம்புகின்றனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

    முன்னதாக உத்தர பிரதேச மாநிலம் பருக்காபாத் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாவல் கிஷோர் ஷக்யாவை ஆதரித்து சமாஜ்வாடி கட்சி தலைவரும், சல்மான் குர்ஷித்தின் உறவினருமான (Niece- சகோதரர் மகள், அல்லது சகோதரி மகள்) மரியா ஆலம் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது மரியா ஆலம் கூறியதாவது:-

    புத்திசாலிதனத்தோடு, உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக ஒன்றிணைந்து ஜிஹாத்துக்கு வாக்களியுங்கள். பா.ஜனதா அரசை வெளியேற்ற இது ஒன்றுதான் வழி. அரசியலமைப்பு, ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக மக்கள் பேசுகிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன். மனிதாபிமானம் (மனிதநேயம்) அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

    நாடு, அதன் அழகு மற்றும் கலாசாரம் ஆகியவற்றை பாதுகாக்க விரும்பினால், எந்தவிதமான உந்துதலையும் பெறாமல் புத்திசாலித்தனமாக வாக்களிக்களியுங்கள். பா.ஜனதாவுக்கு வாக்களிக்கும் முஸ்லிம்களை புறக்கணியுங்கள்.

    இவ்வாறு மரியம் ஆலம் பேசியிருந்தார்.

    இந்த வீடியோ வைரலாக பரவி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் மீதும், அவர் பேசியபோது அங்கிருந்து சல்மான் குர்ஷித் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டள்ளது.

    இது தொடர்பாக முன்னதாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி முஸ்லிம்கள் ஜிஹாத்துக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது. இது மிகவும் கல்வியறிவு பெற்ற குடும்பத்தில் இருந்து வந்துள்ளது. மதராஸில் இருந்து வந்த சிறுவனிடம் இருந்து வரவில்லை. அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி கூறிக் கொண்டு வருகிறது. இதன்மூலம் இந்தியா கூட்டணி அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை இழிவுப்படுத்தியுள்ளது.

    ஒருபுறம் SC, ST, OBC மற்றும் பொது பிரிவினரை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய கூட்டணி மறுபுறம் வாக்கு ஜிகாத் என்ற முழக்கத்தை எழுப்பி வருகிறது. அவர்களின் எண்ணம் எவ்வளவு ஆபத்தானது என்பதை இது காட்டுகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பதில் அளித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் ஜிஹாத் வாக்கு வங்கி எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ×