என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அடிமை ஆட்சிக்கு அதிமுகவே சாட்சி. அதற்கு மக்கள் தொடர்ச்சியாக அதிமுகவுக்கு பரிசளித்த பத்து தோல்விகளே சாட்சி!
- தமிழ்நாட்டை ஆதிக்கம் செய்ய நினைக்கும் பாஜக-விற்கும், அதன் அடிமை அதிமுகவிற்கும் தமிழ்நாட்டு மக்கள் 2026-லும் ‘Getout’ சொல்லப்போவது உறுதி!
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சட்டம் ஒழுங்கு குறித்து சட்டமன்றத்தில் 'பச்சைப் பொய்' பழனிசாமி சொன்ன பொய் குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் புள்ளி விவரங்களுடன் தோலுரித்தார்.
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! துயரங்களைக் கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடே சாட்சி! அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி! என அடிமை அதிமுக-வின் அவல ஆட்சியைப் பற்றி முதலமைச்சர் சொன்ன உண்மைகளுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் பழனிசாமி வழக்கம் போலவே திமுக-வை வசைபாட கிளம்பியிருக்கிறார்.
கரப்ஷன் ஆட்சியை நடத்திய பழனிசாமி, அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் பேசலாமா? பாஜக கூட்டணியில் சேர்ந்த போதே அதிமுகவின் வெர்ஷன் முடிந்துவிட்டது. கூட்டணி ஆட்சி என்று சொன்னபோதே பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது. அவரது குடும்பமே முடிவுரை எழுதிவிட்டது. பாஜக கூட்டணிக்கு பழனிசாமி பம்மியதற்கு மகன் மிதுனே சாட்சி!
தேர்தலுக்கு முன்பே மக்கள் தங்களுக்கு அளிக்கப்போகும் படுதோல்வியை மறைக்க விரக்தியில், கேலிக்கூத்துக்களை செய்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
அடிமை ஆட்சிக்கு அதிமுகவே சாட்சி. அதற்கு மக்கள் தொடர்ச்சியாக அதிமுகவுக்கு பரிசளித்த பத்து தோல்விகளே சாட்சி! தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் பாஜகவின் காலடியில் வீழ்ந்துக் கிடந்து அடிமை அரசியல் செய்து வரும் பழனிசாமியை 2026 தேர்தலில் மக்கள் தோற்கடித்து ஓட வைக்கப்போவது உறுதி!
தமிழ்நாட்டை ஆதிக்கம் செய்ய நினைக்கும் பாஜக-விற்கும், அதன் அடிமை அதிமுகவிற்கும் தமிழ்நாட்டு மக்கள் 2026-லும் 'Getout' சொல்லப்போவது உறுதி! இப்போது இருக்கிற 66 அதிமுக எம்.எல்.ஏ-கள் எண்ணிக்கையில் 2026-ல் 6 கூட கிடைக்காது.
திராவிட மாடல் 2.0, அமையப் போகும் வயிற்றெரிச்சலில் பழனிசாமி செய்யும் இந்த கோமாளிக்கூத்துகளைப் பார்த்தால், பரிதாபம்தான் வருகிறது.
'அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நின்றது' என சொல்லியிருக்கிறார் பழனிசாமி. சிறப்பான ஆட்சி நடத்தி இருந்தால், தொடர்ந்து 10 தேர்தல்களில் ஏன் அதிமுக தோற்றது? இடி அமின் ஆட்சியை நடத்திவிட்டு இம்சை அரசன் போல உளறி கொட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் மக்களின் ரத்தம் குடித்த ஆட்சி, பழனிசாமியின் ஆட்சி.
"அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்கணா...'' என அப்பாவி இளம் பெண்கள் கதறல் கேட்டால், அது பழனிசாமி ஆட்சிக்கு சாட்சி!
நீட் உள்பட பல்வேறு மாநில உரிமைகளை சுயநலத்துக்காக டெல்லியிடம் அடகு வைத்த அரசுக்கு பழனிசாமியே சாட்சி!
தலைவி வாழ்ந்த பங்களாவில் கொலை, கொள்ளை நடந்த ஆட்சிக்கு கொடநாடே சாட்சி!
அப்பாவையும் மகனையும் அடித்து கொன்றதற்கு சாத்தான்குளமே சாட்சி!
இப்படி பழனிசாமி ஆட்சியில் நடந்த அவலங்களையும் அக்கப்போர்களையும் எப்படி மறக்க முடியும். தமிழ்நாட்டு வரலாற்றில் பழனிசாமியின் நான்கரை ஆண்டு காலம் இருண்ட காலமாகதான் இருந்தது. அரசியலின் கரும்புள்ளி நீங்கள். இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் ஆட்சியை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் மனங்களையும் பிடிக்கவே முடியாது.
இவ்வாறு ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
- விஜயின் த.வெ.க. கொடியில் இரட்டை யானை இடம் பிடித்துள்ளது.
- பகுஜன் சமாஜ் கட்சி கொடியிலும் யானை இடம் பிடித்துள்ளதால் விஜய் கட்சி பயன்படுத்த தடைகோரி வழக்கு.
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியில் இரட்டை யானை இடம் பெற்றுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி யானை சின்னத்தை பயன்படுத்தி வருகிறது. இதனால் விஜய் கட்சியின் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடைவிதிக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை யாரும் பயன்படுத்த முடியாது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
- 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த மாதம் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
- மார்ச் 17-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. நாளை வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் சட்டசபை கூட்டத் தொடர் நிறைவடைந்தது. இதனைத் தொடரந்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மாதம் 14ஆம் தேதி தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 30 வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்திருந்தார்.
மார்ச் 17-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதமும், மார்ச் 21-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும் எனவும் சபாநாயகர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி நாளான இன்று உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி பிரதிநிதித்துவம் சட்ட முன்வடிவு, கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டன. கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
- மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது.
- புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் வழக்கு விசாரணையை படித்து பார்த்து தீர்ப்பு கூறவும் வாய்ப்பு உள்ளது.
கோவை:
பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியானதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.
முதலில் இந்த வழக்கை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த நிலையில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இவர்கள் மீது 2019 மே 21-ந் தேதி கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு வழக்கு விசாரணை தாமதம் ஆனது. அதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தொடங்கப்பட்டது.
மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. அறைக்கதவுகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர் தரப்பு இறுதிவாதம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு மே 13-ந் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.
இந்தநிலையில் நேற்று தமிழகம் முழுவதும் 77 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் பொள்ளாச்சி வழக்கை விசாரித்து வரும் நீதிபதி நந்தினிதேவியும் ஒருவர். அவர் கரூர் மாவட்ட குடும்ப நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.
நீதிபதி நந்தினிதேவி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அறிவித்த தேதியில் தீர்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வழக்கமான நடைமுறைப்படி தீர்ப்பை தள்ளிவைத்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டால் அவர் தீர்ப்பை எழுதி கையெழுத்திட்டு சென்றால் அந்த தீர்ப்பை புதிதாக பொறுப்பேற்கும் நீதிபதி அறிவிக்கலாம். அவ்வாறு தீர்ப்பு எழுதப்படவில்லை என்றால் புதிதாக பொறுப்பேற்கும் நீதிபதி மீண்டும் அரசு தரப்பு மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வக்கீல்களின் வாதங்களை கேட்டு தீர்ப்பை அறிவிக்கலாம் என மூத்த வக்கீல்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவையைச் சேர்ந்த மூத்த வக்கீல் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இந்த வழக்கு மிக முக்கியமான வழக்கு. மாவட்ட நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணை தீர்ப்பை அதுவரை விசாரித்த நீதிபதியே அறிவித்தால் தான் சரியானதாக இருக்கும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு வழக்குகளில் இதுபோன்ற கருத்துக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே பொள்ளாச்சி வழக்கு விசாரணையை விசாரித்த நீதிபதியே தீர்ப்பு வழங்கும் வரை தொடர வேண்டும் என்று வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் அல்லது வழக்கை தொடுத்த பாதிக்கப்பட்ட புகார்தாரர்கள் மனு செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கு சட்டத்தில் டேமணர் என்று கூறுவார்கள்.
அல்லது புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் வழக்கு விசாரணையை படித்து பார்த்து தீர்ப்பு கூறவும் வாய்ப்பு உள்ளது. அதேசமயம் விசாரணையை முழுவதுமாக படித்து சாட்சியங்கள் குறித்து ஆராய வேண்டியிருந்தால் தீர்ப்பின் தேதி தள்ளி போகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே மறுஉத்தரவு வரும் வரை நீதிபதி நந்தினிதேவி அதேகோர்ட்டில் பணிபுரிவார் என்று சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மகளிர் கோர்ட்டிற்கு தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே நீதிபதி நந்தினிதேவி, பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு அளித்த பிறகே இடமாறுதலாகி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பயணிகள் எடுத்து வருகின்ற உடமைகளை ஸ்கேனர் கருவி மூலம் தீவிரமாக பரிசோதனை செய்தனர்.
- பயணிகள் காத்திருக்கும் அறைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது.
சென்னை:
காஷ்மீரில் உள்ள பஹல்காம் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் தலைமையில் ரெயில் நிலையத்தின் அனைத்து நுழைவுப் பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பயணிகள் எடுத்து வருகின்ற உடமைகளை ஸ்கேனர் கருவி மூலம் தீவிரமாக பரிசோதனை செய்தனர்.
மேலும் போலீஸ் மோப்ப நாய் மூலம் ரெயில் நிலையத்தின் அனைத்து பிளாட்பாரங்கள், பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ரெயில் நிலையத்திற்கு வருகின்ற அனைத்து பயணிகளின் உடமைகளும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது.
இதே போல சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய நுழைவு வாசல்களில் பாதுகாப்பு படை போலீசார் குவிக்கப்பட்டு பயணிகள் உடமைகளை சோதனை செய்தனர். பயணிகள் காத்திருக்கும் அறைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது.
- கோவை மாநாடு விஜய்க்கு மட்டுமின்றி தொண்டர்கள் மத்தியிலும் புது உற்சாகத்தை கொடுத்து உள்ளது.
- மாநாடு முடிவடைந்ததும் த.வெ.க. தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்து மக்களை நேரடியாக சந்திக்க இருக்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு த.வெ.க. தலைவர் விஜய் கட்சியில் அடுத்தடுத்து அதிரடி அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக இதுவரை கட்சி ரீதியாக 114 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 6 மாவட்ட செயலாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.
அடுத்த கட்டமாக 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி தேர்வு பணி முடிவடைந்து இதுவரை 69 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி 5 மண்டலமாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கட்டமாக பல்வேறு இடங்களில் பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது. முதற்கட்டமாக கொங்கு மண்டலத்துக்குட்பட்ட 13 மாவட்டங்களுக்கான மாநாடு கடந்த 26, 27-ந்தேதிகளில் கோயம்புத்தூரில் நடந்தது.
மாநாட்டுக்காக கோவை வந்த விஜய்க்கு வழி நெடுகிலும் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர்.
வரலாறு காணாத கூட்டத்தால் கோவை மாநகரமே குலுங்கும் அளவிற்கு விஜய் வருகை பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
கோவை மாநாடு விஜய்க்கு மட்டுமின்றி தொண்டர்கள் மத்தியிலும் புது உற்சாகத்தை கொடுத்து உள்ளது.
இதை அடுத்து அடுத்த கட்டமாக மீதி உள்ள மண்டலங்களில் விரைவில் மாநாடு நடத்துவதற்கு விஜய் திட்டமிட்டு வருகிறார். இது பற்றி கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த்துடன் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. வரும் ஜூன் மாதத்துக்குள் மீதி உள்ள 4 மண்டல பூத் கமிட்டி மாநாட்டையும் நடத்தி முடிக்க விஜய் திட்டமிட்டு உள்ளார்.
மாநாடு முடிவடைந்ததும் த.வெ.க. தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்து மக்களை நேரடியாக சந்திக்க இருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க த.வெ.க. மகளிரணியினர் தமிழகம் முழுவதும் காலையிலும் மாலையிலும் வீடு வீடாக சென்று த.வெ.க. கொள்கைகளையும், மக்கள் பணிகளையும் மக்களிடையே கொண்டு சேர்த்து வருகின்றனர்.
இதுமட்டுமின்றி திராவிட கட்சிகள் மீது மக்களிடையே இருக்கும் எதிர்ப்புகளை த.வெ.க.வுக்கு சாதகமாக்கி கொள்ளும் நடவடிக்கைகளிலும் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- தமிழகத்தை சேர்ந்த 9 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
- இந்துக்கள் விழாவுக்கு கூட வாழ்த்து சொல்லாமல் மதவேற்றுமையை உருவாக்கி வருவது யார்?
சென்னை:
முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று பாரதிதாசன் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதன் பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் மின் தடை நிலவுகிறது. எங்கள் பகுதியில் இரவில் மட்டும் 3 முறை மின்தடை ஏற்பட்டது. முன்பெல்லாம் பகலில் ஓடிய அணில்கள் இப்போது இரவிலும் ஓடுகிறது. மின் துறை, மருத்துவ துறைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இல்லாத தடைகளை எல்லாம் சொல்லி தாண்டி கொண்டிருப்பது போல் கூறுகிறார்கள். முதலில் மின்தடையை நீக்குங்கள்.
தி.மு.க. அரசு எல்லா துறைகளிலும் தோற்று வருகிறது. இப்போது மாநில சுயாட்சி பற்றி பேசுகிறார்கள். 1969-லேயே முதலமைச்சரின் அப்பா மரியாதைக்குரிய கலைஞர் முதல்வராக இருந்த போது மாநில சுயாட்சிக்காக ராஜ மன்னார் கமிட்டி அமைத்தார்கள். அந்த பரிந்துரையை தி.மு.க.வே பின்பற்றவில்லை. காரணம் அப்போது காங்கிரசுக்கு தி.மு.க. அடிமையாக இருந்தது. இப்போதும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள்.
தமிழகத்தை சேர்ந்த 9 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆட்சிக்கு வருவதே மக்கள் பணத்தை சுரண்டுவதற்கு தான். பா.ஜ.க. பிரிவினையை ஏற்படுத்துவதாக கூறி வருகிறார்கள். உண்மையில் மக்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தி வருவது தி.மு.க. தான். பாரதியை கொண்டாடியவர் பாரதிதாசன். இன்று பாரதிதாசனை கொண்டாடும் நீங்கள் பாரதியை கொண்டாடதது ஏன்? கம்பனை கொண்டாடதது ஏன்? தமிழிலும் வேற்றுமையை விதைத்தீர்கள். இந்துக்கள் விழாவுக்கு கூட வாழ்த்து சொல்லாமல் மதவேற்றுமையை உருவாக்கி வருவது யார்? வக்பு வாரியம் மூலம் அப்பாவி ஏழைகளின் பணம் சுருட்டப்படுகிறது. வக்பு பணம் சாமானியர்களுக்கு பயன்படுத்தப்பட்டு இருந்தால் இஸ்லாமியர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள் ஆகி இருக்க வேண்டும். ஆனால் அவர்களை வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி கொள்கிறார்கள். உண்மையை உணர்ந்த மக்கள் இதை முறியடிப்பார்கள். பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியை விமர்சிக்கிறார்கள். உங்கள் கூட்டணி நிலையை பாருங்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திருமாவளவன் நிலை என்ன என்பதை பாருங்கள். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது.
விஜய் இப்போதான் பூத் கமிட்டி கூட்டத்துக்கு இறங்கி வந்திருக்கிறார். அதன்பிறகு தான் அவரது அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
பாரதிதாசன் கவிதையில் 'செந்தாமரை காடு பூத்தது' என்று ஒரு வரி உண்டு. அதே போல் தாமரை பூத்த தமிழ்நாடாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 30 நிமிட போராட்டத்திற்கு பின் சிறுமியை மீட்டனர்.
- தனியார் பள்ளிக்கு வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மற்றும் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
மதுரை:
மதுரை கே.கே. நகர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் மழலையர் பள்ளியில் படிக்கும் ஆருத்ரா என்கிற 4 வயது சிறுமி பள்ளி தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார்.
இதுகுறித்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அங்கு வந்து பார்த்தபோது தொட்டி ஆழமாக இருந்ததாலும், தண்ணீர் நிரம்பி இருந்ததாலும் சிறுமியை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் 30 நிமிட போராட்டத்திற்கு பின் சிறுமியை மீட்டனர். தண்ணீரில் மூழ்கியதால் மயங்கிய நிலையில் இருந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறிது நேரத்திலேயே சிறுமி ஆருத்ரா பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் திவ்யா மற்றும் 4 ஆசிரியைகளை கைது செய்து அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுமி பலியான விவகாரத்தில் மதுரை கே.கே. நகர் தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தனியார் பள்ளிக்கு வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மற்றும் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
பள்ளிக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்தனர்.
- ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14-ந்தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.
- ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன.
சென்னை:
தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14-ந்தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.
அதில், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியதையும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என நேர கட்டுப்பாடு விதித்து இருந்தது.
இதை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து தரப்பு சார்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
- 4 இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.
- தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க கம்பி வேலி அமைக்கப்பட உள்ளது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு எதிரே பள்ளிவிளங்கால் தடுப்பணை உள்ளது. அணையில் இருந்து தடுப்பணை வழியாக பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
ஆழியாறு வரும் சுற்றுலாபயணிகள் தடுப்பணையில் இறங்கி குளிக்கிறார்கள். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஆறு மற்றும் தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தடையை மீறி குளித்த சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து தடுப்பணையில் சுற்றுலாபயணிகள் குளிப்பதை தடுக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆழியாறு வரும் சுற்றுலா பயணிகள் தடுப்பணை, அணைக்குள் இறங்கி குளிக்கின்றனர். ஏற்கனவே அணை, தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தடையை மீறி செல்வதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து தடுப்பணை, அணை பகுதிகளில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. மேலும் ஆழியாறு அறிவுத்திருக்கோவிலுக்கு எதிரே உள்ள பகுதி, பாலம், பள்ளி விளங்கால் தடுப்பணைக்கு செல்லும் பகுதி, தடுப்பணை என 4 இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க கம்பி வேலி அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிதி அரசிடம் பெறப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 12 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிப்பார்கள்.
- இந்திரவிமானத்தில் எழுந்தருளும் மீனாட்சி 4 மாசி வீதிகளில் எழுந்தருளி திக்கு விஜயம் செய்கிறார்.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (29-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமி சன்னதி முன்பாக உள்ள தங்ககொடி மரம் பல வண்ண மலர்கள், மக்காச்சோளம் உள்ளிட்ட நவதானியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
காலை 10 மணியளவில் பிரியாவிடையுடன் சுந்தரே சுவரரும், மீனாட்சி அம்மனும் கொடி மரம் முன்பு எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து 10.30 மணி முதல் 10.59 மணிக்குள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி-அம்பாள் முன்னிலையில் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதி முன்பாக உள்ள கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
12 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிப்பார்கள்.
விழாவின் முதல் நாளான இன்று இரவு கற்பக விருட்சம்-சிம்ம வாகனத்தில் சுவாமி-அம்பாள் 4 மாசி வீதிகளில் எழுந்தருளுகிறார்கள்.
2-ம் நாளில் (30-ந்தேதி) காலையில் தங்கச்சப்பரத்திலும், இரவு பூதம்-அன்ன வாகனத்தில் வீதி உலா வருகிறார்கள். 1-ந்தேதி காலையில் தங்கச்சப்பரத்திலும், இரவு கைலாசபர்வதம்-காமதேனு வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.
4-ம் நாளில் (2-ந்தேதி) காலை 9 மணிக்கு தங்க பல்லக்கில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து சின்னடை தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் பாகற்காய் மண்டகபடியில் எழுந்தருளுகிறார்கள். மாலை 6 மணி அங்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் சுவாமி-அம்பாள், மாலை மீண்டும் கோவிலுக்கு சென்றடைகிறார்கள்.
5-ம் நாள் (3-ந்தேதி) காலையில் தங்க சப்பரத்தில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் மாசி வீதிகள் வழியாக வடக்கு மாசி வீதியில் உள்ள ராமாயண சாவடியில் எழுந்தருளுகிறார்கள். இரவு தங்கக்குதிரை வாகனத்தில் வடக்கு மாசி வீதி, கீழமாசி வீதி, அம்மன் சன்னதி வழியாக கோவிலுக்கு சென்றடைகிறார்கள்.
6-ம் நாள் (4-ந்தேதி) காலை 7.30 மணிக்கு தங்க சப்பரத்தில் வீதி உலாவும், இரவு தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபத்தில் வீதி உலாவும் நடக்கிறது. 7-ம் நாள் (5-ந்தேதி) காலை கங்காளநாதர் மர சிம்மாசனத்தில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் 4 மாசி வீதி வழியாக உலா வருகின்றனர். இரவு நந்திகேஸ்வரர், யாழி வாகனத்தில் வீதி உலா புறப்பாடு நடக்கிறது.
8-ம் நாள் (6-ந்தேதி) காலை தங்க பல்லக்கில் சுவாமி-அம்பாள் அருள் பாலிக்கின்றனர். இரவு 7.35 மணிக்கு மேல் மீனாட்சி அம்மன் சன்னதி முன்புள்ள ஆறுகால் பீடத்தில் மதுரை நகரின் ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
அப்போது அம்மனுக்கு கிரீடம் சாற்றி செங்கோல் கொடுக்கும் வைபவம் நடக் கிறது. மறுநாள் (7-ந்தேதி) காலை மரவர்ண சப்பரத்தில் வீதி உலா நடக்கிறது. அன்று மாலை அஷ்டதிக்கு பாலகர்களை எதிர்த்து மீனாட்சி அம்மன் வெற்றி பெறும் திக்குவிஜயம் நடக்கிறது. இந்திரவிமானத்தில் எழுந்தருளும் மீனாட்சி 4 மாசி வீதிகளில் எழுந்தருளி திக்கு விஜயம் செய்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வருகிற 8-ந்தேதி விமரிசையாக நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் உலா வருகிறார்கள். காலை 8.15 மணி முதல் 9.15 மணிக்குள் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மிதுன லக்னத்தில் விமரிசையாக நடைபெறுகிறது. அன்று இரவு மணக்கோலத்தில் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வருகிறார்கள்.
மறுநாள் (9-ந்தேதி) அதிகாலை 5.05 மணி முதல் 5.28-க்குள் சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங் குகிறது. பெரிய தேரில் சுந்தரேசுவரரும், சிறிய தேரில் மீனாட்சியும் எழுந்தருளுவார்கள். பக்தர்கள் வெள்ளத்தில் 4 மாசி வீதிகளில் தேர் ஆடி அசைந்து வரும் நிகழ்வு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அன்று இரவு சப்தவர்ண சப்பரத்தில் வீதி உலா நடக்கிறது.
12-ம் நாள் இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள். இத்துடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் மே12-ந்தேதி அதிகாலை நடைபெறவுள்ளது.
- நடுவட்டம் போலீஸ் நிலையத்தில் காவலுக்கு இருந்த போலீஸ்காரர் ஒருவர் சிறுத்தை வெளியே செல்லும் காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
- உடனடியாக போலீஸ் நிலையத்தின் வாசல் கதவை சாத்திவிட்டு சென்றார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த நடுவட்டம் பகுதியில் சமீப நாட்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை சம்பவத்தன்று இரவு நடுவட்டம் பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது.
தொடர்ந்து ஒவ்வொரு அறையாக சென்று சாப்பிடுவதற்கு ஏதேனும் உணவு கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தது. ஆனாலும் போலீஸ் நிலையத்தில் சிறுத்தைக்கு தீனி எதுவும் சிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுத்தை பின்னர் மெதுவாக வெளியே புறப்பட்டு சென்றது.
இதற்கிடையே நடுவட்டம் போலீஸ் நிலையத்தில் காவலுக்கு இருந்த போலீஸ்காரர் ஒருவர் சிறுத்தை வெளியே செல்லும் காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் உடனடியாக போலீஸ் நிலையத்தின் வாசல் கதவை சாத்திவிட்டு சென்றார்.
இந்த காட்சிகள் நடுவட்டம் போலீஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இது தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதற்கிடையே நடுவட்டம் போலீஸ் நிலையத்துக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் அங்கு வேலை பார்க்கும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ச்சியாக காணப்படுகிறது. எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் அடிக்கடி ரோந்து சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதுடன், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.






