என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழகத்தின் தூய்மை நகரங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.
    • கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, மேற்கண்ட தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

    செங்கல்பட்டு:

    பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறார்.

    அதன் அடிப்படையில் தூய்மை பராமரிப்பில் சிறப்பாக செயல்படும் நகரங்களைக் கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்கு விக்கும் வகையில், 'ஸ்வச் சர்வேக்ஷன்' என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016-ம் ஆண்டில் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

    'ஸ்வச் பாரத் அபியான்' திட்டத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்ட இதன்படி, தேசிய அளவில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு ஆண்டும், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான ஸ்வச் சர்வேக்ஷன் முடிவுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார். அதன்படி தமிழகத்தின் தூய்மை நகரங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 20 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன.

    இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 நகராட்சிகள், ஒரு மாநகராட்சி, 6 பேரூராட்சிகள் என 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இதில் மறைமலைநகர் நகராட்சி தரவரிசை பட்டியலில் முதல் இடமும், மதுராந்தகம் 57-வது இடமும், செங்கல்பட்டு 93-வது இடமும் பெற்றுள்ளன. தாம்பரம் மாநகராட்சி 13-வது இடமும், பேரூராட்சிகளில் கருங்குழி 135-வது இடமும், திருப்போரூர் 208-வது இடமும், அச்சிறுப்பாக்கம் 308-வது இடமும், திருக்கழுக்குன்றம் 322-வது இடமும், மாமல்லபுரம் 369-வது இடமும், இடைக்கழிநாடு 540-வது இடமும் பிடித்துள்ளன.

    மறைமலைநகர் நகராட்சி தமிழக அளவிலும் முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. குப்பையை கையாளுதல், பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகித்தல், குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்தல், தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பு போன்ற கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, மேற்கண்ட தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

    • ஏதாவது ஒரு தொகுதியை தி.மு.க. கூட்டணியில் கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதில் கமல் கட்சியினர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.
    • 3 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை அமைத்து கட்சியை பலப்படுத்தும் பணிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் செயலாற்றி வருகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை சந்திக்க முழு வீச்சில் தயாராகி வருகிறது.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சி, 3 தொகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறது. தென் சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 பாராளுமன்றத் தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை தி.மு.க. கூட்டணியில் கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதில் கமல் கட்சியினர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    இந்த 3 தொகுதிகளில் எந்த தொகுதியை ஒதுக்கினாலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பம்பரமாக சுழன்று செயல்பட்டு வருகிறார்கள்.

    மதுரை, கோவை, தென் சென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை அமைத்து கட்சியை பலப்படுத்தும் பணிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் செயலாற்றி வருகிறார்கள்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்று உள்ள நிலையில் இந்த கட்சிகளுக்கும் அவர்கள் கேட்கும் சீட்டை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க. தலைமை உள்ளது.

    தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையே கூட்டணி கட்சிகள் கேட்பதால் யார்-யாருக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது பற்றி தி.மு.க. தலைமை ஆலோசித்து முடிவை அறிவிக்கும். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின்றன. அப்படி ஒதுக்கப்படும் தொகுதியில் அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட உள்ளார்.

    • வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
    • கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன். வார்டு உறுப்பினர் வானதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்போரூர்

    கேளம்பாக்கம் சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் கேளம்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹரிகிருஷ்ணன். வெங்கடேசன், கங்காதரன், சுற்றுச்சூழல் பொது மேலாளர் லாரன்ஸ். கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன். வார்டு உறுப்பினர் வானதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கும், சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டியவர்களுக்கும் பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி பாராட்டினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்.
    • பணியாற்ற விருப்பம் இல்லாதவர்கள் செலுத்த வேண்டிய தொகையும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

    முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற விதியை தளர்வு செய்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

    முன்னதாக முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். தற்போது அது ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பம் இல்லாதவர்கள் செலுத்த வேண்டிய தொகை 40 லட்சம் ரூபாய் என்பதில் இருந்து 20 லட்சம் ரூபாயாக குறைத்தும், பிஜி டிப்ளோமா மாணவர்கள் 20 லட்சத்திற்குப் பதிலாக 10 லட்சம் ரூபாய் செலுத்தினால் போதும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு விரைவு பஸ்கள் மற்றும் பிற போக்குவரத்து கழகங்களை சார்ந்த பேருந்துகளுக்கு முன்பதிவு நடந்து வருகிறது.
    • சென்னையில் இருந்து 80 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்து பயணத்தை தொடங்குகின்றனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் 14-ந் தேதி வரை அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு பஸ்கள் மற்றும் பிற போக்குவரத்து கழகங்களை சார்ந்த பேருந்துகளுக்கு முன்பதிவு நடந்து வருகிறது.

    பொங்கல் பண்டிகைக்கு இதுவரையில் இல்லாத அளவுக்கு 1.25 லட்சம் பேர் இந்த ஆண்டு முன்பதிவு செய்திருந்தனர். சென்னையில் இருந்து 80 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்து பயணத்தை தொடங்குகின்றனர்.

    பிற நகரங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும் முன்பதிவு செய்துள்ளனர்.

    • சென்னை தொகுதிக்கான ஆலோசனை கூட்டம் சோழிங்கநல்லூரில் நடந்தது.
    • பா.ஜனதாவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக பா.ஜனதா கட்சி தேசிய அளவில் பல்வேறு வியூகங்களை வகுத்து பணியாற்றி வருகிறது.

    கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறிய பிறகு பெரிய அளவிலான கட்சிகள் எதுவும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்கவில்லை. பா.ம.க., தே.மு.தி.க. உள்பட சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து தனி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதற்கான முயற்சிகள் நடக்கிறது.

    அதே நேரம் கூட்டணி அமைந்தாலும், அமையாவிட்டாலும் தனித்து நின்றும் தேர்தலை சந்திக்கும் வகையில் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் அண்ணாமலை தீவிரம் காட்டுகிறார்.

    "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை செய்து வரும் அண்ணாமலை இதுவரை 146 சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்றுள்ளார். இந்த யாத்திரைக்கு அனைத்து பகுதிகளிலும் மிகுந்த வரவேற்பு கிடைத்து உள்ளது. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஏராளமான மக்கள் திரண்டு அவரது பேச்சை கேட்கிறார்கள். இது பா.ஜனதாவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து கட்சி மேலிடத்துக்கு தெரிவித்துள்ளார்கள்.


    தென் சென்னை தொகுதிக்கான ஆலோசனை கூட்டம் சோழிங்கநல்லூரில் நடந்தது.

    கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அமைப்பாளர் கரு.நாகராஜன், இணை அமைப்பாளர் கராத்தே தியாகராஜன், பொறுப்பாளர் பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், சாய்சத்யன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் என அனைத்து தரப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

    தென்சென்னை தொகுதியில் முன்னாள் பா.ஜனதா தேசிய தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார்.

    அதே போல் இல.கணேசன் தனித்து போட்டியிட்டு ஒரு லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்றிருந்தார். எனவே வருகிற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் வகையில் திட்டமிட்டு பணியாற்றும்படி நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.

    ஒவ்வொரு பூத்துக்கும் 13 பொறுப்பாளர்கள் கொண்ட கமிட்டி அமைத்திருக்க வேண்டும். இன்னும் நிறைவடையாத பூத்களில் பணிகளை உடனே முடிக்க வேண்டும்.

    பாக பொறுப்பாளர்கள் தனது பகுதியில் உள்ள வாக்காளர்கள் வீடுகளில் நேரடி தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

    இந்த அறிமுகம் மூலம் நட்பு வட்டாரத்தை உருவாக்குங்கள். அதே நேரம் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து, மத்திய அரசு திட்டங்களை தகுதிக்கு ஏற்ப கிடைக்க செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

    இக்கூட்டம் முடிந்ததும் மத்திய சென்னை தொகுதி நிர்வாகிகள் கூட்டத்திலும் அண்ணாமலை பங்கேற்கிறார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தொகுதி பொறுப்பாளர்கள் வினோஜ் செல்வம், சுமதி வெங்கடேஷ், மாவட்ட தலைவர் தனஞ்செயன் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

    • சந்தையில் ஆடுகள், 15 ஆயிரம் முதல், 18 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.
    • சந்தையில் நாட்டுக்கோழிகள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு கிராமப்புறங்களில் சாமிக்கு ஆடு, கோழிகள் பலியிட்டு வணங்குவது வழக்கம். அதன்படி வழக்கமாக நடைபெறும் குந்தராப்பள்ளி வாரசந்தையில் வழக்கத்தை விட ஆடுகள், கோழிகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

    ஆடுகளை விற்கவும், வாங்கி செல்லவும் விவசாயிகளும், வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக அளவில் திரண்டனர். வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். குந்தாரப்பள்ளி சாலையில் ஆடுகளை ஏராளமான சரக்கு வாகனங்களில் கொண்டு வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சந்தையில் ஆடுகள், 15 ஆயிரம் முதல், 18 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இன்று ஒரே நாளில் 6 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையான போதும், வெள்ளாடுகள் விற்பனையான அளவிற்கு, செம்மறி ஆடுகள் விற்பனை ஆகவில்லை எனவும் வியாபாரிகள் கூறினர். இதேபோல் சந்தையில் நாட்டுக்கோழிகள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் ஆடுகள் மற்ற நாட்களை விட நல்ல விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 27வது தேசிய இளைஞர் விழாவை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
    • பல்வேறு மாநிலங்கள் தங்களின் தனித்துவமான கலாச்சார வரலாற்றை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    சுவாமி விவேகானந்தர் ஒரு பிரபல ஆன்மீகத் தலைவர், இந்து துறவி, தத்துவ வாதி, எழுத்தாளர். 1863-இல் நரேந்திரநாத் தத்தாவாகப் பிறந்த விவேகானந்தர், பின்னர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் மாணவராகவும், வேதாந்தம் மற்றும் யோகா போன்ற இந்தியக் கருத்துகளின் உலகளாவிய செய்தித் தொடர்பாளராகவும் ஆனார். சுவாமி விவேகானந்தர் 19 ஆம் நூற்றாண்டில் கொல்கத்தாவில் தனது குருவின் போதனைகளின் அடிப்படையில் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.

    ராமகிருஷ்ணா மிஷன் என்று அழைக்கப்படும் ஆன்மீக இயக்கம், வேதாந்தத்தின் பண்டைய இந்து தத்துவத்தின் அடிப்படையில் நடைபெற்றது. இந்தியா ,1984 ஆம் ஆண்டு விவேகானந்தரின் பிறந்தநாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாட முடிவு செய்தது, அதன்பிறகு ஜனவரி 12, 1985 அன்று முதன்முதலில் கொண்டாடப்பட்டது. விவேகானந்தரின் தத்துவம் மற்றும் அவர் வாழ்ந்த நாட்களில் செய்த செயல், பிரசாரம், கொள்கைகள் இந்திய இளைஞர்களுக்கு உத்வேகத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கும் என்று அரசாங்கம் அவர் பிறந்தநாளை இளைஞர் தினமாக கொண்டாட முடிவு செய்தது.

    பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் போது, விவேகானந்தர் தற்கால இந்து மதத்தை மீண்டும் கொண்டு வர உதவியதற்காகவும், தேசியவாத உணர்வை ஊக்குவிப்பதற்காகவும் புகழ் பெற்றார். அவர் 1893 இல் சிகாகோவில் தனது புகழ்பெற்ற உரைக்காக மிகவும் அங்கீகரிக்கப்பட்டார். அங்கும் அவர் மேற்கத்திய உலகிற்கு இந்து மதத்தை அறிமுகப்படுத்தினார். சிகாகோவில் உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றிய போது, அவர் பார்வையாளர்களை "அமெரிக்காவின் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள்" என்று குறிப்பிட்டார். இது இந்திய கலாச்சாரத்தை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு செல்வதில் ஒரு முக்கியமான தருணமாக இருந்தது. சுவாமி விவேகானந்தர் ஜூலை 4, 1902 இல் இறந்தார்.

    விவேகானந்தர் தனது புத்தகத்தில் "இந்து வேதங்களின்படி, மாட்டிறைச்சியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது" என்று குறிப்பிடுகிறார். சுபாஷ் சந்திர போஸ் விவேகானந்தரை "நவீன இந்தியாவை உருவாக்கியவர்" என்று குறிக்கிறார் மற்றும் மகாத்மா காந்தி விவேகானந்தரின் புத்தகங்களைப் படித்த பிறகு, நாட்டின் மீதான அன்பு அவருக்கு ஆயிரம் மடங்கு வளர்ந்ததாகக் கூறுகிறார்.


    இந்த நாளில் சுவாரஸ்யமான உரைகள், இசை நிகழ்ச்சிகள் முதல் தகவல் கருத்தரங்குகள் மற்றும் மாணவர் மாநாடுகள் வரை நாடு முழுவதும் பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. யோகா பயிற்சி, விளக்கக்காட்சிகள் மற்றும் எழுத்துப் போட்டிகள் போன்ற கல்வி கருத்தரங்குகள் மற்றும் போட்டிகள் இளம் மனங்களை இன்னும் அதிகமாக ஈடுபடுத்த நடைபெறுகிறது. இன்று, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 27வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். மேலும் அவர் நாட்டு இளைஞர்களிடையே உரையாற்றுவார். இந்த ஆண்டின் ஐந்து நாள் திருவிழாவின் கருப்பொருள் "இளைஞர்களால், இளைஞர்களுக்காக" என்பதே, இதில் பல்வேறு மாநிலங்கள் தங்களின் தனித்துவமான கலாச்சார வரலாற்றை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    • பொது மக்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • பழி வாங்கும் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து துறை கூடுதல் முதன்மை செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் 9-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வேலை நிறுத்தத்தை தடை செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.

    விசாரணையில் பொது மக்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 11-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி விட்டனர்.


    வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என கோர்ட்டில் அரசு தரப்பில் உத்தரவாதம் அளித்து அதன் அடிப்படையில் நீதிமன்றமும் உத்தரவிட்டு உள்ளது.

    எனவே யார் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, அவர்கள் ஏற்கனவே செய்த பணியை தொடர்ந்து செய்ய அனுமதிக்க வேண்டும். பழி வாங்கும் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது.

    மேலும் 19-ந்தேதி நடைபெறும் சமரச பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ள நியாயமான கோரிக்கைகளை தீர்த்து தர முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டதற்கு, "இது அரசின் முடிவு. கோர்ட்டு உத்தரவை மதித்து நடவடிக்கை கைவிடப்படும். தற்போது பொங்கல் பஸ்கள் இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறோம்"என்றார்.

    • வருகிற 15, 16, 17-ந் தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் செஞ்சியில் ஆட்டு சந்தை இன்று காலையில் களை கட்டியது.
    • சந்தை தொடங்கிய 3 மணிநேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பழமையான இந்த வாரச்சந்தையில் ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை தழைகளை மேய்ந்து வளர்வதால், இவைகளை வாங்குவதற்கு தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் வருகிற 15, 16, 17-ந் தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் செஞ்சியில் ஆட்டு சந்தை இன்று காலையில் களை கட்டியது. அதிகாலை 3 மணி முதலே செஞ்சி விவசாயிகள், வெளி மாவட்ட வியாபாரிகள் தங்களது ஆடுகளை கொண்டு வந்தனர்.

    ஆட்டுச்சந்தையில் வெள்ளாடு ஜோடி ரூ.7 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. இதனை வாரச்சந்தைக்கு வந்த பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். சந்தை தொடங்கிய 3 மணிநேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    • அங்கிட் திவாரி கடந்த 40 நாட்களுக்கு மேலாக மதுரை மத்திய சிறையில் உள்ளார்.
    • வழக்கு விசாரணையில் தங்களையும் சேர்க்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணை சூப்பிரண்டாக இருப்பவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு அமலாக்கத்துறையிடம் வந்துவிட்டதாகவும், வழக்கில் இருந்து விடுவிக்க மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்பட்டது.

    இதனைதொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி ரூ.20 லட்சத்தை டாக்டர் சுரேஷ்பாபுவிடம் இருந்து அங்கிட் திவாரி வாங்கிக்கொண்டு தப்ப முயன்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் மதுரையில் உள்ள அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்த சில ஆவணங்களையும் கைப்பற்றினர்.

    இதனால் அவரை காவலில் எடுத்து விசாரித்துவிட்டு மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அங்கிட் திவாரி தனக்கு ஜாமீன் கேட்டு திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட், மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    அவருக்கு ஜாமீன் வழங்க லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே 2 முறை அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நேற்று 3-வது முறையாக ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வருகிற 24-ந்தேதி வரை அவருக்கு காவல் நீட்டிக்கப்படுகிறது.

    அங்கிட் திவாரி கடந்த 40 நாட்களுக்கு மேலாக மதுரை மத்திய சிறையில் உள்ளார். அவரிடம் துறைரீதியான விசாரணை நடத்த வேண்டும் என்றும், எனவே காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் அமலாக்கத்துறையினர் திண்டுக்கல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு விசாரணையில் தங்களையும் சேர்க்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகனா அமலாக்கத்துறை தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினந்தோறும் காஞ்சிபுரத்தை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். காஞ்சிபுரம் மட்டும் இன்றி அருகில் உள்ள திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த ஆஸ்பத்திரியில்அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, நுண்கதிர் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது, மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன.

    காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போதி கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுபவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இங்குள்ள காய்ச்சலுக்கான வார்டில் நோயாளி ஒருவருக்கு குளுக்கோஸ் ஏற்றும் பாட்டிலை தொங்கவிட உரிய ஸ்டாண்டு இல்லாததால் அதனை துடைப்பத்தின் நுனியில் கட்டி வைத்து பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மருத்துவ கட்டமைப்பில் பெரும் வளர்ச்சி அடைந்து உள்ள நிலையில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்தியில் நிலவும் இந்த நிலை பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இங்குள்ள காய்ச்சலுக்கான வார்டுகள் முறையாக பராமரிக்கப்படாமல் காணப்படுகிறது. நோயாளிகளுக்கான படுகையிலும் போதிய வசதிகள் இல்லை. குளுக்கோஸ் மற்றும் நரம்பு வழியாக ஏற்றும் மருந்துகளை தொங்கவிடுவதற்காக பயன்படுத்தும் ஸ்டாண்டுகள் பெரும்பாலான படுக்கைகளில் இல்லை.

    இதனால் தரையை துடைக்க பயன்டுத்தும் துடைப்பத்தின்(மாப்)பின் அடிப்பகுதியில் உள்ள துணியை நீக்கி விட்டு அதன் கம்புகளை மட்டும் நோயாளிகளின் படுக்கையுடன் கட்டி வைத்து உள்ளனர். அதில் குளுக்கோஸ் மற்றும் நரம்பு வழியாக செலுத்தும் மருந்து பாக்கெட்டுகளை தொங்கவிட்டு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    பல நோயாளிகளின் படுக்கையில் இந்த துடைப்ப நுனி கட்டி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் பல இடங்களில் அங்குள்ள மின்விளக்கு சுவிட்சுகள் பெயர்ந்து தொங்கியபடி ஆபத்தான நிலையில் உள்ளது.


    கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த படி உள்ளது. ஆனால் காய்ச்ச்சல் வார்டில் போதிய படுக்கை இல்லாததால் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொது வார்டுக்கு வரும் இதய நோயாளிகள், சிறுநீரகப் பிரச்சினையுடன் வரும் நோயாளிகள் சிரமம் அடையும் நிலை ஏற்பட்ட உள்ளது.

    இது தொடர்பாக காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த நோயாளி ஒருவர் கூறும்போது, காய்ச்சல் வார்டில் ஒவ்வொரு படுக்கையிலும் குளுக்ககோஸ் மற்றும் மருந்து பாக்கெட்டுகளை தொங்க விட துடைப்பத்தின் நுனிகள் மட்டுமே உள்ளன. இதுபற்றி ஊழியர்களிடம் கேட்டால் எந்த பதிலும் கூறுவதில்லை. ஆஸ்பத்தரியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.

    செய்யூரைச் சேர்ந்த மற்றொரு நோயாளி கூறும்போது, துடைப்பத்தின் கீழ்பகுதியில் உள்ள துணி இருந்த பகுதியை அகற்றி விட்டு அதனை ஸ்டாண்டாக பயன்படுத்தி வருகிறார்கள். நோயாளிகளின் படுக்கையில் இந்த நுனிகளில் சரியாக கட்டப்படாமல் சரிந்து விழுகிறது. எனக்கு குளுக்கோஸ் அந்த துடைப்பத்தின் கம்பில் கட்டிதான் ஏற்றினார்கள். நான் கைகளை அசைக்கும் போதெல்லாம் அது நழுவி என் மீது விழுந்தது என்று வேதனையுடன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணின் கூறும்போது:-

    காய்ச்சல் வார்டில் கொசுவலை கட்டுவதற்காக துடைப்பத்தின் கம்புகளை சிலர் பயன்படுத்தி உள்ளனர். அதில் குளுக்கோஸ் மற்றும் மருந்து பாக்கெட்டுகள் தொங்க விட்டு பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. அங்கு 32 ஸ்டாண்டுகள் உள்ளன என்றார்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில்

    காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு என தனி தனி வார்டுகள் உள்ளன. ஆனால் காய்ச்சலுக்கான ஆண்கள் வார்டில் 10 படுக்கைகளும், பெண்கள் வார்டில் 12 படுக்கைகள் மட்டுமே உள்ளன.

    இதனால் வைரல் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா பாதித்து வருபவர்களுக்கு தனித்தனி வார்டு இல்லாததால் அந்த நோயாளிகளை பொது வார்டில் வைத்து சிசிச்சை அளிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் பொது வார்டில் இருப்பவர்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வசதிகள் மிகவும் மோசமாக உள்ளது என்றனர்.

    ×