என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ஜனதா நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை
    X

    பா.ஜனதா நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை

    • சென்னை தொகுதிக்கான ஆலோசனை கூட்டம் சோழிங்கநல்லூரில் நடந்தது.
    • பா.ஜனதாவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக பா.ஜனதா கட்சி தேசிய அளவில் பல்வேறு வியூகங்களை வகுத்து பணியாற்றி வருகிறது.

    கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறிய பிறகு பெரிய அளவிலான கட்சிகள் எதுவும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்கவில்லை. பா.ம.க., தே.மு.தி.க. உள்பட சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து தனி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதற்கான முயற்சிகள் நடக்கிறது.

    அதே நேரம் கூட்டணி அமைந்தாலும், அமையாவிட்டாலும் தனித்து நின்றும் தேர்தலை சந்திக்கும் வகையில் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் அண்ணாமலை தீவிரம் காட்டுகிறார்.

    "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை செய்து வரும் அண்ணாமலை இதுவரை 146 சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்றுள்ளார். இந்த யாத்திரைக்கு அனைத்து பகுதிகளிலும் மிகுந்த வரவேற்பு கிடைத்து உள்ளது. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஏராளமான மக்கள் திரண்டு அவரது பேச்சை கேட்கிறார்கள். இது பா.ஜனதாவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து கட்சி மேலிடத்துக்கு தெரிவித்துள்ளார்கள்.


    தென் சென்னை தொகுதிக்கான ஆலோசனை கூட்டம் சோழிங்கநல்லூரில் நடந்தது.

    கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அமைப்பாளர் கரு.நாகராஜன், இணை அமைப்பாளர் கராத்தே தியாகராஜன், பொறுப்பாளர் பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், சாய்சத்யன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் என அனைத்து தரப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

    தென்சென்னை தொகுதியில் முன்னாள் பா.ஜனதா தேசிய தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார்.

    அதே போல் இல.கணேசன் தனித்து போட்டியிட்டு ஒரு லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்றிருந்தார். எனவே வருகிற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் வகையில் திட்டமிட்டு பணியாற்றும்படி நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.

    ஒவ்வொரு பூத்துக்கும் 13 பொறுப்பாளர்கள் கொண்ட கமிட்டி அமைத்திருக்க வேண்டும். இன்னும் நிறைவடையாத பூத்களில் பணிகளை உடனே முடிக்க வேண்டும்.

    பாக பொறுப்பாளர்கள் தனது பகுதியில் உள்ள வாக்காளர்கள் வீடுகளில் நேரடி தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

    இந்த அறிமுகம் மூலம் நட்பு வட்டாரத்தை உருவாக்குங்கள். அதே நேரம் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து, மத்திய அரசு திட்டங்களை தகுதிக்கு ஏற்ப கிடைக்க செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

    இக்கூட்டம் முடிந்ததும் மத்திய சென்னை தொகுதி நிர்வாகிகள் கூட்டத்திலும் அண்ணாமலை பங்கேற்கிறார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தொகுதி பொறுப்பாளர்கள் வினோஜ் செல்வம், சுமதி வெங்கடேஷ், மாவட்ட தலைவர் தனஞ்செயன் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×