என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அமைச்சர் துரைமுருகன் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
    • தி.மு.க. விவசாய அணி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    வேலூர் மாவட்டம் காட்பாடியில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான அமைச்சர் துரைமுருகன் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

    காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள வேலூர் மாநகர தி.மு.க. விவசாய அணி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும், அவரது உறவினர் வீட்டிலும், கதிர் ஆனந்துக்கு சொந்தமான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நேற்று காலை 8 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    • மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
    • தச்சங்குறிச்சியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நடப்பாண்டில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியான தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

    தூய விண்ணேற்பு அன்னை ஆலய அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் காளையாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி தச்சங்குறிச்சியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 25 பணியாளர்களை கொண்ட 7 மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளனர்.

    முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே விழா மேடையில் யார் இருப்பது என்பது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினரையும் மேடையை விட்டு கீழே இறக்கினர். இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. 



    • மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை விஜய்யிடம் புஸ்சி ஆனந்த் வழங்கியுள்ளார்.
    • தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவடைகிறது.

    சென்னை:

    நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக கட்சி மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டுக்கு கூடிய கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    அதேநேரத்தில், தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற இருக்கும் நிலையில், கட்சிக்கு இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. விஜய் மக்கள் இயக்கத்தில் பொறுப்பு வகித்தவர்களே தற்போது மாவட்ட தலைவர்களாக தொடர்ந்து வருகிறார்கள். எனவே கட்சிக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க கடந்த சில மாதங்களாக நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனை நடத்தி வந்தார்.

    இந்த ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்து வந்தது. மாவட்டம் வாரியாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டு தற்போது மாவட்ட செயலாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 2 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாவட்டம் பிரிக்கப்பட்டு, 117 மாவட்ட செயலாளர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை விஜய்யிடம் புஸ்சி ஆனந்த் வழங்கியுள்ளார். இந்த பட்டியலுக்கு விஜய் விரைவில் ஒப்புதல் வழங்குவார் என்று கூறப்படுகிறது.

    மாவட்ட செயலாளர்கள் பட்டியலில் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க இடங்களை ஒதுக்க வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியான பிறகு, வட்டார, ஒன்றிய அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தை பொங்கல் அன்று இந்த பட்டியல் வெளியாகலாம் என்று தெரிகிறது.

    அதனை தொடர்ந்து கட்சியின் முதல் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவடைகிறது. அதன்பிறகு அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.

    • சென்னையில் காற்றின் தரக்குறியீடு 39 லிருந்து 142ஆக மோசமடைந்து மிதமான பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • காற்று மாசு காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா, இதய நோயாளிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    சென்னையில் கடந்த 10 நாட்களில் காற்றின் தரக்குறியீடு இரு மடங்கு மோசமடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் காற்றின் தரக்குறியீடு 39 லிருந்து 142ஆக மோசமடைந்து மிதமான பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காற்று மாசு காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா, இதய நோயாளிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த ஆண்டு கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் காற்று மாசு அதிகரிக்கப்பட்டது. அப்போது சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவு 190 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியது. அதிகபட்சமாக மணலியில் 254, அரும்பாக்கத்தில் 210, பெருங்குடியில் 201 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசம் அடைந்தது. 

    • குழந்தையின் அழுகுரல் கேட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தையை மீட்டனர்.
    • குழந்தையை விட்டுச்சென்ற மர்ம நபர்கள் குறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே 3 மாத குழந்தையை துணியால் சுற்றி பை ஒன்றில் பால் பாட்டிலுடன் மர்ம நபர்கள் விட்டு சென்றுள்ளனர்.

    குழந்தையின் அழுகுரல் கேட்டு அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தையை மீட்டனர்.

    போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து குழந்தையை மீட்ட போலீசார், வள்ளுவர் கோட்டம் பாலமந்திர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையை ஒப்படைக்க முடிவு செய்தனர்.

    பிறந்து 3 மாதமே ஆன பெண் குழந்தையை விட்டுச்சென்ற மர்ம நபர்கள் குறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்றைய முக்கியச் செய்திகள்
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • உலகம் முழுவதும் சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 500 கோடியையும் தாண்டிவிட்டது.
    • தமிழக பாதிரியார் ஒருவர் பிரார்த்தனை செய்யும் வீடியோ வட இந்தியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    சென்னை:

    தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் செல்போன்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செல்போன்களின் மூலமாக சமூக வலைதளங்களில் பலரும் உலா வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரையிலான நிலவரப்படி உலகம் முழுவதும் சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 500 கோடியையும் தாண்டிவிட்டது.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் அதிலேயே மூழ்கி கிடக்கின்றனர். இதனால் ஒரு நாட்டில் வைரலாகும் சமூக வலைதள பதிவுகளோ, வீடியோவோ கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுபோலத்தான் தமிழக பாதிரியார் ஒருவர் பிரார்த்தனை செய்யும் வீடியோ வட இந்தியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    வட இந்தியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர், தமிழக பாதிரியார் பிரார்த்தனை செய்வது போன்ற வீடியோவையும், அதில், 'பிரதமர் மோடி, மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை இயேசு கிறிஸ்து கொல்ல வேண்டும்.

    அயோத்தியில் ராமர் கோவிலை இடித்துவிட்டு அதில் தேவாலயம் கட்டுவதற்கு வலிமை தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்' என்று குறிப்பிட்டும் தனது சமூக வலைதள பதிவில் பகிர்ந்துள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், 'பிரார்த்தனை செய்யும் அந்த வீடியோவில் பாதிரியார் 'தொடுங்கப்பா' என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்தினார். 'தொடுங்கப்பா' என்ற வார்த்தை தொடுதலை குறிக்கும்.

    மேலும் இது ஆசீர்வாதம் என்று பொதுவாக புரிந்துகொள்ளப்படுகிறது. பிரதமர், உள்துறை மந்திரி, நிதி மந்திரி, உத்தரபிரதேச முதல்-மந்திரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பெயரை குறிப்பிட்டு, அவர்களை கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். 'தொடுங்கப்பா' என்ற வார்த்தை தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. மேலும் வெவ்வேறு சூழல்களில் தவறாக பரவுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டாவது பெற்றோராக பள்ளி செயல்பட்டு பாதுகாக்க வேண்டியது கடமை.
    • இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் பாதுகாப்பது தான் தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலையாய பணி.

    சென்னை:

    தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும் பள்ளிகளின் உட்கட்டமைப்பை கண்காணித்து ஆலோசனை வழங்கிடவும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை ஜனவரி 10ஆம் தேதி திருச்சியில் கூட்டுகிறது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த அன்புக்குழந்தை, செல்லக்குழந்தை லியா லட்சுமியின் மறைவுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டாவது பெற்றோராக பள்ளி செயல்பட்டு பாதுகாக்க வேண்டியது கடமை.

    எத்தனையோ கனவுகளை, லட்சியங்களை கொண்டுள்ள அன்புக் குழந்தை லியாலட்சுமியின் பெற்றோரை என்ன வார்த்தை சொல்லி ஆறுதல்படுத்துவது என்பது தெரியாது தவிக்கிறோம். இனிவரும் காலங்களில் தனியார் பள்ளிகள் தங்கள் உட்கட்டமைப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் வாகனங்களில் குழந்தைகள் ஏறும்போதும் இறங்கும்போதும் உதவியாளர்கள் பக்க பலமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், நம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறு துன்பம் கூட ஏற்படாத அளவிற்கு தாயின் கருணையோடும் தந்தையின் அக்கறையோடும் பள்ளி நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் என்றும் பள்ளித் தாளாளர்களை தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கம் கேட்டுக்கொள்கிறது.

    தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளை ஓர் உயர்மட்டக் குழு அமைத்து பள்ளிகளின் பாதுகாப்பு ஏற்பாட்டை கண்காணித்து பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கி குறைகள் இருந்தால் உடனே அதைக் களைய நடவடிக்கை எடுப்பதே குழுவின் நோக்கம்.

    பாதுகாப்பு கண்காணிப்பு குழு அமைப்பதற்கான அவசர ஆலோசனை கூட்டம் ஜனவரி 10ஆம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கிறது. குழந்தையின் இழப்பு ஆற்றொனாத் துயரத்தைத் தந்த போதிலும், அங்கொன்றும் இங்கொன்றமாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் பாதுகாப்பது தான் தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலையாய பணி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இச்சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்று அன்போடு அரசியல் தலைவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்கு சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
    • இந்தப் பொங்கல் பரிசுத் தொகை அரசு செலவில் பணவிடை மூலம் அனுப்பப்பட வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023-2024-ம் ஆண்டிற்கான பொங்கல் போனஸ் மற்றும் பொங்கல் பரிசை வழங்க ரூ.163.81 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதில், 'சி' மற்றும் 'டி' பிரிவை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில் யார் யாருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்பதற்கான அரசாணையை நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களாக இருந்து, குறிப்பிட்ட ஊதிய விகிதங்களின்படி ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கும்; மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம பணியமைப்பு உள்பட அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள், அதாவது 1.10.2017 முதல் சிறப்பு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குறுஅங்கன்வாடி பணியாளர்கள்,

    சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், ஊராட்சி செயலர், கிராம நூலகர்கள், பெருக்குபவர்கள் அல்லது துப்புரவுப் பணியாளர்கள் அல்லது துப்புரவாளர்கள், தோட்டக் காவலர், வேட்டைத் தடுப்பு காவலர், காவல் நிலைய துப்புரவாளர்கள் மற்றும் ஆயா உள்பட மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ஒட்டு மொத்த பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.500 வழங்கி அரசு ஆணையிடுகிறது.

    இந்த அரசாணை தற்காலிக ஓய்வூதியம் பெறும் அனைத்து 'சி' மற்றும் 'டி' பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும். இந்தப் பொங்கல் பரிசுத்தொகை, 2.1.2025 நாளன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பணியிலிருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல.

    உலேமா உதவித் தொகைகள், மாநில சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான உதவித் தொகை பெறுபவர்கள், புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் சிறந்த மனிதர்களுக்கான சமூக உதவித் தொகைகள் பெறும் சிறப்பு ஓய்வூதியதாரர்கள், பணியில் இருக்கும் பணியாளர்களுக்குப் பொருந்தக்கூடிய தற்காலிக மிகை ஊதியம் (தற்காலிக போனஸ்) பெறுகிற கருணை அடிப்படையில் நியமனம் பெற்றுள்ள குடும்ப ஓய்வூதியதாரர்கள்,

    'ஏ' மற்றும் 'பி' பிரிவு பதவிகளில் இருந்து ஓய்வுபெற்ற அனைத்து அரசு ஓய்வூதியதாரர்கள், அனைத்திந்திய பணி அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக் குழு அல்லது அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அல்லது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் உள்பட ஓய்வூதிய முன்னோடித் திட்டத்தின் கீழ் வரும் ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்கு சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்தப் பொங்கல் பரிசுத் தொகை அரசு செலவில் பணவிடை மூலம் அனுப்பப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாரத்தான் ஓட்டம் 4 பிரிவுகளாக நடக்கிறது.
    • போர் நினைவுச் சின்னத்தில் இருந்து திரு.வி.க. பாலம் நோக்கி செல்லும் வாகனங்களும், கொடி மரச்சாலை வழியாக திருப்பிவிடப்படும்.

    சென்னை:

    சென்னை மாரத்தான் ஓட்ட பந்தயம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணி முதல் தொடங்கி நடக்கிறது. இதையொட்டி, அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மாரத்தான் ஓட்டம் நடைபெறும் இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மாரத்தான் ஓட்டம் 4 பிரிவுகளாக நடக்கிறது. நேப்பியர் பாலத்தில் இருந்து கடல்சார் பல்கலைக்கழகம் வரை இந்த ஓட்டபந்தயம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி, காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னத்தில் இருந்து காந்தி சிலை வரை இருபுறமும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அடையாறு பகுதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலத்தில் இருந்து திருப்பி விடப்படுகிறது. போர் நினைவுச் சின்னத்தில் இருந்து திரு.வி.க. பாலம் நோக்கி செல்லும் வாகனங்களும், கொடி மரச்சாலை வழியாக திருப்பிவிடப்படும்.

    ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள், வி.எம். தெரு சந்திப்பில் இருந்து திருப்பிவிடப்படும். காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள், ராஜீவ் காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அந்த வாகனங்கள், எல்.பி.சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாக செல்ல வேண்டும்.

    மேற்கண்ட தகவல்களை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் காலை 4.30 மணிக்கு திறக்கப்படும்.
    • கோவிலின் சுற்றுப்புறங்களில் 32 கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட உள்ளன.

    சென்னை:

    மகத்துவம் வாய்ந்த மார்கழியில் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏதாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு வரும் 10-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கான முன்னேற்பாடு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பார்த்தசாரதி கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் காலை 4.30 மணிக்கு திறக்கப்படும். அதற்கான தரிசனக் கட்டண சீட்டு ரூ.500-க்கு ஆன்லைன் மூலம் வருகின்ற 6-ந் தேதி பெற்று கொள்ளலாம்.

    1,500 கட்டணச் சீட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படும். மேலும், 500 நபர்கள் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் சொர்க்கவாசல் தரிசனம் செய்ய கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள். சொர்க்கவாசல் நிகழ்வுக்கு பிறகு நடக்கும் தரிசன நிகழ்வுக்கு சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.

    முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் வைகுண்ட ஏகாதசி அன்று காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரையிலும் கோவிலின் பின்கோபுர வாசல் வழியாக சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காவல்துறை சார்பில் 3 துணை கமிஷனர்கள் தலைமையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என ஒரு முறைக்கு 600 போலீசார் வீதம் 3 முறைகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். கோவிலின் சுற்றுப்புறங்களில் 32 கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட உள்ளன.

    கோவிலில் 5 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். அனைத்து பக்தர்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படும். கோவில் தெப்பக்குளம் அருகிலும் மற்றும் நரசிம்மர் சன்னதி பின்புறமும் 20 தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 1.20 மணிக்கு நிறைவடைந்தது.
    • கதிர் ஆனந்த் நடத்தும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தினர். அவரது மகன் கதிர் ஆனந்த்-க்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை நடைபெற்றது.

    அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரி கதவுகள் மூடப்பட்டன. 2 இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க. நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான காட்பாடி க்கு அடுத்த பள்ளி குப்பம் வீட்டிலும் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    மேலும் இவரது உறவினருக்கு சொந்தமான சிமெண்டு குடோன் பகுதிகளிலும் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை செய்தனர். இந்த இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் வேலூரில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 1.20 மணிக்கு நிறைவடைந்தது.

    ஏதும் முக்கிய ஆவணங்களோ பணமோ சிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. துரைமுருகன் வீட்டில் இரண்டு அறைக் கதவை உடைத்து சோதனை நடைபெற்றுள்ளது.

    சாவி இல்லாததால் உடைப்பு கடப்பாரை, உளியால் உடைத்து அதிகாரிகள் சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது. கதிர் ஆனந்த் நடத்தும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக நேற்று அமைச்சர் துரைமுருகன் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் 2 பெண்கள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் வீட்டின் தாழ்வார பகுதியில் 7 மணி நேரம் வரை காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×