என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.
    • ரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்படாது.

    விபத்தின்போதோ, அறுவை சிகிச்சையின்போதோ, வேறு ஏதேனும் வகையில் ஒருவருக்கு ரத்த இழப்பு ஏற்படும்போது அவரது உயிரை காக்கவும், இழந்த ரத்தத்தை ஈடு செய்யவும் பிறரிடம் இருந்து ரத்தம் தானமாக பெறப்படுகிறது. உயிரை காக்கும் அருங்கொடையான ரத்த தானம் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14-ந் தேதி ரத்ததான தினம் அனுசரிக்கப்படுகிறது.

    அன்றைய நாளில் மட்டும் ரத்த தானம் செய்வதற்கு ஆர்வம் காட்டாமல், ஆரோக்கியமான மனிதர் 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.

    மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் உள்ளது. அதில் 470 மில்லி லிட்டர் வரை ரத்தத்தை தானமாக வழங்கலாம். ரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்படாது. ஏராளமான நன்மைகளைத்தான் வழங்கும். அவற்றுள் சில...


    1. மாரடைப்பை தடுக்கும்

    உடலில் இரும்புச்சத்து அதிகமாக குவிந்து விட்டால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து ரத்த தானம் செய்து வருவது உடலில் இரும்பு சத்தை குறைக்கவும், அதனை சீராக நிர்வகிக்கவும் உதவும். எனவே அடிக்கடி ரத்த தானம் செய்வது மாரடைப்பு அபாயத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    2. புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்

    உடலில் அதிக அளவு இரும்புச்சத்து புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும். ரத்த தானம் செய்வது இரும்பு அளவை பராமரிக்க உதவும். புற்றுநோய் செல்கள் உருவாகும் அபாயத்தையும் குறைக்கும். அதிலும் அடிக்கடி ரத்த தானம் செய்வது கல்லீரல், வயிறு, நுரையீரல், பெருங்குடல் மற்றும் தொண்டை புற்றுநோய் போன்ற முக்கியமான புற்றுநோய்களை நெருங்க விடாது.

    3. கல்லீரலை காக்கும்

    ரத்த ஓட்டத்தில் கலந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை நீக்குவதே கல்லீரலின் முக்கியமான செயல்பாடாகும். ஆனால் கல்லீரலில் ஆக்சிஜனேற்றப்பட்ட இரும்புச்சத்து அதிகம் இருந்தால் அதனால் திறம்பட செயல்பட முடியாது. மேலும் அதிகப்படியான இரும்புச்சத்து செல் சேதத்துக்கும் வழிவகுக்கும். அதனால் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படும். ரத்த தானம் செய்வதன் மூலம் உடலில் இருக்கும் அதிகப்படியான இரும்பை அகற்றுவதோடு கல்லீரலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

    4. உடல் எடை குறைப்பு

    உடல் எடையை குறைப்பதிலும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்து வதிலும் ரத்த தானம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது 450 மில்லி லிட்டர் ரத்த தானம் செய்வது உடலில் 650 கலோரிகளை எரிக்கச் செய்யும். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் தினசரி உணவில் சத்தான உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை சீராக பராமரிக்கலாம். மீண்டும் ரத்தம் உற்பத்தியாகுவதற்கும் வழிவகை செய்துவிடலாம்.

    5. புதிய ரத்த அணு உற்பத்தி

    ரத்த தானம் செய்வது புதிய ரத்த அணுக்களின் உற்பத்தியையும் ஊக்குவிக்கும். ரத்த தானம் செய்ததும் 48 மணி நேரத்திற்குள் எலும்பு மஜ்ஜையின் உதவியுடன் உடல் அமைப்பு துரிதமாக செயல்படத் தொடங்கும். 30 முதல் 60 நாட்களுக்குள் ரத்த சிவப்பணுக்கள் மாற்றப்பட்டு புதிய ரத்த அணுக்கள் உருவாக தொடங்கிவிடும்.

    • பாம்பு போன்ற விஷக்கடி பாதிப்பை குறைக்க பயன்படுகிறது.
    • மூக்கில் இருந்து திடீரென வெளியாகும் ரத்தப்போக்கை நிறுத்தவும் பயன்படுகிறது.

    தமிழில் முள்ளுக்கீரை அல்லது முள்ளிக்கீரை என்று அழைக்கப்படும் 'அமராந்தஸ்' என்ற தாவரவியல் இனத்தை சேர்ந்த கீரை, முட்கள் நிறைந்த ஒரு மூலிகையாகும்.

    சிவப்பு நிற நிமிர்ந்த தண்டுகள், சில சமயங்களில் ஏறுவரிசை, 30-150 செ.மீ. நீளத்தில் கிளைத்திருக்கும். இலைகள் முட்டை வடிவில் இருந்து நீள்வட்டம், ஈட்டி-நீள் சதுரம், வடிவில் இருக்கும். மென்மையான இலை தண்டு 1 முதல் 9 செ.மீ. பூக்கள் பச்சை நிறத்திலும் காணப்படும். இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது.

    இந்த மூலிகை கீரையின் மருத்துவ குணங்கள் ஏராளம். சிறுநீர் நன்றாக வெளியேற உதவுகிறது. கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. முறிந்த எலும்பு சேர துணையாக இருக்கிறது. மலமிளக்கியாக செயல்படுவதுடன் உடலில் இருக்கும் சளியை வெளியேற்றுகிறது.

    வெப்பம் மற்றும் விஷத்தை நீக்குகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. பெண்களுக்கு அதிகமான மாதவிடாய் போக்கை கட்டுப்படுத்துகிறது. சில நாடுகளில் பாம்பு போன்ற விஷக்கடி பாதிப்பை குறைக்க இந்த கீரையை பயன்படுத்துகின்றனர்.

    சீனா, இந்தியா மற்றும் நேபாளத்தில் தோல் அழற்சிக்கான வெளிப்பூச்சு மருந்தாகவும் தீக்காய தீவிரத்தை குறைக்கவும் பயன்படுகிறது.

    இது தவிர மூலம், குடல் அழற்சி, பித்தப்பை அழற்சி, சீரண மண்டல பாதிப்பை குறைக்க பயன்படுகிறது. புற்றுநோய் கட்டிகளின் பெருக்கத்தை தடுக்க உதவுவதுடன், மூக்கில் இருந்து திடீரென வெளியாகும் ரத்தப்போக்கை நிறுத்தவும் பயன்படுகிறது.

    புரதம் மற்றும் கால்சியம் அதிகம். இதை மெக்சிகோ போன்ற நாடுகளில் உணவுப் பயிராகவும், ஆஸ்திரேலியாவில் கீரைக்கு மாற்றாகவும், சீனாவில் காய்கறியாகவும் பயன்படுத்துகிறார்களாம்...!. ஆனால், தமிழ்நாட்டில் மழை பெய்தால் எங்கு பார்த்தாலும் முளைத்து கிடக்கும் இந்த முள்ளுக்கீரையை பற்றி தெரியாமல் பலரும் பயன்படுத்தாமல் தவற விட்டுவிடுகிறார்கள் என்பதே உண்மை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடல் இயக்கங்களை மேன்மைபடுத்தி மலத்தை வெளியேற்றும் பணியை சீராக்குகிறது.
    • ஆண்களுக்கு பாலியல் தூண்டுதலை உண்டாக்கும்.

    அத்திப்பழம் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகளுக்கு, நோய் எதிர்ப்பு அளிப்பதற்கு, ஆண்மை குறைபாட்டுக்கு, சுவாசப்பிரச்சனைகளுக்கு என பல்வேறு குறைபாட்டுகளுக்கு நன்மை ஏற்படுகிறது.

    பெண்களின் மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கை குறைக்கவும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்தாகவும், குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி, எலும்பு, சதை, பல் வழுவானதாகவும் மாற பயன்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் மருந்துகளை நாடாமல் தேனில் ஊறிய அத்திப்பழத்தை எடுத்துகொள்வது நன்மை பயக்கும். குடல் இயக்கங்களை மேன்மைபடுத்தி மலத்தை வெளியேற்றும் பணியை சீராக்குகிறது.

    உடலில் இருக்கும் பித்தம், இரல், நுரையீரல் பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது. அத்தித்தேன் கல்லீரல் வீக்கத்தை குறைக்கிறது. மேலும் இது இன்சுலின் அளவை மேம்படுத்தகூடும்.

    ஆண்களுக்கு பாலியல் தூண்டுதலை உண்டாக்கும்.

    ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க, இதய நோய்க்கு சிறந்த தீர்வு.

    • சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • கண்களை வெப்ப அலை பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கிறது.

    மே மாதம் முடிவடைந்தாலும், வெயில் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கிறது. அனல் காற்றும், சுட்டெரிக்கும் வெயிலும் ஜூன், ஜூலை வரை நீடிப்பது வழக்கம்தான். இந்நிலையில், வெயிலுக்கு இதமாக சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

    முலாம் பழம்

    வெயிலுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகளில் முலாம் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை ஊட்டச்சத்துக்கள், நீர்ச்சத்து மற்றும் அதிக சுவையையும் கொண்ட பழமாக விளங்குகிறது. ஆரோக்கியமான சுவையான உணவுப்பொருளாகவும் அறியப்படுகிறது. குறிப்பாக முலாம்பழம் உடலில் ஏற்படும் நீரிழப்பை குறைக்கிறது.

    பெர்ரி

    ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, ப்ளாக் பெர்ரி என அனைத்து வகையான பெர்ரி பழங்களிலும் ஆரோக்கிய நன்மைகள் அதிகமாக உள்ளன. ஸ்ட்ராபெர்ரி மற்றும் புளூபெர்ரி இவை இரண்டும் அதிக பிளாவனாய்டுகளை கொண்டுள்ளன. இவை சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் சருமத்தின் ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் மேம்படுத்துவதற்கு உதவுகின்றன. ப்ளாக் பெர்ரி, ராஸ் பெர்ரி இரண்டிலும் அதிகமான நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளன.

    சிட்ரஸ் பழங்கள்

    சிட்ரஸ் பழங்கள் கோடை காலத்தில் மட்டும் கிடைக்கும் பருவகால பழங்கள் அல்ல என்றாலும் ஆரஞ்சு போன்றவைகளில் அதிக பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது வெப்பத்தால் உடல் இழக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்களை ஈடு செய்யக்கூடியது. வெயில் காலங்களில் அதிகப்படியான வியர்வை ஏற்படும்போது நமது உடல் பொட்டாசியத்தை இழக்கிறது. இதனால் தசைப்பிடிப்பும், நீர்ச்சத்து இழப்பும் ஏற்படலாம். அதை தடுத்து உடலை நீரேற்றமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க இது உதவுகிறது. அதே போல குடிக்கும் தண்ணீரில் எலுமிச்சை பழ சாற்றை சேர்க்கலாம். மீன் மற்றும் இறைச்சி வறுவல்களில் எலுமிச்சையை பிழிந்து விட்டு சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கூடுதல் வைட்டமின்-சி கிடைக்கிறது.

    இனிப்பு சோளம்

    கோடை காலத்தில் வரும் பருவ கால காய்கறிகளில் இனிப்பு சோளமும் ஒன்றாகும். அதை வேகவைத்தாலும், சுட்டு சாப்பிட்டாலும் இனிப்பு சுவையிலேயே இருக்கும். மேலும் இது அறியப்படாத பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. கண்புரை மற்றும் வயது சார்ந்து ஏற்படும் தசை சிதைவை இது தடுக்கிறது. கண்களை வெப்ப அலை பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கிறது.

    அவகேடோ

    ஆரோக்கிய உணவுப்பட்டியலில் கண்டிப்பாக இருக்க கூடிய உணவுப்பொருளாக அவகேடோ உள்ளது. ஏனெனில் மோனோசாச்சுரேட் கொழுப்பு, போலெட் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிரம்பப்பெற்றது. இயற்கையாகவே ஒவ்வாமை எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருக்கிறது.

    • ஸ்மார்ட்போன் மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
    • மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    இன்றைய நவீன காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு இல்லாத இடமே இருக்காது. பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பழக்கத்தை அதிகமாகக் கொண்டுள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் சில நன்மையான விளைவுகள் இருப்பினும், பல்வேறு தீய விளைவுகளும் நிறைந்துள்ளது. இதனைப் பலரும் அறிந்தும் ஸ்மார்ட்போன் மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    மக்கள் ஸ்மார்ட்போன் திரையை மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால், இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பலரும் அறிவதில்லை. அதிகளவிலான ஸ்மார்ட்போன் பயன்பாட்டினால் கண்கள் பலவீனமடைவதுடன், உடலின் மற்ற பாகங்களும் பாதிக்கப்படலாம். ஆய்வு ஒன்றில் வெளியான அறிக்கையில் ஒரு நாளைக்கு 4 மணி நேரத்திற்கும் அதிகமாக ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    சிந்திக்கும் திறன் பாதிப்பு

    ஒருவர் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். இது அவர்களின் மன ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால், மனச்சோர்வு ஏற்படுவதுடன், சிந்திக்கும் திறன் பாதிப்படையலாம். நீண்ட நேரம் மொபைல் பயன்பாட்டில் இருப்பது அவர்களுக்கு மொபைல் மீதான நாட்டத்தையே அதிகரிக்கிறது. இது மற்ற முக்கியமான விஷயங்களில் செலுத்தப்படும் ஈடுபாட்டைக் குறைக்கிறது.

    உணர்ச்சி ரீதியான நிலையற்றத் தன்மை

    ஸ்மார்ட்போன் பயன்பாடு உணர்ச்சி ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக சமூக ஊடகங்களின் தாக்கம் அவர்களுக்கு மனச்சோர்வு, பதட்டம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது அவர்களுக்கு உணர்ச்சி ரீதியான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

    மனச்சோர்வு

    சமூக ஊடகங்களில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பது பயனற்ற தன்மையை அதிகரிக்கலாம். இது இறுதியில் மன அழுத்தத்தைத் தருவதாக அமைகிறது. சமூக ஊடங்களை நீண்ட நேரம் உற்று நோக்குவது மனச் சோர்வை அதிகரிப்பதுடன் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தலாம்.

    குறைவான செயல்திறன்

    நீண்ட நேரமாக ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது அவர்களின் செயல்திறனைக் குறைக்கிறது. இது மோசமான செயல்திறனை ஏற்படுத்துகிறது. இதனால் வேலையில் ஈடுபாடு குறைவதுடன், சரியான நேரத்தில் செய்ய வேண்டிய செயல்கள் செய்ய முடியாமல் போகலாம். இந்த தாமதமான செயல்பாட்டு மன அழுத்தம், பதட்டம் போன்ற மனநலத்தைப் பாதிக்கும் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

    உறவில் சிக்கல்கள்

    தொலைபேசி அடிமையாகி விடுவது குடும்பம் அல்லது பார்ட்னர்களுடனான உறவுகளுக்குத் தீங்கு விளைவிக்கலாம். மற்றவர்கள் முன்னிலையில் தொலைபேசியைத் தொடர்ந்து பயன்படுத்துவது, அவர்களைப் புறக்கணிக்கப்பட்டதாக இருக்கலாம். இது உறவுகளுக்குள் பிரச்சனை மற்றும் மோதலை ஏற்படுத்தலாம். அதே சமயம், துணையுடன் நேரடியாக உரையாடுவதைக் காட்டிலும், செல்போன் மூலமாக தொடர்பு கொள்வது உறவின் நெருக்கத்தைக் குறைக்கிறது.

    • நோய்தொற்று காரணமாக ஏற்படும் இரத்த சோகை, குரோனிக் அனீமியா என்று அழைக்கப்படுகிறது.
    • இரத்த சோகை என்பது உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியை பாதிக்கும் மிகவும் பொதுவான நோயாகும்.

    இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனை ஹீமோகுளோபின் குறைபாடு என்றும் கூறுவர். ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் அளவையாகும்.

    போதியளவு பிராணவாயு சுவாசிக்காததால் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. சுவாசத்தில் பிராணவாயு குறைந்தால் மயக்கம் மற்றும் முச்சுத்திணறல் ஏற்படும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது ஏற்படுவது வழக்கமாகும்.

    இரத்த சோகையில் 3 வகைகள் உண்டு. வைட்டமின் C மற்றும் B-12 குறைபாடு காரணமாக ஏற்படும் இரத்த சோகை, வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை என்று அறியப்படுகிறது. அதே போல, இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவும் இரத்த சிவப்பணுக்கள் குறையலாம். இதனை இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை என்று கூறுவர். நோய்தொற்று காரணமாக ஏற்படும் இரத்த சோகை, குரோனிக் அனீமியா என்று அழைக்கப்படுகிறது.

    இரத்த சோகை என்பது உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியை பாதிக்கும் மிகவும் பொதுவான நோயாகும். பல சந்தர்ப்பங்களில், இது லேசானது மற்றும் அறிகுறியற்றது மற்றும் மேலாண்மை தேவையில்லை.

    வயதுக்கு ஏற்ப நோய்த்தாக்கம் அதிகரிக்கிறது மற்றும் இனப்பெருக்க வயதுடைய பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு இது மிகவும் பொதுவானது.

    85 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் 20%க்கும் அதிகமானோர் இந்த பாதிப்பு உள்ளது. முதியோர் இல்ல மக்கள் தொகையில் இரத்த சோகை பாதிப்பு 50%-60% ஆகும். வயதானவர்களில், ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள் இரும்பு, ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி 12 குறைபாடு போன்ற இரத்த சோகைக்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உள்ளனர். மற்றொரு மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளில், சிறுநீரக செயலிழப்பு அல்லது நாள்பட்ட அழற்சிக்கான சான்றுகள் உள்ளன.

    வயது மற்றும் பாலினம் தவிர, இனம் இரத்த சோகையின் முக்கிய நிர்ணயம் ஆகும், ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள்தொகையில் பரவல் அதிகரித்து வருகிறது.

    இரத்த சோகைக்கான அறிகுறிகள்

    * மயக்கம்

    * உடற்சோர்வு

    * தலைவலி

    * தோல் வெளுத்தல்

    * உடல் வெப்பம் குறைதல்

    * பசியின்மை

    * நெஞ்சுவலி

    * சீரற்ற இதயத்துடிப்பு

    * வாய் மற்றும் நாக்கில் வீக்கம்

    * முச்சுத்திணறல்

    இரத்த சோகை ஏற்பட காரணங்கள்

    * வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு

    * தன்னெதிர்ப்பு நோய்கள் (autoimmune disorders)

    * இரத்தப்போக்கு

    * மருந்து, மாத்திரைகள்


    இரத்த சோகை யாரை பாதிக்கும்?

    * மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள்

    * கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள்

    * வைட்டமின், இரும்புச்சத்து குறைவாக எடுத்துக்கொள்வோர்

    * குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள்

    இரத்த சோகை குணமாக்க சில வழிமுறைகள்

    * இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு வகைகள், சோயா பன்னீர், பச்சை நிறக் காய்கறிகள், மாதுளைப் பழம், முருங்கைக் கீரை, பீன்ஸ், உருளைக்கிழங்கு, ஆலிவ் ஆகிய உணவுகள் சாப்பிடவும்.

    * வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடவும்.

    * தேவைப்பட்டால் மருத்துவர் பரிந்துரைக்கும் ஊட்டச்சத்து மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

    * இரத்த சோகைக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரைக்கும் உட்டச்சத்து உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

    • நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்.
    • ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை.

    நூடுல்ஸ் சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமான உணவுத் தேர்வாக மாறியுள்ளது. ஏனெனில் அவை மலிவானவை, தயாரிப்பதற்கு எளிதானவை மற்றும் வசதியானவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நூடுல்ஸ் என்றாலே பிடிக்கும்.

    இருப்பினும், நூடுல்ஸை தொடர்ந்து உட்கொள்வதால் சில எதிர்மறையான உடல்நல பாதிப்புகள் உள்ளன. நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி பார்க்கலாம்.

    நூடுல்சில் பெரும்பாலும் சோடியம் அதிகமாக உள்ளது. இது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சோடியம் ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்து. ஆனால் அதை அதிகமாக உட்கொள்வதினால் உயர் ரத்த அழுத்தம், நீர் தக்கவைத்தல் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

    நூடுல்ஸ் சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை. அவை போதுமான ஊட்டச்சத்தை வழங்குவதில்லை. மேலும் அவற்றை தொடர்ந்து உட்கொள்வது குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

    உடல் பருமன்

    நூடுல்சில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. இது தொடர்ந்து உட்கொண்டால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனை ஏற்படுத்தும். தென் கொரியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நூடுல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று அறிவித்துள்ளது. இது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    புற்றுநோய்

    நூடுல்சில் பிஸ்பெனால் ஏ போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. இது பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படுகிறது. நூடுல்சை தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும், குறிப்பாக வயிற்று புற்றுநோய். வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நூடுல்ஸ் சாப்பிடும் பெண்களுக்கு வயிற்றில் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 68 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    செரிமான பிரச்னைகள்

    நூடுல்சில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும். இதில் உள்ள அதிக சோடியம் காரணமாக வீக்கம், வாயு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். உதாரணமாக, ஒரே நாளில் பல நூடுல்சை உட்கொள்வது வயிற்றில் அசௌகரியம் மற்றும் ஒழுங்கற்ற குடல் அசைவுகளை ஏற்படுத்தும்.

    நூடுல்ஸ் மனநலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் அவற்றில் சோடியம் அதிகமாக உள்ளது. இது மூளையில் உள்ள இரசாயனங்களின் சமநிலையை சீர்குலைக்கும். வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நூடுல்சை உட்கொள்வது மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பிற மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

    நூடுல்ஸ் ஒரு வசதியான மற்றும் மலிவான உணவு. விருப்பமாக இருந்தாலும், அவை பலவிதமான உடல்நல அபாயங்களுடன் வருகின்றன. அவற்றை மிதமாக உட்கொள்வது மற்றும் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது முக்கியம். அவ்வாறு செய்வதன் மூலம், நூடுல்சை வழக்கமாக உட்கொள்வதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கலாம்.

    • பாப்கார்ன் சிறந்த நொறுக்குத்தீனியாக விளங்குகிறது.
    • உடலில் உள்ள ப்ரீரேடிக்கல்சை அழிக்க உதவுகிறது.

    பாப்கார்ன் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவாகும். சோளத்தை அதிக வெப்பத்திற்கு உட்படுத்தும் போது, அதில் உள்ள தண்ணீர் நீராவியாக விரிவடைந்து, வெடித்து பாப்கார்னாக மாறுகிறது.

    இதில் குறைந்த கலோரிகள், குறைந்த கொழுப்பு. அதிக நார்ச்சத்து இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த நொறுக்குத்தீனியாக விளங்குகிறது. ஒரு கப் பாப்கார்னில் 31 கலோரிகள், 1 கிராம் நார்ச்சத்து, 1 கிராம் புரதம். 6 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இது 55 என்ற மிதமான கிளைசிமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளது.

    மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி3, 6, ஈ மற்றும் இரும்புச்சத்து, மாங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளன.

    பாப்கார்னில் உள்ள பீட்டா கரோட்டின், லூட்டின், ஜியோசாந்தின் போன்றவை கண்களுக்கு நன்மை தரக்கூடியவை. இதில் உள்ள அதிகமான பாலிபெனால்கள் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகளை பெற்றுள் ளது. இது உடலில் உள்ள ப்ரீரேடிக்கல்சை அழிக்க உதவுகிறது.

    சர்க்கரை நோயாளிகள் பாப்கார்னை வெண்ணெய், உப்பு சேர்க்காமல் வெறுமனே சாப்பிடுவது நல்லது. மசாலா, எண்ணெய், கேராமல் போன்றவற்றை பாப்கார்னில் சேர்க்கும்போது இதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் அதிகமாகி கெடுதலை ஏற்படுத்தும்.

    • சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் முழுமையான குணம் கிடைக்கும்.
    • முருங்கைக்காயுடன் மிளகு, ஓமம், பெருங்காயம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அவ்வளவும் பலம்.

     "முருங்கை நொறுங்க தின்னா 3000 வராது" என்று பெரியவர்கள் சொல்வார்கள்.. இதற்கு காரணம், முருங்கையில் மட்டும் எந்த பகுதியுமே வீண் கிடையாது.. அதனால்தான், அன்றைய வீடுகளில், வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் கட்டாயம் வளர்த்து வைத்திருப்பார்கள்.

    முருங்கையின் இலை, ஈர்க்கு, பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் என அடிப்பாகம் முதல் இலைகள் வரை அவ்வளவும் மருத்துவ பொக்கிஷங்கள் அடங்கி உள்ளன.

    முருங்கை வேர் + அதன் பட்டை இரண்டுமே பல்வேறு நோய்களை குணமாக்கும் தன்மை உடையவை.. முருங்கைப் பட்டையுடன் கடுகு சேர்த்து மையாக அரைத்து, கீல்வாதம் உள்ள இடத்தில் பற்று போட்டு வந்தால் குணமாகும் என்கிறார்கள்.

    முருங்கைப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதனுடன் குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் முழுமையான குணம் கிடைக்கும்.


    இளம் முருங்கை வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை, மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி நீங்கும் என்கிறார்கள்.. இந்த வேரின் சாறுடன் சம அளவு பால் சேர்த்து குடித்து வந்தால், விக்கல், இரைப்பு, உள் உறுப்புகளில் வீக்கம், முதுகுவலி போன்றவையும் அகலும். முருங்கையீர்க்கை எடுத்துக் கொண்டு இதனுடன் மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து கொதிக்க சூப் செய்து குடிக்க காய்ச்சல், கைகால்வலி, மூட்டுவலி, ஆஸ்துமா, மார்புசளி, தலைவலி ஆகியவை குணமாகும். முருங்கைக்காயுடன் மிளகு, ஓமம், பெருங்காயம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அவ்வளவும் பலம்..

    முருங்கைப்பூ : முருங்கைப்பூவை, ஒரு கைப்பிடியளவு எடுத்துக்கொண்டு 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி காலையில் உணவிற்கு முன்பு சாப்பிட்டு வந்தால், ஆண் மலடு நீங்கும். முருங்கைப்பூவை உட்கொள்ளும்போது, கண்பார்வை திறன் பெருகுகிறது.. முருங்கைப் பட்டையை தூளாக்கி, சிறிது கல் உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால், வீக்கங்கள் குறையும்.

    இப்படி முருங்கையின் எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் நமக்கு பயன்தருகிறது என்றாலும், இந்த கீரையை மட்டும் வாரம் 3 முறையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். காரணம், முருங்கைக்கீரையில், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, வைட்டமின் B காம்பளக்ஸ், டைட்டாஜீ பைபர், கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன், இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் ஒளிந்து கொண்டுள்ளன.

    எதிர்ப்பு சக்திகள்: முருங்கைக்கீரை, சர்க்கரையை குறைக்கிறது. இதற்குள் ஆண்டி - ஆக்சிடன்ட், ஆண்டி - டயாபடிக், ஆண்டி - அத்திரோஜெனிக், ஆண்டி - ஹைப்பர் டென்சிவ், ஆண்டி - மைக்ரோபியல், ஆண்டி - இன்பிள மேட்ரி, ஆண்டி - பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் இப்படி நோய் எதிர்ப்பு சக்திகள் அனைத்துமே நிரம்பி கிடக்கின்றன. ஒரு கைப்பிடி கீரையை, 1 டீஸ்பூன் நெய் விட்டு, வதக்கி, 5 பல் பூண்டு, 5 மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் போன்றவற்றை பொடித்து, தினமும் மதிய உணவில் சேர்த்து சாப்பிட்டால், ஏகப்பட்ட உடல்பிரச்சனைகள் தீரும் என்கிறார்கள். வேர்க்கடலை: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலியை குணப்படுத்துகிறது.. பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடும்போது, பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். முருங்கைக்கீரையுடன் வேர்க்கடலை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுவடையும்.

    தலைமுடி வளர: தலைமுடிக்கு சிறந்த மருந்து முருங்கை. இதை உணவில் உட்கொள்ளும்போது, தலைமுடியும் வளரும். நரைமுடியும் குறையும்... மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப்புண் நீங்கும். தோல் வியாதிகள் தீரும். உடல் சூட்டை தணிக்கும்.. தணியும் மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.


    தோல் வியாதிகள்: முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து, அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்க உதவுகிறது. உடல் எடை குறைய வேண்டுமானால், முருங்கைக்கீரையை விட பெஸ்ட் மருந்து வேறில்லை. முருங்கை இலையில் தினமும் சூப் போல வைத்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பு அளவை குறைத்து உடல்எடை குறையும் என்கிறார்கள். இதையே ஜூஸ் போலவும் சாப்பிடலாம்.. முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.. அதை வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்.. ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைய உள்ளதால், இது குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.

    முருங்கை ஜூஸ்: மேலும், மெட்டபாலிசத்தை தூண்டி, கலோரிகளை வேகமாக கரைத்து, தொப்பை, உடல் பருமனையும் குறைக்க உதவுகிறது. ஆனால், 7 நாட்கள் இதை குடித்தபிறகு, ஒரு இடைவெளி விடவேண்டும்... அதேபோல, மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், குழந்தைகள் இந்த ஜூஸை குடிக்கக் கூடாது என்கிறார்கள். இந்த முருங்கைக்கீரை மட்டும்தான், மற்ற கீரைகளைவிட மிகவும் ஸ்பெஷலாக கருதப்படுகிறது.. இதற்கான காரணங்களை பாருங்கள், நீங்களே அசந்துபோயிடுவீங்க

    பொக்கிஷம்: மற்ற கீரைகளில் உள்ள இரும்புச்சத்தினை விட 75 சதவீத அதிக சத்து முருங்கை கீரையில் இருக்கிறது.. ஆரஞ்சைவிட 7 மடங்கு விட்டமின் சி இதில், நிரம்பி உள்ளது. பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம் இந்த கீரையில் உள்ளது. கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு விட்டமின் ஏ இந்த கீரையில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் இந்த கீரையில் உள்ளது. அதனால், எந்த அளவுக்கு முருங்கைக்கீரையை நாம் சேர்த்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நோய்கள் நம்மைவிட்டு விலகியே நிற்கும்..!!

    • வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
    • நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களின் அபாயத்தையும் குறைக்கும்.

    வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகள் ஊட்டச்சத்துக்கள் மிகுந்தவை, மிருதுவானவை, சத்தானவை. தினமும் ஊறவைத்த ஒரு வால்நட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவை..

    இதய ஆரோக்கியம்

    வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது கெட்ட கொழுப்பை (எல்.டி.எல்) குறைக்கவும், நல்ல கொழுப்பை (எச்.டி.எல்) அதிகரிக்கவும் உதவும். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

    மூளை செயல்பாடு

    மேலும் வால்நட்டில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூளை செயல்பாட்டையும் மேம்படுத்தும். அறிவாற்றல் திறனையும் அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களின் அபாயத்தையும் குறைக்கும்.

    அழற்சி எதிர்ப்பு பண்பு

    வால்நட்டில் பாலிபினால்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்டுகள் உள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளன. உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றன.

    உடல் எடை

    வால்நட் அதிக கலோரிகள் கொண்டதாக இருந்தாலும் உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவும். இதில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. அதனால் சாப்பிட்ட திருப்தியை ஏற்படுத்தும். ஒட்டுமொத்தமாக உட்கொள்ளப்படும் கலோரி அளவை குறைக்கவும் செய்யும்.

    செரிமானம்

    அக்ரூட் பருப்பை ஊறவைத்து சாப்பிடும்போது எளிதில் செரிமானமாகிவிடும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் அதிகரிக்கும். அதில் செரிமானத்தை ஊக்குவிக்கும் நார்ச்சத்தும் உள்ளது.

    எலும்பு ஆரோக்கியம்

    வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதற்கு மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் தேவை. அவை வால்நட்டில் இருக்கின்றன. அதனை தினமும் சாப்பிடுவது அதிக பலனை தரும்.

    சரும ஆரோக்கியம்

    அக்ரூட் பருப்பில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் ஈ அதிகம் உள்ளன. அவை சரும ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கின்றன.

    ரத்த சர்க்கரை

    அக்ரூட் பருப்புகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. அதனால் நீரிழிவு நோயாளிகள் உட்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

    தூக்கம்

    மெலடோனின் ஹார்மோன் செயல்பாட்டை ஊக்குவிக்கும் தன்மை அக்ரூட் பருப்புக்கு உண்டு. இது தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனாகும். இதனால் தூக்கத்தின் தரம் மற்றும் தூங்கும் கால அளவை மேம்படுத்த உதவும்.

    நாள்பட்ட நோய்கள்

    அக்ரூட் பருப்பில் பாலிபினால்கள் உள்ளிட்ட ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் துணைபுரிகின்றன.

    • உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.
    • இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர தேங்காய் துணை புரிகிறது.

    தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தேங்காயில் எண்ணற்ற சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன.

    புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

    தேங்காயின் அதிகபட்ச நன்மைகளை பெறுவதற்கு, நீங்கள் தேங்காய்யை பச்சையாக சாப்பிடுவதே நல்லது.

    எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது. தேங்காய் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.

    தேங்காய் சாப்பிடுவது உடலுக்கு அதிக எனர்ஜியைக் கொடுக்கிறது. அதோடு இதில் நோய் எதிர்க்கும் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை இரண்டு மடங்காகக் அதிகரிக்கச் செய்கிறது. தேங்காய் சாப்பிடுவதால் பருவகால நோய் தொற்றுக்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    வளரும் இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் சாப்பிடுவதால் இரும்பு சத்து கிடைக்கிறது.


    தலைமுடி உதிர்வை தடுக்க இன்று பலருக்கும் இளநரை ஏற்படுதல், முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் தோன்றி அவர்களை மனதளவில் சோர்வடைய செய்கிறது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப்பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. முடி உதிர்வு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது. மேலும் இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர தேங்காய் துணை புரிகிறது.

    தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து, தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது. சுருக்கங்களை போக்கி இளமைத் தோற்றத்தைத் தருகிறது. தோலில் உள்ள பளபளப்பு கூடி வயதான போதும் இளமையான தோற்றமே நீடிக்க வழி செய்யும். மேலும் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதை தடுப்பதோடு தோல் அரிப்பு போன்ற தொற்றுக் கிருமிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் போக்குகிறது

    தேங்காயை சரியான அளவு எடுத்துக் கொண்டால் எந்த வித விளைவும் இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது வாயுப் பிரச்சினை, கலோரி அதிகமாகுதல், சர்க்கரை மற்றும் கொழுப்பு மற்றும் அலர்ஜி போன்றவைகளும் ஏற்படுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் கொண்டு சரியான அளவில் தேங்காயை பயன்படுத்தி எல்லா விதமான நலன்களையும் பெறுங்கள்.

    • பழங்களில் இருக்கும் இயற்கை சர்க்கரையான பிரக்டோஸையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
    • பழங்களை அளவாக சாப்பிட வேண்டும்.

    சரிவிகித உணவுகளை உட்கொள்ளும் விஷயத்தில் பழங்களை புறக்கணித்துவிட முடியாது. அவற்றில் வைட்டமின்கள், அத்தியாவசிய தாதுக்கள், நீர்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்பட உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளம் நிரம்பி இருக்கின்றன.

    ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை பின்பற்றுவதற்கு கட்டாயம் பழங்களையும் உட்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

    அதேவேளையில் பழங்களில் உள்ளடங்கி இருக்கும் இயற்கை சர்க்கரையான பிரக்டோஸையும் கருத்தில் கொள்ள வேண்டும். அது உடலுக்கு நன்மை சேர்க்கும் என்றாலும் அதிகமாக உட்கொள்ளும்போது நீரிழிவு, இதயநோய், உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

    ஏற்கனவே இத்தகைய பாதிப்புகொண்டவர்களுக்கு நிலைமையை மோசமாக்கலாம். எனவே பழங்களை அளவாக சாப்பிட வேண்டும். எந்தெந்த பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக, குறைவாக இருக்கிறது என்று பார்ப்போம்.

    அதிக சர்க்கரை கொண்ட பழங்கள்:

    செர்ரி:

    செர்ரி சிவப்பு பழத்தில் 100 கிராமுக்கு 12.82 கிராம் சர்க்கரை உள்ளது.

    பேரீச்சை பழம்:

    பேரிட்சை பழத்தின் ஒவ்வொரு 100 கிராமிலும் 63.35 கிராம் சர்க்கரை உள்ளடங்கி இருக்கிறது. அதனால் அதிகம் உட்கொள்ளக்கூடாது.

    அத்திப்பழம்:

    அத்திப் பழம் 100 கிராமுக்கு 16.26 கிராம் சர்க்கரையை கொண்டிருக்கிறது.

    ஆரஞ்சு:

    100 கிராம் இதை உட்கொள்வது 12 கிராம் சர்க்கரையை உட்கொள்வதற்கு சமம்.

    அன்னாசிப்பழம்:

    அன்னாசிபழத்தில் சர்க்கரை உள்ளடக்கம் 100-க்கு 10 கிராம்.

    வாழைப்பழம்:

    100 கிராம் வாழைப்பழத்தில் 17 கிராம் சர்க்கரை இருக்கும். அது நன்கு பழுத்திருந்தால் 20 கிராம் சர்க்கரைக்கு சமமாக இருக்கும்.

    திராட்சை:

    ஒரு கொத்து திராட்சை பழம் 20 கிராம் வரை சர்க்கரையை வழங்கும்.

    குறைந்த சர்க்கரை அளவு கொண்ட பழங்கள்:

    பொதுவாக 100 கிராம் கொண்ட பழத்தில் 1 முதல் 20 கிராம் வரை சர்க்கரை இருக்கும். அதனால் அதிக சர்க்கரை (பிரக்டோஸ்) இல்லாத பழங்களை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

    அவகேடோ:

    100 கிராம் அவகேடோ பழத்தில் வெறும் 0.7 கிராம் அளவே சர்க்கரை உள்ளது. அதனால் இது குறைந்த அளவு சர்க்கரை கொண்ட பழமாக அறியப்படுகிறது. இதனை நீரிழிவு நோயாளிகள் தவறாமல் சாப்பிட்டு வரலாம்.

    பெர்ரி பழங்கள்:

    100 கிராம் புளூபெர்ரி பழத்தில் 4 கிராம் சர்க்கரை உள்ளது. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் 100 கிராமுக்கு 7 கிராம் சர்க்கரை உள்ளடங்கி இருக்கிறது. ராஸ்பெர்ரி 5 கிராம் சர்க்கரையை கொண்டிருக்கும்.

    கொய்யா:

    100 கிராம் கொய்யா பழம் 5 கிராம் சர்க்கரையை வழங்குகிறது.

    எலுமிச்சை:

    இந்த சிட்ரஸ் பழத்தில், 100 கிராமுக்கு 2.5 கிராம் சர்க்கரை காணப்படுகிறது.


    மாண்டரின்:

    இது ஆரஞ்சு பழத்தில் ஒரு ரகம். 100 கிராம் பழத்தில் தோராயமாக 10 கிராம் சர்க்கரை உள்ளது.


    முலாம்பழம்:

    இந்த பழம் 100 கிராமுக்கு 6 கிராம் சர்க்கரையை வழங்குகிறது.


    தர்பூசணி:

    தர்பூசணி பழத்தில் 100 கிராமுக்கு 6 கிராம் சர்க்கரை உள்ளது. அதனால் ஒரு துண்டு தர்ப்பூசணி பழம் எவ்வளவு எடை கொண்டிருக்கிறது என்பதை கணக்கிட்டு உண்ண வேண்டும்.


    மாம்பழம் 

    இது மாம்பழ சீசன். 'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் இதை வயது வித்தியாசமின்றி அனைவரும் ருசிப்பர். ஆனால் மாம்பழங்களை அதிகம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக அதில் நார்ச்சத்தும், சர்க்கரையும் (100 கிராம் பழத்தில் 14.8 கிராம்) அதிகம் இருக்கிறது.

    அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்துவிடும். அதனை தடுக்க ஊறவைத்த பாதாம் பருப்புடன் மாம்பழ துண்டுகளை சேர்த்து உட்கொள்ளலாம். அதனை மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவது சிறந்தது.

    காலை வேளையில் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது நாள் முழுவதும் பசியை தூண்டிவிட்டுவிடும். அதனால் அதிகம் உணவு உண்ண காரணமாகிவிடும். மாம்பழத்தை ஜூசாகவோ, மில்க் ஷேக்காகவோ பருகுவதை தவிர்க்க வேண்டும். அதில் அதிக சர்க்கரை மற்றும் பால் பொருட்கள் கலந்திருக்கும். அது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கச்செய்துவிடும். மாம்பழங்களை வெட்டுவதற்கு முன்பு நன்கு கழுவ வேண்டும். அதனை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்துவிட்டு வெட்டுவது சிறப்பானது.

    தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்ளலாம்?

    பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதை உணர்ந்து, அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். அதேவேளையில் சரியான அளவில் உட்கொள்வது வளர்சிதை மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

    ஆண்கள் ஒரு நாளைக்கு 9 டீஸ்பூன் (36 கிராம் அல்லது 150 கலோரிகள்) அளவுக்கு மேல் சர்க்கரை உட்கொள்ளக்கூடாது. பெண்கள் ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன்களுக்கு (25 கிராம் அல்லது 100 கலோரிகள்) அதிகமாக சர்க்கரை உட்கொள்ளக்கூடாது.

    டீ, காபி, இனிப்பு பலகாரங்கள் உள்பட சாப்பிடும் மற்ற உணவுப்பொருட்களில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவை கணக்கிட்டு அதற்கேற்ப தினமும் உட்கொள்ளும் சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும்.

    முதலில் பழங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு அதன் பின்னரே மற்ற இனிப்பு பொருட்களை உட்கொள்வது ஆரோக்கியத்துக்கும், ஆயுளுக்கும் நல்லது.

    ×