search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைநிறுத்த போராட்டம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து வருகிறார்கள். மேலும் நமது மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யும் படகுகளையும் அந்நாடு அரசுடமையாக்கி வருவதால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

    கச்சத்தீவு மீட்கப்பட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சனை தீரும் என்பதால் மத்திய அரசை தமிழக அரசும், மீனவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மீனவர்கள் சிறைபிடிக்கப்படும்போது எழும் கோரிக்கைகளும், கோஷங்களும் பின்னர் பேசப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற 32 மீனவர்கள் மற்றும் 5 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இதில், படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனை கண்டித்தும், சிறையில் உள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் இன்று யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதனைதொடர்ந்து, ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு, ஏப்ரல் 8-ந்தேதி ஆதார் அட்டை, மீனவர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மத்திய அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் மீனவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

    இந்த போராட்டம் காரணமாக மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்து பிழைப்பு நடத்துபவர்கள் என சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் தினந்தோறும் நடைபெறும் கோடிக்கணக்கான அளவிலான மீன்பிடி தொழில் வர்த்தகமும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே கடந்த மாதம் இதேபோல் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள், உண்ணாவிரதமும் இருந்தனர். மேலும் ராமேசுவரத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு நடைபயணமும் மேற்கொண்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தை நடத்திய கலெக்டர் மற்றும் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்தநிலையில் மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பல்வேறு இன்னலுக்கு ஆளாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    • போராட்டம் நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் மறியல், முழு அடைப்பு உள்ளிட்ட பல வடிவங்களில் நடைபெற உள்ளது.
    • போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு வீடு வீடாக துண்டு பிரசுரங்கள், வினியோகிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை அதிகப்படுத்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    வருகிற 16-ந்தேதி நடைபெறும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள், தபால் தொலை தொடர்புதுறை, ரெயில்வே, மின்வாரியம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள தொழிற்சங்கத்தினர் பங்கெடுக்க உள்ளனர்.

    இந்த போராட்டம் நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் மறியல், முழு அடைப்பு உள்ளிட்ட பல வடிவங்களில் நடைபெற உள்ளது. போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு வீடு வீடாக துண்டு பிரசுரங்கள், வினியோகிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் பங்கு பெற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இதற்கான ஆலோசனைக்கூட்டம் சென்னை தொ.மு.ச. தலைமையகத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., டி.டி.எஸ்.எப். உள்பட 9 சங்கங்கள் சார்பில் அதன் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசித்தனர்.

    இதில் மத்திய அரசை கண்டித்து அகில இந்திய அளவில் பிப்ரவரி 16-ந் தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தையும், மறியல் போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதுபற்றி சி.ஐ.டி.யு. தொழிற்சங்க செயலாளர் சவுந்தரராஜன் கூறுகையில், "மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்த போராட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முழுமையாக பங்கேற்க உள்ளது.

    இதனால் 16-ந்தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்போது பஸ் போக்குவரத்து பாதிக்கப்படும்.

    அன்றைய தினம் தொழிலாளர்கள் 'ஸ்டிரைக்கில்' பங்கேற்கும்போது அதே நாளில் மறியல் போராட்டங்களும் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போக்குவரத்து தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதால் பஸ்கள் ஓடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "அத்தியாவசிய சேவை பணியில் போக்குவரத்து வருவதால் பஸ்களை இயக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்றார்.

    ஆனால் நடைமுறையில் அன்றைய தினம் பாதியளவு பஸ்கள் தான் ஓடும் என தெரிகிறது.

    • லாரி பாடி கட்டுமானத்தில் ஈடுபடும் நிறுவனங்களும் போராட்டத்தில் பங்கேற்றன.
    • இன்று சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்தனர்.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் சார்பில் முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் இன்று உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டன.

    அதுபோல் லாரி பாடி கட்டுமானத்தில் ஈடுபடும் நிறுவனங்களும் போராட்டத்தில் பங்கேற்றன.

    இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக இன்று சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்தனர்.

    • தூய்மைப் பணி அவுட்சோா்சிங் முறையில் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டது.
    • ரூ.380 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.

    திருப்பூர் : 

    திருப்பூா் மாவட்டம் தாராபுரம், உடுமலை, பல்லடம், காங்கயம், வெள்ளக்கோவில், திருமுருகன்பூண்டி ஆகிய 6 நகராட்சிகளில் தூய்மைப் பணி அவுட்சோா்சிங் முறையில் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டது. இதன் பின்னா் தினக்கூலி ஒப்பந்த தொழிலாளா்களுக்கான ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ரூ.380 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள குறைந்தபட்ச ஊதிய அரசாணையில் தூய்மைப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் நிா்ணயித்துள்ள ரூ.572, குடிநீா்ப் பணியாளா்களுக்கு ரூ.648, ஓட்டுநா்களுக்கு ரூ.687 வீதம் தினசரி ஊதியம் வழங்க வேண்டும்.இந்த அரசாணைப்படி ஊதியம் வழங்கக் கோரி திருமுருகன் பூண்டி, பல்லடம் நகராட்சிகளில் தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.போராட்டத்தைத் தொடா்ந்து 250-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் திருப்பூா் நகராட்சிகள் நிா்வாக மண்டல இயக்குநா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

    இது குறித்து சிஐடியூ ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ் கூறியதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு அரசாணையின்படி ஊதியம் வழங்க வேண்டும். இது தொடா்பாக அடுத்த ஓரிரு நாள்களில் பேச்சுவாா்த்தை நடத்தி சமூகத்தீா்வு காண வேண்டும். இல்லாவிட்டால் ஜூலை 25 -ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

    • மீன்பிடி தொழிலில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைப்பார்த்து வருகிறார்கள்.
    • கடந்த 2 நாட்களாக போராட்டம் காரணமாக மீன்கள் பிடிக்கவில்லை.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையில் ஏராளமான மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மீன்கள் மீன்வளத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு வருகிறது.

    மீன்பிடி தொழிலில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைப்பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் தனியார் ஒப்பந்த காலம் நேற்று முன்தினம் முடிவடைந்ததது. இதையடுத்து மீன் பிடிக்கும் உரிமையை தங்களுக்கு வழங்க கோரி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தம் தொடங்கினர். இன்று 2-வது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது.

    பவானி சாகர் அணையில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள் ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தினமும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக போராட்டம் காரணமாக மீன்கள் பிடிக்கவில்லை. எனவே மீன் விலை உயரும் நிலை உருவாகி இருக்கிறது. மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லாததால் நீர்பிடிப்பு பகுதிகளில் கரையோரம் பரிசல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

    • அணையில் தனியாருக்கு விடப்பட்ட மீன்பிடி ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்தது.
    • சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழகத்தின் 2-வது பெரிய அணையாக பவானிசாகர் அணை இருந்து வருகிறது.

    அணையில் மிருகால், லோகு, கெண்டை, கெழுத்தி, விலாங்கு, ஜிலேபி உள்பட பல்வேறு வகையான மீன்கள் உள்ளது. அணையில் இருந்து தினமும் சுமார் 1 டன் (1000 கிலோ) மீன்கள் பிடிக்கப்படுகிறது.

    இங்கு பிடிக்கப்படும் மீன்கள், ஈரோடு, சத்தியமங்கலம், புளியம்பட்டி, கோபிசெட்டிபாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கோவை, திருப்பூர், சேலம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பவானிசாகர் அணை மீன்கள் கொண்டு செல்லப்படுகிறது.

    அணையின் நீர் தேக்க பகுதியில் மீன் பிடிப்பதற்காக உரிம ஒப்பந்தம் செய்யப்பட்டு மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அணையில் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 622 மீனவர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மீன் பிடி தொழிலாளர்கள் என 1000-க்கும் மேற்பட்டவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அணையில் தனியாருக்கு விடப்பட்ட மீன்பிடி ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து பவானி சாகர் அணையில் மீன் பிடிக்கும் உரிமத்தை மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பவானிசாகர் அருகே உள்ள வெள்ளாள பாளையத்தில் நடந்தது.

    கூட்டத்தில் பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் உரிமத்தை பவானிசாகர் மற்றும் சிறுமுகை மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன் பிடிக்கும் உரிமத்தை வழங்கலாம் என ஐகோர்ட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.

    எனவே கோர்ட்டு உத்தரவுப்படி மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன் பிடிக்கும் உரிமத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து பவானிசாகர் அணை பகுதியில் மீன் பிடிக்கும் உரிமத்தை மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பவானிசாகர் அணை பகுதி மீனவர்கள் தங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை இன்று (செவ்வாயக்கிழமை) தொடங்கினார்கள்.

    இதையொட்டி பவானி சாகர் கரையோர பகுதிகள், சுஜில் குட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் படகு, பரிசல்களை கவிழ்த்து போட்டு இருந்தனர்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். இதனால் பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

    • ஆண்டிபட்டியில் உள்ள 30 கிராம ஊராட்சிகளில் தற்பொழுது 22 ஊராட்சி செயலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 22 ஊராட்சி செயலாளர்கள் 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டியில் உள்ள 30 கிராம ஊராட்சிகளில் தற்பொழுது 22 ஊராட்சி செயலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். 8 ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர் பணி காலியாகவே உள்ளது. 8 ஊராட்சிகளுக்கும் அருகிலுள்ள கிராம ஊராட்சி செயலாளர்கள் கூடுதல் பணி கவனித்து வந்தனர்.

    இந்நிலையில் பணி வரன்முறையை அரசு ஆணையாக வெளியிடுதல், வருடம் முழுவதும் ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆண்டிப்பட்டியில் உள்ள 22 ஊராட்சி செயலாளர்கள் 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராம ஊராட்சிகளில் பொது மக்கள் பணி பாதிப்படைந்துள்ளது என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் இதுகுறித்து டி.ராஜகோபாலன் பட்டி ஊராட்சி தலைவர் வேல்மணி பாண்டியன் கூறியதாவது, தற்போதைய நிலையில் ஊராட்சி செயலாளர்கள் வேலை நிறுத்தத்தால் ஊராட்சி பணிகளில் எவ்வித பாதிப்பும் இல்லை.

    மக்கள் பணிகளை நேரடியாக நாங்களே சென்று அவர்கள் குறை கேட்டு தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறோம். தற்போது வரை எவ்விதமான பாதிப்பும் ஊராட்சிகளில் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    அதில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும், அவுட்சோசிங் முறையை முழுவதுமாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 10-ந்தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்யப்பட்டது.  

    மேலும், வரும் 20-ந்தேதி வேலைநிறுத்தத்திற்கான நோட்டீசை அரசுக்கு வழங்குவது என்றும், 27-ந்தேதி அனைத்து பொறியாளர் அலுவலகம் முன்பாகவும் வேலைநிறுத்த ஆயத்த விளக்க கூட்டங்கள் நடைபெறும் எனவும் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.

    ×