search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலீட்டாளர்கள்"

    • ஜனவரி மாதம் சென்செக்ஸ் முதல்முறையாக 73 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
    • நேற்று இந்திய பங்கு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது

    இன்று, இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

    மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், வர்த்தகத்தின் இறுதி நேர நிலவரப்படி, 1000 புள்ளிகள் சரிந்து 70,419 எனும் அளவில் வர்த்தகமாகியது.

    தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, வர்த்தகத்தின் இறுதி நேர நிலவரப்படி 341 புள்ளிகள் சரிந்து 21,255 எனும் அளவில் வர்த்தகமாகியது.

    2024 ஜனவரி மாதம், சென்செக்ஸ், அதன் வரலாற்றில் முதல்முறையாக 73,000 புள்ளிகளை தொட்டது குறிப்பிடத்தக்கது.

    நேற்று (ஜனவரி 22) திங்கட்கிழமையாக இருந்தும், உத்தர பிரதேச மாநில அயோத்தியா நகரில், இந்துக்களின் கடவுளான பகவான் ஸ்ரீஇராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

    இதையொட்டி, நேற்று பங்கு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    இம்மாதத்தின் முதல் சில நாட்களில் புதிய உச்சங்களை தொட்ட பங்கு சந்தை அதே நிலையில் நீடிக்க முடியாமல் தள்ளாடியது.

    ஜனவரி 23 செவ்வாய்கிழமையான இன்று பெரும் சரிவை சந்தித்தது.

    இம்மாதம், இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்த எஃப்ஐஐ (FII) எனும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பெருமளவு முதலீட்டை திரும்ப பெற்று கொண்டதன் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பங்குகளின் விலை, சந்தை நிலவரத்தை பொறுத்து மாறுபடும் என்பதால் தகுந்த பங்கு சந்தை வல்லுனர்களின் ஆலோசனைப்படி பங்குகளில் முதலீடு செய்து வருவது முதலீட்டாளர்களுக்கு பயன் தரும் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

    • நிஃப்டி 22,115 எனும் புதிய உயரத்தை எட்டியது
    • சென்செக்ஸ் 73,402 எனும் புதிய உயரத்தை எட்டியது

    ஜனவரி 15, இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்தது.

    பங்கு சந்தையில் பதிவு பெற்ற முக்கிய நிறுவனங்களான ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் ஆகியவற்றின் பங்குகள் உயர்வை தொட்டன.

    நிறுவனங்களின் நம்பிக்கையூட்டும் காலாண்டு வருவாய், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு, நேர்மறையான உலக பொருளாதார குறியீடுகள், மக்களவை தேர்தலுக்கு பிறகு நிலையான ஆட்சி அமைய கூடிய சாத்தியக்கூறு உள்ளிட்டவை பங்கு சந்தையின் ஏற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

    தேசிய பங்கு சந்தையின் (NSE) குறியீட்டு எண்ணான நிஃப்டி (Nifty), 22,053 என தொடங்கி முதல் முறையாக 22,115 எனும் புதிய உயரத்தை எட்டி, 22,097 எனும் அளவில் நிறைவடைந்தது.

    மும்பை பங்கு சந்தையின் (BSE) குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex), 73,049 என தொடங்கி முதல் முறையாக 73,402 எனும் புதிய உயரத்தை எட்டி 73,327 எனும் அளவில் நிறைவடைந்தது.

    இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 3 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 தொடங்க உள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்பு மிகவும் கூடியுள்ளது.
    • தமிழ்நாட்டின் தொழில் திறத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமையும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 தொடங்க உள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்பு மிகவும் கூடியுள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் நமது தமிழ்நாட்டின் முன்னணி தொழில் அதிபர்கள் மற்றும் ஒரு டிரில்லியன் கனவுகள் ஆகிய பரப்புரைகள் பரவலான ஆர்வத்தை மூட்டியுள்ளன.

    450-க்கும் மேற்பட்ட பன்னாட்டுப் பிரதிநிதிகள், 170 உலகப் புகழ் பெற்ற பேச்சாளர்கள், 50 உலக நாடுகளின் பங்கேற்பு என உலக முதலீட்டாளர் மாநாடு தமிழ்நாட்டின் தொழில் திறத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமையும்.

    தலைமைப் பண்பு குறித்த 26 அமர்வுகள், குறு சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான காட்சி அரங்குகள், தமிழ்நாட்டின் தொழில் சூழலுக்கான காட்சி அரங்குகள், பல்வேறு உலக நாடுகளுக்கான காட்சி அரங்குகள், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு காட்சி அரங்குகள் என எங்கள் மாநிலத்தின் விந்தையைக் காணவும், தொழில் கூட்டிணைவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பங்கேற்பாளர்களுக்கு அற்புதமான வாய்ப்பினை இந்த மாநாடு வழங்கும்.

    தமிழ்நாட்டின் தொழில் மரபை கொண்டாடி தமிழகம் வழங்கும் எல்லையற்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள எங்களோடு இணையுங்கள்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • மேற்கத்திய நாடுகளில் பங்கு சந்தையில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர்
    • 2024 மார்ச் மாதம், புதிய நடைமுறை அமலுக்கு வரும் என மாதாபி தெரிவித்தார்

    இந்தியர்களின் வாழ்க்கை முறையில், பொருளாதார சேமிப்பு திட்டங்கள் அனைத்தும் குடும்ப நன்மை (family interest) மற்றும் தங்களின் வருங்கால சந்ததியினரின் நன்மையை (dynastic approach) உள்ளடக்கியது. எனவே, அவர்கள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட், தங்கம், வெள்ளி, வங்கி வைப்பு தொகை, ஆயுள் காப்பீடு போன்றவற்றிலேயே தங்கள் சேமிப்புகளை முதலீடாக செய்து வருகிறார்கள்.

    இதற்கு நேர்மாறாக அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளில் பொதுமக்கள் பங்கு சந்தை வர்த்தகத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால், கடந்த இரு தசாப்தங்களாக இந்தியர்களின் பங்கு சந்தை முதலீடு அதிகரித்து வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் முழு ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட பொதுமுடக்கம் பலரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியது. அப்போது வருவாய் ஈட்டும் வழியாக பங்கு சந்தை வர்த்தகத்தில் மக்கள் ஆர்வமுடன் ஈடுபட ஆரம்பித்தனர்.

    தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக இந்திய பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இணையவழி பங்கு சந்தை வர்த்தகம் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு ஆகியவை இந்திய இளைஞர்களுக்கு பங்கு சந்தை ஆர்வத்தை மேலும் பெருக்கி வருகிறது.

    இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி (Securities Exchange Bureau of India) முதலீட்டாளர்களுக்கு வழிமுறைகளை எளிதாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பங்கு சந்தையில் ஒரு முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட நிறுவன பங்கை விற்கிறார்; வேறொருவர் அதை வாங்குகிறார். விற்பவருக்கு பணமும், வாங்குபவருக்கு பங்கும் அவரவர் கணக்குகளில் சேர்வதற்கான நாள் கணக்கு "செட்டில்மென்ட் காலம்" என அழைக்கப்படும்.

    வர்த்தகம் (Trading) நடைபெற்ற 2 நாட்கள் கழித்து செட்டில்மென்ட் நடப்பது T+2 என்றும் 1 நாளில் நடப்பது T+1 என்றும் அழைக்கப்படும்.

    முன்பு 2 நாட்கள் என இருந்த செட்டில்மென்ட் காலம், 1 நாள் என குறைக்கப்பட்ட பிறகு ரூ.700 கோடி அளவிற்கு முதலீட்டாளர்களுக்கு பயன் கிடைத்ததாக ஆய்வுகள் தெரிவித்தன.

    இந்நிலையில், செபி, செட்டில்மென்ட் நாட்களை மேலும் குறைக்க இருக்கிறது.

    இது குறித்து செபி தலைமை அதிகாரி மாதாபி புரி புக் (Madhabi Puri Buch) கூறியதாவது:

    முதலில் ஒரு-மணி நேர செட்டில்மென்ட், பிறகு சில நாட்களில் உடனடி செட்டில்மென்ட் என கொண்டு வர திட்டமிட்டிருந்தோம். முதலீட்டாளர்கள் மற்றும் பங்கு சந்தை தரகர்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம். அதன்படி ஒரு முதலீட்டாளர் பங்கை விற்கும் அன்றே அவருக்கு பணம் கிடைக்கவும், வாங்குபவருக்கு பங்கு கிடைக்கவும் வழிவகை செய்யும் அதே நாள் செட்டில்மென்ட் (same-day settlement) முயற்சியை முதலில் கொண்டு வந்துள்ளோம். அடுத்த வருட மார்ச் மாதத்திலிருந்து முதலீட்டாளர்களுக்கு இது செயல்பாட்டில் வரும்.

    இதனையடுத்து ஒரு-மணி நேர செட்டில்மென்ட் (one-hour settlement) அமல்படுத்தப்பட்டு, பிறகு படிப்படியாக உடனடி செட்டில்மென்ட் (instantaneous settlement) அமலுக்கு வரும். இதன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பணப்புழக்கம் மேலும் அதிகமாகும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சிறு முதலீட்டாளர்களை காட்டிலும் பெரும் தொகை மற்றும் மிக பெரும் தொகை முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் பயன் அளிக்கும் திட்டம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • தெற்காசியாவிலேயே, முதலீடுகளை ஈர்த்திட உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
    • எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள், தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து, தங்கள் திட்டங்களை இங்கு நிறுவியுள்ளனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஜப்பான் நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் சுமார் 80 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ஏர்பேக் இன்பிளேடர் தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டைசல் நிறுவனத்தின் வணிக இயக்கப் பிரிவுத் தலைவர் கென் பாண்டோவும், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணுவும் கையெழுத்திட்டனர்.

    அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக ஜப்பான் நாட்டு நிதி உதவியை பெறுவதற்காக 2008-ஆம் ஆண்டு நான் டோக்கியோ நகருக்கு வருகை தந்ததை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். மெட்ரோ ரெயில் திட்டமாக இருந்தாலும், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு மிக மிக முக்கியமான திட்டங்கள்.

    அப்போது ஜப்பானை நம்பி உதவிகள் கேட்டோம். ஜப்பான் நாடு எங்களைக் கைவிடவில்லை.

    அந்தக் காலக்கட்டத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 840 நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி நிறுவனங்களை நடத்தி வந்தன.

    அதில் தமிழ்நாட்டில் மட்டும் 170 நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையை நடத்தி வந்தன. அதற்கு ஒரு அலுவலகமாக அப்போது திறந்து வைக்கப்பட்டது. அதில் பேசும்போது, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன். அப்போது பேசிய ஜப்பான் அமைச்சர் மசாயூகி நாஷிமா, "சென்னை என்பது ஆசிய நாடுகளின் நுழைவாயிலாக அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

    அதே, ஆசிய நாடுகளின் நுழைவாயிலான சென்னையில் இருந்து நான் வருகை தந்துள்ளேன். 'உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2024' ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அந்த, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நிகழ்வுக்கு, கூட்டாளர் நாடாக ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இரு நாடுகளுக்கு இடையேயான, பொருளாதார உறவுகள், சமீப காலங்களில் மிகப்பெரும் எழுச்சி கண்டுள்ளது. இந்திய சந்தைக்குள் நுழையும் ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்குள், தமிழ்நாடு தான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக முன்னணியில் விளங்குகிறது.

    தெற்காசியாவிலேயே, முதலீடுகளை ஈர்த்திட உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள், தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து, தங்கள் திட்டங்களை இங்கு நிறுவியுள்ளனர்.

    நிசான், தோஷிபா, யமஹா, கோமேட்ஸு, யோரோசு, யமஹா ஹிட்டாச்சி மற்றும் யூனிப்ரெஸ் போன்ற மிகப்பெரும் நிறுவனங்கள், தங்கள் உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் அமைத்துள்ளன. இது நீண்டு கொண்டே போகும் பட்டியல்.

    ஜப்பான்-இந்தியா முதலீடு மேம்பாட்டுக் கூட்டாண்மை திட்டத்தின்கீழ் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கியப் பங்காற்றிடும் விதமாக, 2030 நிதியாண்டிற்குள், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான ஒரு இலட்சிய இலக்கினை நிர்ணயித்து, அந்தப் பாதையில் பயணித்து வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே இதுவரை 5 ஆயிரத்து 596 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4244 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 5 ஜப்பானிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

    டைசல் கார்ப்பரேஷன், மிட்சுபிஷி, மதர்சன் ஆட்டோ சொல்யூஷன்ஸ், ரெனோ-நிஸ்ஸான் விரிவாக்கத் திட்டம் மற்றும் மக்கினோ போன்ற பல நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை நிறுவுவதற்காக, சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன.

    இன்னும் பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான பல்வேறு தொழிற்கொள்கைகளையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

    இதன் பொருட்டே, முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக, தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. அதனால்தான் எங்களுடன் இணைந்திடுமாறு, உங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். ஜப்பானிய நிறுவனங்கள் பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த துறைகளில் மட்டுமே முதலீடு மேற்கொள்ள விழைகின்றன.

    இந்நிலையை சற்றே விரிவுபடுத்தி, மேம்பாட்டு திட்டங்களிலும் முதலீடு மேற்கொள்ள வருமாறு, இத்தருணத்தில் உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில், புதிய தொழில் பூங்காக்களை அமைத்து வருகிறோம்.

    மேலும், மருத்துவ சாதனங்கள் பூங்கா, உணவுப் பூங்காக்கள், மின் வாகனங்களுக்கான பூங்கா மற்றும் வருங்கால நகர் திறன் பூங்கா, மின்னணுவியல் உற்பத்தித் தொகுப்புகள், ஒருங்கிணைந்த ஆடை மற்றும் ஜவுளி பூங்கா, தோல் காலணிகள் மற்றும் உப பொருட்களின் உற்பத்தித் தொகுப்புகள் மற்றும் நிதி நுட்ப நகரம் என்று பல்வேறு துறை சார்ந்த உட்கட்டமைப்புகளை நாங்கள் வலுப்படுத்தி வருகிறோம்.

    இத்துறைகளில், உங்களின் மேலான முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜப்பான் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான மதிய உணவுடன் கூடிய சந்திப்பு நிகழ்வில், ஒசாகா மாகாணத்தின் துணை கவர்னர் நோபுஹிகோ யமாகுஜிவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலிலுக்கு தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • தமிழினத்தின் பெருமையை மீட்கும் அரசாக திமுக அரசு உள்ளது என முதலமைச்சர் பேச்சு

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார். மேலும், சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலிலுக்கு தமிழ் அமைப்புகள் சார்பில் தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    திராவிட இயக்கத்தால் வாழ்ந்த தமிழர்களை காணவே சிங்கப்பூர் வந்துள்ளேன். சிங்கப்பூரில் இருந்தாலும் தமிழ்நாட்டில் இருப்பதுபோல் உணர்கிறேன். சிங்கப்பூர் நாணயத்திலும் தமிழ் உள்ளது. சிங்கப்பூர் வாழ் தமிழர்களை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிங்கப்பூர்- தமிழ்நாடு இடையேயான தொடர்பு ஆயிரம் ஆண்டுக்கும் மேலானது.

    தமிழால் இணைந்துள்ள நம்மை சாதி மதத்தால் பிரிக்க முடியாது. தமிழினத்தின் பெருமையை மீட்கும் அரசாக திமுக அரசு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை எடுத்துரைத்து முதலீடு செய்யும்படி அழைப்பு விடுத்தார்.
    • சென்னையில் ஜனவரி 10 மற்றும் 11 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது.

    சிங்கப்பூர்:

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    சென்னையில் இருந்து நேற்று சிங்கப்பூர் சென்றடைந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றுள்ளார். சிங்கப்பூர் விமான நிலையத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் சிங்கப்பூர் தொழில் அதிபர்கள், பல்வேறு தமிழ் அமைப்பினர், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், அரசு உயர் அதிகாரிகள் மலர் கொத்து, புத்தகங்கள், பொன்னாடைகள் வழங்கி வரவேற்றனர்.

    சிங்கப்பூர் சென்றடைந்த மு.க.ஸ்டாலின் இன்று காலையில் சிங்கப்பூர் தொழில் அதிபர்களையும், முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளையும் சென்று சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை எடுத்துரைத்து முதலீடு செய்யும்படி அழைப்பு விடுத்தார். 

    இன்று மாலையில் சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது உலகத் தரத்திலான திறமைகள், போதுமான உள்கட்டமைப்பு, ஸ்திரமான கொள்கை ஆகியவற்றுடன் விருப்பமான முதலீட்டு தளமாக தமிழ்நாடு திகழ்வதாக கூறியதுடன், தமிழகத்தில் முதலீடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

    இதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 தேதிகளில் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். 

    இந்த மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டன. இந்த மாநாட்டின்போது தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), பேம் டிஎன், டான்சிம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவை சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த நிறுவனங்களுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்தன. 

    • சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
    • இன்று இரவு சிங்கப்பூரில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஜப்பான் புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள் மற்றும் புதிய தொழில் நுட்பங்களை கொண்டு வருவதற்காக வருகிற ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு நேற்று பயணம் மேற்கொண்டார்.

    இதற்காக சென்னையில் இருந்து நேற்று காலையில் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றுள்ளார்.

    சிங்கப்பூர் விமான நிலையத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் சிங்கப்பூர் தொழில் அதிபர்கள், பல்வேறு தமிழ் அமைப்பினர், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், அரசு உயர் அதிகாரிகள் மலர் கொத்து, புத்தகங்கள், பொன்னாடைகள் வழங்கி வரவேற்றனர்.

    சிங்கப்பூர் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் சிங்கப்பூர் தொழில் அதிபர்களையும், முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளையும் சென்று சந்தித்தார்.

    சிங்கப்பூர் நாட்டின் டமாசெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தில்ஹான் பிள்ளை சந்திரசேகராவை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். அத்துடன் சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

    இதைத் தொடர்ந்து சிங்கப்பூர் நாட்டின் செம்ப்கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிம்யின் வாங்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது அவரிடமும் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீடுகள் செய்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

    இதன் பிறகு சிங்கப்பூர் நாட்டின் கேப்பிட்டா லேண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ்தாஸ் குப்தாவை சந்தித்து பேசினார். அப்போது அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

    தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த சந்திப்பின் போது தமிழக தொழில் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலாளர் இறையன்பு, தொழில் துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், சிங்கப்பூர் நாட்டிற்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ஒவ்வொரு நிறுவன அதிகாரிகளையும் தொழில் அதிபர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திய போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உள்ளதாக எடுத்துக் கூறினார்.

    தமிழகத்தில் தொழில் தொடங்க முன் வந்தால் தமிழக அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவாதம் அளித்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரன், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் ஆகியோரையும் இன்று சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் சிங்கப்பூர் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

    இதைத் தொடர்ந்து இன்று மாலையில் சிங்கப்பூரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் 350-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.

    இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), பேம் டிஎன், டான்சிம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவை சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த பல்கலைக் கழகம் (டிசைன் மற்றும் டெக்னாலஜி), சிங்கப்பூர் இந்தியா கூட்டமைப்பு, சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

    இன்று இரவு சிங்கப்பூரில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஜப்பான் புறப்பட்டுச் செல்ல உள்ளார். அங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    ஜப்பான் நாட்டு முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்களை சந்தித்து பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பும் விடுக்க உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா 2 நாட்களுக்கு முன்பே சிங்கப்பூர் சென்று விட்டார்.
    • இன்றும், நாளையும் சிங்கப்பூரில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பிறகு ஜப்பான் புறப்பட்டு செல்ல உள்ளார்.

    சென்னை:

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கிய பங்காற்றிடும் விதமாக, 2030-2031 நிதி ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேம்படச் செய்வதை ஒரு லட்சிய இலக்காகக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலாற்றி வருகிறார்.

    இந்த இலக்கினை அடைந்திட, ரூ.23 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்த்திடவும், 46 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும் வேண்டும். இந்த நோக்கத்திற்காக, தொழில்துறை பல்வேறு முதலீட்டாளர்கள் மாநாடுகளை அரசு நடத்தி வருகிறது.

    இதன் மூலம் ஜூலை 2021 முதல் இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, தமிழ்நாட்டில் 2,95,339 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் மற்றும் 4,12,565 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    அனைவரையும் உள்ளடக்கிய சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், இந்தத் திட்டங்கள் பரவலாக அமைய உள்ளன.

    பல்வேறு துறை சார்ந்த கொள்கைகள், தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை 2021. தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை 2021, தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022.

    தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை 2022, தமிழ்நாடு எத்தனால் கலவைக் கொள்கை 2023 மற்றும் தொழில் நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்பு திட்டம் போன்ற பல்வேறு துறை சார்ந்த கொள்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது.

    தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும், வரும் ஜனவரி 2024-ல் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் 9 நாள் அரசு முறைப் பயணமாக, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புறப்பட்டு சென்றார்.

    இதையொட்டி இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்பிறகு சென்னை விமானநிலையம் சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றிருந்தார்.

    சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் வந்திருந்து வழியனுப்பி வைத்தனர்.

    மேலும் தலைமை செயலாளர் இறையன்பு, மேயர் பிரியா, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, இனிகோ இருதயராஜ், தி.மு.க. தலைமை நிலைய செயலாளரான வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் துறைமுகம் காஜா, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவரான குன்றத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் படப்பை ஆ.மனோகரன், தாம்பரம் துணை மேயர் காமராஜ் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் வந்திருந்து வழியனுப்பி வைத்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அரசு உயர் அதிகாரிகளும் சென்றுள்ளனர். தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா 2 நாட்களுக்கு முன்பே சிங்கப்பூர் சென்று விட்டார்.

    இன்று சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்நாட்டின் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரனையும், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகத்தையும் மற்றும் அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக் மற்றும் கேப் பிட்டாலாண்டு இன்வஸ் மன்ட் அதிபர்கள் முதன்மை செயல் அலுவலர்களையும் சந்திக்க உள்ளார்.

    இன்று மாலை நடை பெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) பேம்டி, என் டான்சிம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பல்கலை கழகமான சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அமைப்பு மற்றும் சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலைநிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.

    இன்றும், நாளையும் சிங்கப்பூரில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பிறகு ஜப்பான் புறப்பட்டு செல்ல உள்ளார். அங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

    • தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 226 திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
    • லூலூ பன்னாட்டு நிறுவனம் கோவையில் தனது நிறுவனத்தை தொடங்கி விட்டது.

    சென்னை:

    சிங்கப்பூர் புறப்படும் முன்பு சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்று சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறேன். என்னுடன் தொழில் துறை அமைச்சரும், அரசுத்துறை உயர் அதிகாரிகளும் வருகிறார்கள்.

    கடந்த மார்ச் மாதம் அரசு உயர் அதிகாரிகளுடன் ஐக்கிய அரபு உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று பல்வேறு தொழில் அதிபர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

    கே:- கடந்த முறை வெளிநாடுகளுக்கு சென்ற போது எவ்வளவு முதலீடு கிடைத்தது? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது?

    ப:- கடந்த ஜனவரி மாதம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று வந்தபோது பெறப்பட்ட முதலீடு துபாயில் ரூ.6,100 கோடியாகும். 15 ஆயிரத்து 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

    லூலூ பன்னாட்டு நிறுவனம் கோவையில் தனது நிறுவனத்தை தொடங்கி விட்டது. சென்னையிலும் இடம் பார்த்து வருகின்றனர். நிலம் கிடைத்ததும் கட்டுமான பணியை தொடங்கும்.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 226 திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ரூ.2.95 கோடி முதலீடு மூலம் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இது அமைந்தது.

    இதன் தொடர்ச்சியாக இப்போது வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறேன்.

    நான் செல்லும் இடங்களில் தமிழகத்தில் ஜனவரி மாதம் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதோடு தொழில் அதிபர்களை நேரிலும் சந்தித்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட உள்ளேன்.

    வருகிற 2024-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக செல்லும் நான் உங்கள் வாழ்த்துக்களோடு செல்கிறேன். நீங்களும் என்னை வாழ்த்தி அனுப்புங்கள்.

    கே:-சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளை தொடர்ந்து வேறு எந்த நாடுகளுக்கு செல்கிறீர்கள்?

    ப:-அது பின்னர்தான் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் மட்டுமே அனைவரும் ஜாதி மதங்களைக் கடந்து சகோதரர்களாக பழகும் மாண்பு உள்ளது.
    • 200-க்கும் மேற்பட்டோர் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது.

    நகர் மன்ற தலைவரும், தி.மு.க நகரச் செயலாளருமான மாரிமுத்து தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும், நாகை மாவட்ட செயலாளருமான கவுதமன், நாகை தொகுதி மேலிட பார்வையாளர் நிரஞ்சன் துறை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த விழாவில் அ.தி.மு.க முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் ஹாஜி சுல்தான் அப்துல் காதர், முன்னாள் மகளிர் அணி செயலாளர் அஞ்சம்மாள் பரமசிவம் மற்றும் அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 200 -க்கும் மேற்பட்டோர் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    அவர்களை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், சால்வை அணிவித்து வரவேற்றார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழகம் தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்வதால் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவிற்கு பாதுகாப்பாக உள்ளதால் உலக முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்கி வருவது தமிழக முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி.

    தமிழகத்தில் மட்டுமே அனைவரும் ஜாதி மதங்களைக் கடந்து சகோதரர்களாக பழகும் மாண்பு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் 40-வது ஆண்டு ரூபி ஜூபிளி விழாவுக்கு டி.ஆர்.தமிழரசு தலைமை தாங்கினார்.
    • விழாவில் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் 40-வது ஆண்டு ரூபி ஜூபிளி விழா தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நேற்று நடந்தது. விழாவுக்கு சங்க தலைவர் டி.ஆர்.தமிழரசு தலைமை தாங்கினார். விழாக்குழு தலைவர் ஜோபிரகாஷ் வரவேற்று பேசினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கம் உருவாவதற்கு காரணமானவர்களை கவுரவித்தார். தொடர்ந்து சங்கத்தின் 40 ஆண்டுகால நிகழ்வுகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். சாதனை படைத்த தொழில் அதிபர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.

    தபால்தலை வெளியீடு

    விழாவில் ரூபி ஜூபிளி விழா சிறப்பு தபால்தலை மற்றும் தபால் உறையை மதுரை மண்டல தபால்துறை தலைவர் ஜெயசங்கர் வெளியிட, கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    ஒரு நிறுவனத்தை 40 ஆண்டுகளாக நடத்துவது சவாலான ஒன்று. பல நிறுவன தலைவர்கள் ஒன்றாக இணைந்து தூத்துக்குடியின் தொழில் வளர்ச்சிக்காக உங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறீர்கள். தூத்துக்குடியில் ஒவ்வொரு இளைஞருக்கும், தான் ஒரு தொழில் முனைவோராக வரவேண்டும் என்ற கனவு உள்ளது. இன்றைய இளைஞர்கள் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் சாத்தியங்கள் உள்ளன. ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருகாலத்தில் மிகவும் சாதாரணமாக இருந்த மாவட்டத்தில், நம் முன்னோர்கள், முன்னோடிகள் மிக தைரியமாக தொழில் முதலீடுகளை செய்து உள்ளனர். அவர்களின் உழைப்பு காரணமாக தூத்துக்குடியை தொழில் முதலீட்டாளர்கள் திரும்பி பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.

    விடாமுயற்சி

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும், தொழில் முதலீடுகள் உருவாக வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். இதனால் தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. டைடல் பார்க் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் பல தொழில்கள் இங்கு வர வேண்டும்.

    தொழில் முனைவோர்கள் இந்த பகுதியில் உருவாக வேண்டும் என்பது நம் அத்தனை பேரின் கனவாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொழில் துறை மிகப்பெரிய சவால்களை சந்தித்து உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனா தொற்று போன்றவற்றை தாண்டி வெற்றி பெற்று நின்று கொண்டு இருக்கிறோம். அதற்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கைதான் காரணம். தொடர்ந்து எதற்கும் சளைக்காமல் வெற்றி பெற்று காட்டுவோம் என்ற முனைப்பு உள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், எஸ்.இ.பி.சி. அனல்மின்நிலைய தலைமை அதிகாரி நரேந்திரா, அகில இந்திய வர்த்தக தொழில் சங்க முன்னாள் தலைவர்கள் ஜோவில்லவராயர், மணி, உதயசங்கர், வேல்சங்கர், அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க பொதுச் செயலாளர் சங்கர்மாரிமுத்து, பொருளாளர் சேசையா வில்லவராயர், துணைத்தலைவர்கள் பிரேம்வெற்றி, பாலமுருகன், சுரேஷ்குமார், இணை செயலாளர்கள் விவேகம் ஜி.ரமேஷ், ராஜேஷ் பாலச்சந்திரன், நார்டன், நிர்வாக செயலாளர் பிரேம்பால் நாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×