search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார வாகனம்"

    • அரசு அனுமதி பெற்றுத்தான் கிராஃபைட் ஏற்றுமதி இனி நடைபெற முடியும்
    • 65 சதவீத கிராஃபைட் சீனாவிலிருந்துதான் கிடைக்கிறது

    செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு அவசிய தேவையான செமிகண்டக்டர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா பலவித கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இத்துறையில் சீனா நுழைவதை தடுக்கும் விதமாக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனையடுத்து, மின்சார வாகனங்கள், மொபைல் போன்கள் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான 'கிராஃபைட்', தன் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு செல்வதை தடுக்கும் விதமாக, சீனா, அதன் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    "தேசிய பாதுகாப்பு மற்றும் தேச நலனுக்காக 2 வகையான கிராஃபைட்களை ஏற்றுமதி செய்ய சீன ஏற்றுமதியாளர்கள் இனி அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். இந்த கொள்கை மாற்றம் எந்த குறிப்பிட்ட தேசத்தையும் குறி வைத்து கொண்டு வரப்படவில்லை" என சீனாவின் வர்த்தக துறை அறிவித்துள்ளது.

    அரசு அனுமதியை கோரும் போது எந்த நாடுகளுக்கு அவை செல்கின்றன என்பதை சீனா தீவிரமாக கண்காணிக்க முடியும்.

    வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகன உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. அவற்றில் உள்ள பேட்டரிகளுக்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான கிராஃபைட்டின் உற்பத்தி தன் வசம் உள்ளதால் சீனா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. உலகிற்கு தேவைப்படும் கிராஃபைட் உற்பத்தியில் 65 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு சீனாவிலிருந்துதான் கிடைக்கிறது.

    வேறு நாடுகளில் கிராஃபைட் கிடைக்கும் வரை சீனாவின் இந்த நடவடிக்கை கண்டிப்பாக மாற்று எரிசக்தி துறையில் அந்நாட்டின் ஆதிக்கம் அதிகரிக்கவே வழி செய்யும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • சிவகிரி பேரூராட்சியில் தூய்மை பணிகளுக்கு 14 மின்சார வாகனம் வாங்கப்பட்டது
    • சிறப்பு விருந்தினராக வாசு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் கலந்து கொண்டார்.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சியில் நகர்ப்புற கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளருக்கு 14 மின்சார வாகனம் வாங்கப்பட்டு அதன் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வாசு யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற அனைத்து கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பரப்புரையாளர்கள், டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க நடவடிக்கை.
    • மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம், 532 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ளது

    பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி கிரிஷன் பால் குர்ஜார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

    மின்சார வாகனங்களின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த, மத்திய அரசு கடந்த 2015 ஆண்டு ஃபேம் (FAME)இந்தியா என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

    தற்போது, இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01, 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது. ஃபேம்-இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் ரூ.1000 கோடி மின்னூட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஃபேம் இந்தியா திட்டம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதன் அடிப்படையில் நாடு முழுவதும் 25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் கனரகத் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் 9 விரைவுச் சாலைகள் மற்றும் 16 நெடுஞ்சாலைகளில் 1576 சார்ஜிங் நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஃபேம் இந்தியா திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 520 மின்னூட்டல் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. நாட்டில் மின்சார வாகனங்களுக்குத் தேவையான மின்னூட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×