search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னிந்திய நடிகர் சங்கம்"

    • எல்லோரும் வெட்கித் தலைகுனியும்படி மீண்டும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
    • சங்கம், சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கும்.

    நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. அதற்கு அவர் மன்னிப்பு கேட்டபோதிலும் பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து உள்ளன.

    இந்தநிலையில் இன்று தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் எம்.நாசர் விடுத்து உள்ள கண்டன அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தற்போது பொதுவலைதளங்களில் சகோதரி திரிஷா, சகோதரர் கருணாஸ் குறித்து கேட்பதற்கு கூசுகின்ற ஆதாரமற்ற, பொறுப்பற்ற, தரமற்ற, கீழ்தரமான, வக்கிரமனப்பான்மையோடு, பரவ விடப்பட்டிருக்கும் பொய் கதையை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

    திரைத்துறையை சார்ந்த பிரபலங்களை பற்றி பொதுவெளியில் அவதூறு பரப்பி சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர்.

    எல்லோரும் வெட்கித் தலைகுனியும்படி மீண்டும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. 

    திரையிலும் பொதுவெளியிலும் இயங்கி வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நடிகர் கருணாஸ் மீதும் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் முன்னணி நடிகையாக திகழும் திரிஷா மீதும் இப்படி அபாண்டமான அவதூறை அதுவும் பொது வாழ்க்கையில் இருக்கும் நபரே தனது அரசியல் சுயலாபத்துக்காக பரப்புவது வேதனை அளிக்கிறது.

    கவனத்தை ஈர்த்துக் கொள்ளவும் கேட்போரை கீழ்த்தரமானவராய் கருதியும் இத்தகைய செயல்கள் நடந்தேறுவது, இனியும் நடக்க கூடாத வகையில் நடிகர் சங்கம் தீவிரமான முடிவுகளை எடுக்கும்.

    சட்டரீதியாய் இக்குற்றத்தை அணுகவும் செய்யும் பண்பு மென்மை காரணமாய் பிரபலங்கள் பதில் பேச மாட்டார்கள் என்கிற பலத்தை பலவீனமாக்கி விளையாடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்.

    தென்னிந்திய நடிகர் சங்கம் தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

     

    • உடல் அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
    • நினைவிடத்தில் தினமும் பல்வேறு திரை பிரபலங்கள், ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக கடந்த 28-ந்தேதி காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    அவரது நினைவிடத்தில் தினமும் பல்வேறு திரை பிரபலங்கள், ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    சிவக்குமார், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதுடன் விஜயகாந்த் வீட்டுக்கும் நேரில் சென்று அவரது மனைவி பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற உள்ளதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

    தன்புகழையும் திறனையும் சிந்தனையையும் மக்களுக்காக அர்ப்பணித்த எங்கள் சங்கத்தின் பெருந்தூணாய் விளங்கிய எங்கள் கேப்டன் விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டம் நடிகர் சங்கம் சார்பில் நடைபெற உள்ளது.

    வருகிற 19-ந்தேதி மாலை 6 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் நினைவேந்தல் கூட்டம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டத்தில் மறைந்த நடிகர்கள் பலருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • சங்க வளர்ச்சி பணிகள் கட்டிட பணிகள் உள்பட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.

    எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்து பொருளாளர் கார்த்தியும், சங்கத்தின் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்து பொதுச்செயலாளர் விஷாலும் உரையாற்றினார்கள்.

    கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், அஜய் ரத்தினம், பசுபதி, ஜூனியர் பாலையா, சி.பி.ராஜ், லதா சேதுபதி, விக்னேஷ் சோனியா, பிரசன்னா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், சரவணன், பிரேம்குமார், சீனிவாச ரெட்டி, ரத்தின சபாபதி, பிரகாஷ், வாசுதேவன், ஹேமச்சந்திரன், காளி முத்து உள்பட முன்னணி நடிகர்-நடிகைகள் நாடக கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

    கூட்டத்தில் மறைந்த நடிகர்கள் டி.பி.கஜேந்திரன், மயில்சாமி, மனோபாலா, மாரிமுத்து, நடிகை அங்காடி தெரு சித்து உள்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மேலும் சங்க வளர்ச்சி பணிகள் கட்டிட பணிகள் உள்பட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக செயற்குழு கூட்டம் காலை 9 மணிக்கு நடந்தது. இதில் 23 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் நன்றியுரை ஆற்றினார். நடிகர் சங்க கட்டிட நிதிக்காக கலை நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பாக சில நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியதாக தகவல் பரவியது.
    • தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே நீண்டகாலமாக நல்லுறவு நிலவி வருகிறது என்று விளக்கம்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பாக சில நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியதாக தகவல் பரவியது. இந்த நிலையில் தற்போது அது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் விளக்கமளித்துள்ளது. அந்த அறிக்கையில் , தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே நீண்டகாலமாக நல்லுறவு நிலவி வருகிறது. நடிகர்கள் நலனை, உரிமைகளை பாதுகாப்பது போலவே தயாரிப்பாளர்கள் நலனை கருத்தில் கொண்டே தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக இரு சங்கங்கள் இடையே மோதல் என்ற ரீதியில் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலமாக செய்திகள் பரப்பப்படுகின்றன.



    தமிழ் திரைத்துறையின் முக்கிய சங்கங்களான தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்குள் இடையே எந்த மோதலும் இல்லை. நடிகர்களின் கால்ஷீட், புதிய ஒப்பந்தங்கள் குறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து சில புகார்கள் வந்தன. அதேபோல் நடிகர்கள் தரப்பிலும் சில பிரச்சினைகளை கூறியுள்ளனர். இவை வழக்கமாக இரு தரப்பிலும் எழக் கூடிய, பேசினால் தீர்ந்து விடக் கூடிய பிரச்சினைகள்தான். ஆனால் ஒரு தரப்பு வாதங்களை மட்டுமே மையமாக வைத்து செய்திகள் பரவுவது வருத்தம் அளிக்கிறது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை மிக சுமூகமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பிரச்சினைகளும் விரைவில் களையப்படும். இதை விடுத்து இரு சங்கங்களிடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் விதத்தில் வீண் வதந்திகளை பரப்புவோருக்கு எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினியை, தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்துள்ளனர்.
    சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று ரஜினிகாந்தை சந்தித்து பேசினர். நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்ட இந்த சந்திப்பு, சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்தது.

    ரஜினியின் சந்திப்பு
    ரஜினியின் சந்திப்பு

    இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாசர், மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியதாகவும், நடிகர் சங்கத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கியதாகவும் தெரிவித்தார்.
    ×