search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலைகள் சேதம்"

    • வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி மிதந்து கொண்டிருந்தன.
    • குன்னூர் நகரப் பகுதியில் உள்ள 30 வார்டுகளில் 13 வார்டுகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

    அருவங்காடு:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மண் சரிவு, பாறைகள் விழுந்து பாதிப்பு, மரங்கள் முறிந்து விழுவது என பாதிப்புகள் தொடர்ந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இரவு, பகலும் பாராமல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையே முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம்-குன்னூர், மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. நடுரோட்டில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் இந்த சாலைகளில் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சீரமைப்பு பணி முடிந்து நேற்று மதியத்திற்கு பிறகே போக்குவரத்து தொடங்கியது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பரிதவிப்புக்குள்ளானார்கள்

    குன்னூர் முத்தாலம்மன்பேட்டை, வண்டிச்சோலை, எம்.ஜி.ஆர் நகர், மற்றும் உமரி காட்டேஜ் உள்பட பல இடங்களில் குடியிருப்புகள் சேதமடைந்தது. அந்த பகுதிகளில் உள்ள சொகுசு பங்களாக்கள் மற்றும் வீடுகளுக்குள்ளும் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்தது.


    இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி மிதந்து கொண்டிருந்தன. தண்ணீர் புகுந்ததால் மக்கள் விடிய, விடிய தூங்க முடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

    குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ள கழிவு நீர் மற்றும் மழை நீரினை அகற்றும் பணியில் 50-க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    குன்னூர் அம்மன் நகர் பகுதியில் அதிகாலையில் ஒரு வீட்டின் மீது பாறை விழுந்து அந்த வீடு சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த 4 பேரும் உயிர் தப்பினர். குன்னூர் பகுதியில் பெய்த தொடர் மழைக்கு நகரம் மற்றும் கிராம பகுதிகளில் 50 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. அபாயகரமான குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    மேலும் மலைப்பாதை மற்றும் மலை சரிவுகளில் ஈரத்தன்மை அதிகரித்து வருவதால் மண் சரிவின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், மலைப்பாதைகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக சென்று வர வேண்டும். அபாயகரமான இடத்தில் வாகனங்கள் நிறுத்த வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். குன்னூர் நகரப் பகுதியில் உள்ள 30 வார்டுகளில் 13 வார்டுகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடைகோடி கிராமமான கீழ்கோத்தகிரியை அடுத்து கரிக்கையூர் உள்ளது. இங்கு பெய்த கனமழைக்கு, கரிக்கையூர் செல்லும் சாலையில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதனால் அந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 25 மேற்பட்ட பழங்குடியின கிராம மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். சாலை துண்டிக்கப்பட்டதால் 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு 15 கிலோ மீட்டர் சுற்றியே நகர பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் அருணா, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் அந்த பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 8.7 செ.மீ மழை பதிவானது. இன்று மழை சற்று குறைந்துள்ளதை அடுத்து குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    • பெருங்குடியில் 1 கி.மீ. தூரம் சாலை போக்குவரத்துக்கு பயனற்றதாக உள்ளது.
    • அசோக் நகரில் உள்ள டாக்டர் நடேசன் சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளன.

    சென்னை:

    சென்னையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்கிறது. சென்னையில் பல இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக தூண்கள் அமைக்கப்பட்ட இடங்களில் சேதம் அடைந்த சாலைகள் தற்போது போடப்பட்டு உள்ளன.

    மேலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காகவும் சாலைகளில் பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு மூடப்பட்டு உள்ளது. முழுமையாக பணி முடிந்த இடங்களில் சாலைகள் போடப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் சென்னையில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. அந்த பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

    தாம்பரம்- வேளச்சேரி மெயின் ரோட்டில் நாராயணபுரம்- வேளச்சேரி இடையே 1.5 கி.மீ. தூரம் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த இடங்களில் 2 இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன. ஆனால் சாலை முழுக்க மோசமான நிலையில் உள்ளது. மழைநீர் வடிகால் பணி மட்டுமின்றி மற்ற துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்காகவும் சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன.

    பெருங்குடியில் 1 கி.மீ. தூரம் சாலை போக்குவரத்துக்கு பயனற்றதாக உள்ளது. குடிநீர் வாரிய பணிகள் முடிந்ததும் சாலையின் ஒரு பகுதி மட்டும் சீரமைக்கப்பட்டது. இதனால் மற்ற பகுதிகள் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள இணைப்பு சாலைகளை தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் மழை காலங்களில் இந்த சாலையை பயன்படுத்துவது சிரமமாக மாறிவிடும். அந்த அளவுக்கு சாலை குண்டும் குழியுமாகவும், சேறு- சகதியாகவும் காணப்படுகிறது.

    அசோக் நகரில் உள்ள டாக்டர் நடேசன் சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளன. அதன் பிறகு சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. சுமார் 400 மீட்டர் தூரத்துக்கு இந்த சாலை மோசமான நிலையில் உள்ளது.

    அம்பத்தூர் எஸ்டேட் சாலையில் உள்ள ஆபீசர்ஸ் காலனி சந்திப்பு சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை சென்னை நகரின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றாகும். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதுபோல சென்னையில் பல பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    சென்னையில் பல சாலைகள் மழைக்கு பிறகு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகனங்களை ஓட்டுவது மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் மழைநீர் தேங்கி கிடக்கும் போது சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தை சந்திக்கிறார்கள். எனவே போர்க்கால அடிபடையில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், 'சென்னையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் முன்னுரிமை அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. தேவையான இடங்களில் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.

    • இந்த பள்ளங்களில் வாகனங்களை ஓட்டி விழுந்து பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
    • நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க வேண்டும் என்றனர்.

    பல்லடம்:

    பல்லடத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் பல்லடத்தில் இருந்து , திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், அவினாசி என, பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரோடுகள் அனைத்தும் மழை காரணமாக கடுமையாக சேதமடைந்துள்ளன. ரோட்டில் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகி, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. பலர் இந்த பள்ளங்களில் வாகனங்களை ஓட்டி விழுந்து பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: -

    பல்லடத்தில் ரோடுகள் அனைத்தும் கடுமையாக சேதமடைந்துள்ளன. ரோட்டில் ஏற்பட்டுள்ள பெரும் பள்ளங்களால் பல்வேறு இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், தொடர் மழை காரணமாக பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. தற்போது மழை குறைந்துள்ளது. விரைவில் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அனைத்து ரோடுகளும்சீரமைக்கப்படும். இவ்வாறு நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.

    ×