search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளநோட்டு"

    • ரூபாய் நோட்டுக்களை வாங்கிப் பார்த்த அண்ணாதுரை அவை கள்ள நோட்டுகள் என்பதை தெரிந்து கொண்டார்.
    • கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (40). இவர் அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு வந்த நபர் ரூ.200 நோட்டுகள் 3 கொடுத்து இறைச்சி வாங்கினார்.

    ரூபாய் நோட்டுக்களை வாங்கிப் பார்த்த அண்ணாதுரை அவை கள்ள நோட்டுகள் என்பதை தெரிந்து கொண்டார். இதையடுத்து அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் கரூர் மாவட்டம், பள்ளிப்பட்டியை சேர்ந்த உபைஸ் அலி (24) என்பதும், இவர் மேட்டூர் சதுரங்காடில் உள்ள காஜா மொய்தீன் (40) என்பவருக்கு சொந்தமான பேன்சி ஸ்டோரில் வேலை பார்த்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து சம்பந் தப்பட்ட பேன்சி ஸ்டோரில் மேட்டூர் டி.எஸ்.பி மரியமுத்து மற்றும் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.

    இதில் கலர் பிரிண்டரை பயன்படுத்தி கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது கண்டுபி டிக்கப்பட்டது. இதையடுத்து கள்ள நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய செல்போன, கலர் பிரிண்டர், கள்ள நோட்டுகள், காகிதத் தாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விபரம் வருமாறு:-

    மேட்டூர் காவேரி நகரை சேர்ந்த முகமது அலீபா மகனான காஜாமைதீன் (40) மேட்டூரில் 3 இடங்களில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

    இவருக்கு ரூ.20 லட்சம் கடன் ஏற்பட்டது. இந்த கடனை அடைப்பதற்காக திட்டமிட்ட அவர் தனது உறவினரான தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மஜீத் தெருவை சேர்ந்த முகமது பாபு மகன் அப்துல் அகீம் (24), தனது கடையில் வேலை பார்த்த உபைஸ் அலி (24) என்பவரையும் மேட்டூருக்கு அழைத்து வந்துள்ளார்.

    பின்னர் 3 பேரும் மேட்டூர் சதுரங்காடியில் பேன்ஸி ஸ்டோரில் கலர் பிரிண்டர் ஒன்றை வைத்து, அதில் 200 ரூபாய் நோட்டுகளை செல்போன் செயலி மூலமாக நகலெடுத்து, மேட்டூர் முழுவதும் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    நேற்று காஜாமைதீன் நகல் எடுக்கப்பட்ட 200 ரூபாய் நோட்டுகளை உபைஸ் அலியிடம் கொடுத்து நாட்டுக் கோழி வாங்கி வரும்படி அனுப்பி வைத்தார்.

    இந்த நோட்டுகள் போலியானவை என இறைச்சிக் கடைக்காரர் கண்டுபிடித்து விட்டதால் இந்த கும்பல் சிக்கியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து கடை உரிமையாளர் காஜா மைதீன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    மேலும் இவர்களுக்கு கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்றும், எவ்வளவு கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டனர் என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில், 100 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டு புழக்கத்தில் உலா வருகிறது.
    • கள்ளநோட்டு புழக்கம் கள்ளநோட்டு பற்றி அறியாத பாமர மக்களிடம், அதிக அளவில் உலா வருகிறது.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில், 100 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டு புழக்கத்தில் உலா வருகிறது.

    குறிப்பாக சிறு வியாபாரிகள், காய்கறி விற்பனையாளர்கள், கூலி தொழில் செய்யும் நபர்கள், செங்கல்சூளைகளுக்கு வேலைக்கு செல்லும் ஆட்கள் போன்ற நபர்களுக்கு, தெரியாமல் அவர்கள் கையில் கள்ளநோட்டுகள் வந்து விடுகிறது.

    இதனை அறியாத பாமர மக்களில் ஒருவர், நேற்று ஊத்தங்கரை, திருவண்ணாமலை சாலையில் உள்ள அரசு மதுபான கடையில், மதுபானம் வாங்க பணம் கொடுத்துள்ளார்.

    அதில் 100 ரூபாய் நோட்டு கள்ளநோட்டாக இருந்ததை கண்ட மதுக்கடை பணியாளர், உடனடியாக நோட்டின் மீது பேனாவில் கள்ளநோட்டு என எழுத்தால் எழுதி அவரிடமே ஒப்படைத்தார்.

    கள்ளநோட்டு பற்றி அறியாத அந்த நபர் செங்கல்சூளையில் கூலி வேலை செய்துகொண்டு வந்த பணம் கள்ள நோட்டு என கூறியதால், மிகவும் மன வருத்தத்துடன் திரும்பி சென்றார்.

    இதுபோன்ற கள்ளநோட்டு புழக்கம், ஊத்தங்கரை பகுதியில், கள்ளநோட்டு பற்றி அறியாத பாமர மக்களிடம், அதிக அளவில் உலா வருகிறது.

    இதனால் கூலி தொழிலாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், உரிய நடவடிக்கை எடுத்து கள்ளநோட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டிப்-டாப் வாலிபர் காரில் ஏறியதும் கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள மதுபாருக்கு சென்று மது குடித்தார்.
    • கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் டிரைவர் சுதிரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த மர்மநபர் ஒருவர் தான் கீழ்ப்பாக்கம்அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் என்றும் ஆன்மிக சுற்றுலா செல்ல வேண்டும் என்றும் கூறி ஆந்திர மாநிலம் கூடூரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை பதிவு செய்தார். இதையடுத்து டிரைவர் சுதிர் என்பவர் காருடன் கீழ்ப்பாக்கம் பகுதிக்கு வந்தார். அங்கு தயாராக நின்ற டிப்-டாப் வாலிபர் காரில் ஏறியதும் கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள மதுபாருக்கு சென்று மது குடித்தார். மேலும் உடன் வந்த டிரைவர் சுதிருக்கு ஏராளமான அசைவ உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட வைத்தார்.

    சிறிது நேரத்தில் அவர், தன்னுடன் பணிபுரிந்து வரும் பெண் டாக்டர் ஒருவருக்கு அவசர தேவைக்காக உடனே "கூகுள் பே" மூலம் ரூ.9ஆயிரம் அனுப்ப வேண்டும். ஏ.டி.எம்.ல் பணம் எடுத்து தந்து விடுகிறேன் என்று கூறினார். இதையடுத்து சுதிர் தனது உரிமையாளரிடம் போன் செய்து வாலிபர் கொடுத்த எண்ணிற்கு "கூகுள் பே" மூலம் ரூ.9 ஆயிரம் அனுப்பினார்.

    பின்னர் வெளியே சென்ற அந்த நபர் பணத்துடன் திரும்பி 500 ரூபாய் நோட்டுக்களாக ரூ.9 ஆயிரம் பணத்தை டிரைவர் சுதிரிடம் கொடுத்தார். சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து நைசாக சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து பாரில் மதுகுடித்த பில் தொகை ரூ.2 ஆயிரம் கட்ட வேண்டும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர். உடனே சுதிர் தன்னிடம் இறந்த ரூ.500 நோட்டுகளை கொடுத்தபோது அவை கள்ளநோட்டுகள் என்பது தெரிந்தது. டாக்டர் போல் நடித்து நூதனமுறையில் கள்ளநோட்டுகளை கொடுத்துவிட்டு டிப்-டாப் வாலிபர் தப்பி சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் டிரைவர் சுதிரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் இருந்த கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • வீட்டிற்கு எப்போது வருகிறார், போகிறார் என்பது தெரியவில்லை. அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகார் அளித்தேன்.

    கோவை:

    குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஹரேந்திரன் என்ற எர்வின் எவின்ஸ் (வயது49). இவர் ஓமியோபதி டாக்டர் எனக் கூறி கோவை வெள்ளலூர் ராமசாமி கோனார் நகரில் உள்ள தங்கராஜ் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    இந்த நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள தலையோலபறம்பு போலீசார் கொள்ளை வழக்கு தொடர்பாக எர்வினை கைது செய்து அழைத்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் தங்கராஜ், கைதான எர்வின் எவின்ஸ் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.

    சோதனையின் போது வீட்டில் போலி தங்க கட்டிகள், மற்றும் ஒரு புறம் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள், மற்றும் 3 ரப்பர் ஸ்டாம்பு, ஒரு துப்பாக்கி (ஏர்கன்) ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு எர்வின் எவின்ஸ் வாடகைக்கு வந்தார். அவரிடம் உங்களது மனைவி, குழந்தைகள் எங்கே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பின்னர் வருவார்கள் என்று கூறினார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை காணவில்லை என என்னிடம் கேட்டார். அதற்கு நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டியது தானே என்றேன்.

    அதற்கு அவர் வேண்டாம் என கூறிவிட்டார். மேலும் வீட்டிற்கு எப்போது வருகிறார், போகிறார் என்பது தெரியவில்லை. அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகார் அளித்தேன்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதனையடுத்து போத்தனூர் போலீசார் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட போலி தங்க கட்டிகள் துப்பாக்கி ஒரு பக்கம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எர்வினுக்கு எப்படி வந்தது? என விசாரித்து வருகிறார்கள். எர்வின் போலி டாக்டராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். எனவே கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ள அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • மணப்பாறை அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட போது பிடிபட்டது
    • 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

    மணப்பாறை,

    திருச்சி மாவட்டம், மணப்பாறைய அடுத்த வையம்பட்டியில் கார் ஒன்றில் அதிக அளவில் கள்ள நோட்டு கொண்டு செல்வதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சப் இன்ஸ்பெக்டர் தங்கசாமி தலைமையில் போலீசார் சம்மந்தப்பட்ட சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் கட்டு கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காரை பணத்துடன் பறிமுதல் செய்ததோடு காரில் வந்த 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் காரில் பணம் கொண்டு வந்தது கோவை கேகே புதூரை சேர்ந்த பார்த்தசாரதி வயது 52, கணவாய் பகுதியை சேர்ந்த டிரைவர் சதீஷ் ஆகியோர் என்பதும் வையம்பட்டியில் செல் போன் கடை நடத்தி வரும் தங்கவேல் என்பவருக்கு கொண்டு வந்ததும் அவர் கடை முன்பு தான் போலீசார் பிடித்ததும் விசாரணை வெளிவந்துள்ளது. பிடிபட்ட பணம் அனைத்தும் கள்ள நோட்டு நோட்டு என்பதும் கேரளாவை சேர்ந்த ஒரு பட தயாரிப்பாளர் கொடுத்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது

    • பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த லோகநாதன் என்பது தெரிந்தது.
    • பிடிபட்ட 2 பேரின் வீடுகளில் நடத்திய சோதனையில் மேலும் ரூ. 2 லட்சத்து 500 கள்ள நோட்டுகள் சிக்கியது.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அருகே உள்ள நாவலூரில் மதுக்கடை உள்ளது. இங்கு வந்த வாலிபர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து மதுபாட்டில் கேட்டார். அவர் கொடுத்த ரூபாய் நோட்டு மீது சந்தேகம் அடைந்த ஊழியர் பரிசோதித்தபோது அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.

    இதையடுத்து மக்கடை ஊழியர்கள் அவரை பிடிக்க முயன்றபோது அந்த வாலிபர் தான் ஓட்டிவந்த ஷேர் ஆட்டோவை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த ஆட்டோவை எடுக்க வந்தபோது மதுக்கடை ஊழியர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த லோகநாதன் என்பது தெரிந்தது. பின்னர் அவரை தாழம்பூர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவரிடம் நடத்திய விசாரணையில் கூட்டாளியான உத்தண்டி பகுதியை சேர்ந்த எபினேசனுடன் சேர்ந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து எபினேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிடிபட்ட 2 பேரின் வீடுகளில் நடத்திய சோதனையில் மேலும் ரூ. 2 லட்சத்து 500 கள்ள நோட்டுகள் சிக்கியது.

    கைதான இருவரும் செங்கல்பட்டை சேர்ந்த ஒருவரிடம் இருந்து கள்ளநோட்டை வாங்கியதாக தெரிவித்து உள்ளனர். அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு கள்ளநோட்டுகள் கிடைத்தது எப்படி? எவ்வளவு கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? யார்? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கம்பம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் அவ்வப்போது கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்து வந்தது.
    • கம்பத்தில் போலி முத்திரை தாள் மற்றும் கள்ளநோட்டு கும்பல் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் தங்கதுரை, பாலமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் கம்பம் மெட்டு ரோடு 18-ம் கால்வாய் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட ஒரு ஜீப்பை மடக்கி சோதனையிட்டனர். அதில் அவர்கள் போலியான 5000 ரூபாய் மதிப்புள்ள 4 முத்திரை தாள்களை வைத்திருந்தது தெரியவந்தது.

    ஜீப்பில் வந்த கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பன் சோலையை சேர்ந்த முகமதுசியாது(41), சிரட்டவேலி பகுதியை சேர்ந்த விபின்தாமஸ்(36) ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கம்பம் 15-வது வார்டு ஓடைக்காரத்தெருவில் உள்ள கோபிகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் போலியான முத்திரை தாள்களை அச்சடித்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கிருந்த மேலும் சில போலி முத்திரை தாள்களை கைப்பற்றினர். இதுமட்டுமின்றி அந்த வீட்டில் இருந்த முத்திரை தாள்கள் அச்சடிக்க பயன்படுத்திய மிசின், பிரிண்டர், ஜெராக்ஸ் மிசின், டோனர், ஸ்டெபிளேசர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    போலி முத்திரை தாள்களை போல கள்ளநோட்டுகள் தயாரித்தும் இவர்கள் புழக்கத்தில் விட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. கம்பம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் அவ்வப்போது கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்து வந்தது. எனவே இந்த கும்பலுக்கும் அதில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? கள்ளநோட்டுகளை யார் யாருக்கு கொடுத்து புழக்கத்தில் விட வைத்துள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பத்தில் போலி முத்திரை தாள் மற்றும் கள்ளநோட்டு கும்பல் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • அத்திப்பள்ளி பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.
    • நெல்லையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பெங்களூரு :

    கர்நாடகம்-தமிழக எல்லையில் பெங்களூரு அருகே உள்ள சித்தாபுரா பகுதியில் நல்லக்கனி (வயது 53) என்பவர், நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அதே அலுவலகத்தில் சுப்பிரமணியன் (60) என்பவர் ஆடிட்டராக இருந்து வந்தார்.

    இவர்கள் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ஒரு சதவீத வட்டிக்கு கடன் தருவதாகவும், நகைக்கு கடன் தருவதாகவும் கூறினார்கள். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சித்தாபுரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதற்கிடையில், பெங்களூருவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக காரில் சிலர் வருவதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அங்குள்ள அத்திப்பள்ளி பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ஒரு காரில் கத்தை, கத்தையாக 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகளுடன் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதில் மொத்தம் ரூ.1 கோடியே 28 லட்சத்து 68 ஆயிரத்திற்கு கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தார்கள்.

    விசாரணையில் அவர்கள் சித்தாபுராவில் நிதி நிறுவனம் நடத்தி வந்த நல்லக்கனி (வயது 55), சுப்பிரமணியன் மற்றும் அஜய்சிங் (48) என்பதும், இவர்கள் நெல்லையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    நல்லக்கனி, கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பலின் தலைவன் ஆவார். கள்ள நோட்டுக்களை பெங்களூருவுக்குள் கொண்டு வந்து, அவற்றை கொடுத்து அதற்கு பதிலாக நல்ல ரூபாய் நோட்டுக்களை பெற்று செல்வதற்காக முடிவு செய்திருந்தார்.

    கள்ளநோட்டுகளை மாற்றுவதற்காக சித்தாபுராவில் அலுவலகம் அமைத்திருந்தார். அப்பகுதி மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன், நகைக்கடன் கொடுப்பதன் மூலமாக கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு, கடன் வசூலிக்கும்போது, அவர்களிடம் இருந்து நல்ல ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் 3 பேரும் திட்டமிட்டு இருந்தனர்.

    இதற்காக தாங்கள் அச்சடித்து வைத்திருந்த கள்ளநோட்டுகளை காரில் கொண்டு வந்தபோது போலீசாரிடம் சிக்கி கொண்டனர் என்பது தெரியவந்தது. கைதான 3 பேரிடமும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

    • பாலமேடு வாரச்சந்தையில் கள்ள நோட்டு மாற்ற முயன்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • 2 பெண்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.500 அச்சிட்ட 14 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேட்டில் சனிக்கிழமை தோறும் காய்கறி சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பொருட்கள் வாங்க வருவது வழக்கம்.

    நேற்று முன்தினம் நடந்த வாரச்சந்தையில் வியாபாரி சீனியம்மாள் (வயது72) என்பவரிடம் ரூ.40-க்கு 2 பெண்கள் மக்காச்சோளம் வாங்கினர். அதற்கு ரூ.500 கொடுத்து மீதி பணத்தையும் பெற்றுக்கொண்டனர்.

    அதேபோல் மற்றொரு பெண் வியாபாரியிடம் காய்கறி வாங்கிவிட்டு ரூ.500 கொடுத்து சில்லறை வாங்க முயன்றபோது அது கள்ள நோட்டு என அறிந்த பெண் வியாபாரி இதுகுறித்து பாலமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    விரைந்து வந்த போலீசார் 2 பெண்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் நத்தம் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரா (42), அலங்காநல்லூர் வலசை பகுதியை சேர்ந்த பத்மாவதி (43) என்பது தெரியவந்தது. இருவரும் சந்தை கூட்டத்தை சாதகமாக பயன்படுத்தி கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு மாற்ற முயன்றதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து 2 பெண்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.500 அச்சிட்ட 14 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்கள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண சேமிப்பு கிடங்கில் இருந்து பணத்தை எடுத்து போலி ரூபாய் நோட்டு மற்றும் சேதாரமான ரூபாய் நோட்டுகளை மாற்றி வைத்து இருப்பது தெரியவந்தது.
    • இந்த மோசடி குறித்து வங்கியின் மண்டல அதிகாரி காகதால் புகார் அளித்தார்.

    கோவை:

    கோவை காந்திபுரம் டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் பாங்க் ஆப் பரோடா வங்கியும், அதன் பண சேமிப்பு கிடங்கும் உள்ளது.

    வங்கி பண சேமிப்பு கிடங்கில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கிக்கு பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகள் ரூ.70.40 கோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதிகாரிகள் ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்த போது பல்வேறு வகைகளில் ரூ.3.28 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டுபிக்கப்பட்டது. இதனையடுத்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குழுவினர் கடந்த மாதம் கோவைக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பண சேமிப்பு கிடங்கு கடந்த ஆண்டு 3 முறை முறைகேடாக திறக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். பண சேமிப்பு கிடங்கில் இருந்து பணத்தை எடுத்து போலி ரூபாய் நோட்டு மற்றும் சேதாரமான ரூபாய் நோட்டுகளை மாற்றி வைத்து இருப்பது தெரியவந்தது.

    இந்த மோசடி குறித்து வங்கியின் மண்டல அதிகாரி காகதால் புகார் அளித்தார். புகாரின் பேரில் வங்கி அலுவலர் செல்வராஜன், மேலாளர் ராஜன், அலுவலர் ஜெயசங்கரன், சார்பு அலுவலர் ஸ்ரீகாந்த், பண பாதுகாப்பு அதிகாரி கனகராஜ் ஆகியோர் மீது சென்னை சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் புகார் அளிக்கப்பட்ட மூத்த வங்கி மேலாளர் விஜயலட்சுமி இறந்து விட்டார்.

    புகாரின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் வங்கியில் பதிவான கண்காணிப்பு காட்சிகளை கொண்டு 5 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விசாரணையின் போது வங்கி கதவுகள் எதற்காக 3 முறை திறக்கப்பட்டது என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. மோசடி செய்யப்பட்ட பணத்தை வேறு வங்கியில் டெபாசிட் செய்து உள்ளார்களா? அல்லது சொத்துக்கள் வாங்கி உள்ளனரா? என அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை பயன்படுத்தி போலி நோட்டுகள் தயாரித்து அதனை சேமிப்பு கிடங்கில் வைத்து விட்டு ஓரளவு நல்ல நிலையில் உள்ள நோட்டுகளை அவர்கள் கைப்பற்றி இந்த மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதன்பேரிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில் 5 பேரும் கைதாக வாய்ப்பு உள்ளது.

    இந்த விவகாரத்தில் இந்த 5 பேர் மட்டும் தான் காரணமா, அல்லது வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

    • வடகோவையில் உள்ள டாஸ்மாக் பாருக்கு வாலிபர் மது குடிக்க சென்றார். அங்கு இருந்த சப்ளையரிடம் ரூ. 500 பணத்தை கொடுத்து மது வாங்கி வரும்படி கூறினார்.
    • அதனை பெற்றுக்கொண்ட சப்ளையர் டாஸ்மாக் கடைக்கு சென்று பணத்தை கொடுத்து மது கேட்டார்.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தாபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 27). இவர் வெளிநாட்டு பணம் மாற்றும் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வடகோவையில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது குடிக்க சென்றார். அங்கு இருந்த சப்ளையரிடம் ரூ. 500 பணத்தை கொடுத்து மது வாங்கி வரும்படி கூறினார். அதனை பெற்றுக்கொண்ட சப்ளையர் டாஸ்மாக் கடைக்கு சென்று பணத்தை கொடுத்து மது கேட்டார்.

    அப்போது டாஸ்மாக் ஊழியர் பணத்தை வாங்கி பரிசோதித்த போது அது ரூ.500 கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இது குறித்து அவர் டாஸ்மாக் காசாளருக்கு தகவல் தெரிவித்தார். அவர் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார்.

    உடனடியாக போலீசார் டாஸ்மாக் கடைக்கு விரைந்து சென்று ரூ. 500 கள்ள நோட்டை மாற்ற முயன்ற அரவிந்தை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தான் பணியாற்றும் நிறுவனத்தில் கொடுத்தது தான். மற்றபடி இதனை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே அரவிந்த் இந்த டாஸ்மாக் பாரில் 2 முறை கள்ள நோட்டை கொடுத்து மது குடித்து விட்டு சென்றது தெரிய வந்தது.

    எனவே போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×