search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruparankundram election"

    நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் அறிவிப்பை வெளியிடாதது கண்டனத்துக்குரியது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. #ElectionCommission #ThiruparankundramElection #MadrasHC
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில் தமிழ்நாட்டில் 2-வது கட்டமான ஏப்ரல் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலுடன் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கடந்த 10-ந்தேதி தேர்தல் அட்டவணையை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தது. ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 சட்டசபை தொகுதி தேர்தல்களும் பிறகு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த 3 தொகுதிகளிலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தலை நடத்த இயலாது என்று தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து இருந்தது. இதற்கு தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தன.

    அ.தி.மு.க. அரசை காப்பாற்றவே ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தவில்லை என்று தி.மு.க. குற்றம் சாட்டியது. அதோடு தேர்தல் கமி‌ஷனிடம் மனு கொடுத்தது. கோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

    இதற்கிடையே நிலுவையில் இருக்கும் வழக்குகளை வாபஸ் பெற்றால் தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார். அதன்பேரில் திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்த டாக்டர் சரவணன் தனது வழக்கை வாபஸ் பெற்றார்.

    டாக்டர் சரவணன் கடந்த 2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். அவர் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸிடம் தோல்வி அடைந்தார்.

    ஏ. கே. போஸின் வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து இருந்தார்.

    அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால், ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கவில்லை.



    இதையடுத்து, தான் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறுவதாகவும், திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியிடவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு டாக்டர் சரவணன் கடிதம் அனுப்பினார். அதேபோல, ஐகோர்ட்டிலும் தன்னுடைய வழக்கை வாபஸ் பெறுவதாக ஒரு மனுவை சரவணன் தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி பி.வேல்முருகன் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார். அப்போது டாக்டர் சரவணன் தரப்பு மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி கூறியதாவது:-

    திருப்பரங்குன்றம் தொகுதியில் வழக்கை காரணம் காட்டி தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த வழக்கையே என் கட்சிக்காரர் திரும்ப பெற முடிவு செய்து, மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விரைவில் விசாரணைக்கு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதற்கு பதில் அளித்த நீதிபதி கூறியதாவது:-

    கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள இந்த தேர்தல் வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் அறிவிப்பை வெளியிடாதது தவறு. கண்டனத்துக்குரியது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்பாட்டிற்கு ஐகோர்ட்டு பொறுப்பாகாது. இருந்தாலும், திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் வழக்கு தொடர்பான தீர்ப்பு வருகிற 22-ந்தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும்.

    இவ்வாறு நீதிபதி கூறினார். #ElectionCommission #ThiruparankundramElection #MadrasHC
    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று அமைச்சர் காமராஜ் பேசினார். #ministerkaramaj

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அ.தி.மு.க. 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர அவைத் தலைவர் என்.சுவாமிநாதன் தலைமை தாங்கினார் நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார் வரவேற்று பேசினார்.

    முன்னாள் நகர் மன்ற தலைவர் சுதா அன்புச்செல்வன், ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரிமுத்து, நகர இளைஞர் அணி செயலாளர் கோபி, முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் கோவிந்தர்ராஜ், நகர்மன்ற துணை தலைவர் வரலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க.விற்கு இணையாக இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் இல்லை. அ.தி.மு.க.வை அழிக்கும் முயற்சி ஒரு நாளும் வெற்றி பெறாது. ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒரே எண்ணம், ஒரே கனவுகளுடன் இருந்து வருகிறார்.

    ஏழைக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கிய கட்சி அ.தி.மு.க.தான் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை வெல்ல முடியாது.

    முதல்-அமைச்சர் மீது தி.மு.க. போடப்பட்ட வழக்கு பொய்யானது. அந்த வழக்கில் முதல்-அமைச்சர் வெற்றி பெறுவார். தி.மு.க.- டி.டி.வி. தினகரனுடன் இணைந்து கொண்டாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது.

    இவ்வாறுஅவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன் வாசுகிராமன், கூட்டுறவு பால் வழங்கும் சங்க தலைவர் கலியபெருமாள், மாவட்ட எம்.ஜிஆர், மன்ற செயலாளர் முகமது அஷ்ரப், மாவட்ட அண்ணா தொழிலாளர் சங்க தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மன்னார்குடி தமிழ்ச்செல்வன் (மேற்கு) தமிழ் கண்ணன் (கிழக்கு) கோட்டூர் ஜீவானந்தம் (தெற்கு), ராஜா சேட் (வடக்கு), நீடாமங்கலம் அரிகிஷ்ணன் (தெற்கு) உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    முடிவில் 12-வது வார்டு செயலாளர் பார்த்தீபன் நன்றி கூறினார். #ministerkaramaj

    தினகரன் உத்தமபுத்திரன் வே‌ஷம் போடுவதை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். #ADMK #TNMinister #Udhayakumar #TTVDhinakaran
    மதுரை:

    மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிலைமான் உள்ளிட்ட 9 கிராமங்களில் 418 பயனாளிகளுக்கு ரூ.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நடராஜன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    புரட்சித்தலைவி அம்மா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மாற்றத்தை இன்றைக்கு அரசியலாக்கி தினகரன் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார். அவரை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததை மறுக்கவில்லை.

    எப்போதோ நடந்த நிகழ்ச்சியை இப்போது கூறி அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என்று தினகரன் நினைக்கிறார். அவரது எண்ணம் நிறைவேறாது.


    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். அ.தி.மு.க.விற்கு உள்ள செல்வாக்கை நினைத்து தினகரன் இப்போது குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். தினகரன் உத்தமபுத்திரன் வே‌ஷம் போடுவதை தொண்டர்களும், மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    தினகரனின் பழைய முயற்சி புதிய வடிவத்தில் வெளிவந்துள்ளது. குட்டையை- குழப்பி திருப்பரங்குன்றத்தில் மீன் பிடித்து விடலாம் என்று தினகரன் நினைக்கிறார். அவரது முயற்சி எடுபடாது.

    தினகரனின் கற்பனை கலந்த எதிர்பார்ப்பை தொண்டர்கள் முறியடிப்பார்கள். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தமிழரசன் உடன் இருந்தனர். #ADMK #TNMinister #Udhayakumar #TTVDhinakaran
    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் எந்த சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவோம் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். #TTVDhinakaran #Thiruparankundram #ThangaTamilselvan
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் அருகில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வருகிற 7-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்ட விழாவிற்கு கால்கோள் விழா இன்று நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றத்தில் 7-ந்தேதி நடைபெறும் கூட்டத்திற்கு டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக அ.ம.மு.க. பொதுக்கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

    இந்த பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள். தொண்டர்கள் ஆதரவு, மக்கள் ஆதரவு எங்களுக்கு தான் உள்ளது. இடைத்தேர்தல் நடந்தால் நல்லது. ஆனால் பாராளுமன்ற தேர்தலோடு தான் நடத்துவார்கள்.


    ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளது என விசாரணை கமி‌ஷன் அமைத்தனர். 1 வருடம் ஆகியும் விசாரணை நிறைவு பெறவில்லை. இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறும். அ.தி.மு.க. டெபாசிட் காலியாகும்.

    இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கேட்டுள்ளோம். அது இல்லை என்றால் பேனா, தொப்பி உள்பட எந்த சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #AmmaMakkalMunnetraKazhagam #TTVDhinakaran #Thiruparankundram #ThangaTamilselvan
    ஆர்.கே.நகரை போல் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க வை மக்கள் அமோக வெற்றி பெற செய்வார்கள் என்று தினகரன் பேசினார். #dinakaran #thiruparankundramelection

    திருத்துறைப்பூண்டி:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு பிரச்சார பயணத்தை தொடங்கினார்.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடியில் நேற்று இரவு மக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றப்படி தினகரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சி தொடர காரணம் சசிகலா தான். ஆனால் ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் எப்படி ஆட்சியில் உள்ளோம் என்பதை உணராமல் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்து விட்டு துரோக சிந்தனையுடன் பேசி வருகின்றனர்.


    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தரம் தாழ்ந்து என்னையும் பொதுச்செயலாளர் சசிகலாவையும் பேசி வருகிறார்கள். இந்த துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். டெல்டா மாவட்டங்கள் வேளாண்மை மண்டலமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும். ஜெயலலிதா மீத்தேன் திட்டத்தை வரவிடாமல் தடுத்தார். ஆனால் அமைச்சர்கள் ஊழலில் கைதாகி விடுவோம் என பயந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றனர்.

    ஊழல் பயத்தினால் அமைச்சர்கள் தூங்கும் போது டி.டி.வி. தினகரன் கனவில் வருகிறான். அதனால் தான் தி.மு.க.- காங்கிரஸை எதிர்த்து நடத்திய கூட்டத்தில் கூட தினகரனை பற்றி பேசியுள்ளனர். அதன்மூலம் என் மீது எவ்வளவு பயம் இருக்கிறது என்பது தெரிகிறது.

    ஆர்.கே. நகரில் ஆட்சி அதிகாரம் கொண்டு காவல் துறை துணையுடன் ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் பணம் வழங்கி ஜெயித்து விடலாம் என கனவு கண்டனர். ஆனால் நீதி, நேர்மை, நியாயம் என அந்த தொகுதி மக்கள் என்னை ஜெயிக்க வைத்தனர்.

    இதே போன்று டிசம்பர் மாதம் நடைபெற திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க வை மக்கள் அமோக வெற்றி பெற செய்வார்கள். தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நிச்சயம் வரும். அதில் அ.ம.மு.க 200-க்கும் மேற்பட்ட தொகுதிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

    அமைச்சர் துரைகண்ணு கசாப்பு கடையில் வேலை பார்ப்பவர் போல் கூட்டத்தில் நாக்கை அறுப்பேன் என பேசியுள்ளார். காட்டில் இலைகளை கட்டி கொண்டு திரிய வேண்டியவர்கள் ஜெயலலிதா புண்ணியத்தில் அமைச்சர்களாக உள்ளனர்.

    இவ்வாறு தினகரன் பேசினார். #dinakaran #thiruparankundramelection

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு பிறகு எடப்பாடி அணி காணாமல் போய் விடும் என்று தங்க தமிழ்ச்செல்வன் பேசினார். #TTVDhinakaran #EdappadiPalaniswami #Thiruparankundram
    மதுரை:

    மதுரை வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் இளைஞரணி சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    இளைஞரணி செயலாளர் பிரதீப்ராம்குமார் தலைமை தாங்கினார். கொள்கை பரப்பு செயலாளர்  தங்க தமிழ்ச்செல்வன், வடக்கு மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் ஜெயபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவுக்கு பிறகு அ.தி.மு.க.வை வழிநடத்த தகுதி படைத்தவர் சசிகலா. அவரது முயற்சியால்தான் தற்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்திடம் சேர்ந்துகொண்டு கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார்.

    மத்திய அரசின் அடிமைகளாக இருந்து கொண்டு தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் பா.ஜனதாவுக்கு ஜால்ரா அடிக்கும் அரசாக எடப்பாடி அரசு திகழ்ந்து வருகிறது. இந்த ஆட்சி மீது அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் கோபம் கொண்டுள்ளனர்.


    ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. கமி‌ஷன் அடிக்கும் திட்டங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதற்கு எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் தமிழக மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே தீரவேண்டும். அ.தி.மு.க.வில் உள்ள 1½ கோடி தொண்டர்களும் எங்கள் பக்கம் உள்ளனர். ஆனால் சிலர் பதவி சுகத்தில் இருந்து கொண்டு எங்களை விமர்சிக்கிறார்கள்.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் தினகரன் அறிவிக்கும் வேட்பாளர் அமோக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இடைத்தேர்தலுக்கு பிறகு எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் அணி காணாமல் போய்விடும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran #EdappadiPalaniswami #Thiruparankundram
    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல்களில் போட்டியிட பா.ஜனதா விரும்புவதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #BJP #Thiruparankundramconstituency

    மதுரை:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் நாளை (23-ந் தேதி) நடக்க உள்ளது. இதில் பங்கேற்க மதுரை வந்த பா.ஜனதா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டாலின் பாசி‌ஷ பா.ஜ.க ஒழிக என்று கூறுகிறார். அவரது கட்சியினர் கள்ளத் துப்பாக்கி, பிரியானி கடையில் பிரச்சினை, அழகு நிலையம், பேன்சி கடை போன்ற இடங்களில் பிரச்சினை அடாவடி செய்து வருகிறார்கள்.

    பண மதிப்பீடு இந்தியாவை செம்மைப்படுத்தி இருக்கிறது. தி.மு.க.வால் தமிழகத்தில் அ.தி.மு.க.வை அசைக்க முடியவில்லை. பா.ஜ.க.வை என்ன செய்ய முடியும்.


    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தாலும், திருவாரூர் இடைத்தேர்தல் வந்தாலும், பா.ஜ.க. போட்டியிட தான் விருப்பம்.

    தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் ஆள் பலம், பண பலம், படை பலம் இல்லாமல் தேர்தல் நடந்தால் நல்லது. நேர்மையான தேர்தல் நடத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். பா.ஜ.க. அரசு பெட்ரோல் விலையை தொடர்ந்து கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது.

    ஊழல் புகாரில் முதல்வர், துணை முதல்வர், மந்திரிகள் யாராக இருந்தாலும் வழக்குகளை சந்திக்கட்டும். இலங்கைத்தமிழர்கள் கொல்லப்பட்டதில் தி.மு.க. முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு நாடகமாடி உள்ளது.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #BJP #Thiruparankundramconstituency

    அ.தி.மு.க. அரசை காத்து செயல்பட இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். #ADMK #Edappadipalaniswami #OPanneerSelvam
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடித் தொண்டர்களையும் இந்த மடல் வழியாக சந்திப்பதில், நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

    பேரறிஞர் அண்ணா தனது 30 வருட பொது வாழ்வின் மூலம் ஆற்றிய பணிகள் இந்திய நாட்டின் அரசியல் போக்கினை மாற்றியதோடு மட்டுமல்லாமல், இந்திய மொழிகள் ஒவ்வொன்றும் அவற்றைப் பேசும் மக்களால் பெரிதும் நேசிக்கப்படவும், தொன்மை சிறப்பு வாய்ந்த இந்தியப் பண்பாடு புதிய கோணத்தில் புரிந்துகொள்ளப்படவும் காரணமாக அமைந்தன என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

    இந்தியத் திருநாடு வலுப்பெற்றும், பொருளாதார வளம் பெற்றும் உயர்ந்திட வேண்டுமானால், இந்நாட்டின் மாநிலங்கள் வலிமை பெறவேண்டும்; மாநில மொழிகள் மதிக்கப்பட வேண்டும்.

    ஒரு மொழியை மற்றவர்கள் மீது திணிக்கப்படுவது நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் என்பனவற்றை எல்லாம் எடுத்துரைத்து, அவற்றை மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்த மாமேதை பேரறிஞர் அண்ணா.

    மாநிலக் கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் ஆட்சி அமைக்க முடியும் என்பதை முதன் முதலாக நிகழ்த்திக் காட்டினார் பேரறிஞர் அண்ணா. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று பல்வேறு அரசியல் கட்சிகள் நம் நாட்டில் தோன்றி, மாநிலங்களின் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதும், அதன் காரணமாக அந்தந்த மாநிலங்களின் மொழிகள், பண்பாடு, நாகரீகம், புத்துயிர் பெறுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    ஓய்வறியா கடும் உழைப்பால், அறிவுத்திறத்தால் தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா ஏற்படுத்திய புரட்சியின் விளைவாகத்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் சிறப்பான ஆட்சிகளை நடத்திக் காட்ட முடிந்தது.

    அதன் தொடர்ச்சியாக, புரட்சித் தலைவி அம்மா அமைத்துத் தந்த கழக அரசு இன்றளவும் தொடர்ந்து சிறப்பாக வெற்றிப்பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

    நாட்டு மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்றால், அது அண்ணா எடுத்துரைத்த சமத்துவ, ஜனநாயக வழியில்தான் சாத்தியமாகும் என்பதை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நன்கு உணர்ந்திருந்தார்கள்.

    அதன் காரணமாகத்தான், தான் ஆரம்பித்த மக்கள் இயக்கத்திற்கு ``அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’’ என்று இயக்கத்தின் பெயரிலேயே அண்ணாவின் திருப்பெயரை இணைத்தார்கள். பேரறிஞர் அண்ணா காண விரும்பி, அயராது உழைத்த புதிய தமிழ்ச் சமூகத்தைப் படைப்பதற்கு தனது ஆற்றல் முழுவதையும் செலவிட்டார் புரட்சித் தலைவி அம்மா.

    பேரறிஞர் அண்ணா தனது ஆட்சிக் காலத்தில் தொடங்கி வைத்த மக்கள் நலப் பணிகளை மிகப்பெரிய அளவுக்கு விரிவுபடுத்தி, எல்லா நிலைகளிலும் உள்ள மக்கள் குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், பெண்கள் பயன்பெறும் திட்டங்களை நாடு போற்றும் வண்ணம் செயல்படுத்திக் காட்டினார் புரட்சித் தலைவி அம்மா.

    தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பேரறிஞர் அண்ணாவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் வகுத்தளித்த பாதையில் கழக அரசு தொடர்ந்து நடைபோடும் என்ற உறுதியை, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் தெரிவித்துக் கொள்கிறோம்.

    பேரறிஞர் அண்ணாவின் அரும் பணிகளையும், சாதனைகளையும், சிறப்புடன் நினைவுகூர்ந்து, அவருக்கு ``பாரத் ரத்னா’’ விருது வழங்க வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றி மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறோம். இது குறித்து பாரதப் பிரதமருக்கும் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. விரைவில் இது பற்றிய நல்ல செய்தி மத்திய அரசிடம் இருந்து வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.


    பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா, ஆகியோரது வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் தொண்டாற்றுவதற்கு கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் உறுதி ஏற்று, கழக அரசைக் காத்து, மக்களிடையே நற்பெயர் பெற்று எதிர்வரும் இடைத்தேர்தல், பொதுத் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெறுவது மிகவும் அவசியம் என்பதை கழக உடன்பிறப்புகளுக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

    பேரறிஞர் அண்ணாவின் புகழ் காப்போம்; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழியில் நடப்போம்; புரட்சித் தலைவி அம்மா அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி வெற்றி மேல் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.  #ADMK #Edappadipalaniswami #OPanneerSelvam
    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிர்வாகக்குழு கூட்டம் கூடி முடிவு எடுக்கப்படும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். #ramadoss #thiruvarurelection

    மயிலாடுதுறை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் மாளிகையில் உள்ள உயர்அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவரை காப்பாற்ற வழக்கு திசை திருப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து வெளிகொண்டுவர வேண்டும். எனவே பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

    திருச்சி முக்கொம்பு அணை உடைந்ததற்கு மணல் கொள்ளை தான் காரணம் என்று கூறியதற்கு தமிழக முதல்-அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நீர்மேலாண்மை குறித்து புரிதல் இன்னும் தேவை. மேலணை உடைந்து பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில் கீழ் அணையின் உறுதி தன்மை குறித்து இதுவரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித ஆய்வும் நடத்தவில்லை. கீழணையில் போக்குவரத்தை முற்றிலும் தடைசெய்து போக்குவரத்தை மாற்றவேண்டும். தமிழகத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை.

    முல்லைப்பெரியாறு அணை திறந்ததால் கேரளாவில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டதாக கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. கேரளாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால்தான் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு பிறமாநிலங்களை விட தமிழகம்தான் அதிக அளவில் உதவி செய்து வருகிறது. இருமாநில மக்களிடம் உள்ள நல்உறவை கேரளஅரசு பிளவுபடுத்தக்கூடாது. முல்லைப்பெரியாறு அணையின் உறுதி தன்மையை ஆய்வு செய்து தொடர்ந்து 142 அடி நீர்தேக்குவதற்கான முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    விவசாயிகள் வாங்கிய கடனை செலுத்தவில்லை என்று அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்க்கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிர்வாகக்குழு கூட்டம் கூடி முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பாமக மாநில தலைவர் கோ.க.மணி, மாநிலப் பொருளாளர் திலகபிரபா, புதுச்சேரி மாநில பொருப்பாளர் தன்ராஜ், மாநில துணை பொதுசெயலர் பழனிசாமி, நாகை மாவட்ட செயலர் விமல் , முத்துகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #ramadoss #thiruvarurelection

    நாளை நடக்கும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் எத்தகைய முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    சென்னை:

    அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அழைப்பாளர்கள் என சுமார் 300 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

    நாளை நடக்கும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் எத்தகைய முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. பெரும்பாலான அ.தி.மு.க. உறுப்பினர்கள், இந்த செயற்குழு வெறுமனே சம்பிரதாயத்துக்கு நடத்தி முடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் ஆர்வமாக உள்ளனர்.

    அ.தி.மு.க.வுக்கு புதிய உயிரும், புத்துணர்ச்சியும் அளிக்கப்பட வேண்டுமானால் சில முக்கிய முடிவுகளை எடுத்தே தீர வேண்டும் என்று கட்சிக்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    அடுத்த வாரம் தி.மு.க. தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். டி.டி.வி.தினகரன் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறார். 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது.

    அது போல கட்சி சட்ட விதிகளில் மாற்றம் செய்தது தொடர்பான வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. இத்தனை பரபரப்புக்கிடையே திருவாரூர், திருப்பரங்குன்றம் மற்றும் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    மேற்கண்ட அத்தனை வி‌ஷயங்களையும் அ.தி.மு.க.வால் சாதாரணமாக ஒதுக்கி விட முடியாது. இதனால்தான் நாளை நடக்கும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    அ.தி.மு.க.வுக்கு தற்போது திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு, கட்சி விதிகளில் திருத்தம் வழக்கு ஆகிய மூன்றும் முக்கியமானதாக உள்ளது. இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அ.தி.மு.க.வில் எத்தகைய முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டதோ அதே பாணியை கடைபிடிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் எதிர்பார்க்கிறார்கள்.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள 2013-ம் ஆண்டே பூத் கமிட்டியை ஜெயலலிதா உருவாக்கி இருந்தார். அதனால்தான் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.வால் 99 சதவீத வெற்றியை பெற முடிந்தது. ஆனால் தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் எந்தவித முன் ஏற்பாடும் தயார் செய்யப்படவில்லை என்று வேதனையோடு அ.தி.மு.க. நிர்வாகிகள் சொல்கிறார்கள்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. தோல்வியை தழுவ நேரிட்டால், அ.தி.மு.க. மீதான மதிப்பு மக்கள் மத்தியில் வீழ்ச்சி அடைய தொடங்கி விடும் அபாயம் உள்ளது. செயற்குழுவில் இது பற்றி விவாதித்து புதிய யுத்தியை கையாள முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த இரு இடைத்தேர்தலுக்கும் டி.டி.வி.தினகரன் ஓசையின்றி தயாராகிவிட்டார். வேட்பாளரை கூட அவர் தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் அ.தி.மு.க.வில் இதற்கான பணிகள் இன்னமும் தொடங்கவில்லை. மாறாக திருவாரூர், திருப்பரங்குன்றம் இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பல கோஷ்டிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களை ஒருங்கிணைப்பதே பெரும் சவாலாக இருக்கும் என்பதால் அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள் கவலையுடன் உள்ளனர்.

    தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க.வில் ஒரு தேக்கநிலை உள்ளதாக கூறப்படுகிறது. கட்சி பணிகளை உடனுக்குடன் செய்ய வழிகாட்டுதல் குழு இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் ஒன்றாக இணைந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் வழிகாட்டும் குழு அமைக்கப்படவில்லை.

    இதனால் மாவட்டங்களில் அ.தி.மு.க. பணிகள் சுறுசுறுப்பு இல்லாமல் உள்ளன. திருவள்ளூரை 3 மாவட்டமாகவும், வேலூரை 4 மாவட்டமாகவும் மாற்றி தி.மு.க. மேலிடம் நிர்வாகிகளை நியமித்துள்ளது. அது போல அ.தி.மு.க.விலும் கூடுதல் மாவட்ட நிர்வாகங்கள், அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


    மேலும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் 2 அல்லது 3 பதவிகளை வகித்து வருகிறார்கள். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்னமும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராகவும் தலைமை நிலைய செயலாளராகவும் உள்ளார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளராகவும் கட்சி ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

    இப்படி மற்ற மூத்த தலைவர்கள், 2-ம் கட்ட தலைவர்களிடம் பல பதவிகள் குவிந்து கிடக்கிறது. இதையெல்லாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொடுத்து பொறுப்புகளை ஒப்படைத்தால்தான் அ.தி.மு.க.வில் புத்துணர்ச்சி ஏற்படும் என்கிறார்கள்.

    கட்சியில் நன்கு செயல்பட கூடியவர்களில் பலர் பொறுப்புகள் இல்லாமல் உள்ளனர். குறிப்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பதவி தரப்படாததால் விரக்தி அடைந்துள்ளனர்.

    இத்தகைய விரக்தியான நிலையில் உள்ளவர்கள்தான் டி.டி.வி.தினகரனின் புதிய கட்சிக்கு தாவுவதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வேண்டுமானால் நாளைய அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகத்துக்கான அதிரடி முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம் எடுபடாது என அமைச்சர் உதயகுமார் கூறினார். #thiruparankundramelection
    ஆரணி:

    ஆரணி அடுத்த சேவூரில், தமிழக அரசு சாதனைகளை விளக்கும் சைக்கிள் பேரணி வரும் 17-ந் தேதி நடக்கிறது. இதற்கான விளக்க கூட்டம் சேவூரில் நேற்றிரவு நடந்தது. வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:- 

    ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பதற்கு எதிராக வழக்கிற்கு மேல் வழக்குகளை போட்டனர். தற்போது கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு வலியுறுத்தினர். அதற்கு, நிறைய வழக்குகள் உள்ளது எனக்கூறி முதல்-அமைச்சர் இடம் தரமறுத்தார்.
    மறுநாள் காலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிரான அத்தனை வழக்குகளையும் வாபஸ் பெற்று விட்டனர். இதில் இருந்து வழக்குகளை போட்டவர்களை பின்னால் இருந்து இயக்கியது தி.மு.க. தான் என தெரிகிறது. இனி ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எந்த தடையும் இல்லை என்றார்.

    இதைத்தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வாக்காளர்களிடம் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம் எடுபடாது. தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி சிஸ்டம் தான் வெற்றிபெறும் என்றார்.  #thiruparankundramelection
    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தினகரன் பார்முலா எடுபடாது என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்தார். #dinakaran

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நீதிபதி எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் நிலையூர் முருகன், அம்பலம், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் சிறப்பான திட்டங்களை தந்து வருகிறது. ஆனால் இந்த அரசு செயல்படாத அரசு என எதிர்க்கட்சிகள் பொய்யான பிரசாரத்தை கூறி வருகின்றன. இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    தமிழகத்தில் இனி அ.தி. மு.க. ஆட்சிக்குவராது என சிலர் கற்பனை உலகில் மிதக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்- அமைச்சராகிவிட வேண்டும் என துடிக்கிறார். அவரது கனவு ஒருபோதும் பலிக்காது.

    மதுரை எப்போதுமே அ.தி.மு.க.வின் கோட்டை. திருப்பரங்குன்றத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு இடைத்தேர்தல் மீண்டும் வந்து இருக்கிறது. அங்கு கழகத்தின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். மற்ற அனைத் வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நாங்கள் அமைத்துக் கொடுத்த முன்னுரை காரணமாக அங்கே ஒருவர் வெற்றி பெற்றுவிட்டார்.


    அதேபோல் திருப்பரங்குன்றத்திலும் வெற்றி பெற்றுவிடலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவின் செல்லப்பிள்ளைகள் நிறைந்த திருப்பங்குன்றம் தொகுதி என்றும் இரட்டை இலை பக்கம்தான் இருக்கும்.

    ஆர்.கே.நகரில் வகுக்கப்பட்ட பார்முலா நிச்சயம் திருப்பரங்குன்றத்தில் எடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran

    ×