என் மலர்
நீங்கள் தேடியது "நகை மோசடி"
+2
- கைதான 4 பேரும் எவ்வளவு நகை, பணம் மோசடி செய்துள்ளனர் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- ரிசார்ட் வாடகையாக ஒரு நாளைக்கு ரூ.40ஆயிரம் செலுத்தியுள்ளனர்.
திருப்பூர்:
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் சுரேஷ்பாண்டியன் (வயது 32). இவர் திருப்பூர் கரட்டாங்காடு, ராக்கியாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரது அடகு கடையில் பொள்ளாச்சியை சேர்ந்த அருண்குமார் (25), திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (26) ஆகியோர் ஊழியராக வேலை செய்து வந்தனர். அருண்குமாரின் நண்பர் பொள்ளாச்சியை சேர்ந்த பிரதீப் (27).
சுரேஷ்பாண்டியன் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அடகு கடையில் உள்ள இருப்பு நகைகள், அடகு விவரங்களை சரிபார்ப்பது வழக்கம். அதன்படி கரட்டாங்காடு நகை அடகு கடையில் நகை இருப்பு விவரங்களை சுரேஷ்பாண்டியன் சரிபார்த்தார். இதில் அடகு வைத்த ரசீதில் குறிப்பிட்ட பணத்தை விட நகை இருப்பு குறைவாக இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் கடை ஊழியர்களிடம் விசாரித்துள்ளார். இதில் அவர்கள் முறைகேடு செய்தது கண்டறியப்பட்டது. இவ்வாறு கடந்த 2020-ம் ஆண்டு முதல் ரூ.80 லட்சத்தை முறைகேடு செய்தது தெரியவந்தது.
இது குறித்து சுரேஷ் பாண்டியன் திருப்பூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். துணை போலீஸ் கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பத்ரா, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், காளிமுத்து மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் அருண்குமார், சக்திவேல், பிரதீப் ஆகிய 3 பேரை தெற்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. நகை அடகு கடையில் வாடிக்கையாளர்கள் நகையை அடகு வைத்தது போல் போலியான ரசீது தயாரித்து நகையை வைக்காமலேயே பணத்தை மட்டும் எடுத்து செலவு செய்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் சுரேஷ் பாண்டியன் கணக்கு பார்க்கும்போது மட்டும், ரசீதுக்கு ஏற்ப நகைகளை, மற்றொரு கிளையான ராக்கியாபாளையம் நகை அடகு கடையில் இருந்து கொண்டு வந்து சரிகட்டியுள்ளனர். மேலும் பிரதீப்பும் கொஞ்சம் நகையை கொடுத்து மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார். இவ்வாறு 2020-ம் ஆண்டு முதல் மொத்தம் ரூ.80 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.24 லட்சம் மதிப்புள்ள நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோபிநாத் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவர் சுரேஷ்பாண்டியனுக்கு சொந்தமான நல்லூர் கிளை நகை அடகுக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். அவர் 2.50 கிலோ எடையுள்ள 304 பவுன் நகைகளை இங்கிருந்து வேறு ஒரு நகைக்கடையில் அடகு வைத்து ரூ.1.20 கோடி வரை மோசடி செய்துள்ளது தெரியவந்தது. கைதான 4 பேரும் நகை மோசடி பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். கடந்த தீபாவளி அன்று 4 பேரும் கேரளாவுக்கு சென்றதுடன் அங்குள்ள ரிசார்ட்டில் அழகிகளுடன் தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதற்காக ஒவ்வொரு அழகிகளுக்கும் தினசரி ரூ.20ஆயிரம் கொடுத்துள்ளனர். ரிசார்ட் வாடகையாக ஒரு நாளைக்கு ரூ.40ஆயிரம் செலுத்தியுள்ளனர். மேலும் சொகுசு காரில் உல்லாசமாக வலம் வந்துள்ளனர். கேரளாவில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் அழகிகளுடன் சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். கைதான ஒருவர் தனது கள்ளக்காதலிக்கு சொந்த செலவில் மருந்து கடை ஒன்றை வைத்து கொடுத்துள்ளார்.
கைதான கோபிநாத் ஆடிட்டர்கள் நகைகடைக்கு ஆய்வு செய்ய வருவதை அறிந்ததும் மோசடி செய்த நகைகளுக்கு பதில் சேலத்தில் உள்ள தனது நண்பரின் கடையில் இருந்து நகைகளை வாங்கி கொண்டு வந்து வைத்து கணக்கு காட்டியுள்ளார். இப்படியாக தொடர்ந்து கோபிநாத் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் நகைகளை அடகு வைத்த வாடி க்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்களது நகைகளை மீட்டு கொடுக்குமாறு போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். எனவே கைதான 4 பேரும் எவ்வளவு நகை, பணம் மோசடி செய்துள்ளனர் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திருமண ஆசை காட்டி கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணிடம் 33 பவுன் மோசடி செய்யப்பட்டுள்ளது.
- இந்த சம்பவம் குறித்து அந்த பெண் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியை சேர்ந்தவர் மாலதி (வயது 32). இவர் முதல் கணவரை பிரிந்து 7 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக் கும், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்த ராம் குமார் என்ற வாலிபருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து அவரிடம் இருந்து 33 பவுன் நகைகளை ராம்குமார் வாங்கி உள்ளார். அந்த நகைகளை தனியார் வங்கி யில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். 6 மாதங்கள் கடந்த பின்னரும் ராம்குமார் நகைகளை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாலதி, ராம்குமாரிடம் இதுகுறித்து கேட்டார். அப்போது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாலதி மதுரை ஐகோர்ட்டில் மாலதி மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது ராம்குமார் கோர்ட் டில் ஆஜராகி முன்பணம் கொடுத்து விடுவதாகவும், 6 மாதம் கழித்து நகைகளை திரும்ப கொடுப்பதாகவும் கூறி உள்ளார். ஆனால் அவர் கூறியதுபோல் பணம், நகைகளை தரவில்லை. மேலும் வழக்கு வாய்தா வுக்கும் ஆஜராகவில்லை. இதையடுத்து தளவாய் புரம் போலீஸ் நிலையத்தில் மாலதி புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து மதன்குமாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
- மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மதன்குமார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கிரேனா (வயது40), சுந்தரலிங்கம் மனைவி ஜெயலெட்சுமி (40) மற்றும் பாக்கியராஜ் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து தங்களிடம் தங்க நகைகளை கொடுத்தால், அதை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து அந்த பணத்தை பங்குசந்தை, நிதி நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்து லாபம் ஈட்டித் தருவதாக கூறினர்.
மேலும் 10 பவுன் நகை கொடுத்தால் 10 நாட்களில் நகையுடன் ரூ. 10 ஆயிரமும் சேர்த்து கொடுப்பதாகவும், 35 பவுன் நகை கொடுத்தால் கார் வாங்க முன்பணம் கட்டுவதாகவும் கூறியுள்ளனர். இதை நம்பிய மதன்குமார் கடந்த மே மாதம் 6-ந்தேதி தனது தாய் மற்றும் சகோதரியிடம் இருந்து 35 பவுன் தங்க நகைகளையும், கடந்த 9-ந் தேதி தனது உறவினர்களிடம் இருந்து மேலும் 50 பவுன் தங்க நகைகளையும் வாங்கி கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மதன்குமாருக்கு அவர்கள் 3 பேரும், ரூ.40 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளனர். ஆனால் கார் வாங்க முன்பணம் கட்டவில்லை. இதனால் சந்தேகமடைந்த மதன்குமார் கடந்த ஜூன் 26-ந்தேதி அவர்களிடம் நகைகளை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து மதன்குமாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக மதன்குமார் போலீசில் புகார் செய்தார். இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். கிரேனா, ஜெயலெட்சுமி மற்றும் பாக்கியராஜ் ஆகிய 3 பேரையும் ஜூலை மாதம் 10-ந்தேதி கைது செய்து அவர்களிடம் இருந்து 25 லட்சம் மதிப்புள்ள 69 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், மோகன்ஜோதி, பிள்ளைமுத்து, லலிதா மற்றும் தலைமை காவலர்கள் சுப்பையா, செந்திவேல் முருகேயன், முதல் நிலை பெண் காவலர் ஜெயலட்சுமி ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இதில் மோசடி செய்த தங்க நகைகளை நிதிநிறுவனத்தில் அடகு வைக்க உதவியாக இருந்த அந்நிதிநிறுவன ஊழியர்களான ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியை சேர்ந்த சந்தியா (24), தூத்துக்குடி புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த கிஷோர் ராகுல் (23), தூத்துக்குடி முள்ளக்காடு காந்திநகர் பகுதியை சேர்ந்த தங்ககுமார் (31), புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த பெரும்படை பட்டு மாரியப்பன் (31), புதியம்புத்தூர் ஆர். சி. தெருவை சேர்ந்த சுந்தரவிநாயகம் (23), ஓட்டப்பிடாரம் வடக்கு பரும்பூர் பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் (29), புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ராஜலெட்சுமி (27) மற்றும் புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (42) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நகையை பரிசோதித்து பார்த்தபோது அது கவரிங் நகை என்று தெரியவந்தது.
- தங்க நகை எனக்கூறி கவரிங் நகையை விற்க முயன்ற 3 பேர் பிடிபட்ட சம்பவம் சூளகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மகன் நாரூரான் (வயது29). இவர் சூளகிரி பஸ் நிறுத்தம் அருகே கமிஷனுக்காக பணபரிவர்த்தனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த5-ந் தேதி நாரூரான் கடையில் இருந்தபோது பெண் உள்பட 3 பேர் வந்தனர்.
அப்போது தங்களிடம் அரை பவுன் தங்க நகை உள்ளது என்றும், அதனை அடமானமாக வைத்துக் கொண்டு பணம் தருவீர்களா? என்று கேட்டனர். இதனை நம்பிய அவர் அந்த நகையை வாங்கி கொண்டு அவர்களுக்கு ரூ.2500-யை கொடுத்துள்ளார்.
அவர்கள் சென்றபிறகு அந்த நகையை பரிசோதித்து பார்த்தபோது அது கவரிங் நகை என்று தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் செய்வதறியாது திணறினார்.
இந்த நிலையில் அதே 3 பேர் மீண்டும் நேற்று நாரூரான் கடைக்கு வந்துள்ளனர். அப்போது தங்களிடம் 1900 கிராம் தங்க நகைகள் உள்ளதாகவும், அதனை எடுத்துக்கொண்டு பணம் தருமாறு கேட்டுள்ளனர்.
இதனை கேட்ட நாரூரான் மர்ம நபர்கள் தன்னை அவர்கள் ஏமாற்றிய விவரம் ஏதும் அறியாதவர்போல் நடித்து அந்த நகைகளை பெற்றுக்கொள்வதாகவும், அதற்குண்டான பணம் தன்னிடம் இல்லை என்றும், சிறிது நேரத்தில் நண்பர்கள் எடுத்து கொண்டு வந்து விடுவார்கள் என்று கூறி 3 பேரையும் கடையில் அமர வைத்துள்ளார்.
இதனை நம்பிய அந்த 3 பேரும் கடையில் இருந்தனர். அதற்குள் நாரூரான் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல்களை தெரிவித்தார். அவர்கள் உடனே சூளகிரி போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த கிஷோர் (25), ராஜூ (35), மீனா (30) ஆகிய 3 பேர், தங்க நகை விற்பது போல் நடித்து கவரிங் நகையை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பெண் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தங்க நகை எனக்கூறி கவரிங் நகையை விற்க முயன்ற 3 பேர் பிடிபட்ட சம்பவம் சூளகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வானூர் போலீசாரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்
- ஒவ்வொரு வீடாக சென்று நகை பாலீஷ் போட வேண்டுமாக எனக் கேட்டார்.
விழுப்புரம்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிந்துராம் (வயது 40). இவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் தங்கியுள்ளார். வீடு வீடாக சென்று நகை பாலீஷ் போடும் தொழில் செய்கிறார். இவர் வானூரை அடுத்த எடப்பாளையம் கிராமத்திற்கு நேற்று சென்றார். அங்கு ஒவ்வொரு வீடாக சென்று நகை பாலீஷ் போட வேண்டுமாக எனக் கேட்டார்.
அப்போது அக்கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மனைவி தனலட்சுமி (வயது 36), கைகளில் அணியும் தங்க வளையலுக்கு பாலீஷ் போட்டு தரும்படி கொடுத்தார். இதனை வாங்கிய பிந்துராம், தான் வைத்திருந்த ஒரு திரவத்தில் தங்க வளையலை போட்டு எடுத்தார்.வெளியில் எடுத்தபோது தங்க வளையல் 3 துண்டுகளாக வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமி, பிந்துராமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் பயந்து போன பிந்துராம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை பொதுமக்களிடம் கூறினார்.
சந்தேகமடைந்த பொதுமக்கள் பிந்துராமை பிடித்து சென்று வானூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பிந்துராம், நகை பாலீஷ் போடுவது போல நடித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிந்துராமை கைது செய்த வானூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வடமாநில வாலிபர் தங்க நகையை பாலீஷ் போடுவது போல நடித்து மோசடி செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வங்கி நிர்வாகித்தனர் நகைகளை ஆய்வு செய்த போது 10 பேரிடம் இருந்து பெறப்பட்ட நகைகள் அனைத்தும் போலி நகைகள் என தெரிய வந்தது.
- நகை மதிப்பீட்டாளர், போலி நகைகள் வைத்து பண மோசடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி-ஈரோடு ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக கோபி காளியண்ணன் தெருவை சேர்ந்த அங்கமுத்து (36) என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அங்கமுத்து கடந்த வருடம் அவருக்கு தெரிந்த 10 நபர்களை வரவழைத்து தனக்கு குடும்ப கஷ்டம் இருப்பதாகவும், அதனால் பணம் தேவைப்படுவதாகவும், என்னிடம் தனித்தனியாக நகைகள் உள்ளது. எனது பெயரில் வங்கியில் வைக்க முடியாது. எனவே உங்கள் கணக்கில் நகைகளை வைத்து பணத்தை எடுத்து கொடுக்க சொல்லி உள்ளார்.
அதன்படி அந்த 10பேரும் அங்கமுத்துவிடம் நகைகளை வாங்கி அதனை மீண்டும் வங்கியில் அடமானம் வைப்பது போல் வைத்து பணத்தை வாங்கி அவரிடமே கொடுத்துள்ளனர். நகை மதிப்பீட்டாளராக இருந்த அங்கமுத்து அந்த நகைகளை அவர்கள் பெயரில் கணக்கு வைத்து பணத்தையும் எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் அங்கமுத்து கடந்த நவம்பர் மாதம் 25-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 5-ந் தேதி வரை உடல்நலம் சரி இல்லை என்று கூறி விடுப்பு எடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் அலுவலகத்திற்கு வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த வங்கி நிர்வாகித்தனர் நகைகளை ஆய்வு செய்த போது 10 பேரிடம் இருந்து பெறப்பட்ட நகைகள் அனைத்தும் போலி நகைகள் என தெரிய வந்தது.
இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்த போது எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும், அங்கமுத்து தான் நகைகளை கொடுத்து அடமானம் வைத்து பணம் பெற்று கொண்டார் என்றும் கூறினர். அங்கமுத்து ரூ. 41 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
இதனையடுத்து வங்கியின் துணை மேலாளர் இதுகுறித்து கவுந்தபாடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அங்கமுத்துவை தேடி வந்தனர்.
இந்நிலையில் அங்கமுத்துவை கவுந்தப்பாடி போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை மதிப்பீட்டாளர், போலி நகைகள் வைத்து பண மோசடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.
- மோசடியில் ஈடுபட்ட எமர்சன் என்ற எலிமேசன், சாந்தகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைசாமிபுரம் செங்குட்வடுவன் தெருவைச் சேர்ந்தவர் பாலையா (வயது 64). தமிழக அரசின் வணிகவரித்துறை உதவி ஆணையாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற அவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவரிடம் ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு தேவதானத்தை சேர்ந்த கணவன், மனைவியான எமர்சன் என்ற எலிமேசன் (42), சாந்தகுமாரி (38) ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.
அவர்கள் தாங்கள் ராஜபாளையத்தில் பி.எஸ். என்ற பெயரில் நகை அடகுக்கடை நடத்தி வருவதாகவும், குறைந்த வட்டியில் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.
இதனை நம்பிய பாலையா தன்னிடம் இருந்த 440.850 கிராம் (55 பவுன்) தங்க நகைகளை தம்பதியினர் நடத்தி வந்த கடையில் அடகு வைத்தார். இந்த நகைகளை பாலையா தனது பெயரிலும், தனது மகன் அமர்நாத் பெயரிலும் அடகு வைத்திருந்தார்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் முதல் தவணையாக வட்டித்தொகையை செலுத்திய பாலையா தனது நகைகளை திருப்பி கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் நகைகளை திருப்பித்தர மறுத்த தம்பதியினர் பாலையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதன்பின்னரே அவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பாலையா விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். மேலும் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் முன்னாள் அரசு அதிகாரியிடம் 55 பவுன் நகை மோசடியில் ஈடுபட்ட எமர்சன் என்ற எலிமேசன், சாந்தகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 3 பேர் கொண்ட கும்பல் முத்துராமலிங்கத்தை கட்டிப்போட்டு விட்டு ரூ.8 லட்சம் பணத்தை பறித்து சென்றது தெரியவந்துள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புதியம்புத்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள தெற்கு திட்டங்குளம் முத்துநகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 48).
இந்நிலையில் முத்துராமலிங்கம் ரூ. 8 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் என்ற கிராமம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து போகவே குறுக்குச்சாலையில் உள்ள தனது நண்பர் ஜேக்கப் என்பவரிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக ஜேக்கப் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது முத்து ராமலிங்கத்தின் மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து ஜேக்கப் ஓட்டப்பிடாரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் கழுத்து மற்றும் கை, கால்களில் துணியால் கட்டப்பட்ட நிலையில் முத்துராமலிங்கம் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்ட போலீசார் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், 3 பேர் கொண்ட கும்பல் முத்துராமலிங்கத்தை கட்டிப்போட்டு விட்டு ரூ.8 லட்சம் பணத்தை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. அவர்கள் யார்? எந்த ஊரை சோந்தவர்கள்? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துராமலிங்கம் மீது கோவில்பட்டி, கயத்தார், ஓட்டப்பிடாரம், நாரைகினறு ஆகிய போலீஸ் நிலையங்களில் நகை மோசடி செய்ததாக வழக்கு உள்ளது. இவர் குண்டாசில் கைது செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார். தன்னிடம் நகைகளை கொடுத்த நபர்களுக்கு பணத்தை திருப்பி தருவதற்காக ரூ. 8 லட்சத்தை எடுத்து கொண்டு சென்ற போது தான் கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடகு கடைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை அடமானம் வைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
- மோசடி வழக்கில் சிக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்து புதுவை மாநில போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் குமார்லால் உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள ஒரு நகைக் கடையில் கவரிங் நகையை விற்க முயன்ற காரைக்காலை சேர்ந்த பரசுராமன் (வயது 30) என்பவரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில் (35), ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோம் (38), அவரது கள்ளக்காதலி புவனேஸ்வரி உள்பட 7 பேரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர்.
இவர்கள் கூட்டாக சேர்ந்து காரைக்கால், தமிழகத்தில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதியில் உள்ள அரசு, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், நகைக்கடைகள், அடகு கடைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை அடமானம் வைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
இதற்கிடையே மோசடி வழக்கில் சிக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்து புதுவை மாநில போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் குமார்லால் உத்தரவிட்டார்.
- கோமதி நாயகம் அடகு வைத்த நகைகளை திருப்பி வைத்துக்கொண்டு ரமேஷ்குமாருக்கு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
- மனவேதனை அடைந்த ரமேஷ்குமார் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை காய்கறி தோட்டம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 42). இவர் வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனாவுக்கு முன்பு தனக்கு சொந்தமான 246 பவுன் தங்கநகைகளை பாளையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்துள்ளார். ஆனால் அதன்பின்னர் கொரோனா பரவலால் வியாபாரம் சரியாக நடக்கவில்லை.
இதனால் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் திணறி வந்துள்ளார். உடனே அவர் பாளை கே.டி.சி.நகர் பாலீன் தோட்டத்தை சேர்ந்த கோமதிநாயகம்(41) என்பவரிடம் சென்று, நகைகளை திருப்புவதற்கு பண உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.
உடனே கோமதி நாயகம் அடகு வைத்த நகைகளை திருப்பி வைத்துக்கொண்டு ரமேஷ்குமாருக்கு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஆனாலும் ரமேஷ்குமார் நகைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறும், அதற்கான பணத்தை தந்துவிடுவதாகவும் கூறி உள்ளார்.
ஆனால் கோமதிநாயகம் கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் தனது சகோதரரான செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கண்ணையாவிடம் அவர் தெரிவித்துள்ளார். உடனே அவர் ரமேஷ்குமாரை அழைத்து, கொடுத்த பணத்தை வாங்கி கொள்ளவேண்டும் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த ரமேஷ்குமார் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்துள்ளார். அவரது உத்தரவின்பேரில் ஐகிரவுண்டு போலீசார் நடத்திய விசாரணையில், 246 பவுன் நகையை வங்கியில் இருந்து திருப்பி வைத்துக்கொண்டு அடகு வைத்த தொகையை மட்டும் திருப்பி தருவோம் என்று சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது சகோதரர் மிரட்டியது தெரியவந்தது.
இதையடுத்து சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை மோசடி செய்து அபகரித்ததாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- கொள்ளையடித்த நகைகளை அனுராதா வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- நகை, பணத்தை சொத்துகளாக முதலீடு செய்திருக்கும் திடுக்கிடும் தகவலும் கிடைத்துள்ளது.
திருச்சி:
திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் துரைசாமி. இவரது தம்பி சோமசுந்தரம். ரவுடிகளான இவர்கள் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சுமார் இரண்டரை ஆண்டுகள் போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த அவர்கள் இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் நேற்று முன்தினம் உய்யக் கொண்டான் திருமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் கொள்ளையடித்த நகை மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக குழு மாயி அம்மன் கோவில் அருகே ரவுடிகளை அழைத்துக் கொண்டு சென்றபோது அவர்கள் போலீசாரை அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து துரைசாமி, சோமசுந்தரம் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் ரவிச்சந்திரன் மனைவி அனுராதா (43) என்பவரது வீட்டில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து உறையூர் போலீசார் அனுராதாவை நேற்று கைது செய்தனர்.
மேலும் இதில் அனுராதாவின் மகன் ஹரிகரன் மற்றும் வெள்ளைச்சாமி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கடந்த 2022 ஜூன் மாதத்தில் உறையூர் சீனிவாசா நகர் பகுதியில் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் அறிவழகன் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த சகோதர ரவுடிகள் துரைசாமி, ஆகியோருடன் ஹரிஹரன், வெள்ளைச்சாமி ஆகிய இருவரும் சென்றுள்ளனர். பின்னர் கொள்ளையடித்த நகைகளை அனுராதா வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கொள்ளையடிக்கப்பட்ட 30 பவுன் நகைகளில் 20 பவுன் நகை மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 பவுன் நகையை கொள்ளையர்கள் விற்பனை செய்து செலவழித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே கைதான அனுராதாவுக்கும், ரவுடி துரைசாமிக்கும் இடையிலான தொடர்பு குறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது, 2009-ம் ஆண்டு காலகட்டங்களில் பாதி விலைக்கு நகைகளை வாங்கித் தருவதாக பல பேரிடம் அனுராதா பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார்.
பின்னர் பணம் கொடுத்தவர்கள் அவரை துரத்தியபோது ரவுடி துரைசாமியிடம் அடைக்கலம் புகுந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கொள்ளையடித்த நகை, பணத்தை சொத்துகளாக முதலீடு செய்திருக்கும் திடுக்கிடும் தகவலும் கிடைத்துள்ளது.
சிகிச்சையில் இருக்கும் ரவுடிகள் குணமடைந்து போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது, மேலும் பல விடை தெரியாத வழக்குகளுக்கு விடை கிடைக்கும் என போலீசார் நம்புகின்றனர்.
- சென்னை பிராட்வே ஆச்சாரப்பன் தெருவை சேர்ந்த பெரோஸ் அப்பகுதியில் நகை வியாபாரம் செய்து வருகிறார்.
- பெரோஸ் கடையில் இருந்த சுமார் 1 கிலோ பழைய நகையை தங்கமாக உருக்கி இருவரிடம் கொடுத்துள்ளார்.
பிராட்வே:
சென்னை பிராட்வே ஆச்சாரப்பன் தெருவை சேர்ந்தவர் பெரோஸ் (வயது 40). இவர் இதே பகுதியில் நகை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், இவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழக்கரையைச் சேர்ந்த சதாம் உசேன் (30), மற்றும் அவரது நண்பர் ஷாஜகான் ஆகிய 2 பேர் அறிமுகமாகி உள்ளனர். அப்போது அவர்கள் சென்னை வேளச்சேரியில் தங்கி இருக்கும் தாங்கள் நகை வியாபாரம் செய்து வருவதாகவும், பழைய நகையை வாங்கி அதிக விலைக்கு விற்று தருவதாகவும் கூறி உள்ளனர்.
இதனால் ஏற்பட்ட பேராசையில் அவர்கள் கூறியதை உண்மையென நம்பிய பெரோஸ் அவர் கடையில் இருந்த சுமார் 1 கிலோ பழைய நகையை தங்கமாக உருக்கி இருவரிடம் கொடுத்துள்ளார்.
இதைப் பெற்றுக்கொண்ட சதாம் உசேன் மற்றும் ஷாஜகான் ஆகிய 2 பேரும் என்.எஸ்.சி போஸ் ரோட்டில் உள்ள ஒரு கடையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என கூறி தங்கத்துடன் தப்பி சென்றனர்.
இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த பெரோஸ் இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட தலைமறைவாக இருந்த சதாம் உசேனை நேற்று கைது செய்தனர். இவரது கூட்டாளியான ஷாஜகானை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையடுத்து பிடிபட்ட சதாம் உசேன் வீட்டிலிருந்து ரூ.20 லட்சம் மற்றும் 4 பவுன் தங்க நகையையும் போலீசார் கைப்பற்றினர்.