search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.70 லட்சம் தங்க நகைகள் மோசடி: சப்-இன்ஸ்பெக்டர், தம்பியுடன் கைது
    X

    ரூ.70 லட்சம் தங்க நகைகள் மோசடி: சப்-இன்ஸ்பெக்டர், தம்பியுடன் கைது

    • கோமதி நாயகம் அடகு வைத்த நகைகளை திருப்பி வைத்துக்கொண்டு ரமேஷ்குமாருக்கு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
    • மனவேதனை அடைந்த ரமேஷ்குமார் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை காய்கறி தோட்டம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 42). இவர் வியாபாரம் செய்து வருகிறார்.

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோனாவுக்கு முன்பு தனக்கு சொந்தமான 246 பவுன் தங்கநகைகளை பாளையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்துள்ளார். ஆனால் அதன்பின்னர் கொரோனா பரவலால் வியாபாரம் சரியாக நடக்கவில்லை.

    இதனால் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் திணறி வந்துள்ளார். உடனே அவர் பாளை கே.டி.சி.நகர் பாலீன் தோட்டத்தை சேர்ந்த கோமதிநாயகம்(41) என்பவரிடம் சென்று, நகைகளை திருப்புவதற்கு பண உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.

    உடனே கோமதி நாயகம் அடகு வைத்த நகைகளை திருப்பி வைத்துக்கொண்டு ரமேஷ்குமாருக்கு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஆனாலும் ரமேஷ்குமார் நகைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறும், அதற்கான பணத்தை தந்துவிடுவதாகவும் கூறி உள்ளார்.

    ஆனால் கோமதிநாயகம் கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் தனது சகோதரரான செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கண்ணையாவிடம் அவர் தெரிவித்துள்ளார். உடனே அவர் ரமேஷ்குமாரை அழைத்து, கொடுத்த பணத்தை வாங்கி கொள்ளவேண்டும் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த ரமேஷ்குமார் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்துள்ளார். அவரது உத்தரவின்பேரில் ஐகிரவுண்டு போலீசார் நடத்திய விசாரணையில், 246 பவுன் நகையை வங்கியில் இருந்து திருப்பி வைத்துக்கொண்டு அடகு வைத்த தொகையை மட்டும் திருப்பி தருவோம் என்று சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது சகோதரர் மிரட்டியது தெரியவந்தது.

    இதையடுத்து சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை மோசடி செய்து அபகரித்ததாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×