என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது விற்பனை"

    • மனமகிழ் மன்றங்கள் மூலம் ரூ.5 கோடியே 43 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.
    • பொங்கல் பண்டிகையின் போது ‘டாஸ்மாக்' கடைகளில் ரூ.839 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

    சென்னை:

    'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும்போதெல்லாம் மது பிரியர்கள் உஷாராகி முந்தைய நாளே கூடுதலாக மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைப்பதில் கவனம் செலுத்துவார்கள்.

    அந்த வகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளுக்கு நேற்று விடுமுறை என அறிவிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் 'டாஸ்மாக்' கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

    மதுபிரியர்களின் படையெடுப்பால் அன்று ஒரே நாளில் ரூ.220 கோடியே 75 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மனமகிழ் மன்றங்கள் மூலம் ரூ.5 கோடியே 43 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது 'டாஸ்மாக்' கடைகளில் ரூ.839 கோடிக்கு மது விற்பனை நடைபெற்ற நிலையில் தற்போது ஒரே நாளில் ரூ.220 கோடியே 75 லட்சத்துக்கு விற்பனை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.140 கோடிக்கு மது விற்பனை கூடுதலாக நடைபெற்றது.
    • போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை ஆகிய 2 நாளுக்கான விற்பனை மட்டும் ரூ.519 கோடியாக உயர்ந்தது.

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் கடந்த 14-ந்தேதி முதல் நேற்று 18-ந்தேதி வரை நடைபெற்றது. 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டதால் பொங்கலை உற்சாகமாக மக்கள் கொண்டாடினர்.

    அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் மது விற்பனை அதிகமாக நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த ஆண்டு சுமார் ரூ.850 கோடிக்கு மது விற்பனை நடந்து உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.140 கோடிக்கு மது விற்பனை கூடுதலாக நடைபெற்றது.

    இந்த ஆண்டு மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகமாக இருந்ததால் மது விற்பனையும் கூடியுள்ளது. போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை ஆகிய 2 நாளுக்கான விற்பனை மட்டும் ரூ.519 கோடியாக உயர்ந்தது.

    16-ந்தேதி மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால் 15-ந் தேதியே அதிக அளவு மதுபானங்கள் வாங்கி குவித்தனர். இதுவரையில் இல்லாத விற்பனையாக இது பார்க்கப்படுகிறது.

    காணும் பொங்கலான 17-ந்தேதி மதுவிற்பனை படுஜோராக நடந்துள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, விழுப்புரம் மண்டலங்களின் மதுபானங்கள் தேவையான அளவு குவிக்கப்பட்டு இருந்தது.

    நகரப் பகுதிகளை காட்டிலும் கிராமப்புறங்களில் மது விற்பனை கணிசமாக கூடி இருந்தது. இதற்குக் காரணம் நகர்ப்புறங்களில் இருந்து மக்கள் கிராமங்களில் பொங்கல் கொண்டாட சென்றது தான். அதனால் கிராமங்களில் உள்ள மதுக்கடைகளில் இரவு வரை மது விற்பனை களை கட்டியது.

    நேற்று (ஞாயிற்றுக் கிழமை) விற்பனை குறைந்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர். 4 நாட்களில் கையில் இருந்த பணம் முழுவதும் செலவாகி விட்டதால் நேற்று வழக்கமான அளவே விற்பனை நடந்து உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

    புதிய ரக மதுபானங்களும் அதிக அளவில் கடைகளில் குவிக்கப்பட்டிருந்ததால் தேவையான மது வகைகளை வாங்கி அருந்தினர்.

    குறைந்த ரக மதுபானங்கள் அதிக அளவில் விற்பனையானது. பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக மதுபானம் இடம் பெற்று இருந்ததால் ஓட்டல்களில் உள்ள மது பார்களிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

    • நடப்பாண்டில் நாளை வரையிலான 4 நாள்களில் மது வணிகம் ரூ.900 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
    • மக்கள் விரோத மது ஆதரவு அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் போகிப் பண்டிகை நாளில் ரூ.217 கோடிக்கும், பொங்கல் நாளில் ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகியிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் ரூ.454 கோடிக்கு மது விற்பனையாகி இருந்த நிலையில், நடப்பாண்டில் அதை விட 14.10 சதவீதம் அதிகம் ஆகும். தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் 11.19 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியடைந்த நிலையில், அதை விட அதிகமாக மது வணிகம் வளர்ச்சியடைந்திருக்கிறது. மக்களுக்கு மதுவைப் புகட்டுவதில் மட்டும் தான் தி.மு.க. அரசு சாதனை படைக்கிறது.

    கடந்த ஆண்டு பொங்கல் திருநாளின்போது 4 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையான நிலையில், நடப்பாண்டில் நாளை வரையிலான 4 நாள்களில் மது வணிகம் ரூ.900 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.

    பொங்கல் திருநாள் மது வணிகத்தில் அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், மனமகிழ் மன்றங்களின் மூலம் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது என்பது தான். இது மதுக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட ரூ.435.41 கோடி மதுவுடன் ஒப்பிடும்போது 19 சதவீதம் ஆகும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் 500 மதுக்கடைகளை, அதாவது 9 சதவீதம் மதுக்கடைகளை மூடிய தி.மு.க. அரசு, 19 சதவீதம் கூடுதலாக மது வணிகம் செய்யும் அளவுக்கு மனமகிழ் மன்றங்களைத் திறந்து மதுவை விற்பனை செய்திருப்பது உறுதியாகி யிருக்கிறது.

    மக்கள் விரோத மது ஆதரவு அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பண்டிகை நேரங்களில் சாராய விற்பனையைப் பல மடங்குகளாக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது இந்த டாஸ்மாக் மாடல் அரசு.
    • பொங்கலுக்குக் கொடுத்த ரூபாய் நோட்டில் உள்ள எண்ணும், டாஸ்மாக்கில் வசூலாகியுள்ள நோட்டில் உள்ள எண்ணும் ஒத்துப்போகிறது என்று செய்திகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,

    உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது தி.மு.க. அரசு!

    "போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்" என உருகி உருகி காணொளி வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் சுமார் ரூ.518 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை களைகட்டியிருப்பது சுவாரஸ்யமான நகை முரண். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சாராய வாடை இல்லாத கொண்டாட்டங்களே இல்லை என்று கூறுமளவிற்குப் பண்டிகை நேரங்களில் சாராய விற்பனையைப் பல மடங்குகளாக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது இந்த டாஸ்மாக் மாடல் அரசு.

    அதிலும், குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு ரூ.3000 கொடுக்கிறோம் என ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துவிட்டு, அந்தப் பணத்தை டாஸ்மாக் வாயிலாக வசூலித்துள்ள திமுக அரசின் அறிவாற்றலைப் பார்க்கையில், இதற்குப் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே என்ற நகைச்சுவை வசனம் தான் நினைவிற்கு வருகிறது. பொங்கலுக்குக் கொடுத்த ரூபாய் நோட்டில் உள்ள எண்ணும், டாஸ்மாக்கில் வசூலாகியுள்ள நோட்டில் உள்ள எண்ணும் ஒத்துப்போகிறது என்று செய்திகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்களின் மகிழ்ச்சியை விட, மக்களின் மன நிம்மதியை விட, போதையால் சமூகத்தில் நிகழும் அசம்பாவிதங்களைத் தடுப்பதை விட டாஸ்மாக் வருமானத்தைப் பெரிதாகப் பார்க்கும் ஒரு அரசு, இனியொரு முறை தப்பித்தவறி கூட தமிழகத்தை ஆளக் கூடாது! என்று கூறியுள்ளார். 



    • மனமகிழ் மன்றங்கள் மூலம் 14ம் தேதி ரூ.33.16 கோடிக்கு விற்பனை.
    • மனமகிழ் மன்றங்கள் மூலம் 15ம் தேதி ரூ.49.43 கோடிக்கும் மது விற்பனை.

    தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் மட்டும் ரூ. 518 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

    டாஸ்மாக் மூலம் 14ம் தேதி ரூ.184.05 கோடிக்கும், 15ம் தேதி ரூ.251.23 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

    மனமகிழ் மன்றங்கள் மூலம் 14ம் தேதி ரூ.33.16 கோடிக்கும், 15ம் தேதி ரூ.49.43 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

    சென்னை மண்டல டாஸ்மாக் கடைகளில் மட்டும் ரூ.98 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

    கடந்த பொங்கல் விடுமுறையின்போது 4 நாளில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையான நிலையில் இந்தாண்டு 2 நாளிலே ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும்.
    • கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி என்றாலே மதுபானத்துக்கு பெயர் பெற்றதாகும். இங்கு பலவிதமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மது பிரியர்கள் புதுச்சேரிக்கு வந்து மதுகுடிப்பது வழக்கம். சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும். வார இறுதி நாட்களில் அது சற்று உயரும்.

    இந்தநிலையில் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள், மது பிரியர்கள் கடந்த ஒருவாரமாக புதுச்சேரியில் குவிந்தனர். இதன் காரணமாக மது விற்பனையும் அமோகமாக நடந்தது.

    மது விற்பனை இருமடங்காக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு வரி வருவாய் அதிகரித்துள்ளது.

    • கடந்த ஆண்டு இதே நாளில் ரூ.108.71 கோடிக்கு விற்பனையாகி இருந்தது.
    • தொடுபுழா கஞ்சிக்குழி விற்பனை நிலையம் ரூ.4.61 லட்சம் மதுபானங்கள் விற்று விற்பனையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    கேரளாவில் பண்டிகை காலங்களில் மது விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த ஓணம் பண்டிகையின் போது 10 நாட்களில் ரூ.826.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி அதிகமாகும். அந்த வரிசையில் தற்போது புத்தாண்டு கொண்டாட்ட மது விற்பனையும் சாதனையை படைத்து உள்ளது.

    புத்தாண்டுக்கு முதல் நாளான 31-ந்தேதி மட்டும் கேரளாவில் ரூ.125.64 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் ரூ.108.71 கோடிக்கு விற்பனையாகி இருந்தது. தற்போது அதைவிட 16.93 கோடிக்கு அதிக மது விற்பனையாகி உள்ளது. கடந்த வார விற்பனை நிலையத்தில் மட்டும் ரூ.1.17 கோடிக்கு மது விற்கப்பட்டுள்ளது. 2-வது இடத்தை பாலாரி வட்டம் (ரூ.95.09 லட்சம்) பெற்றுள்ளது. தொடுபுழா கஞ்சிக்குழி விற்பனை நிலையம் ரூ.4.61 லட்சம் மதுபானங்கள் விற்று விற்பனையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    புத்தாண்டுக்கு முதல் நாளில் 2.07 லட்சம் வெளிநாட்டு மதுபானங்கள், பீர் மற்றும் ஒயின் பெட்டிகள் கேரளாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 1.84 லட்சம் பெட்டிகள் விற்பனையாகி இருந்தன.

    • டெட்ரா பேக்குகளில் போதை தரும் மது தான் இருக்கிறது என்று பெற்றோராலும், ஆசிரியர்களாலும் கூட சந்தேகிக்கக்கூட முடியாது.
    • காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்யப்பட்டால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தேன்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மது வகைகளை சிறிய அளவிலான காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது; இது குழந்தைகளின் வாழ்வில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்து காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்வதற்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு மிகவும் சரியானது என்பதை உறுதி செய்திருக்கிறது.

    உச்சநீதிமன்றத்தில் மது வகைகளின் தரப்பெயர் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணைக்காக கண்ணாடி புட்டிகளிலும், காகிதக் குடுவைகளிலும் அடைக்கப்பட்ட மது வகைகளின் மாதிரிகள் நீதிபதிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டன. மேல்சட்டைப் பைகளிலும், கால்சட்டைப் பைகளிலும் எளிதாக எடுத்துச் செல்ல வசதியாக சிறிய காகிதக் குடுவைகளில் (டெட்ரா பேக்) விஸ்கி எனும் மது வகை அடைத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிர்ச்சியடைந்தார். மது வகைகள் இப்படி விற்பனை செய்யப்படுவதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

    ''இது மிகவும் ஆபத்தானது. இது பழச்சாறு அடைக்கப்பட்ட டெட்ரா பேக் போல காட்சியளிக்கிறது. இது குழந்தைகளின் கைகளில் கிடைத்தால் என்ன ஆகும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்த டெட்ரா பேக்குகளில் போதை தரும் மது தான் இருக்கிறது என்று பெற்றோராலும், ஆசிரியர்களாலும் கூட சந்தேகிக்கக்கூட முடியாது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்" என்று நீதிபதி சூர்யகாந்த் எச்சரித்தார்.

    உச்சநீதிமன்ற நீதிபதி விடுத்த இந்த எச்சரிக்கைக்கும், தமிழ்நாட்டிற்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனாலும், மது வணிகத்தில் புதுமையை புகுத்துவதாகக் கூறி கடந்த ஆண்டில் டெட்ரா பேக்குகள் எனப்படும் காகிதக் குடுவைகளில் மது விற்க முடிவு செய்திருந்தது. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உச்சநீதிமன்ற நீதிபதி இப்போது தெரிவித்த இதே கருத்துகளை அப்போது வெளியிட்டு எச்சரித்த நான், காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்யப்பட்டால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தேன். அதைத் தொடர்ந்து தான் அந்தத் திட்டத்தை திமுக அரசு கைவிட்டது.

    ஒருவேளை பாட்டாளி மக்கள் கட்சியின் எச்சரிக்கையையும் மீறி காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தியிருந்தால், உச்சநீதிமன்றத்தால் இப்போது தெரிவிக்கப்பட்டதை விட மிக மோசமான கண்டனத்திற்கு ஆளாகியிருக்க நேரிடும். எது எப்படியிருந்தாலும் வருங்காலத் தலைமுறையினரை சீரழிக்கும் வகையில் காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்ய நினைத்ததற்காகவே திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வாரம் பெருமளவில் குறைந்தது.
    • பிரீமியம் மதுபானங்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்ததால் அதை வாங்க யாரும் முன் வரவில்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனை அதிகளவில் நடைபெறும்.

    ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டைவிட தீபாவளி மது விற்பனை அதிகரித்து வந்துள்ளது. இந்த ஆண்டு வார விடுமுறையையொட்டி தீபாவளி பண்டிகை வந்தது. இதனால் மது விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கடந்த ஆண்டைவிட மது விற்பனை 5 முதல் 10 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதற்கு கடந்த 3 மாதம் முன்பு அரசின் வருவாயை உயர்த்த மதுபானங்களின் வரியை உயர்த்தியதே காரணம் என தெரிய வந்துள்ளது.

    அதோடு வழக்கமாக தீபாவளியை கொண்டாட புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வாரம் பெருமளவில் குறைந்தது. இதற்கு கனமழை எச்சரிக்கையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

    வழக்கமாக சுற்றுப்புறங்களான தமிழக மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் புதுவைக்கு வந்து மதுபானங்களை வாங்கி செல்வார்கள். ஆனால் பிரீமியம் மதுபானங்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்ததால் அதை வாங்க யாரும் முன் வரவில்லை. அதேநேரத்தில் குறைந்த விலையில் உள்ள உள்ளூர் மதுபானங்கள் அதிகளவில் விற்பனையாகி உள்ளது.

    தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மட்டுமே மதுபான விற்பனை நடக்கிறது. இதனால் மாவட்ட வாரியாகவும், ஒட்டுமொத்தமாகவும் எத்தனை கோடிக்கு மதுபானம் விற்பனையானது என உடனடியாக தெரிந்து விடும். ஆனால் புதுவையில் தனியார் மொத்த மதுபான விற்பனை நிலையம், சில்லரை விற்பனை நிலையம், சுற்றுலா மதுபான விடுதிகள், ரெஸ்டோ பார்கள் என பல விதமாக விற்பனை நடப்பதால் ஒட்டுமொத்த விற்பனை தொகையை கண்டறிய முடியவில்லை.

    இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மதுவிற்பனை வெகுவாக குறைந்துள்ளது என மதுபான விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த ஆண்டு தீபாவளியின் போது ரூ.438 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.
    • தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 18-ந் தேதி ரூ.230 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி அக்டோபர் 18-ந் தேதி ரூ.230 கோடி, 19-ந் தேதி ரூ.293 கோடி, 20-ந் தேதி ரூ.266 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் சென்னை ரூ.158 கோடி, திருச்சி ரூ. 157 கோடி, சேலம் ரூ,153 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு தீபாவளியின் போது ரூ.438 கோடியாக இருந்த மது விற்பனை இந்த ஆண்டு ரூ.790 கோடியாக அதிகரித்துள்ளது.

    • டாஸ்மாக் மதுக்குடோன்கள் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை செயல்படாது.
    • கடந்த ஆண்டை விட இந்த வருடம் மது விற்பனை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும்.

    பொதுமக்கள் பண்டிகையை கொண்டாடி விட்டு சொந்த ஊருக்கு திரும்ப வசதியாக தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமையும் அரசு விடுமுறை அளித்துள்ளது.

    எனவே 4 நாட்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் மக்கள் மூழ்கி உள்ள நிலையில் மது பிரியர்களும் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர். பண்டிகை நாட்களில் மது விற்பனையை அதிகரிக்க டாஸ்மாக் நிறுவனம் ஊழியர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிஉள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள 4829 மதுக்கடைகளில் 15 நாட்களுக்கு இருப்பு வைக்க வேண்டும். எந்த சரக்கும் இல்லை என்று சொல்லாமல் வாடிக்கையாளர்கள் கேட்கும் மதுபானங்களை கொடுக்க வேண்டும்.

    சாதாரண ரக மது வகைகள் அதிகளவில் வைத்திருக்க வேண்டும். பிராந்தி, விஸ்கி, பீர், ரம் ரகங்கள் ரூ.140 குறைந்த விலை சரக்கு அதிகளவில் இருப்பு இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

    டாஸ்மாக் மதுக்குடோன்கள் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை செயல்படாது. ஆனால் தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை நாளிலும் செயல்படுகிறது. எந்தெந்த கடைகளுக்கு மதுபானம் தேவைப்படுகிறதோ அங்கு தட்டுப்பாடு இல்லாமல் சரக்கு அனுப்ப குடோனில் ஊழியர்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் கடந்த ஆண்டை விட இந்த வருடம் மது விற்பனை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண நாட்களில் ரூ.100 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.130 கோடிக்கு விற்பனையாகும்.

    பண்டிகை நாட்களில் இது ரூ.180 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. அந்த வகையில் இன்று முதல் 21-ந்தேதி வரை மதுபானங்கள் சுமார் ரூ.600 கோடிக்கு விற்பனைக்கு கடைகளில் குவிக்கப்பட்டுள்ளது. எந்த மதுக்கடையிலும் குறிப்பிட்ட ரக மதுபானங்கள் இல்லை என்று சொல்லாத வகையில் ஊழியர்கள் விற்பனையில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுபான பயன்பாடு இருந்து வருவதால் விற்பனை படுஜோராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில் மதுக்கடைகளில் ரம் மது வகைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்களின் ரம் வகைகள் சப்ளை இல்லாததால் மது பிரியர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

    • தற்போது ​​டாஸ்மாக் கடைகளில் 10-க்கும் மேற்பட்ட பீர் வகைகள் விற்கப்படுகின்றன.
    • தற்போது தினமும் சராசரியாக டாஸ்மாக் கடைகளில் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை விற்பனை நடைபெறுகிறது.

    தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய 2 நாட்களும் விடுமுறை தினங்கள் ஆகும். இதையொட்டி டாஸ்மாக் கடைகளில் இந்த ஆண்டு தீபாவளியையொட்டி அதிக அளவில் மது விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி தீபாவளி பண்டிகை கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான மதுபானங்களை கையிருப்பில் வைக்க டாஸ்மாக் நிர்வாகம் அதன் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து டாஸ்மாக் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறைகள் வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்களிலும் மதுபானங்கள் தேவை சீராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால் முக்கியமான இடங்களில் கூடுதல் மதுபானங்களை இருப்பு வைக்க திட்டமிட்டுள்ளோம். முக்கியமாக பீர் வகைகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்படும்.

    தற்போது டாஸ்மாக் கடைகளில் 10-க்கும் மேற்பட்ட பீர் வகைகள் விற்கப்படுகின்றன. அவற்றில் 5 முதல் 7 வகையான பீர்கள் வேகமாக விற்பனையாகின்றன. அந்த 7 வகை பானங்களும் கையிருப்பில் இருப்பதை கண்காணிக்க மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது தினமும் சராசரியாக டாஸ்மாக் கடைகளில் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் விற்பனை பொதுவாக 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும். பண்டிகை காலங்களில், வழக்கமாக 15 சதவீதம் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

    கடந்த 2023-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 3 நாட்களில் ரூ.460 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடந்தது. கடந்த 2024-ம் ஆண்டு 2 நாட்களில் ரூ.438 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்ட வாய்ப்புள்ளது.

    டாஸ்மாக்கின் தினசரி வருவாயில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் கிட்டத்தட்ட 40 சதவீதம் பங்களிக்கின்றன. விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×