என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சரக்கு வச்சிருக்கேன்... இறக்கி வச்சிருக்கேன்... தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்ட வாய்ப்பு
- தற்போது டாஸ்மாக் கடைகளில் 10-க்கும் மேற்பட்ட பீர் வகைகள் விற்கப்படுகின்றன.
- தற்போது தினமும் சராசரியாக டாஸ்மாக் கடைகளில் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை விற்பனை நடைபெறுகிறது.
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய 2 நாட்களும் விடுமுறை தினங்கள் ஆகும். இதையொட்டி டாஸ்மாக் கடைகளில் இந்த ஆண்டு தீபாவளியையொட்டி அதிக அளவில் மது விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி தீபாவளி பண்டிகை கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான மதுபானங்களை கையிருப்பில் வைக்க டாஸ்மாக் நிர்வாகம் அதன் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறைகள் வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்களிலும் மதுபானங்கள் தேவை சீராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால் முக்கியமான இடங்களில் கூடுதல் மதுபானங்களை இருப்பு வைக்க திட்டமிட்டுள்ளோம். முக்கியமாக பீர் வகைகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்படும்.
தற்போது டாஸ்மாக் கடைகளில் 10-க்கும் மேற்பட்ட பீர் வகைகள் விற்கப்படுகின்றன. அவற்றில் 5 முதல் 7 வகையான பீர்கள் வேகமாக விற்பனையாகின்றன. அந்த 7 வகை பானங்களும் கையிருப்பில் இருப்பதை கண்காணிக்க மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது தினமும் சராசரியாக டாஸ்மாக் கடைகளில் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் விற்பனை பொதுவாக 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும். பண்டிகை காலங்களில், வழக்கமாக 15 சதவீதம் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
கடந்த 2023-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 3 நாட்களில் ரூ.460 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடந்தது. கடந்த 2024-ம் ஆண்டு 2 நாட்களில் ரூ.438 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்ட வாய்ப்புள்ளது.
டாஸ்மாக்கின் தினசரி வருவாயில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் கிட்டத்தட்ட 40 சதவீதம் பங்களிக்கின்றன. விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






