என் மலர்tooltip icon

    வழிபாடு

    • பார்வதி அன்னையின் கோவத்திற்கு ஆளாகலாம்.
    • பிரதோச தினத்தன்று சில பொருட்களை சாப்பிடக்கூடாது.

    பிரதோஷ காலங்களில் சிவனை வணங்குவதால் நல்ல பலன் பெற முடியும். பிரதோஷ நாளில் காலையில் இருந்து விரதம் இருந்து பிரதோஷ வேளையான மாலையில், சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்ணார தரிசித்துப் பிரார்த்தனை செய்தால் இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும்.

    பலர் பிரதோஷ தினத்தில் விரதமிருந்து, பிரதோஷ தரிசனம் கண்ட பின்னர் தங்களின் விரதத்தை முடிப்பது உண்டு.

    பிரதோஷ தினத்தில் சில விஷயங்களை நாம் செய்யக்கூடாது. அவற்றை பார்ப்போம்.


    பெண்கள் சிவலிங்கத்தை தொடக்கூடாது

    பிரதோஷ விரதத்தன்று பெண்கள் சிவலிங்கத்தை தொடக்கூடாது. பார்வதி அன்னையின் கோவத்திற்கு ஆளாகலாம் என்பதால் பிரதோஷ நாளில் பெண்கள் சிவலிங்கத்தை தொடக் கூடாது.

    மஞ்சள் கூடாது

    பிரதோச தினத்தன்று சிவபெருமானுக்கு மஞ்சள் படைக்கக் கூடாது. சிவலிங்கம் ஆண்மையின் அடையாளம். அதனால் சிவலிங்கத்துக்கு மஞ்சள் பூசக்கூடாது. அதற்குப் பதிலாக லிங்கத்தின் மீது சந்தனம், விபூதி, கங்கை நீர், பால் ஆகியவற்றை பூசலாம்.

    இவற்றையெல்லாம் படைக்கக் கூடாது

    சிவலிங்கத்திற்கு தேங்காய் தண்ணீர், சங்கு தண்ணீர், சங்கு புஷ்பம், லவங்க இலை, குங்குமம் ஆகியனவற்றை படைக்கக் கூடாது. இவற்றைப் படைத்தால் சிவபெருமான் கோபமடைவார்.

    பிரதோசத்தன்று இதை சாப்பிட கூடாது

    பிரதோச தினத்தன்று சில பொருட்களை சாப்பிடக்கூடாது. பெண்கள் பூண்டு, வெங்காயம், கத்தரிக்காய், கீரை வகைகள் சாப்பிடக் கூடாது. இறைச்சி தவிர்க்க வேண்டும். நிச்சயமாக மது அருந்தக் கூடாது.

    • சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.
    • நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர்.

    பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

    பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் "அனைவரும்" என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம்.

    எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.


    அதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.

    நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.

    மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.


    எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

    காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.

    எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும்காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.

    • சிவன் கோவில்களில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
    • சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-22 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவாதசி பிற்பகல் 3.43 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம் : உத்திராட்டாதி இரவு 6.08 மணி வரை பிறகு ரேவதி

    யோகம் : அமிர்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    நாளை பிரதோஷம். சுபமுகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் வண்டலூர் சப்பரத்தில் புறப்பாடு. ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் விடையாற்று உற்சவம். திருமயிலை ஸ்ரீ கபாலீசுவரர், திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவில்களில் மாலை சுவாமி, அம்பாள் இருவரும் ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - செலவு

    ரிஷபம் - வரவு

    மிதுனம் - இன்பம்

    கடகம் - பக்தி

    சிம்மம் - நற்சொல்

    கன்னி - லாபம்

    துலாம் - உழைப்பு

    விருச்சிகம் - கவனம்

    தனுசு - கடமை

    மகரம் - ஜெயம்

    கும்பம் - வெற்றி

    மீனம் - அனுகூலம்

    • சிவனடியாரின் பாதங்களில் விழுந்து, வணங்கி ஆசி பெற பணித்தார். அவளும் அந்த அடியாரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள்.
    • மற்ற தலங்களைவிட இங்கு உள்ள நடராஜரின் இடது திருவடி சற்று முன்னே நீண்டு காணப்படுகின்றது.

    தங்கம்போல் புடம்போட்டு தன் பக்தர்களை ஜொலிக்கச் செய்யும் பரமன், அந்த பக்தர்களின் பக்தியை பார்போற்றும்படி செய்திடுவான். அதற்கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கி, ஆட்கொள்வான். அப்படி பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட எண்ணற்ற அடியவர்களுள் ஒருவரே மானக்கஞ்சாறர்.

    மானமேப் பெரிதென வாழ்ந்த வேளாளர்க்குடியில் பிறந்த இவர், சோழ மன்னனின் படைகளுக்கு தலைமை வகிக்கும் படைத்தளபதியாக விளங்கினார். ''மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ்சாறனுக்கு அடியேன்'' என்று சுந்தரர் தனது திருத்தொண்டத்தொகையில் இவரது பெருமையையும், வலிமையையும் புகழ்ந்து போற்றுகின்றார். சிறந்த சிவனடியாராகத் திகழ்ந்த மானக்கஞ்சாறர் தனது வீரத்தாலும், உழைப்பினாலும் செல்வங்கள் யாவையும் பெற்றார். இருப்பினும், இவருக்கு குழந்தைச் செல்வம் இல்லை. பல நாட்கள் குழந்தைப்பேறு இன்றி வருந்திய இவருக்கு ஈசன் அருளால் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தாள்.

    அவளுக்கு 'புண்ணியவர்த்தினி' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த புண்ணியவர்த்தினி பருவமெய்தி, திருமண வயதை அடைந்தாள். பேரழகுடைய இவளுக்கு ஏயர்கோன் கலிக்காமரை மணம் முடித்திட, பெரியவர்கள் நிச்சயித்தனர்.


    திருமண நாளும் வந்தது. சுற்றமும், நட்பும் சூழ்ந்தனர். தன் பக்தன் மானக்கஞ்சாறன் மீது தீராக்காதல் கொண்ட மகாதேவர், ருத்ராட்ச மாலையோடு, எலும்பு மாலைகளையும் அணிந்து கொண்டு, கேசத்தையே பூணூலாக தரித்துக் கொண்டு, உடல் முழுதும் விபூதி பூசிய வண்ணம் மகாவிரதம் பூண்ட மாவிரதராய் (அகோரியாக) மணப்பந்தலை வந்தடைந்தார்.

    அவரைக் கண்ட மானக்கஞ்சாறர் மனம் பூரிப்படைந்து, அவ்வடியாரை வரவேற்று மகிழ்ந்தார். தனது மகள் புண்ணியவர்த்தினியை அழைத்தார். சிவனடியாரின் பாதங்களில் விழுந்து, வணங்கி ஆசி பெற பணித்தார். அவளும் அந்த அடியாரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். அப்போது அவளது அழகிய நீண்ட கருங்கூந்தலை கண்ணுற்றார் அகோரியாய் வந்த அர்த்தநாரீசர்.

    ''ஆஹா, இந்த நீண்டக் கூந்தல் எனது மார்பில் அணியும் பஞ்சவடிக்கு (கேசத்தால் அணியும் பூணூல்) உதவுமே'' என்று மானக்கஞ்சாறரிடம் கூறினார். திருமண வேளையில், அதுவும் மகளின் கூந்தலை வெட்டுவது அமங்கலம் என்று கூட கருத்தில் கொள்ளாத மானக்கஞ்சாறர், உடன் தனது வாளை எடுத்தார். தன் மகளின் கூந்தலை அறுத்தார். வந்திருந்த மாவிரதரிடம் அளித்தார். அதை வாங்கிட எழுந்த அவ்வடியார் மறைந்தார்.

    மறுகணமே தேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்து, கஞ்சாறரை ஆட்கொண்டு, அவரை கண்ணீர்மல்கச் செய்தார் கயிலைநாதர். ''உனது அன்பின் பெருமையை உலகிற்கு உணர்த்தவே தாம் இவ்வாறு செய்தோம்'' என்று கூறி அவரை ஆனந்தத்தில் திளைக்கச் செய்தார். அறுபட்ட புண்ணியவர்த்தினியின் கூந்தல் மீண்டும் வளர்ந்தது. ஈசனுக்கே தனது கேசத்தை அளித்து, பெரும் புண்ணியம் செய்த புண்ணியவர்த்தினி ஏயர்கோன் கலிக்காமரை மணந்தாள். இரு வரும் சிவத்தில் திளைத்து வாழ்ந்தனர். இறுதியில் இணையில்லா ஈசனடியைச் சேர்ந்தனர்.


    ஆதியில் சப்தமாதர்களுள் அன்னை கவுமாரி வழிபட்ட இப்பதி பாரிஜாத வனமாக திகழ்ந்துள்ளது. இந்த பாரிஜாத வனத்தில் ஆசிரமம் அமைத்து, தவமியற்றி வந்த பரத்வாஜ முனிவரின் வேண்டு கோளுக்கு இணங்க பெருமான் இங்கு தனது திருமணக் கோலத்தைக் காட்டியருளியுள்ளார். இதனால் இப்பதி ''பரத்வாஜாசிரமம்'' என்று அழைக்கப்பட்டது. இத்தல நாயகர் பரத்வாஜீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார். அதன் பின்னர் இத்தலம் கஞ்சாறூர் என்று வழங்கப்பட்டுள்ளது. ஆனந்த முனிவரை ஆட்கொண்ட பின்னர் ஆனந்த தாண்டவபுரம் என்றாகி, தற்போது ஆனதாண்டவபுரம் என்று மருவியுள்ளது.

    ஆனந்த மாமுனிவர் அனுதினமும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடிவிட்டு, இரவு அர்த்தஜாம பூஜைக்கு சிதம்பரம் சென்று தில்லையம்பல வாணரை தரிசிப்பது வழக்கம். தினமும் சரியாக நடந்துவந்த இந்த வழக்கம் ஏனோ தில்லைக்கே உரிய திருநாளான ஆருத்ரா அன்று முரண்பாடானது. அன்றைய தினம் ராமேஸ்வர ஸ்நானம் முடித்து, கஞ்சாறூர் நெருங்கும் வேளையில் புயல் காற்றோடு, கடும் மழையும் பெய்தது. செய்வதறியாமல் திகைத்த ஆனந்த முனிவர் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளத் துணிந்தார். அடியார் துயரம் காணப் பொறுக்காத அம்பலத்தரசர் தனது ஆனந்தத் திருநடனத்தை இத்தலத்தில் ஆனந்தமாய் அரங்கேற்றினார். பேரானந்த பெருவெள்ளத்தில் மூழ்கினார் அனந்த மாமுனிவர். இதனால் இத்தலம் அன்று முதல் ஆனந்தத் தாண்டவபுரம் என்றே அழைக்கலானது.

    ஆனந்த மாமுனிவருக்கு ஆருத்ரா தரிசனத்தை இங்கேயே காட்டியருளியதால் சிதம்பரம் சென்று ஆருத்ரா தரிசனம் செய்ய முடியாதவர்கள் இந்த ஆனந்த தாண்டவபுரத்திலேயே அந்த அருட்காட்சியை கண்டு மகிழலாம். அதோடு சிதம்பரம் சென்று ஆருத்ரா தரிசனம் செய்வதற்கு முன்னரோ அல்லது தரிசனம் செய்த பின்னரோ கூட இங்கு நடராஜப் பெருமானை தரிசனம் செய்வது உன்னதமான சிவனடியார்களின் மரபாக உள்ளது.


    மற்ற தலங்களைவிட இங்கு உள்ள நடராஜரின் இடது திருவடி சற்று முன்னே நீண்டு காணப்படுகின்றது. இந்த தூக்கிய திருவடியே 'குஞ்சிதபாதம்' என்று போற்றப்படுகின்றது. திருவாசியின் துணையின்றி முயலகன் மீது மட்டுமே தனது வலது காலை ஊன்றி நிற்பது முற்றிலும் வித்தியாசமான அமைப்பாகும்.

    உற்சவர் சிலைகளில் விசேஷ மூர்த்தியாகத் திகழும் ஸ்ரீ ஜடாநாதர், அறிந்தக் கூந்தலை தனது இடது கையில் பிடித்தபடி காட்சி தரும் தரிசனத்தை வேறு எங்கும் நாம் காண முடியாது. அருகே மானக்கஞ்சாறரது விக்ரஹமும் உள்ளது. பின் தென் முகம் பார்த்தபடி அன்னை பிரஹன்நாயகி தனியே சன்னதி கொண்டிருக்கிறாள். அம்பிகையை வணங்கி ஈசன் சன்னிதியை அடையலாம்.

    கருவறையுள் சிறிய மூர்த்தமாக பேரருள் பொழிகின்றார், ஸ்ரீபஞ்சவடீஸ்வரர். ஆலய வாமபாகத்தில் இன்னொரு தல நாயகியாம் அன்னை ஸ்ரீகல்யாணசுந்தரி கிழக்கே முகம் காட்டி, தனியே சன்னிதி கொண்டிருக்கிறாள். தென்மேற்கில் தான்தோன்றி கணபதியும், மேற்கில் வள்ளி - தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணியரும் வீற்றுள்ளனர்.

    தினசரி நான்கு கால பூஜைகள் நடக்கிறது. தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் இந்த ஆலயம் திறந்திருக்கும். தலவிருட்சமாக பாரிஜாதம் திகழ்கின்றது. பொதுவான சிவாலய விசேஷங்களோடு ஆருத்ரா மற்றும் மானக்கஞ்சாறர் குருபூஜை ஆகியன இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. சுவாமியும், அம்பிகையும் இங்கு திருமணக்கோலத்தில் உள்ளதால் திருமண தடை நீக்கும் தலமாக திகழ்கிறது.

    இங்குள்ள அமிர்த பிந்து தீர்த்தத்தில் நீராடி, இறை வன் - இறைவியை வழிபடுபவர்களுக்கு எல்லா விதமான தோல் நோய்களும் நிவர்த்தியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. முற்பிறவியில் ஏற்பட்ட சாப-பாப-தோஷங்கள் யாவும் இத்தலத்தை வழிபட்டால் போக்கிக் கொள்ளலாம்.

    மயிலாடுதுறை - சேத்தூர் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆனந்ததாண்டவபுரம்.

    • மகரிஷிகளும், தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்கள்.
    • தர்மத்தை நிலைநாட்ட ராமாவதாரம் நிகழும்போது சக்கரமும், சங்கும் என் சகோதரர்களாக பரதன், சத்ருக்கனன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள்.

    பெருமாளை சேவித்த பிறகு பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய தலையில் வைக்கும் சடாரி என்ற மகுடத்தை கவனித்து பார்த்தால் அதன் மேல் இரண்டு பாதச் சுவடுகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மதிப்புக்குரிய திருமுடியின் மீது திருவடிகள் ஏன் இடம் பெற்றிருக்கிறது. அதிலும் பெருமாள் ஆலயங்களில் அதனை பயன்படுத்துவதற்கான காரணத்தை அறிவோம்.

    ஒரு சமயம் தாம் வாசம் செய்யும் வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் முன் தன்னுடைய சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை எடுத்து ஆதிசேஷன் மீது வைத்தார்.

    திடீரென தன்னை சந்திக்க வந்த முனிவர்கள் குரல் கேட்டு பாம்பு படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்றவர் வழக்கத்துக்கு மாறாக தனது பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளையே விட்டுவிட்டார். ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சங்கும், சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன. அருகிலேயே பாதுகைகளும் இருந்தது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. அவை பாதுகைகளை பார்த்து கோபத்துடன், 'கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில் தூசியிலே புரளும் நீ எப்படி இங்கு இருக்கலாம்?' என்று கேட்டன.


    ''இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்'' என்றன பாதுகைகள். அவற்றைக் காதில் வாங்காமல், ''பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும், சக்கரமும். எனவே, ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு. பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை. உங்கள் வழக்கமான இடத்திற்கு போய்விடுங்கள்'' என்று கோபத்துடன் சொன்னது கிரீடம்.

    அதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள், கிரீடம் இப்படி சொன்னதும் கோபத்துடன், "நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான். ஆனால், கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும், தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்கள். தவிர, உங்களை தழுவி தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள்தான்'' என்று பதிலுக்கு வாதித்தனர்.

    கிரீடத்துடன் சங்கு, சக்கரமும் சேர்ந்து கொண்டதால் தனித்து நின்ற பாதுகைகளால் ஏளனப் பேச்சை தாங்கிக்கொள்ள முடியாமல் பகவான் எப்போது வருவார், அவரிடம் முறையிடலாம் என்று கலங்கிக் காத்து நின்றன. பகவான் வந்ததும் அவர் பாதத்தில் கண்ணீர் சிந்தி பாதுகைகள் முறையிட்டன. ''இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சன்னிதியில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல் கிரீடமும், சங்கும், சக்கரமும் கர்வம் கொண்டு புனிதமான உங்களை தூற்றியதற்கான பலனை அனுபவிக்க வேண்டி வரும்.


    தர்மத்தை நிலைநாட்ட ராமாவதாரம் நிகழும்போது சக்கரமும், சங்கும் என் சகோதரர்களாக பரதன், சத்ருக்கனன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் அரசப்பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழல் ஏற்படும். அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து சங்கும், சக்கரமும் 14 வருடங்கள் உங்களை பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது'' என்றார்.

    அதன்படியே ஸ்ரீராமாவதாரத்தில் அவரது பாதுகைகள் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிந்தன. திருமுடி ஒருவகையில் உயர்ந்தது எனில், பெருமாளின் திருப்பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே.

    இன்னும் சொல்லப்போனால் பாதம் பற்றி சரணாகதி அடையும் விதமாக நமது பார்வை பெருமாளின் திருப்பாதங்களையே முதலில் நாடும். பாதச்சுவடுகள் தாங்கிய சடாரி எனும் மகுடத்தை நம் தலையில் வைத்துக் கொள்ளும்போது நம்முடைய, 'நான்' என்று ஆணவம், அகங்காரம் அழிய வேண்டும் என்பதே சடாரி சாத்தலின் பின்னணியில் உள்ள காரணம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஸ்வினி துவங்கி, ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களில் அக்னி நட்சத்திரம் கிடையாது.
    • அக்னி தேவனுக்கு உதவ ஒப்புக் கொண்ட கிருஷ்ணனும், அர்ஜூனனும் தங்களுக்கு தேவையான வில், அம்புகள் வேண்டும் என கேட்டனர்.

    கோடை காலம் என்றதுமே நினைவிற்கு வருவது அக்னி நட்சத்திரம் தான். அக்னி நட்சத்திர வெயில், சித்திரை வெயில், கத்தரி வெயில், கோடை வெயில் என பெயர்களில் இது சொல்லப்படுகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வெயின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலத்தை அக்னி நட்சத்திர காலம் என்கிறோம். உண்மையில் இந்த அக்னி நட்சத்திரம் என்றால் என்ன என்று பலருக்கும் தெரியாது. அக்னி என்பது வெப்பத்தை குறிக்கிறது. ஆனால் இதை நட்சத்திரம் என ஏன் குறிப்பிடுகிறார்கள் என்ற சந்தேகம் வரும்.

    அஸ்வினி துவங்கி, ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களில் அக்னி நட்சத்திரம் கிடையாது. அப்படியானால் அக்னி நட்சத்திரம் என்றால் என்ன என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    சித்திரை மாதம் 21 ம் தேதி துவங்கி, வைகாசி மாதம் 14 ம் தேதி வரையிலான 21 நாட்களை அக்னி நட்சத்திர காலம் என்கிறோம். சித்திரை மாதத்தில் பரணி 3 ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திர காலம் என பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். அறிவியல் படி சூரியன் என்பது ஒரு கோளாக இருந்தாலும், அதுவும் ஒரு விண்மீன் தான். அக்னி நட்சத்திர காலத்தில் சந்திரன், மட்டுமல்ல பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும்.


    சூரியனின் பயணத்தின் அடிப்படையிலேயே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. அப்படி சூரியனின் சஞ்சாரத்தின் அடிப்படையில் அக்னி நட்சத்திர காலத்தில் முதல் மற்றும் கடைசி ஏழு நாட்கள் வெயிலின் தாக்கம் சுமாராகவும், இடையில் ஏழு நாட்கள் அதிகமாகவும் இருக்கும். இதனால் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வெடிப்புக்கள் ஏற்படும். இந்த வெடிப்புக்களின் இடையில் இருந்து பூமிக்குள் இருந்து வெப்பம் வெளியாகும்.

    வைகாசி மாத இறுதியில் பெய்யும் மழை, வயல்களின் வெடிப்பின் வழியாக பூமிக்குள் சென்று வெப்பத்தை தணித்ததும் மீண்டும், வெடிப்புக்கள் மூடிக்கொள்ளும். அக்னி நட்சத்திரத்திற்கு இணையான வெப்பத்தை கொண்டது கார்த்திகை நட்சத்திரம் என்பார்கள். கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தேவதை அக்னி பகவான் ஆவார். அக்னி நட்சத்திரம் என்ற வெப்ப காலம் எப்படி உண்டாயிற்று என்பதற்கு புராண கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.

    யமுனை நதிக்கரையில் காண்டவ வனம் என்ற காடு அமைந்திருந்தது. அரிய மூலிகை செடிகள் இருந்ததால் அதிலிருந்து வரும் வாசனை ஆற்றங்கரைக்கு வருபவர்களை கவர்ந்தது இழுத்தது. இந்த மூலிகைகள் நன்கு வளர வேண்டும் என்பதற்காக அடிக்கடி மழையை பொழிய செய்தான் மழையின் அதிபதியான இந்திரன். இயற்கை அழகு நிறைந்திருந்த இந்த காட்டிற்கு அருகில் இருந்த யமுனையில் கிருஷ்ணனும், அர்ஜூனனும் நீராட வந்தனர்.

    அவர்கள் குளித்து விட்டு கரையேறிய போது அந்தணர் ஒருவர் வந்து, எனக்கு அதிக பசியாக உள்ளது. இந்த வனத்தில் உள்ள பசிப்பிணி தீர்க்கும் மருந்துகளை சாப்பிட்டால் எனது பசி போய் விடும். இந்த வனத்திற்குள் செல்ல எனக்கு உதவி செய்ய முடியுமா? என கேட்டார். அவரது தோற்றத்தில் இருக்கும் வித்தியாசத்தை கண்டுபிடித்த கிருஷ்ணன், வந்திருப்பது அக்னி தேவன் என்பதை புரிந்து கொண்டார். அவரிடம் கிருஷ்ணனும், அர்ஜூனனும் விபரம் கேட்டனர்.


    அதற்கு பதிலளித்த அக்னி தேவன், சுவேதசி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தின் விளைவால் அதிகப்பட்டியான நெய்யை சாப்பிட்டதால் மந்த நோய் என்னை தாக்கி விட்டது. அந்த மந்த நோய் நீங்குவதற்கு ஏற்ற மூலிகைச் செடிகள் இந்த வனத்திற்குள் தான் உள்ளது. ஆனால் நான் இந்த வனத்திற்குள் நுழைய முயற்சி செய்யும் போதெல்லாம் இந்திரன் மழையை பெய்ய வைத்து விடுகிறான். அதனால் என்னால் இந்த வனத்திற்குள் செல்ல முடிவதில்லை எனக் கூறி தனது நிலையை விளக்கினான்.

    அக்னி தேவனுக்கு உதவ ஒப்புக் கொண்ட கிருஷ்ணனும், அர்ஜூனனும் தங்களுக்கு தேவையான வில், அம்புகள் வேண்டும் என கேட்டனர். அக்னி தேவனும் சக்தி வாய்ந்த காண்டீப வில் அம்புகளை அளித்தான். உனது பசி பிணி தீர்த்துக் கொள்ள 21 நாட்கள் மட்டும் இந்த காட்டிற்குள் செல்லலாம். அந்த சமயத்தில் இந்திரன் மழையை பெய்யவிடாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என கிருஷ்ணர் கூறினார். அதே போல் அக்னி தேவன் காட்டிற்குள் சென்றதும் மழையை பெய்ய வைத்தான் இந்திரன். அதனை அம்புகளை எய்தி அர்ஜூனன் தடுத்து நிறுத்த, காட்டிற்குள் இருக்கும் மூலிகைகளை சாப்பிட்டு, தனது பிணியை தீர்த்துக் கொண்டான் அக்னி தேவன்.

    அக்னி தேவன், காண்டவ வனத்தை அழித்து, தனது பசியை தீர்த்துக் கொள்ளும் காலமே அக்னி நட்சத்திர காலமாக மாறியது என புராணங்கள் கூறுகின்றன. இதற்கு ஏற்ற படி அக்னி நட்சத்திர காலத்தில் என்ன செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது, சாப்பிடும் உணவு பழக்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நமது முன்னோர்கள் மாற்றி அமைத்துள்ளனர்.

    • அக்னி நட்சத்திர தோஷம் ஆரம்பம்.
    • சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-21 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : ஏகாதசி இரவு 6.10 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : பூரட்டாதி இரவு 7.49 மணி வரை பிறகு உத்திராட்டாதி

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    நாளை அக்னி நட்சத்திர தோஷம் ஆரம்பம். சர்வ ஏகாதசி. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் பவனி. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் திருவீதி உலா. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - தாமதம்

    ரிஷபம் - உழைப்பு

    மிதுனம் - வரவு

    கடகம் - அனுகூலம்

    சிம்மம் - விவேகம்

    கன்னி - புகழ்

    துலாம் - இன்பம்

    விருச்சிகம் - சாந்தம்

    தனுசு - உயர்வு

    மகரம் - நன்மை

    கும்பம் - மேன்மை

    மீனம் - ஆதரவு

    • முன்பெல்லாம் தூரத்தில் உள்ள கோவில்களில் பூஜை செய்வதற்கு தெரிந்தவர்கள் யாராவது சென்று பதிவு செய்ய வேண்டும்.
    • ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பதால் பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.

    திருவனந்தபுரம்

    கேரள மாநிலத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளமாக இருக்கின்றன. திருவிதாங்கூர் தேவ சம்போர்டு கட்டுப்பாட்டில் சபரிமலை அய்யப்பன் கோவில் மட்டுமின்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்களில் பலவற்றில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பூஜைகள் முன்கூட்டியே திட்டமிடப்ப டுகிறது. அந்த கோவில்களில் நடக்கும் பூஜைகளை மக்கள் செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். சபரி மலையில் நடத்தப்படும் படிபூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடு களுக்கு இன்னும் பல ஆண்டுகளுக்கு முன்பதிவு முடிந்துவிட்டது.

    இந்நிலையில் திரு விதாங்கூர் தேவசம்போர்டு தனது கட்டுப்பாட்டில் உள்ள 1,250 கோவில்களில் துலாபாரம், திருமஞ்சனம் உள்ளிட்ட பூஜைகள் செய்ய பக்தர்கள் வீட்டில் இருந்த படியே முன்பதிவு செய்யும் முறையை அறிமுகம் செய்திருக்கிறது. இதனை சைபர் தடயவியல் நிபுணர் வினோத் பட்டாத்திரிபட் முன்னின்று நடத்துகிறார்.

    மேலும் சபரிமலை நிர்வாக அதிகாரி பிஜூ ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறார். இதனை செயல்படுத்த 150பேர் அடங்கிய அமலாக்க குழுவை திருவிதாங்கூர் தேவ சம்போர்டு அமைத்திருக்கிறது.

    முன்பெல்லாம் தூரத்தில் உள்ள கோவில்களில் பூஜை செய்வதற்கு தெரிந்தவர்கள் யாராவது சென்று பதிவு செய்ய வேண்டும். ஆனால் தற்போது இதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பதால் பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.

    பக்தர்கள் முன்பதிவு செய்ய வசதியாக ஒவ்வொரு கோவிலின் வலை பக்கமும் மலையாள நாட்காட்டியுடன் இணைக்கப்படும். மலையாள மாதத்தின் நட்சத்திரத்தை பக்தர்கள் தேர்ந்தெடுப்பதன் மூலம், ஆங்கிலநாள்காட்டியில் தொடர்புடைய தேதியை அவர்கள் கண்டறிய முடியும்.

    • பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் வைகாசி விசாகமும் ஒன்றாகும். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா இந்த ஆண்டு வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள், தங்க குதிரை, வெள்ளி யானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளி மயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் மே 21-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். மறு நாள் 22-ந் தேதி வைகாசி விசாக தேரோட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, வீனை இன்னிசை, நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    இதனிடையே பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அக்னி நட்சத்திரக்கழு சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்களுமு கடைபிடிக்கப்படும். இந்த நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பக்தர்கள் பழனி மலையை சுற்றியுள்ள வீதிகளில் கிரிவலம் வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திர கழு வருகிற 7-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    கிரிவலம் வரும் இந்நாட்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
    • நமது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு நாமே காரணமாக இருக்க கூடாது

    இன்றைய காலக்கட்டத்தில் கடன் வாங்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். மாதம் மாதம் வாங்கும் சம்பளம் கடன் அடைக்கவே சரியாக இருக்கிறது. கடன் பிரச்சனையை நினைத்து கவலை படாதே நாளே இருக்காது. தண்ணீரை வைத்து கடன் பிரச்சனையை சரி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்

    வாஸ்து படி குளியலறையில் காலி வாளி வைத்தால் பணத்தட்டுப்பாடு ஏற்படும். இதனுடன், நிதி சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    குளியலறையில் வைக்கும் வாலி நீல நிறமாக இருக்க வேண்டும். அந்த வாலி அழுக்கு மற்றும் பாசி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அழுக்கோடு இருந்தால் வீட்டில் நிம்மதி இருக்காது. வீட்டின் குளியலறையில் இருக்கும் பாத்திரம் நீலம் நிறமாக இருந்தால் வீட்டில் மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.


    கடன் பிரச்சனையை சரிசெய்வது எப்படி?

    உங்களுக்கு கடன் தொல்லைகள் இருந்தால் இரவு தூங்குவதற்கு முன் நீல நிற வாலியில் தண்ணீர் பிடித்து வையுங்கள். பிடித்து வைத்த தண்ணீரை கொண்டு காலையில் குளிக்கும் இடத்தை சுத்தம் செய்யுங்கள். அந்த தண்ணீரில் சுத்தம் மட்டும் தான் செய்ய வேண்டும். குளிக்க கூடாது. குளியலறையில் பிடித்த தண்ணீரை மூடாமல் வைக்க வேண்டும். இப்படி வைப்பதனால் பணவரவு அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.


    இதேபோல் நாம் அன்றாடம் சமைக்கும் பாத்திரங்கள் வேலைபளு காரணமாக கழுவாமல் அப்படியே வைத்து விடுவேம் இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் பண பிரச்சனை அதிகரிக்கும். இரவு எந்த வேலை எப்படி இருந்தாலும் இரவே உணவு சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைத்திடுங்கள், அழுக்கோடு வைத்து காலையில் எழுந்து கழுவினால் பண பிரச்சனையும், தெய்வ அருளும் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்காமல் போகும்.

    ஆகவே நமது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு நாமே காரணமாக இருக்க கூடாது ஆகவே மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி கடன் பிரச்சினையில் இருந்து விடுபடுங்கள்.

    • 108 திவ்ய தேசங்களில் இது 81 வது திவ்ய தேசம்.
    • ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.

    பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 81 வது திவ்ய தேசம். நவதிருப்பதிகளில் முதலாவதாகவும், நவகிரக ஸ்தலங்களில் சூரிய ஸ்தலமாகவும் இந்த ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். நான்கு புஜங்களுடன், கையில் தண்டத்துடன், ஆதி சேஷனைக் குடையாகக் மார்பில் மஹா லக்ஷ்மியுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

    பிரகாரத்தில் வைகுந்தவல்லித் தாயார் சன்னதி உள்ளது. மேலும் நரசிம்மர் சன்னிதி, கோதண்ட ராமர் சன்னிதியும் உள்ளன. சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில், பௌர்ணமி நாளன்று, சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படும்படி, இதற்கு ஏற்றாற் போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடி மரம், மேரு வடிவ பலிபீடம் தென்புறம் விலகியிருக்கிறது. இத்தலம் சூரிய தோஷ பரிகார ஸ்தலம் ஆகும். ஆதித்ய ஹ்ருதயம் சேவிக்க அருமையான பலன் உண்டு.

    தல வரலாறு:

    முன்பு ஒரு சமயம் சத்யலோகத்தில் பிரளயம் ஏற்பட்டது. அப்போது அயன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். அதையறிந்த கோமுகசுரன், அவரிடமிருந்து வேதங்களை அபகரித்து சென்றான். துயில் நீங்கி எழுந்த பிரம்மன் அதற்காக வருந்தி, அதனை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு மகாவிஷ்ணுவைக் குறித்து தவம் செய்ய எண்ணி, தன் கையில் இருந்த தண்டத்தை ஒரு பிரம்மாச்சாரியாக மாற்றி "பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில் தவம் புரிய ஒரு இடத்தை பார்த்து வா" என்று அனுப்பினார்.

    அவனும் நதியின் இரு கரையிலும் பார்த்து விட்டு இறுதியாக திருக்கோளுருக்கு அருகில் உள்ள ஜயந்திபுரிக்கு வந்தான். அங்கு ஒரு மோகினியைக் கண்டு மோகித்து அவளுடன் காலம் கழித்து நான்முகன் கட்டளையை மறந்தான்.

    இதையறிந்த சதுர்முகன் தன் கையிலிருந்த கெண்டியை ஓர் பெண்ணாக்கி " பெண்ணே! தவம் இயற்ற தாமிரபரணி நதிக்கரையில் ஒரு நல்ல இடம் பார்த்து வா" என்று அனுப்பினார். அவளும் வெகு நாள் பூவுலகில் சுற்றி சோலைகள் நிறைந்த இந்த பரமபாவனமான இடமே தவத்திற்குரியது என்று பிரம்மனிடம் தெரிவித்தாள்.

    பிரம்மனும் இங்குவந்து கடும் தவம் செய்ய, திருமால் அதற்கு இரங்கி சதுர்முகனுக்கு நேரில் காட்சி கொடுத்து, கோமுகாசுரனை முடித்து அவனிடமிருந்த வேதங்களை மீட்டு பிரம்மனிடம் அளித்தார்.

    பிரம்மனும் "அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெட செங்கோல் நடாத்துவீர்" எப்படி வைகுந்தத்திலிருந்து இங்கு எழுந்தருளி சேவை சாதித்தீரோ அவ்வண்ணமே இங்கு எப்பொழுதும் சேவை சாதித்து அடியார்களின் "செடியாய வல்வினைகளை தீர்த்து அருள் புரிய வேண்டும்" இத்திருப்பதியும் ஸ்ரீ வைகுண்டம் என்ற திருநாமத்துடன் விளங்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய, பெருமாளும் அவ்வாறே இங்கு கோயில் கொண்டார்.

    பிரம்மனும் தனது கெண்டியால் தாமிரபரணி தீர்த்தத்தை எடுத்து பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்ததாலும், நதிக்கரையில் கலசத்தை ஸ்தாபித்ததாலும், இத்தீர்த்தம் " கலச தீர்த்தம்" என்று வழங்கப்படுகின்றது. பிரம்மன் வைகுண்ட நாதருக்கு சைத்ர உற்சவம் நடத்தி பின் சத்திய லோகம் சென்றார்.

    இத்தலத்தில் காலதூஷகன் என்ற கள்வன் ஒருவன் இருந்தான். அவன் திருடச்செல்லும் போது வைகுந்த நாதரிடம், தேவா! நான் எவ்விடத்தில் திருடச்சென்றாலும் ஒருவரும் அறியாவண்ணம் திருடிவர வேண்டும்.

    அவ்வாறு திருடிய பணத்தில் பாதியை உமக்கு காணிக்கையாகத் தருவேன் என்று வணங்கிச் செல்வான். குறுகிய காலத்தில் ஏராளமான செல்வத்தை கொள்ளை அடித்தான், தான் கூறியது போலவே அதில் பாதியை பெருமாளுக்கு காணிக்கையாக்கி வந்தான்.

    ஒரு நாள் அரசன் அரண்மனையில் திருடும் போது அவனது சில சகாக்கள் அரச சேவகர்களிடம் மாட்டிக்கொண்டனர். அவர்கள் அரச தண்டனைக்கு பயந்து காலதூஷகனை காட்டிக்கொடுத்து விடுவதாக கூற அவனும் பகவானை சரணடைந்து துதி செய்ய, கருணைக் கடலான கார்முகில் வண்ணரும் வயது முதிர்ந்த வேடத்தில் வந்து அப்பா நீ அஞ்ச வேண்டாம் தஞ்சமென்றவரை ஆதரிப்பது என் கடமை என்றார்.

    பிறகு பகவான் கால்தூஷகனாக வடிவெடுத்து அரண்மனைக்கு செல்ல வழியில் திருடர்கள் இவரை நோக்கி இவனே எங்கள் தலைவன் என்று கூற சேவகர்கள் அவரை அரண்மனைக்கு அழைத்து சென்று அரசன் முன்னர் நிறுத்தினர்.

    மன்னனும் நீ யார்? நீ இருப்பது எவ்விடம்? எதற்காக அரண்மனையில் புகுந்து கொள்ளையடித்தாய்? என்று வினவினான். அது கண்ட வைகுந்தநாதனாக இருந்து சோரநாதனான, காலதூஷகனான பெருமாள் அரசே! என் பெயர் கள்ளர் பிரான், ஸ்ரீவைகுண்டம் எனது இருப்பிடம், என் பிழைப்புக்காக உன் பணம் முழுவதையும் திருடினேன். உன் குற்றத்தை நீ தெரிந்து கொள்ளவில்லை பணத்திற்கு பங்காளிகள் நால்வர். அவர்கள் தர்மம், அக்னி, திருடன், ராஜா. இவற்றில் முந்தியது தருமம், தருமம் செய்யப்படாத செல்வம் கள்வனாகிய என்னால் அபகரிக்கப்பட்டது. எனவே இனி தர்மம் செய்வாய் என்றார்.

    அது கேட்ட அரசனும் சிங்காதனத்தில் இருந்து எழுந்து நமக்கு நற்புத்தி புகட்டியவர் பகவானே என்று தீர்மானித்து வைகுந்த நாதா! கள்ளர் பிரானே! இன்று முதல் தாங்கள் சோரநாதன் (கள்ளர் பிரான்) என்ற திருநாமத்துடன் எழுந்தருளியிருத்தல் வேண்டும் என்று விண்ணப்பித்தான். அது முதல் உற்சவர் கள்ளர்பிரான் என்று வழிபடப்படுகின்றார்.

    சித்திரை பெருந்திருவிழாவின் போது நம்மாழ்வார், பொலிந்து நின்ற பெருமாளுடன் ஸ்ரீவைகுண்டம் எழுந்தருளுவார். பெருமாளை மங்களாசாசனம் செய்தபின் அன்ன வாகனத்தில் எழுந்தருளும் சடகோபருக்கு கள்ளபிரான், பொலிந்து நின்ற பிரான், வரகுண மங்கை எம் இடர் கடிவான், திருப்புளிங்குடி காய்சினவேந்தன் ஆகிய நான்கு பெருமாள்களும் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றனர்.

    • ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருவீதி உலா.
    • ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, சித்திரை 20 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: தசமி இரவு 8.36 மணி வரை. பிறகு ஏகாதசி.

    நட்சத்திரம்: சதயம் இரவு 9.26 மணி வரை. பிறகு பூரட்டாதி.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    நாளை சுபமுகூர்த்த தினம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருவீதி உலா. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. வீரபாண்டி ஸ்ரீசவுமாரியம்மன் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஜெயம்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-ஆசை

    கடகம்-நன்மை

    சிம்மம்-நட்பு

    கன்னி-ஆக்கம்

    துலாம்- சுகம்

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- பொறுப்பு

    மகரம்-பொறுமை

    கும்பம்-இன்பம்

    மீனம்-கவனம்

    ×