என் மலர்
வழிபாடு
- 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த திருத்தலம்.
- அஷ்ட லிங்கங்களில், `குபேரலிங்க’ தலம் என்று போற்றப்படுகிறது.
கோவில் தோற்றம்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்கங்களைப் பற்றி நாம் அறிந்துள்ளோம். அதுபோல தொண்டை நாட்டில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற தலமான திருவேற்காடு பாலாம்பிகை உடனாய வேதபுரீஸ்வரர் கோவிலைச் சுற்றியும் எட்டு திசைகளில், அஷ்ட லிங்கங்கள் அமைந்திருக்கின்றன. திருவேற்காடு திருத்தலமானது `வடவேதாரண்யம்' என்றும், `வடதிருமறைக்காடு' என்றும் போற்றப்படுகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த திருத்தலம், இந்த திருவேற்காடு.

இந்த திருத்தலத்தைச் சுற்றிலும் எட்டு திசைகளிலும், அந்தந்த திசைகளுக்குரிய அஷ்டதிக் பாலகர்களும், அஷ்ட லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வேதபுரீஸ்வரரை நோக்கி தவம் செய்ததாக திருவேற்காடு புராணம் தெரிவிக்கிறது. அஷ்டதிக் பாலகர்களும் பிரதிஷ்டை செய்து வழிபட்ட எட்டு லிங்கங்களும், அந்தந்த பகுதிகளில் ஆலயங்களாக எழுந்து நிற்கின்றன.
வள்ளிக்கொல்லைமேடு என்ற ஊரில் (கிழக்கு) ஞானாம்பிகை சமேத இந்திரசேனாபதீஸ்வரர் (இந்திரலிங்கம்) திருக்கோவிலும், நூம்பல் என்ற கிராமத்தில் (தென்கிழக்கு) ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் (அக்னிலிங்கம்) திருக்கோவிலும், சென்னீர்குப்பம் என்ற ஊரில் (தெற்கு) மரகதாம்பிகை சமேத கைலாசநாதர் (எமலிங்கம்) திருக்கோவிலும், பாரிவாக்கம் என்ற ஊரில் (தென்மேற்கு) பாலாம்பிகை சமேத பாலீஸ்வரர் (நிருதிலிங்கம்) திருக்கோவிலும், மேட்டுப்பாளையம் என்ற ஊரில் (மேற்கு) ஜலகண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் (வருணலிங்கம்) திருக்கோவிலும், பருத்திப்பட்டு என்ற ஊரில் (வட மேற்கு) விருத்தாம்பிகை சமேத வாழ வந்த வாயுலிங்கேஸ்வரர் (வாயுலிங்கம்) திருக்கோவிலும், சுந்தரசோழபுரம் என்ற ஊரில் (வடக்கு) வேம்புநாயகி சமேத குபேரேஸ்வரர் (குபேரலிங்கம்) திருக்கோவிலும், சின்னகோலடி என்ற ஊரில் (வட கிழக்கு) பார்வதி சமேத ஈசான லிங்கேஸ்வரர் (ஈசானலிங்கம்) திருக்கோவிலும் அமைந்துள்ளன.
இந்த அஷ்ட லிங்க ஆலயங்களில் இங்கே நாம் பார்க்க இருப்பது, சுந்தரசோழபுரம் என்ற ஊரில் அமைந்துள்ள வேம்புநாயகி சமேத குபேரேஸ்வரர் ஆலயத்தைத்தான். இந்த ஆலயம் அஷ்ட லிங்கங்களில், `குபேரலிங்க' தலம் என்று போற்றப்படுகிறது.
கி.பி.957 முதல் கி.பி.973 வரை பதினாறு ஆண்டுகள் சோழநாட்டை ஆண்டவர் சுந்தர சோழன். இவருடைய பெயரால் திருவேற்காட்டிற்கு அருகில் அமைந்த ஊர் சுந்தரசோழபுரம். இவ்வூரில்தான், குபேரலிங்க ஸ்தலமான வேம்புநாயகி அம்பாள் உடனாய குபேரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. அஷ்ட லிங்கங்களில் ஏழாவது திருக்கோவிலான இத்தலம், திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோவிலுக்கு வடக்கு திசையில் அமைந்துள்ளது.

கோவிலுக்குள் கொடிமரம் அற்புதமாக காட்சி தருகிறது. தொடர்ந்து பலிபீடம் மற்றும் நந்தியம்பெருமான் சன்னிதி அமைந்துள்ளன. கருவறையில் ஈசன் லிங்க சொரூபத்தில் குபேரேஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கருவறைக்கு வெளிப்புறத்தில் துவாரபாலகர்கள் உள்ளனர். சுவாமி கருவறைக்கு அருகில் அமைந்துள்ள சன்னிதியில் வேம்புநாயகி என்ற திருநாமத்துடன் அம்மன் அருள்பாலிக்கிறார். சதுர்புஜ நாயகியாக அருளும் இந்த அம்மனின் கருவறை முன்பாக துவாரபாலகியர் இருக்கிறார்கள்.
வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் நால்வர் சன்னிதி அமைந்துள்ளது. அங்கே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் தவிர, மூர்க்க நாயனாரும் காட்சி தருகிறார். தொடர்ந்து ஒரு தனிச் சன்னிதியில் விநாயகர் அருளுகிறார். இந்த சன்னிதியின் பின்புறத்தில் நாகராஜர், நாகராணி, ஐயப்பன், லட்சுமி குபேரர் சகித ஐஸ்வர்யேஸ்வரர் சன்னிதி, வள்ளி-தெய்வானை உடனாய சுப்பிரமணியர் சன்னிதி அமைந்துள்ளன. காலபைரவர் தனிச் சன்னிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அவருக்கு அருகில் நவக்கிரகங்கள் உள்ளன.
வில்வ மரத்தை தல மரமாக கொண்ட இந்த ஆலயத்தில், தினமும் காலை, மாலை என இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. குபேரலிங்க சன்னிதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், வழிபடுபவர்களின் இல்லங்களில் பொன்னும் பொருளும் சேருவதுடன், அவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இந்த ஆலயத்தில் பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, சஷ்டி போன்ற மாத வழிபாடுகளும், மகா சிவராத்திரி, அன்னாபிஷேகம், பங்குனி உத்திரம், அட்சய திருதியை, நவராத்திரி போன்ற வருட வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த ஆலயம், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
ஆவடியில் இருந்து திருவேற்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது, சுந்தரசோழபுரம். பூவிருந்தவல்லியில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்திலும், ஆவடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஊர் இருக்கிறது.
- புனித ரமனாலில் கடமையான ஜகாத்.
- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை யன்றி வேறுயாருமில்லை.
புனித ரமலானில் கடமையான ஜகாத்
இஸ்லாம் என்பது ஒரு மாளிகை போன்றது. அதற்கு ஐந்து தூண்கள் உண்டு. ஜகாத் என்பது மூன்றாவது தூண் ஆகும்.
1) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை யன்றி வேறுயாருமில்லை என்றும், முகம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல்,
2) தொழுகையை நிலை நிறுத்து தல்
3) ஜகாத் வழங்குதல்
4) ஹஜ் செய்தல்
5) ரமலானில் நோன்பு நோற்றல்
ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள் ளது என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பா ளர்: உமர் (ரலி), நூல்:புகாரி) திருக்குர்ஆனில் கிட்டத்தட்ட 82 இடங்களில் தொழுகையுடன் இணைத்து ஜகாத்தும் கூறப்பட்டிருக்கிறது.
'இது(வேதம்) நம்பிக்கையாளர்களுக்கு நேர் வழி காட்டியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது. அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள். இன்னும், ஜகாத்தையும் கொடுப்பார்கள். மேலும், அவர்கள் மறுமை மீது நம்பிக்கை. கொள்வார்கள்.' (திருக்குர்ஆன் 27:2,3)
'இறைநம்பிக்கையாளர்கள் யாரென்றால். அவர்கள் ஜகாத்தையும் நிறைவேற்றுவார்கள்.' (திருக்குர் ஆன் 23:4)
ஹிஜ்ரி 2- ஆம் ஆண்டு ரமலான் பிறை 28-ம் நாளன்று மதீனாவில் ஜகாத் முழுமையாகவும் விபரமாகவும் கடமையாக்கப்பட்டது. '(நபியே!) அவர்களுடைய செல்வத்தில் இருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வீராக; நிச்சய மாக உமது பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்) ஆறுதலும் அளிக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.' (திருக்குர் ஆன் 9:103)
ஜகாத்தின் மூலப்பொருட்கள் என்பது தங்கம், வெள்ளியாகும். 87½ கிராம் தங்கம் அல்லது 612 கிராம் வெள்ளி இருந்து, அவை ஓராண்டு முழுவதும் குறைவில்லாமல் இருந்தால், இவற்றில் நாற்பதில் ஒரு பங்கு என்ற அடிப்படையில் நூற்றுக்கு இரண்டரை சதவீதம் ஜகாத் கடமையாகும். இவ்விரண்டும் இல்லாதபட்சத்தில் கையில் பணம் மட்டுமே இருந்தால், 612 கிராம் வெள்ளி அளவுக்கு அந்த பணம் இருந்தால், அதில் இருந்து நூற்றுக்கு இரண்டரை சதவீதம் ஜகாத் கொடுக்க வேண்டும்.
ஜகாத் கொடுப்பவர் சொந்த வீடு, சொந்த வாகனம், சொந்த தொழில் நிறுவனம், தம் மீதுள்ள கடன் போக மீதமுள்ள பணம் அந்த அளவை அடைந்தால் மட்டுமே அவர் மீது ஜகாத் கடமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜகாத் வாங்குவதற்கு தகுதியானவர் களின் பட்டியலை திருக்குர்ஆன் பின்வரு மாறு கூறுகிறது. 'ஜகாத் எனும் நிதிகள்
1) வறியவர்கள்
2) ஏழைகள்
3) நிதியை வசூலிக்கும் ஊழியர்கள்
4) எவர்களுடைய இதயங்கள் (இஸ்லாத்தின் பால்) ஈர்க்கப்படுகின்றனவோ அத்தகையவர்கள்
5) அடிமைகள் விடுதலை செய்வ தற்கும்
6) கடனாளிகள்
7) அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) உள்ளவர்கள்
8) வழிப்போக்கர்கள் ஆகியோருக்கு உரியவை
இது அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் (யாவையும்) அறிபவன். மிக்க ஞானமுடையவன்.' (திருக்குர் ஆன் 9:60)
ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ரமலானில் ஜகாத் கடமையாக்கப்பட்டது. ரமலானில் ஜகாத் கொடுப்பது ஏற்றமானது; அதற்கு கூலி பன் மடங்கு வழங்கப்படும். ரமலான் அல்லாத மாதங்களிலும் தமக்கு வசதியான காலகட்டத்தில் ஜகாத் வழங்கலாம். மாறாக, ஒரு போதும் ஜகாத் வழங்காமல் மோசடி செய்து விடக்கூடாது. அவ்வாறு இருந்தால் உங்களது பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படாது. மாறாக அது அழிந்து போய்விடும்.
- தர்மத்தில் சிறந்தது புனித ரமலானில் வழங்கப்படும் தர்மமே.
- நபி அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள்.
`தர்மத்தில் சிறந்தது புனித ரமலானில் வழங்கப்படும் தர்மமே'
'தர்மத்தில் சிறந்தது எது?" என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அது ரமலானில் செய்யும் தர்மம் ஆகும்' என்று பதிலளித்தார்கள்.' (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: திர் மிதி)
புனித ரமலான் மாதம், மாதங்களில் சிறந்ததாக அமைந்ததைப் போன்று அதில் நிறைவேற்றப்படும் அனைத்து நற்காரியங்களும் சிறந்ததாக அமைந்து விடுகின்றன. குறிப்பாக அதில் வழங்கப்படும் தர்மமும் மற்ற மாதங்களில் வழங்கப்படும் தர்மத்தை விட சிறந்ததாக அமைந்து விடுகிறது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இந்த மாதத்தில் தமது கொடைத்தன்மையை விரிவுப்படுத்தியதுடன் அதிகப்படுத்தியும் செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாட்களை விட) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ரமலான் மாதத்தில் சந்திக்கும் போது நபி (ஸல்) அவர்கள் மிக அதிகமாக வாரி வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள்.
ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை) அருளப்பட்டிருந்த குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஒதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றைவிட (வேக மாக) நபி (ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்.(அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:புகாரி)
நபி (ஸல்) அவர்களின் சொல்படியும், அவர்களின் செயல்படியும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தான தர்மம் செய்தது நமது கவனத்தை ஈர்க்கிறது.
ஒரு தடவை முஆவியா (ரலி) அவர்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு 1180 வெள்ளிக்காசுகளை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்கள். அன்று அன்னையார் அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். நோன்பு நோற்ற நிலையில் தமக்கு அன்பளிப்பாகக் கிடைத்த அனைத்து வெள்ளிக் காசுகளையும் மக்களிடையே பங்கு வைத்து வாரி வழங்கி விட்டார்கள்.
நோன்பு திறக்கும் இப்தார் நேரம் வந்ததும், தமது பணிப்பெண்ணிடம் நோன்பு திறக்க உணவு கேட்டார்கள். பணிப்பெண் ரொட்டியையும், ஆலிவ் எண்ணெய்யையும் கொண்டு வந்து, 'தாங்கள் இன்று பங்கீடு செய்த வெள்ளிக் காசுகளிலிருந்து நோன்பு திறக்க இப்தார் உணவுக்காக இறைச்சி வாங்கி வரக்கூட ஒரு காசையும் மிச்சம் வைக்காமல் ஏன் அனைத்தையும் வாரி வழங்கினீர்கள்?' என்று கேட்டாள். அதற்கு அன்னை ஆயிஷா (ரலி), 'இதை முன்பேநீ எனக்கு ஞாபகப்படுத்தி இருந்தால், நான் அவ்வாறே செய்திருப்பேனே!' என்று கூறினார்கள்.
'எவர் ஒருவர் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவு வழங்குகிறாரோ அவருக்கு, நோன்பாளிக்கு வழங்கப்படும் நன்மை போன்று கிடைக்கும். இதனால் நோன்பாளியின் நன்மையில் இருந்து எதுவும் குறைக்கப்பட மாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: ஜைத் பின் காலித் ஜூஹ்னீ (ரலி), நூல்: திர்மிதி)
நபி (ஸல்) அவர்களைப் போன்று நபித் தோழர்களும் ரமலானில் அதிகமாக கொடையளித்து வந்துள்ளனர். நபி (ஸல்) அவர்கள் முதற்கொண்டு நல்லோர்கள் வரை நோன்பு நோற்ற நிலையில் கொடையளிப்பதையும், அன்னதானம் வழங்கு வதையும் சிறந்த செயலாக கருதினார்கள்.
- கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை.
- திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குஜாம்பிகை புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, பங்குனி 23 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி காலை 9.59 மணி வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: அவிட்டம் பிற்பகல் 2.57 மணி வரை. பிறகு சதயம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. சுப முகூர்த்த தினம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குஜாம்பிகை புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருக்குற்றாலம், பாபநாசம், கோவில்பட்டி தலங்களில் ஸ்ரீசிவபெருமான் விழா தொடக்கம். தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் தேரோட்டம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுபம்
ரிஷபம்-சுகம்
மிதுனம்-லாபம்
கடகம்-நட்பு
சிம்மம்-நலன்
கன்னி-அமைதி
துலாம்- அன்பு
விருச்சிகம்-உயர்வு
தனுசு- நற்செய்தி
மகரம்- அமைதி
கும்பம்-உயர்வு
மீனம்-பயணம்
- வினைப் பயன்களாலேயே இந்த வாழ்க்கை உருவாகிறது.
- பங்குனி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர்.
விஜயம் என்றால் வெற்றி. கடினமான சூழலில் போராட்டமான வாழ்க்கையில் இருப்பவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஏகாதசி விஜயா ஏகாதசி. இந்த ஏகாதசி விரதத்தை ராமபிரானே கடைப்பிடித்ததாக ஐதிகம்.
வினைப் பயன்களாலேயே இந்த வாழ்க்கை உருவாகிறது. நல் வினைகளோடு பிறந்தவர்கள் வாழ்வில் நற்பயன்களையும் தீவினைகளோடு பிறந்தவர்கள் துன்பத்தையும் வாழ்வில் அனுபவிக்கின்றனர் என்கின்றன சாஸ்திரங்கள். ஆனால் அவையே இதற்கான தீர்வையும் சொல்கின்றன.
ரிஷிகளும் ஞானிகளும் மனிதர்களின் பாவத்தைப் போக்கும் விரத நாள்களைக் கண்டு தெளிந்து அவற்றை ஒரு முறையாக வகுத்தனர். யார் எந்த தெய்வத்தை வணங்குபவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்களின் இஷ்ட தெய்வத்தை வழிபட உகந்த நாள்களை உருவாக்கி அன்று வழிபடவேண்டிய முறைமைகளையும் உருவாக்கினர்.
பங்குனி மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர். அன்று விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் எடுத்த காரியம் தடையில்லாமல் நடக்கும். எதிரிகளை வெற்றி கொள்ளலாம். மேலும், பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும்.
இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டு, சீதையை எப்படி மீட்பது? என்று ஸ்ரீ ராமர் சிந்தனையில் ஆழ்ந்தார். அப்போது முனிவர் ஒருவர் அவரிடம் இந்த விஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கச் சொன்னார். அதன்படி விரதம் இருந்து ஸ்ரீ ராமர், சீதையை மீட்டு வந்தார் என ஏகாதசி விரத மகாத்மியம் தெரிவிக்கிறது.
ராமச்சந்திர மூர்த்தி மனிதர்களுக்கு உதாரண புருஷராக வாழ்ந்துகாட்டியவர். மனிதர்கள் தங்கள் பாவங்கள் தீர வாழ்வில் வெற்றிபெற மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகளைத் தன் வாழ்வில் செய்துகாட்டியவர். அப்படி அவர் மேற்கொண்ட விரதங்களில் ஒன்று விஜயா ஏகாதசி.
ராவணனுடன் போரிட இலங்கை செல்லும் முன்பு அந்தப் போரில் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்று வக்தால்ப்ய ரிஷியிடம் கேட்டார் ராமர். அதற்கு அந்த ரிஷியும் விஜயா ஏகாதசி விரத மகிமைகளை எடுத்துச்சொல்லி அதை மேற்கொள்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை விளக்கினார். ராம பிரானும் தவறாமல் அந்த விரதத்தைக் கடைப்பிடித்து அதன் பலனை அடைந்தார் என்கிறது புராணம்.
விஜயா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து வழிபடுவது சிறந்தது. உப - வாசம் என்றால் அருகில் வசிப்பது என்று பொருள். இரையைத் தவிர்த்து இறைச் சிந்தனையில் மூழ்கியிருந்தால் அந்த இறைவன் நம் அருகில் வாசம் செய்வான் என்பது பொருள். எனவே முடிந்தவர்கள் முழு பட்டினி கிடந்து விரதம் மேற்கொள்வது பயன்தரும். துளசி தீர்த்தம் மட்டும் அருந்தலாம். இயலாதவர்கள் முழு அரிசிச் சோற்றைத் தவிர்ப்பது நல்லது.
வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்கக் கூடாது என்பார்கள்) ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் திருமாலின் திருவடியை வரைந்து வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.
அதுவும் முடியாதவர்கள் தவறாமல் இறைவனின் நாமத்தை உச்சரித்துக்கொண்டிருப்பது நல்லது. விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை உரைக்கும் சகஸ்ர நாமத்தை இந்த நாளில் கேட்பது பயன்தரும். குறைந்தபட்சம் இன்று கட்டாயம் ஆலயம் சென்று பெருமாளை வழிபட்டு அங்கு அமர்ந்து விஷ்ணு சகஸ்ர நாமப் பாராயணம் செய்து வழிபடுவதன் மூலம் விஜயா ஏகாதசி விரதத்தின் பலனை முழுமையாகப் பெறலாம்.
- ஆலங்குடி ஸ்ரீகுருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, பங்குனி 22 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: தசமி நண்பகல் 12.12 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம்: திருவோணம் மாலை 4.26 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சென்னை மல்லீஸ்வரர் விடையாற்று ஒழுகைமங்கலம் ஸ்ரீ மணியம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. தாய மங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பொங்கல் பெரு விழா. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவெள்ளறை ஸ்ரீ சுவோதத்திரி நாதர் தேரோட்டம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உழைப்பு
ரிஷபம்-ஓய்வு
மிதுனம்-திடம்
கடகம்-ஆசை
சிம்மம்-லாபம்
கன்னி-கடமை
துலாம்- பெருமை
விருச்சிகம்-பக்தி
தனுசு- போட்டி
மகரம்-இரக்கம்
கும்பம்-தேர்ச்சி
மீனம்-பொறுப்பு
- தூணில் சரபேஸ்வரர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார்.
- ஞான சம்பந்தருக்கு, அம்பிகை ஞானப்பால் அளிக்கும் மண்டபம் உள்ளன.
இந்த தஜாரோகண மண்டபத்தில்தான் அருள்தரும் கற்பகாம்பிகை நவராத்திரி கொலுவிருப்பாள். பஞ்ச மூர்த்திகள் திருவீதிஉலாவுக்கு புறப்படுவதற்கு முன் இங்கு வைத்து தான் அலங்காரம் செய்கிறார்கள். மண்டபத்தை யொட்டி திருமுறை பாராயண அறையும் உள்ளன. இதில் ஒரு தூணில் சரபேஸ்வரர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். இவருக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

வேத மண்டபம்
12 கால் மண்டபத்தின் அருகே 4 கால் தூணுடன் விளங்கும் வேத மண்டபத்தில்தான் விழாகாலங்களில் உற்சவ மூர்த்திகளை ஊஞ்சலில் இருத்தி ஊஞ்சலாட்டுவர்.
அருணகிரிநாதர்
இங்கு அருணகிரிநாதருக்கென்று தனி சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. அவரை ஆட்கொண்ட முருகனின் சன்னதிக்கு எதிரிலேயே கூப்பிய கரங்களுடன் இவரது சன்னிதியும் அமைந்துள்ளது சிறப்பு.
தங்கத்தேர் விசேஷ நாட்களில் உட்பிரகாரத்தில் உலா வரும் காட்சியைக் காண பேறு பெற்றிருக்க வேண்டும். விருப்பப்படும் பக்தர்கள் விசேஷ கட்டணம் செலுத்தி இறைவனை தங்கத்தேரில் எழுந்தருளச் செய்து உட்பிரகாரத்தில் வலம்வரச் செய்து நல்லாசி பெறுகின்றனர்.
திருக்குளம், நீராழி மண்டபம்
மேற்கு பிராகாரத்தின் நடுவில் அமைந்துள்ள மேலைக் கோபுரத்தின் வழியே வெளியில் சென்றால், கடல் போல் பரந்துள்ள திருக்குளம், கபாலீ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அதன் நடுவே அழகான நீராழி மண்டபம் உள்ளது. சக்தி தீர்த்தம், முக்தி தீர்த்தம் என்றழைக்கப்படும் இக்குளத்தின் மேற்கு கரையில் எட்டுக்கால் மண்டபம் உள்ளது. அதன் அருகில் ஜ்யேஷ்டா தேவியின் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
குளத்தின் வடமேற்கு மூலையில் மூன்று கால் மண்டபமும் தென்கரையில் ஞான சம்பந்தருக்கு பங்குனி விழாவில் அம்பிகை ஞானப்பால் அளிக்கும் மண்டபமும் உள்ளன. கிழக்கே மாட்டுப் பொங்கலன்று கற்பகாம்பாள் நீராடும் மண்டபமும், வடக்கில் சிவலிங்க மண்டபமும் அமைந்துள்ளது.
இத்திருக்குளத்தில் தெப்போற்சவம் தைப்பூசத்தன்று தொடங்கி மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. முதல் நாள் சந்திசேகர சுவாமியும், இரண்டு மற்றும் மூன்றாவது நாட்களில் சிங்கார வேலரும், தெப்பத்தில் எழுந்தருளுவார். முதல்நாள் ஐந்து சுற்று, இரண்டாவது நாள் ஏழு சுற்று, மூன்றாவது நாள் ஒன்பது சுற்று என மூன்று நாட்கள் தெப்பம் நீராழி மண்டபத்தை சுற்றி வரும் அழகைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவர்.
தெப்பம் புறப்படுகையில் பெண்கள் வெற்றிலையில் கற்பூரமேற்றி தண்ணீரில் விடுகின்றனர். இத்திருக்குளத்தில் முழுகி பாவங்கள் களைந்தவர்கள் அனேகம். அவ்வாறே கலிங்கத்தை ஆண்ட தருமனின் புதல்வன் சாம்பன் என்பவனும் தனது பாவங்கள் தீர இக்குளத்தில் நீராடி கற்பகாம்பிகை, கபாலீஸ்வரரை வழிபட்டு முக்தியடைந்ததாக 'தீர்த்த சர்க்கம்' என்ற நூல் தெரிவிக்கிறது.
குளத்திற்கு எதிரே கோபுரத்தின் வடக்குப்புறத்தில் கற்பக விநாயகரையும், அருள்பாலிக்கின்றனர். தென்புறத்தில் பாலமுருகனும் நுழைவாயிலுக்கு எதிரே துவஜஸ்தம்பம் உயர்ந்து காட்சி தருகிறது. அதனருகே பலி பீடத்தையும், ரிஷப தேவரான நந்தியம் பெருமானையும், அடியார்க்கு அருள்புரிய வீற்றிருக்கும் விநாயகரையும் காணலாம்.
ஸ்ரீ கற்பகாம்பிகை சன்னதி
இங்கு அம்பாள் தெற்கு நோக்கிய வண்ணம் அருள் பாலிக்கிறாள். சதுர்புஜங்களுடன் நின்ற திருக்கோலம். அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதுண்டு. அதோடு வெள்ளி, ஞாயிறு, பவுர்ணமி, நவராத்திரி காலங்களில் பூப்பாவாடை, தங்கக் காசுமாலை மற்றும் வைரக்கிளி தாடங்கமும் அணிந்து காட்சி கொடுக்கிறாள். வெள்ளிக் கிழமைகளில் வெள்ளித் தொட்டிலில் அம்பாளை வைத்து வேத பாராயணம் ஒலிக்க மும்முறை வலம் வரும் அவளின் அழகைக்காண கண்கோடி வேண்டும். தமிழ் மாதத்தின் கடைசி சுக்ரவாரம் இந்த பவனியுடன் ஊஞ்சல் உற்சவமும் நடக்கும்.
சன்னிதியின் தென்மேற்கில் இறைவனின் பள்ளியறை உள்ளது. பிராகார சுவர்களில் பாமாலைகளும், சவுந்தர்ய லஹரியும், அபிராமி அந்தாதியும் சலவைக் கற்களில் பொறிக்கப் பட்டுள்ளதைக் காணலாம்.
- ஆலயம் கடற்கரைக்கு அருகில் இருந்ததாக கூறுகின்றனர்.
- கபாலீஸ்வரர் கோவில் கட்டப்பட்டு சுமார் 350 ஆண்டுகள் ஆகின்றன.
கோவில் வரலாறு:
இந்த ஆலயமானது கட்டப்பட்டு சுமார் 350 ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு முன் இந்த ஆலயம் கடற்கரைக்கு அருகில் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக கூறுகின்றனர். இன்று உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் மற்ற கோவில்களில் உள்ளவை போன்ற முழு கல்வெட்டுகள் இல்லை. மேலும் கோயிலின் கட்டிடக் கலையில் பல்லவர்கள் அமைப்பையோ, சோழர்கள் அமைப்பையோ காண முடியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
16-ஆம், 17-ஆம் நூற்றாண்டின் தூண் வேலைப்பாடுகள் (பிற்கால விஜயநகர முறையில்) காணப்படுகின்றன. மேலும் 1921-ல் சாந்தோம் மாதாகோவில் அருகே மயிலையைப் பற்றிய 12-ம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு சில கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. ஆகவே மேற்குறிப்பிட்ட செய்திகள் மூலம் கபாலீச்சரம் கடற்கரையில் ஏறக்குறைய 350 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததென்றும், அது காலப்போக்கில் கடல் கொண்டதால் இப்பொழுது உள்ள இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டது என்றும் தெரிய வருகிறது.
இப்பொழுது இக்கோவில் மதில்சுவரின் உட்பகுதியில் 2 கல்வெட்டுக்களும், முருகன் சந்நிதியில் ஒரு கல்வெட்டும், அம்பாள் சந்நிதியின் உட்புறத்தில் இரண்டு கல்வெட்டுக்களும் வடக்கு- வெளிப்பிர காரத்தில் வடக்கு நோக்கி, 8 கற்களில் தொடர்பின்றிச் சிதறுண்ட கல்வெட்டுக்களும் உள்ளன. இவைகள் எல்லாம் முன்பு கடற்கரை ஓரம் இருந்த கோவிலில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
சமீபத்தில், 50 ஆண்டுகளுக்கு முன் தோண்டி எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் சில, சாந்தோம் மாதா கோவிலில் இருந்த பெரிய பாதிரியாரான பிஷப் வீட்டில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கந்தபுராணம், கூர்ம புராணம், வராக புராணம் ஆகியவற்றில் கபாலீஸ்வரர் ஆலய மகிமைகள் கூறப்பட்டுள்ளதன் மூலம் இத்தலத்தின் தொன்மை உணரப்படுகிறது.

தல புராணம் 1:
கயிலையங்கிரியில் ஒரு சமயம் சிவபெருமானிடம் உமா தேவியார், மகிமை பொருந்திய பஞ்சாட்சர மந்திரத்தின் பெருமைகளை விளக்குமாறு கேட்டுக்கொண்டார். சிவபிரானும் சொல்லத் தொடங்கினார். அக்கறையாக கவனித்து வந்த தேவியின் கவனத்தை ஒரு மயிலின் நடனம் திசை திருப்பியது. இதை கவனித்த முக்கண்ணர் "எந்த மயிலின் ஆட்டத்தில் மயங்கினாயோ அந்த மயிலாகவே பிறக்கக் கடவது" என சபித்தார்.
சாப விமோசனம் அருளுமாறு அம்பிகை வேண்ட ஈசனும், "தொண்டை மண்டலத்தில் புன்னை மரத்தடியில் மயிலாய் நீ எமை பூஜிக்க, அங்கே வந்து ஆட்கொள்வோம்" என்றருளி மறைந்தார். அவ்வாறே அன்னையும் பூஜிக்க சிவபிரானும் தான் கூறியவண்ணமே ஆட்கொண்டார். மயில் பூஜித்த பதியானதால் மயிலாப்பூர் என்னும் நாமதேயம் வந்ததாக சொல்லப்படுகிறது. ஆதியில் காபாலிகர்கள் ஈசனை அனுதினமும் ஆராதித்து வந்ததால் கபாலீச்சரம் என்னும் நாமதேயம் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
தல புராணம் 2:
அடி முடி காண இயலாத அண்ணாமலை ஜோதியின் முடியை தான் கண்டதாக தாழம்பூவை சாட்சியாக வைத்து பொய் சொன்னார் பிரம்மா. பொய் சொன்ன பிரம்மனின் தலையை கிள்ளி வீசினார் ஈசன். ஆனால் அந்த கபாலமோ கீழே விழாமல் ஈசனின் கையிலேயே ஒட்டிக் கொண்டது. இதனால் நான்முகன் படைப்பாற்றலை இழந்தார். பிறகு புவியில் வந்து தவமிருந்து பூஜைகள் செய்து மீண்டும் படைப்பாற்றலை பெற்றார். ஈசனை ஸ்தோத்தரித்து வணங்கிய பிரம்மன் அவரிடம், "எனது கபாலத்தை சிறிது காலம் தாங்கியதால் அந்த பெயருடன் சேர்த்து தாங்கள் அழைக்கப்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டாராம். அவ்வாறே அவரும் கபாலம் + ஈஸ்வரர் கபாலீஸ்வரர் ஆனார் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு கோவில் கொண்டுள்ள இறைவனின் நாமம் ஸ்ரீ கபாலீஸ்வரர், இறைவியின் நாமம் ஸ்ரீ கற்பகாம்பிகை.

பிற பெருமைகள்:
சமயக் குரவரான திருஞானசம்பந்தர் பாடியருளிய தேவாரப் பதிகம், திருமயிலை உலா, திருமயிலைக் கலம்பகம், கபாலீஸ்வரர் பஞ்ச ரத்தினம், கற்பகவல்லி மாலை, சிங்காரவேலர் வெண்பா, திருமயிலை யமக அந்தாதி முதலிய பிரபந்தங்கள் இத்தல மூர்த்திகளின் மகிமையை நன்கு விளக்குவன.
"மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்." -திருஞானசம்பந்தர்
என்ற பதிகத்தை தலத்துப் பாடலாக திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ளார்.
சென்னை மாநகரிலுள்ள மயிலாப்பூர் என்னும் திருமயிலையில் கிழக்கு மாடவீதியில், கம்பீரமாக நிற்கும் ராஜகோபுரம் நேர்த்தியான வேலைப்பாட்டுடன் சிறப்புற விளங்குகிறது. கோபுரத்தின் உயரம் சுமார் 40 மீட்டர். எழு நிலைகள்,ஒன்பது கலசங்களுடன் கம்பீரமாய் பக்தர்களை வரவேற்கிறது. இது 1902ல் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பகீரதன் தவம், சிவபிரானின் எட்டு வீரச் செயல்கள், காளியுடனான போட்டி, அப்பர், சம்பந்தர், அப்பூதி அடிகள், கண்ணப்பர் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகள், போன்ற பல சிற்பங்கள் கண்களை கவருவதாக உள்ளன.
நர்த்தன கணபதி
பிரதான வாயில் வழியாக நுழைந்தால் எதிரே நர்த்தன விநாயகர் ஒய்யாரமாக வீற்றிருக்கிறார். இவரது நர்த்தன கோலத்திற்கும் சுவையான காரணத்தைக் கூறு கிறார்கள். ஒரு சமயம் முருகன் சிவபிரானின் திருக்கையால் வேல் வாங்கு வதற்காக இங்கு வந்தாராம்.
சிவபிரானும் அவருக்கு வேலினைவழங்கி ஆசிர்வதித்ததோடு 'தமை யனிடமும் ஆசிர்வாதத்தை வாங்கிக்கொள்' என்றாராம். அவ்வாறே தம்பியால் வணங்கப்பட்டதும் ஆனந்தக் கூத்தாடினாராம் விநாயகர். அதே நர்த்தன கோலத்தில் காட்சி யளிக்கிறார் என்று தல புராணம் விளக்குகிறது.
ஸ்ரீ உண்ணாமுலை அம்பாள் சமேத ஸ்ரீ அண்ணாமலையார் சன்னிதி நர்த்தன கணபதி சன்னிதிக்கு அடுத்து அருள்மிகு அண்ணா மலையார் லிங்க உருவில் அருள்பாலிக்கிறார். அதே சன்னிதியில் தெற்கு நோக்கி அருள்புரியும் உண்ணா முலை அம்பாளை சிறிய துவாரத்தின் வழியாகவும் பக்தர்கள் தரிசிக்கின்றனர். இங்கு கார்த்திகை தீபத்தன்று விசேஷ பூஜை நடைபெறுகிறது.
சிங்கார வேலவர்
அடுத்து கருங்கல் தளவரிசை அமைக்கப் பட்டுள்ள தெற்குப் பிராகார சுற்றில் அருள்மிகு சிங்காரவேலர் வீற்றிருக்கிறார். மேற்கு பார்த்த திருக்கோல காட்சி. வள்ளி தெய்வயானை சமேதராய் மயில் மீதமர்ந்து பக்த கோடிகளுக்கு அருள்புரிகிறார். கபாலீஸ்வ ரரின் கருவறை விமானத்தை விட சிங்கார வேலவரின் கருவறை விமானம் சற்றே உயரமானது. காரணம், ஆதியில் சிங்கார வேலவரின் கோவில் மட்டுமே இங்கிருந்தது. மூன்று முறை கடல் பொங்கி நிலப்பகுதியை அபகரித்துக் கொண்டதால், சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்வள்ளல் நயினியப்ப முதலியாரின் புதல்வர் முத்தியப்ப முதலியார் இக்கோயிலை அமைத்ததாக வரலாறு கூறுகிறது.
பழனி ஆண்டவர், வாயிலார் நாயனார், வில்வமரம் வடக்கு நோக்கி இருக்கும் அருள்மிகு பழனி ஆண்டவர், வாயிலார் நாயனார் சந்நிதிகளை அடுத்து பரமனுக்குப் பிரியமான வில்வ மரமும் காணப்படுகிறது.
மவுனமாகவே இருந்து பகவானை ஆராதித்து வந்ததால் வாயிலார் நாயனார் என்ற ழைக்கப்பட்டார். மயிலையில் பிறந்தவரான இந்த சிவபக்தர், சிவ பெருமானை உள்ளம் என்ற கோவிலில் இருத்தி, ஞானமாகிய சுடர் விளக்கேற்றி, அன்பாகிய அமுதத்தை நிவேதித்து, பல நாளாக ஞானபூஜை செய்து, சிவபெருமானின் அருள் பெற்றவர். அத்தகைய பெருமைமிகு பக்தருக்கு இங்கு தனி சந்நிதி உள்ளது.
- வருகிற 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 4 நாட்கள் அனுமதி.
- சனி பிரதோஷ வழிபாடு சிறப்புமிக்கது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்ல மாதம்தோறும் அமாவாசை, பவுர்ணமியன்று தலா 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வருகிற 8-ந்தேதி பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டும், 6-ந்தேதி சனி பிரதோஷத்தை முன்னிட்டும் சதுரகிரிக்கு செல்ல வருகிற 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
சனி பிரதோஷ வழிபாடு சிறப்புமிக்கது என்பதால் இந்த முறை பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 6-ந் தேதி மாலை சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அமாவாசையான 8-ந்தேதியும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் மலையேறி வருவதை தவிர்க்க வேண்டும். பாலித்தீன் கேரிப்பை மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல தடை செய்யப் பட்டுள்ளது.
சுந்தர மகாலிங்கம் கோவில் பிரதோஷ, அமாவாசை பூஜை ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.
- கற்பகாம்பாள் சன்னிதியில் இடது பக்கம் பிடி அரிசி பெட்டி காணப்படுகிறது.
- ஈசனின் ஐந்து முகங்களில் மேற்கு பார்த்த முகம் 'சத்யோஜாதம்' எனப்படுகிறது.
மூலஸ்தானம்
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின்-றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க கற்பகாம்பாள் சன்னிதியில் இருந்த வந்தவுடன் இடது பக்கம் பிடி அரிசி பெட்டி காணப்படுகிறது. அதனருகில் சுவரில் விநாயகர் வீற்றிருக்கிறார். அடுத்துள்ள பாலகர்களைக் திரு துவார கடந்து சன்னிதியில் நுழைந்தால் ஈசன், பெரிய லிங்க உருவில் மேற்கு திசை பார்த்து காட்சி தருகிறார்.
ஈசனின் ஐந்து முகங்களில் மேற்கு பார்த்த முகம் 'சத்யோஜாதம்' எனப்படுகிறது. இம்மூர்த்தி, வழிபடுபவருக்கு உடனே காட்சி தந்து அருள்புரியும் என்கின்றனர். பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் 40 தலங்கள் மட்டுமே மேற்கு பார்த்த சன்னிதிகள். அதில் ஒன்று நமது திருமயிலையில் உள்ளது சிறப்பு. சன்னதியின் வடக்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் உற்சவ மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். அடுத்து தெற்கு முகமாக ஸ்ரீ நடராஜர், சிவகாமியம்மை, பதஞ்சலி, வியாக்கிர பாதமுனிவர், மாணிக்கவாசகரின் திருஉருவங்கள் மற்றும் சைவத் திருமுறைகள் பன்னிரெண்டும் பேழையில் வைத்து வழிபடப்படுகின்றன.
274 சிவத்தலங்களில் 40 தலங்கள் மட்டுமே மேற்கு பார்த்த சன்னிதிகள். அதில் ஒன்று நமது திருமயிலையில் உள்ளது சிறப்பு.
சன்னதியின் வடக்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் உற்சவ மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். அடுத்து தெற்கு முகமாக ஸ்ரீ நடராஜர், சிவகாமியம்மை, பதஞ்சலி, வியாக்கிர பாதமுனிவர், மாணிக்கவாசகரின் திருஉருவங்கள் மற்றும் சைவத் திருமுறைகள் பன்னிரெண்டும் பேழையில் வைத்து வழிபடப்படுகின்றன.
துர்கை
கபாலீஸ்வரரின் கருவறையின் வடக்கு வெளிச்சுவரில் வடக்கு பார்த்து துர்கை வீற்றிருக்கிறாள். மகா வரப்ரசாதியான இந்த அன்னைக்கு செவ்வாய், வெள்ளிகிழமை தோறும் 9 வாரங்கள் ராகு கால வேளை பூஜை செய்து மங்கள சண்டிகா ஸ்தோத்ரம் படித்து வந்தால் நினைத்த காரியம் சித்தியாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
அடுத்து கோமுகம். மேலே பிரம்ம தேவன் அருள்பாலிக்கிறார். கோமுகத்திற்கருகே சண்டிகேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. வடக்குப் பிரகாரத்தில் ஸ்ரீ சந்திரசேகரர், சுக்கிரவார அம்மன், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், பிட்சாடனர், மோகினி, குண்டோதரன், அஸ்திர தேவர்,விநாயகர், வீரபாகு மற்றும் சுமித்திரத் தொண்டர் வீற்றிருக்கின்றனர்.
அடுத்து 63 நாயன்மார்களின் உற்சவ மூர்த்திகள், தொகையடியார் 9 பேர்கள், சிவநேசர், அங்கம் பூம்பாவை, கிழக்கு நோக்கி துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி, ஐந்துதலை நாகர், நாகப்படத்தின் கீழ் சிவலிங்கம், காமாட்சி, ஏகாம்பரேசுவரர், பெரிய சிவலிங்கம், ஐந்து தலை பாம்பின் கீழ் சிவலிங்கம், இரு நாகங்களின் படங்களின் கீழ் சிவலிங்கம், ஐந்து தலை பாம்பின் கீழ் 2 சிவலிங்கங்கள் மற்றும் தெற்கு நோக்கிய பைரவர் (அஷ்டமியில் இவருக்கு சிறப்பு வழிபாடுகள் ஆராதனைகள் நடத்தப்படுகிறது) திருஉருவங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு பிராகாரத்தில் மேற்கு நோக்கிய வண்ணம் ஒரு சிவலிங்கமும், இதனையடுத்து ஐந்து தலை நாகத்தின் படத்தின் நிழலில் மற்றொரு சிவலிங்கமும், கணேசர், வீரபத்திரர், சிவலிங்கம், சைவ நால்வர், அடுத்து ஒரு சிவலிங்கமும் நந்தி எம்பெருமானும் பொள்ளாப் பிள்ளையாரும் உள்ளனர். அதற்கெதிரே மூலஸ்தானத்தின் பின்புறம் திருமாலும் பிரம்மனும் தேடிக்காண முடியாத பிறையண்ணல், லிங்கோத் பவராகக் காட்சியளிக்கிறார். எதிரே பொள்ளாப் பிள்ளையார் அருகில் வரிசையாக 63 நாயன்மார்களின் மூலவ மூர்த்திகளும் சூரிய பகவானும் அருள்புரிகிறார்.
தட்சிணாமூர்த்தி
கருவறையின் தெற்கு சுவர் மாடத்தில் குரு தட்சிணாமூர்த்தியும் அவருக்கு அருகில் செல்வ கணபதியும் அருள்புரிகிறார்கள். அறுபத்துமூவர் திருஉருவங்களுக்கு அருகில் சேக்கிழார் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். அடுத்து வடக்கு நோக்கியவாறு பெரிய கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. இதில் நேராக வடக்கிலுள்ள நடராஜர் திருஉருவப் பிம்பத்தை காணலாம்.
மேற்கு வரிசையில் கற்பகாம்பிகை, ஸோமாஸ்கந்தராகிய அம்மையப்பர் உற்சவ மூர்த்திகளை காணலாம். உள்ளே எங்கேயும் சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பது சரியில்லை. ஏனெனில் எங்கு நோக்கினும் சன்னிதிகள். துவஜஸ்தம்பத்தின் அருகில் தான் அதுவும் வடக்கு நோக்கியே பெண்கள் அஷ்டாங்கமாகவும் ஆண்கள் சாஷ்டாங்கமாகவும், விழுந்து கும்பிடுவது சிறந்தது என்கிறது சாஸ்திரம்.

அங்கம் பூம்பாவை, திருஞானசம்பந்தர்
வெளி பிராகாரத்தில் அங்கம்பூம்பாவைக்கென்று சன்னிதி தனி விமானத்துடன் உள்ளது. அங்கம் பூம்பாவை கிழக்கு நோக்கி இருக்க அதே சன்னிதியில் திருஞான சம்பந்தர் வடபுறம் பார்த்துகாட்சி தருகிறார். சிவனருள் பெற்ற அங்கம் பூம்பாவையின் கதையை பார்க்கலாம்.
சிவபிரானின் அடியாரான சிவநேச செட்டியாரின் மகளான பூம்பாவை ஒரு நாள் நந்தவனத்தில் சிவபிரானுக்காக மலர் பறிக்கும் வேளையில் கொடிய விஷநாகம் தீண்டி மரணமடைந்தாள். செட்டியார் அவளை திருஞான சம்பந்தருக்கு மணமுடிக்க நிச்சயித்திருந்தார்.
ஆனால் திடீரென நிகழ்ந்த அவளது மரணத்தால் அவரது எண்ணம் ஈடேற முடியாமல் போயிற்று. மனதைக் கல்லாக்கிக் கொண்டு உடலை எரித்த அவர் அவளது சாம்பலை மட்டும் கரைக்க மனமில்லாமல் ஒரு பானையில் எடுத்து. வைத்துக் கொண்டார். அச் சமயம் மயிலைக்கு விஜயம் செய்திருந்த திருஞான சம்பந்தர் நடந்த விஷயத்தை அறிந்து சிவநேசரை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் அழைத்துவரச் செய்தார். அவரும் தனது மகளின் சாம்பல் அடங்கிய பானையுடன் அவ்விடம் வந்தார்.
ஞானசம்பந்தர் மனமுருகி சிவபிரானை பிரார்த்தித்தார். உடனே அவர் நாவினின்று 'மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலை' என்ற பதிகத்துடன் பாடல்கள் சரளமாக வெளிவந்தன. அவர், ஒவ்வொரு திருநாளாகக் குறிப்பிட்டு, அவ்வைபவத்தை 'அதைக் காணாமல் போகலாமா பூம்பவாய்' என பாடப்பாட சிவபெருமான் அருளுடன் எலும்புகள் இணைந்து சாம்பல் சதை பெற்றது. 12 வயது பெண்ணாக குடம் உடை வெளிப்பட்டாள். சாம்பலும், எலும்பும் கபாலீஸ்வரர் அருளால் மீண்டும் பெண்ணாக மாறிய புண்ணிய க்ஷேத்திரமிது.
வாகனம், யாக சாலை அனுதினமும் கபாலீஸ்வரருக்கு தீபாராதனை நடக்கும்போது அடிக்கும் பெரியமணி உயரே மதில் சுவரில் கட்டப்பட்டுள்ளது. வடக்குப் பிரகாரத்தில் வரிசையாக வாகனங்கள் வைக்கும் அறைகளும், யாக சாலையும் உள்ளன. வலது புறத்தில் புன்னைவன நாதருக்கு அம்பிகை மயிலாக வந்து பூஜை செய்யும் காட்சியும் அருகில் தல விருட்சமாகிய புன்னை மரம் உள்ளது.
சனீஸ்வர பகவான்
சனீஸ்வர பகவானுக்கென்று சன்னிதி தனியாக உள்ளது. காக வாகனத்துடன் மேற்கு பக்கம் பார்த்து அருள்புரியும் இவரை சனிக்கிழமைகளில் தீபமேற்றி வழிபடுகின்றனர் பக்தர்கள்.
நவக்கிரகம்
சனீஸ்வரருக்கு எதிர்பக்கம் கிழக்கு பிரகாரத்தில் திரும்பினால் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் நவக்கிரகங்கள் மற்றும் ஜகதீச்வரரின் சன்னிதிகள் காணப்படுகின்றன.
கோவில் பிராகாரம்
தரிசனம் முடித்து கிளம்புவதற்கு முன் சிறிது நேரம் பிராகாரத்தில் உட்கார்ந்து விட்டே கிளம்ப வேண்டும் என்பது மரபு. தெய்வ சிந்தனையுடன் உட்காரும் அந்த சில நிமிட துளிகளில் கிடைக்கும் மன அமைதி வேறு எதிலும் கிடைக்காது என்பது நிதர்சனம்.
வீதி உலா
கோவிலைவிட்டு வெளியே வந்தால் வீதியுலா வரும் தெய்வ மூர்த்திகள் சற்று நேரம் நின்று தரிசனமளிக்கும் 16 கால்மண்டபமும், சன்னிதித் தெருவின் முடிவில் திருத்தேரும் உள்ளன.
- ஸ்ரீ கற்பகாம்பாளை தரிசனம் செய்தால் சுபமங்களம் கிட்டும்.
- கோவிலில் சித்தர்கள் புறாக்களின் வடிவில் வாசம் செய்கின்றனர்.
1. ஸ்ரீவெள்ளீஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மனைத் தரிசனம் செய்த பின்பு, ஸ்ரீவெள்ளீஸ்வரரை தரிசனம் செய்து ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள அன்னை ஸ்ரீகற்பகாம்பாளைத் தரிசனம் செய்தால் சுபமங்கள சவுபாக்கியம் கிட்டும். இது தரிசன நியதியுமாகும்.
2. மகாசிவராத்திரி, மாத சிவராத்திரிகளில் ஸ்ரீகற்பகாம்பாளைத் தரிசித்து சிவ சிவ என்று கூறினால் நமது கர்ம வினைகள் குறைந்து பிறவிகள் தீரும்.
3. ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலில் சித்தர்கள் புறாக்களின் வடிவில் வாசம் செய்கின்றனர். எனவே, இங்குள்ள புறாக்களின் தரிசனம் மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
4. ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலின் உட்பிரகாரத்தில் 3500-க்கும் மேற்பட்ட அதிஅற்புத உன்னத தேவதைகள் இருக்கிறார்கள். எனவே இப்பிரகாரத்தை வலம் வரும் பொழுது நல்ல எண்ணங்களையும், நியாயமான பிரார்த்தனைகளையும் மாத்திரமே மனதில் கொள்ள வேண்டும். வேறு எந்தவிதமான மாற்று எண்ணங்களுடன் இப்பிரகாரத்தை வலம் வருதல் கூடாது.
5. தட்ச யாகத்தில் தட்சனின் யாகத்தை அழித்த கோபாவேசம் கொண்ட ஸ்ரீவீரபத்திரரை சாந்தப்படுத்தவதற்காக மகரிஷிகளும், முனிவர்களும் பனி மலையைக் கொண்டு அழுத்தி சுவாமியின் உக்ரகத்தைத் தணிக்க முயற்சித்தனர். தந்தையாகிய சிவனுடைய கோபம் தணிந்ததே அன்றி, ஸ்ரீவீரபத்திரரின் கோபம் சிறிதும் தணியவில்லை. பல்வேறு வடிவங்களில் ஸ்ரீவீரபத்திரருக்கு சித்தர்களும், மகான்களும் கோவில்கள் அமைத்தனர். அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள சிலா ரூபங்களில், மூலாதார சக்தியின் 500-வது பிரதி பிம்பமே ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள ஸ்ரீவீரபத்திர மூர்த்தி ஆவார்.
6. மேற்குப் பார்த்த சூரியனை, சூரிய ஹோரையில் வழிபடுவது மிகவும் விசேஷமாகும். இவரை வழிபடுவதால் கர்பப்பை சம்பந்தமான கோளாறுகள் நிவர்த்திக்கான வழி கிட்டும்.
7. இக்கோவில் ராகு, கேது பரிகார தலமாகும். இத்தலம் முந்தைய யுகங்களில் ராகு, கேது பரிஹார தலமாக விளங்கியது. இதுபோன்று எதிர் காலத்தில் ராகு, கேது பரிகார தலமாக அமையும் என்பது சித்தர்களின் வாக்காகும்.
8. ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலின் உற்சவ காலங்களில் வெயில் நேரத்தில் ஆரஞ்சு ஜூஸ் தானத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் சுவாமியை சுமந்து வரும் அடியார்களுக்கும் அளித்திடில் தொலைத்தொடர்பு துறையில் இருப்போர் மேன்மை அடைவர். தொலைத்தொடர்பில் இருக்கக் கூடிய இன்னல்கள் தீரும்.
9. "எண்ஜான் உடம்பிற்கு சிரசே பிரதானம்" என்பர். அந்த சிரசில் உள்ள கபாலம் மிகவும் முக்கியமானது. கபாலம் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வு கொடுக்கும் அபூர்வமான மூர்த்தி ஸ்ரீகபாலீஸ்வரர் ஆவார். கபாலம் சம்பந்தமான நோய்களுக்கு நிவர்த்தித் தலமாக இக்கோவில் அமைந்துள்ளது.
10. நாம் காலையில் எழுந்தவுடன் ஒரு ரூபாய் அளவு உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொண்டு உச்சந்தலையில் தடவிக் கொள்ள வேண்டும். அவ்வாறு தடவும் பொழுது, ஸ்ரீகேசல குசலாம்பிகாயை நமஹ, ஸ்ரீதையல் நாயகியே நமஹ, ஸ்ரீகபாலீஸ்வராய நமஹ என்று சொல்ல வேண்டும். இதனால் கபாலம் சம்பந்தபட்ட நோய்கள் தணியும். உடலின் உஷ்ணமும் குறையும்.
11. இக்கோவிலில் உள்ள திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக விளக்கெண்ணெயுடன் பசு நெய் கலந்து, தீபம் இட்டு அன்னதானம் செய்திடில், எலும்பு முறிவு சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகும். முறிந்த எலும்பானது விரைவாகக் கூடும்.
12. இங்கு ஸ்ரீஜகதீஸ்வரர் தனிச்சன்னதி கொண்டுள்ளார். இது வாஸ்து பூஜைக்கு உகந்த இடமாகும். இவருக்கு வழிபாடு செய்திட வாஸ்து குற்றங்கள் குறையும்.
13. ஒரு நாளைக்கு குறைந்தது பதிமூன்று கோபுர கலசங்களையாவது தரிசனம் செய்தல் விசேஷமாகும். இக்கோவிலில் பதிமூன்றிற்கும் மேலாகவே கோபுர கலசங்கள் உள்ளன. தினந்தோறும் கோபுர தரிசனம் செய்வதால் பாவங்கள் தீரும். இதனையே, `கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்றார்கள் பெரியவர்கள். இக்கோவிலில் அருள்பாலிக்கும் துர்க்கையின் கலியுக திருநாமம் ஸ்ரீபஸ்பத்ரயாக்னி. அமர்ந்த கோலத்தில் மூன்று தேவியர் அருள்பாலிப்பது இச்சிவலாயத்தில் மிகவும் சிறப்புவாய்ந்தது.
- இறை நம்பிக்கைக்கு எதிரான தீய செயல்.
- மது அருந்துவது இறைநம்பிக்கைக்கு எதிரான ஒரு தீய செயல்.
இறை நம்பிக்கைக்கு எதிரான தீய செயல்
இஸ்லாம் மது அருந்துவதை பெரும் "பாவங்களில் ஒன்றாக கருதுகிறது. மீறி மது அருந்துவோருக்கு கசையடி தண்டனை வழங்கும்படி பரிந்துரை செய்கிறது.
மது அருந்துவது இறைநம்பிக்கைக்கு எதிரான ஒரு தீய செயல் ஆகும். மதுவை இஸ்லாம் ஒரே கட்டத்தில் தடை செய்யவில்லை. நான்கு கட்டங்களில் மதுவுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்வைத்து அது முற்றிலும் தடை செய்யப்பட்டது.
மது தீய பானம் என்பதை இறைவன் அறிவுறுத்தி முதல் தடை நடவடிக்கையை மேற்கொள்கின்றான். இந்த அறிவுரையால் சில பேர் மது அருந்துவதை விட்டுவிட்டனர். உமர் (ரலி) நபியிடம் வந்து மது சம்பந்தமாக தெளிவான ஒரு தீர்வை எங்களுக்கு தாருங்கள் என வேண்டினார். ஆதலால், பின்வரும் இறை வசனம் இறங்கியது.
'பேரீச்சை, திராட்சை பழங்களில் இருந்து மதுவையும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள். நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (திருக் குர்ஆன் 16:67)
மது அருந்துவது பெரும் பாவமாகும் என இறைவன் பிரகடனப் படுத்தியபோது இந்த பெரும் பாவத்திலிருந்து பெரும்பான்மை மக்கள் விலகிக் கொண்டனர்.
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும்: 'அவ்விரண்டிலும் பெரும்பாவம் அவ்விரண்டிலும் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால், அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனை விட பெரிது. (திருக்குர்ஆன் 2:219)
சில பேர் மதுவை விடாமல் அருந்திக்கொண்டு அறிவை இழந்து கொண்டும், சோதனையில் மாட்டிக்கொண்டும் இருந்தனர். இத்தகைய சூழ்நிலையில் மீண்டும் உமர் (ரலி) இறைவா! மது சம்பந்தமாக இன்னும் ஒரு தெளிவான ஒரு தீர்வை எங்களுக்கு வழங்கிடு!' என்றார்கள். உடனே இறைவன் மூன்றாம் கட்ட தடையை இறக்கி வைக்கின்றான்.
'இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஒதுவது இன்னது என்று நீங்கள் அறிந்துகொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்' (திருக்குர் ஆன் 4:43)
பின்னர், நிரந்தரத் தடை வேண்டி உமர் (ரலி) இறைவனிடம் இறைவா! மது சம்பந்தமாக இறுதியான தீர்க்கமான ஒரு தீர்வை தருவாயாக' என வேண்டியபோது நான்காவது நிரந்தரத் தடை வந்தது.
'ஈமான் கொண்டோரே! மதுவும், சூதுவும், கற்சிலை வழிபாடும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும். ஆகவே, நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி இறைவனின் நினைவில் இருந்தும், தொழுகையில் இருந்தும் உங்களை தடுத்துவிடத்தான். எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?' (திருக்குர்ஆன் 5:90,91)
ஹிஜ்ரி 3-ம் ஆண்டு உஹத் யுத்தத்திற்கு பின் மது நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டு விட்டது.
இந்த தடை உத்தரவை நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 8-ம் ஆண்டு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பிறகு புனித ரமலானில் மறுதடவையாகத் தடை செய்கிறார்கள். ஏனென்றால் இந்த தடை பற்றி தெரியாதவர் தெரிந்து கொண்டு, தவிர்த்துக் கொள்ள வேண்டியதாகும்.






