என் மலர்
வழிபாடு
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.
- திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-19 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: சதுர்த்தி நள்ளிரவு 1.09 மணி வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: அவிட்டம் நள்ளிரவு 12.04 மணி வரை. பிறகு சதயம்.
யோகம்: சித்தயோகம்.
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் தலங்களில் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. பெருஞ்சேரி படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. லால்குடி ஸ்ரீசப்த ரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஜெயம்
ரிஷபம்-கவனம்
மிதுனம்-அன்பு
கடகம்-கடமை
சிம்மம்-கண்ணியம்
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- உறுதி
விருச்சிகம்-தீரம்
தனுசு- உண்மை
மகரம்-வரவு
கும்பம்-செலவு
மீனம்- தெளிவு
- கருங்குளம் திருத்தலத்தை ‘தென்திருப்பதி’ என்று அழைக்கிறார்கள்.
- உறங்கா புளிய மரம் உள்ளது. இந்த மரம் பூக்கும், ஆனால் காய்க்காது.
கோவில் தோற்றம்
வகுளகிரி சேத்திரம் என அழைக்கப்படும் தாமிரபரணி கரையில் உள்ள கருங்குளம் திருத்தலத்தை 'தென்திருப்பதி' என்று அழைக்கிறார்கள். இந்த கோவிலில் உருவம் இல்லாத சந்தன கட்டையில் வெங்கடாசலபதி மூலவராக உள்ளார்.

அரியும் சிவனும் ஒன்று என்பதை விளக்கும் வண்ணமாக உருவமற்ற நிலையில் வெங்கடாசலபதி உள்ளார். பலநூறு வருடங்களாக நெய், சந்தனம், பால் போன்ற திரவத்தினால் அபிஷேகம் செய்தும், சந்தன கட்டையில் உள்ள இந்த மூலவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இதுவே இறைவனின் அருள் கடாட்சமாகும்.
திருபாற்கடலில் விஷ்ணுவைக் காணச் சென்றார், நாரதர். அங்கு அவர் இல்லை. நாரதர் தனது மனக்கண்ணில் விஷ்ணு இருக்கும் இடத்தைப் பார்த்தார். விஷ்ணு கருட வாகனத்தில் லட்சுமியோடு தாமிரபரணிக் கரையில் வகுளகிரியில் இருந்தார்.
ஆதிசேஷன் வகுளகிரி உருவத்தில் இருக்க பகவானை சுற்றி மலை மீது தேவர்கள் வீற்றிருந்தனர். உடனே நாரதரும் இங்கே வந்து வணங்கி நின்றார். இங்கு ஒரு உறங்கா புளியமரம் உள்ளது. இந்த மரம் பூக்கும்; ஆனால் காய்க்காது.
வடநாட்டில் சுபகண்டன் என்ற அரசன், கண்டமாலை நோயால் பாதிக்கப்பட்டான். அவனுக்கு கழுத்தில் புழு வந்து நாற்றம் எடுத்தது. நோயைத் தீர்க்க பெரிய வைத்தியர்களாலும் முடியவில்லை. திருப்பதி சென்று வெங்கடாசலபதியை வணங்கினான். அவன் கனவில் வெங்கடாசலபதி தோன்றினார்.

"சந்தனக் கட்டையால் ஒரு தேர் செய். அதில் இருந்து உருவம் இல்லாமல் ஒரு கட்டை மிச்சமாகும். அதை தாமிரபரணிக் கரையில் உள்ள வகுளகிரி மலையில் வைத்து வழிபடு. உன் நோய் தீரும்" என்றார். அதுபோலவே செய்து, கருங்குளம் வகுளகிரி மலையில் உருவமற்ற சந்தன கட்டையை மூலவராக பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.
சிங்கநாதன் என்னும் அரசன் தனது 30-வது வயதில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டான். பல இடங்களில் வைத்தியம் பார்த் ததும் எந்த பலனும் கிடைக்கவில்லை. முடிவில் மன வருத்தம் அடைந்து, நாரதரை சந்தித்து தனது நிலையை கூறி அழுதான்.
அப்போது நாரதர், "அரசே நீ சென்ற பிறவியில் கார்முகன் என்னும் வேடனாகப் பிறந்தாய். ஒரு முறை காட்டில் வேட்டையாடச் சென்றபோது, மான் வடிவில் தன் துணைவியோடு விளையாடிக் கொண்டிருந்த முனிவரை அம்பு கொண்டு தாக்கினாய்.
அந்த முனிவர் இறக்கும் தருவாயில், 'இதே போல் வலியால் நீ துடித்து ரணப்படுவாய்' என்று சாபமிட்டு விட்டு சொர்க்கம் அடைந்தார். அந்த முன் ஜென்ம சாபமே தற்சமயம் உன்னை பீடிக்கிறது.
இந்த சாபம் தீர வகுளகிரி மலைமேல் உள்ள வெங்கடாசலபதியை தரிசனம் செய்" என்றார். அரசனும் அவ்வாறே செய்து தனது சாபத்தை நீக்கிக் கொண்டான்.
வேதவிற்பன்னர் ஒருவர் தனது மனைவி குழந்தைகளோடு கங்கை சென்றார். முன்னதாக தனது உடமைகளை அவ்வூரில் இருந்த செல்வந்தனிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார். திரும்பி வந்து கேட்ட போது, அந்தச் செல்வந்தன் "நீ என்னிடம் எதுவும் தரவில்லை" என கையை விரித்தான்.

அந்த வேதியர் கொடுத்த சாபத்தால் செல்வந்தனுக்கு, தீராத வயிற்று வலி உண்டானது. பாவம் செய்ததை அறிந்து அது நீங்க பகவானிடம் உருகி வேண்டி நின்றான், அந்த செல்வந்தன். பின்னர் இத்தலம் வந்து தன் நோய் நீங்கப் பெற்றான்.
திருமாலின் பக்தர்களான கோதரன்- மாலதி தம்பதிகளுக்கு நீண்ட காலமாக குழந்தைப்பேறு இல்லை. இதனால் அவர்கள் ஒவ்வொரு நாளும் வருத்தத்தில் வாழ்ந்தனர். ஒரு முறை வேதியர் வடிவில், திருமால் அவர்களின் இல்லம் சென்றார்.
வகுளகிரி மலை வந்து விஷ்ணுவை வணங்கி பணிவிடை செய்ய கூறினார். தம்பதியினர் அவ்வாறே வணங்கி பிள்ளை பேறு அடைந்தனர். இப்படி பல அற்புதங்கள் நிகழ்ந்த தலமாக, இந்த கருங்குளம் வெங்கடாசலபதி ஆலயம் திகழ்கிறது.
முன்காலத்தில் மலை மீது ஏறிச்செல்ல சாலை வசதி எதுவும் கிடையாது. ஒரு முறை கும்பாபிஷேகப் பணிக்காக வண்டியில் கல்லைக் கொண்டு செல்ல அதிகமான கூலி கேட்டார், வண்டிக்காரர். மலை மீது இருப்பதால் கோவில் நிர்வாகத்தினரும் 'சரி' என ஒப்புக்கொண்டனர்.
ஆனால் அந்த வண்டி, உறங்கா புளிய மரம் அருகே வந்தபோது அச்சு முறிந்தது. வண்டிக்காரரும், மாடும் அதிசயமாக உயிர் தப்பினர். சோதித்த போது வண்டியின் அச்சாணி மலையின் அடிவாரத்திலேயே விழுந்து கிடந்தது.

அச்சாணி இல்லாமல் மலை மீது வண்டி வந்ததை எண்ணி வண்டிக்காரர் அதிர்ந்து போய் விட்டார். பகவானின் சக்தியை எண்ணி 'எனக்கு கூலியே வேண்டாம்' என கூறிச் சென்று விட்டார்.
சைவம், வைணவம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த ஆலயம் திகழ்கிறது. இந்த பெருமாள் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் அடிவாரத்தில் உள்ள சிவபெருமானை வணங்கி விட்டுத்தான் மலை மீது ஏறுகிறார்கள்.
மார்த்தாண்டேஸ் வரர் என்ற அரசன், இந்த சிவன் கோவிலைக் கட்டினார். எனவே சிவனுக்கு 'மார்த்தாண்டேஸ்வரர்' என்றும், இவ்வூருக்கு 'மார்த்தாண்டேஸ்வரர் கருங்குளம்' என்றும் பெயர் இருந்தது.
தாமிரபரணி ஆற்றில் நீராடிவிட்டு, மலையடிவாரத்தில் உள்ள சிவன் கோவிலில் தாயாரையும், சிவனையும் வணங்கி விட்டு, தம்பதி சகிதம் இருக்கும் நவக்கிரகங்களை வணங்கி விட்டு எம்பெருமான் வெங்கடா சலபதியைக் காண படியேற வேண்டும். மலையின் பின் பகுதியில் இருந்து வாகனம் ஏறிச்செல்ல தனிவழி உண்டு.
ஆனாலும் படி ஏறிச்செல்வதே உத்தமமாகும். கோவிலுக்குச் சென்று அங்கே பிரதான தெய்வமாக விளங்கும், சந்தனகட்டையில் உள்ள எம் பெருமானைத் தரிசித்து விட்டு, அவரின் வலது புறம் உள்ள உறங்கா புளியமரத்தைத் தரிசித்து விட்டு வலம் வரவேண்டும்.
அதன்பிறகு முதன்மையான கோவிலாக விளங்கும் பழைய கோவிலுக்கு வரவேண்டும். இங்கு பெருமாள் எதிரே கருடன் அமர்ந்திருக்க, கர்ப்பக்கிரகத்தில் ஸ்ரீதேவி- பூதேவியுடன் வெங்கடாசலபதி காட்சி அளிக்கிறார். அவர் முன்பே உற்சவர்கள் உள்ளார்கள்.
இங்குதான் பக்தர்களுக்கு ஜடாரியாக நம்மாழ்வாரின் தரிசனம் கிடைக்கும். முன் வாகனத்தில் ஆஞ்சநேயர் உள்ளார். அவரிடம் பக்தர்கள் தங்களின் பிரச்சினையை எழுதி, அதனுடன் 'ஸ்ரீராம ஜெயம்' எழுதி மாலையாக அணிவிக்கிறார்கள்.
இந்தக் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கும். மற்ற மாதங்களில் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
இந்த கோவில் அமைந்த கருங்குளம் பகுதி, நெல்லை - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. விரைவு பேருந்து இங்கு நிற்காது. நெல்லை சந்திப்பில் இருந்து 15 என்ற எண் கொண்ட டவுண் பஸ்கள் கோவில் அடிவாரம் வரை செல்லும்.
விரைவு பேருந்துகளில் செய்துங்கநல்லூர் வந்து அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். கருங்குளம் மெயின்ரோட்டில் இருந்தும் ஆட்டோ வசதி உண்டு.
- வாசனை வீசும் கூந்தலை உடையவளே!
- நம்பெருமானது திருவடிகளின் பெருமையைப் பாடி, பூங்குளத்தில் நீராடி மகிழ்வோம்.
திருப்பாவை
பாடல்:
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்;
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
மதநீர் சொரிகின்ற யானையைப் போன்ற பலமுடையவனும், பகைவர்களுக்கு தன் முதுகைக் காட்டாத தோள்வலிமை உடையவனுமாகிய நந்தகோபனுடைய மருமகளே! நப்பின்னைப் பிராட்டியே! வாசனை வீசும் கூந்தலை உடையவளே! வாசல் கதவைத் திறப்பாய்! பொழுது புலர்ந்ததற்கு அடையாளமாக கோழிகள் கூவுகின்றன. குருக்கத்தி மலர்ப் பந்தலின் மீதுள்ள குயில்கள் பலமுறை கூவுகின்றன. கண்ணனுடன் பந்தாடி, அந்த பந்தைக் கையில் பிடித்தபடி உறங்குபவளே! உன் கணவனாகிய கண்ணனுடைய திருநாமங்களை நாங்கள் பாடுகின்றோம். உனது சிவந்த தாமரை போன்ற திருக்கைகளில் உள்ள வளையல்கள் ஒலி எழுப்பும்படி வந்து கதவைத் திறவாய்!
திருவெம்பாவை
பாடல்:
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றார் போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே! இப் பூம்புனல்பாய்ந்து, ஆடேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
பெண்ணே! அந்த திருவண்ணாமலையில் வாழும் எம் பெருமானின் தாமரைத் திருவடிகளில் விழுந்து வணங்கும் தேவர்களின் தலைகளில் சூடியுள்ள மாணிக்கக் கற்கள் ஒளி மங்கிப் போகும். வானில் கதிரவன் தோன்றும் போது, சந்திரனின் ஒளி மங்கி, விண்மீன்களும் மறைந்து போகும். பெண்ணாகவும், ஆணாகவும். இரண்டும் அற்ற மூன்றாம் பாலினத்தவராகவும், அனைத்து உயிரினங்களாகவும், விண்ணாகவும், மண்ணாகவும், இன்னபிறவாக விளங்குபவனும், கண்களால் பருக வேண்டிய அமுதமாக நிலைபெற்றவனுமாகிய நம்பெருமானது திருவடிகளின் பெருமையைப் பாடி, இந்த பூங்குளத்தில் நீராடி மகிழ்வோம்.
- இன்று திருவோண விரதம்.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-18 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திருதியை பின்னிரவு 2.44 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: திருவோணம் நள்ளிரவு 12.58 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று திருவோண விரதம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக் கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திர ருக்கு குருவார திருமஞ்சன சேவை. கரூர் ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் புறப்பாடு. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் பவனி. தக்கேலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-பொறுப்பு
மிதுனம்-லாபம்
கடகம்-ஆதரவு
சிம்மம்-ஆதாயம்
கன்னி-தெளிவு
துலாம்- வெற்றி
விருச்சிகம்-பெருமை
தனுசு- நன்மை
மகரம்-தேர்ச்சி
கும்பம்-நலம்
மீனம்-நட்பு
- பூங்கொடி போன்ற ஆயர்குலத்தின் கொழுந்து போன்ற ஒளி விளக்கே!
- உலகங்களை அளந்த தேவர்களின் தலைவனே! உறக்கத்தை விடுத்து எழுந்தருள்வாய்!
திருப்பாவை
பாடல்:
அம்பரமே, தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா, எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே!
குலவிளக்கே!
எம் பெரு மாட்டி! யசோதாய்! அறிவுராய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்!
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
ஆடையையும், உணவையும், நீரையும் வரையறையே இல்லாது தானம் அளிக்கும் எங்கள் தலைவர் நந்தகோபரே! எழுந்தருள்வீர்! பூங்கொடி போன்ற ஆயர்குலத்தின் கொழுந்து போன்ற ஒளி விளக்கே! எங்கள் தலைவியாகிய யசோதை அம்மா! வானளாவ உயர்ந்து நின்று உலகங்களை அளந்த தேவர்களின் தலைவனே! உறக்கத்தை விடுத்து எழுந்தருள்வாய்! சிவந்த பொன்னாலான கால்களை அணிந்த பலதேவனே! நீயும் உன் தம்பியான கண்ணனும் இனியும் உறங்காது, உறக்கத்தை விடுத்து எழுந்தருள்வீர்!
திருவெம்பாவை
பாடல்:
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நம்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
பெண்களே! அந்த சிவந்த கண்களை உடைய திருமாலுக்கும், ஒவ்வொரு திசைக்கும் ஒரு முகம் வீதம் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மனுக்கும், ஏனைய தேவர் பெருமக்களுக்கும் கிடைக்காத ஒரு பேரின்பத்தை நமக்கு அள்ளிக் கொடுப்பவள், நறுமணம் மிக்க கூந்தலையுடைய நம் அன்னை உமையவள். அவள் நம்மை சீராட்டி, நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளும் வகையில் தன் சிவந்த தாமரை போன்ற திருவடிகளை நமக்குக் காட்டி, அனைவருக்கும் அரசனாக விளங்குபவனும், அடியவர்களுக்கு கிடைத்தற்கரிய அமுதத்தைப் போன்று விளங்குபவனுமாகிய நம் சிவபெருமானைப் போற்றிப் பாடி, தாமரை மலர்ந்துள்ள இந்த பொய்கையில் நீராடுவோமாக!
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்.
- பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-17 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவிதியை மறுநாள் விடியற்காலை 4.02 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: உத்திராடம் நள்ளிரவு 1.31 மணி வரை பிறகு திருவோணம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சந்திர தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில்களில் பகற்பத்து உற்சவம். கரூர் ஸ்ரீ அபயபிரதான ரங்கநாதர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதருக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமானுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருப்பு ளியங்குடி மூலவர் ஸ்ரீபூமிபாலகர், திருபுளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உதவி
ரிஷபம்-தாமதம்
மிதுனம்-பணிவு
கடகம்-அன்பு
சிம்மம்-பாசம்
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- தனம்
விருச்சிகம்-பக்தி
தனுசு- உழைப்பு
மகரம்-கடமை
கும்பம்-நட்பு
மீனம்-போட்டி
- பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் விழா நடைபெறும்.
- 10-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும்.
திருச்சி:
108 திவ்ய தேசங்களில் முதன்மையான பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடை பெறும்.
மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.
பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருநாள் இன்று (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. இதை யொட்டி நம்பெருமாள் காலை 7.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்சுன மண்டபம் வந்தடைந்தார்.
மஞ்சள் நிற பட்டு (பீதாம்பரம்) அணிந்து ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து, நெற்றி பூ சாற்றி, வைர அபய ஹஸ்தம், பதக்கம், அடிக்கை, ஒட்டியா ணம், கைகளில் தாயத்து சரம் , திருவடியில் தண்டை அணிந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
மதியம் 12 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர்.

இரவு 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடை கிறார். பகல் பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.
இதே போல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்ச வத்தின் 10-வது நாள் (9-ந்தேதி) நம்பெருமாள் நாச்சி யார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 10-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும்.
அன்று அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவா சலில் எழுந்தருள்வார். இதை யொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்த ர்களுக்கு அருள்பாலிப்பார்.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபத வாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 11-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். 16-ந்தேதி மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திரு க்கும். 17-ந்தேதி சொர்க்க வாசல் திறப்பு இல்லை.
சொர்க்கவாசல் திறப்பு தினமான 10-ந்தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
ராப்பத்து ஏழாம் திரு நாளான 16-ந்தேதி நம்பெரு மாள் திருக்கைத்தல சேவை யும், எட்டாம் திருநாளான 17-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சி யும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.
விழாவிற்கான ஏற்பா டுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரி யப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்மு ருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
- ஜகத் ஜனனி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இரவு மார்கழி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி, பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை பொருட்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து தங்ககவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு ஜகத் ஜனனி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.
தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு பம்பை மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக் கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி, அங்காளம்மா! என்று பக்தி கோஷத்துடன அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து இரவு 12.30 மணியளவில் ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு பூக்காளால் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து உற்சவர் அம்மன் கோவில் மண்டபத்திற்கு சென்றனர்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
விழாவில் செஞ்சி துணைபோலீஸ் சூப்பிரண்டு கார்த்திகா பிரியா தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்பட்டன.
- நேர்த்தியான நிலையுடன் பொருந்தியுள்ள கதவுகளைத் திறந்து விடுவாய்.
- உமையம்மையின் நிறத்தையொத்த கருநீல மேகமே!
திருப்பாவை
பாடல்:
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில்காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்;
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா!
நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
கொடி பறக்கின்ற தோரண வாசலைக் கொண்ட ஆயர்பாடியின் தலைவனாய் விளங்குகின்ற நந்தகோபனின் அரண்மனையைக் காவல் புரிபவரே! மணிகள் பொருத்தப்பட்ட கதவைத் திறந்து எங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும். கண்ணன் ஆயர் சிறுமிகளான எங்களின் நோன்புக்கு உரிய அருளை தருவதாக வாக்களித்துள்ளான். அவனைத் துயிலெழுப்ப தூய்மையான மனதுடன் வந்துள்ளோம். உன் வாயினால் மறுத்துச் சொல்லிவிடாதே. நேர்த்தியான நிலையுடன் பொருந்தியுள்ள கதவுகளைத் திறந்து விடுவாய்.
திருவெம்பாவை
பாடல்:
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கும் முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
இந்த கடல் நீரைச் சுருக்கி வற்றச் செய்து மேலெழும்பும் உமையம்மையின் நிறத்தையொத்த கருநீல மேகமே! இறைவியின் இடையைப் போல மின்னி, அவள் கால்களில் அணிந்துள்ள சிலம்பு போன்ற இடியை இடிக்கச் செய்து, அவள் அழகிய புருவம் போன்ற வானவில்லைத் தோன்றச் செய்வாய். பார்வதியைப் பிரியாத பரமசிவன் தன் அடியார்கள் மேல் இன்னருளைப் பொழிவதைப் போல நீயும் மழையைப் பொழிவாயாக.
- சகல விஷ்ணு ஆலயங்களில் பகற்பத்து உற்சவம் ஆரம்பம்.
- முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-16 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பிரதமை மறுநாள் விடியற்காலை 4.48 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: பூராடம் நள்ளிரவு 1.36 மணி வரை பிறகு உத்திராடம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொணட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் திருமொழித் திருநாள் தொடக்கம். சாக்கிய நாயனார் குருபூஜை. சகல விஷ்ணு ஆலயங்களில் பகற்பத்து உற்சவம் ஆரம்பம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான குமுத வல்லித் தாயார் சமேத ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் காலை திருமஞ்சனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-விவேகம்
மிதுனம்-அன்பு
கடகம்-பெருமை
சிம்மம்-அன்பு
கன்னி-உற்சாகம்
துலாம்- பக்தி
விருச்சிகம்-ஆர்வம்
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-ஆதரவு
கும்பம்-பயணம்
மீனம்-லாபம்
- வடை, வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு தீபராதனை நடந்தது.
- சாமியை தரிசிப்பதற்காக பக்தர்கள் இன்று காலை முதல் குவிந்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து பாபவிநாசம் சாலையில் உள்ள ஜபாலி மலையில் அனுமன் பிறந்ததாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.
ஜபாலி மலையில் உள்ள அனுமனுக்கு இன்று காலை பல்வேறு பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது.
பின்னர் அனுமனுக்கு பட்டு வஸ்திரங்கள் உடுத்தி, வடை, வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு தீபராதனை நடந்தது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அவர் பிறந்த இடத்தில் சாமியை தரிசிப்பதற்காக பக்தர்கள் இன்று காலை முதல் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று விடுமுறை நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
திருப்பதியில் நேற்று 84 950 பேர் தரிசனம் செய்தனர். 21,098 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.80 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் 6 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
- 5 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் கோட்டையில் புராதன சிறப்புப் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் உருவான 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி நடப்பாண்டு 2 முறை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வருகை பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மார்கழி மாதத்தையொட்டி கடந்த ஜனவரி மாதம் 11-ந்தேதி (வியாழக்கிழமை) ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதையடுத்து நடப்பாண்டு 2-வது முறையாக மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று (30-ந்தேதி) ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக தொடங்கியது. விழாவையொட்டி ஒரு டன் வண்ண மலர்களால் கோவில் வளாகம் முழுவதும் அலங்கரிப்பட்டு இருந்தது.
அதிகாலை 5 மணிக்கு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. இதையடுத்து ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது.
1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இவ்விழாவில் தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
காலை 11 மணிக்கு வடை மாலை அலங்காரம் கலைக்கப்பட்டு நல்லெண்ணெய், பால், தயிர், திருமஞ்சள், சீயக்காய்தூள், பஞ்சாமிர்தம் போன்ற வாசனைப் பொருட்களால் சாமிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
பின்னர் மதியம் 1 மணிக்கு ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. சுமார் 20-க்கும் மேற்பட்ட கோவில் பட்டாச்சாரியார்கள் பூஜை பணிகள் செய்தனர்.
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதலே சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பக்தர்கள் வரிசையாக சென்று வரும் வகையில் கோவில் பகுதிகளிலும், கோவில் அமைந்துள்ள தெருக்களிலும் பேரிகார்டு வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டது. பக்தர்கள் வரிசையாக வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர். 5 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக நாமக்கல்லில் கோட்டை ரோடு, பார்க் ரோடு பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது. நாமக்கல் கோட்டை பகுதி முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணா தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 50 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
ஆஞ்சநேயர் ஜெயந்தி பெருவிழாவையொட்டி நாமக்கல் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.






