search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sabarimala Temple"

    • மலேசியா, சிங்கப்பூர், நேபாளம் போன்ற நாடுகளின் நாணயங்களும் சபரிமலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் இருக்கின்றன.
    • பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்களை எண்ணுவதற்கு 2017-ம் ஆண்டு வரை எந்திரம் பயன்படுத்தப்பட்டது

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் வந்தனர்.

    கூட்டத்தை நிர்வகிப்பதில் சரியான நடவடிக்கை எடுக்காததன் காரணமாக, இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் காலத்தில் பல நாட்கள் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மாதாந்திர பூஜை காலத்திலும் பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனின்போது பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் பண நோட்டுகள் எண்ணும் பணி ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. அதில் ரூ.357.47 கோடி பண நோட்டுகள் கிடைத்தன. இந்தநிலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் நாணயங்களை எண்ணும் பணி தற்போது நடைபெற்றது.

    சபரிமலையில் உள்ள உண்டியல்களில் இருந்த நாணயங்கள் அனைத்தும் மொத்தமாக சேகரிக்கப்பட்டு, மாளிகைபுரம் கோவிலின் பின்புறம் உள்ள அன்னதான மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. கடந்த 5-ந்தேதி தொடங்கிய இந்த பணி நேற்று முடிவடைந்தது.

    அதில் ரூ.11.65 கோடி நாணயங்கள் இருந்தன. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், நேபாளம் போன்ற நாடுகளின் நாணயங்களும் சபரிமலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் இருக்கின்றன. அவற்றை எண்ணும் பணி நடைபெற இருக்கிறது.

    பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்களை எண்ணுவதற்கு 2017-ம் ஆண்டு வரை எந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்த எந்திரம் பழுதானதால், அதன்பிறகு தேவசம்போர்டு ஊழியர்களால் நேரடியாக எண்ணும் முறை பின்பற்றப்படுகிறது.

    நாணயங்கள் எண்ணும் பணி நடைபெற்றபோது எடுத்த படம்.

    நாணயங்கள் எண்ணும் பணி நடைபெற்றபோது எடுத்த படம்.

    நாணயங்கள் எண்ணும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பயண செலவு உள்ளிட்டவைகள் வழங்கப்படும். நாணயங்கள் எண்ணும் பணியில் தேவசம் போர்டு ஊழியர்கள் 400 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

    அவர்களுக்கான உணவு செலவு, போக்குவரத்து செலவு, மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் சேர்த்து நாணயங்கள் எண்ணுவதற்கான செலவே ரூ.1 கோடிக்கு மேல் வரும் என்று கூறப்படுகிறது. இதனால் நாணயங்கள் எண்ணுவதற்கான எந்திரங்களை பழுது நீக்கி பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

    • அரவணை பிரசாதம் விற்பனை வரவு ரூ.146 கோடியே 99 லட்சத்து 37 ஆயிரத்து 700 ஆகும்.
    • காணிக்கை முழுவதும் இன்னும் எண்ணி முடிக்காததால் அதன் வருவாய் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

    சபரிமலை:

    சபரிமலை சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பி.எஸ். பிரசாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் மொத்த வருமானம் ரூ.357 கோடியே 47 லட்சத்து 71 ஆயிரத்து 909 ஆகும். கடந்த ஆண்டு இதே கால அளவில் மொத்த வருமானமாக ரூ.347 கோடியே 12 லட்சத்து 16 ஆயிரத்து 884 கிடைத்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.10.35 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

    அரவணை பிரசாதம் விற்பனை வரவு ரூ.146 கோடியே 99 லட்சத்து 37 ஆயிரத்து 700 ஆகும். அப்பம் பிரசாதம் விற்பனை மூலம் ரூ.17 கோடியே 64 லட்சத்து 77 ஆயிரத்து 795 கிடைத்துள்ளது.

    கோவிலில் நேற்று வரை 50 லட்சத்து 6 ஆயிரத்து 412 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5 லட்சம் அதிகம். மேலும் காணிக்கை முழுவதும் இன்னும் எண்ணி முடிக்காததால் அதன் வருவாய் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

    நாளை (21-ந் தேதி) காலையில் பந்தளம் அரச குடும்ப உறுப்பினரின் தரிசனத்திற்கு பிறகு கோவில் நடை காலை 7 மணிக்கு அடைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • கடந்த 15-ந்தேதி மகரவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
    • மகரவிளக்கு காலம் முடிவடைவதை தொடர்ந்து நாளை (20-ந்தேதி) இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை வந்தனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    41 நாட்கள் நடைபெற்ற வழிபாடுகளுக்கு பிறகு கடந்த மாதம் 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. பின்னர் நடை அடைக்கப்பட்டு மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30-ந்தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது. இந்த கால கட்டத்திலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    கடந்த 15-ந்தேதி மகரவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனர். தொடர்ந்து சபரிமலையில் சிறப்பு படிபூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை (20-ந்தேதி)யுடன் மகரவிளக்கு காலம் நிறைவடைய உள்ளது. இதனை முன்னிட்டு இன்று காலை கோவிலில் கடைசி நாள் நெய்யபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இன்று இரவு அத்தாள பூஜை நடக்கிறது. அதன்பிறகு மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து ஐயப்பசாமி ஊர்வலம் சரம்குத்தி வரை சென்று விட்டு மீண்டும் சன்னிதானம் வந்து சேரும். மகரவிளக்கு காலம் முடிவடைவதை தொடர்ந்து நாளை (20-ந்தேதி) இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு அரிவராசனம் பாடப்பட்டு நடை அடைக்கப்படும். தொடர்ந்து மாளிகப்புரம் கோவிலில் குருதி சடங்குகள் நடைபெறும்.

    மறுநாள் (21-ந்தேதி) காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளன. அதன்பிறகு திருவாபரண ஊர்வலம் பந்தளத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு சபரிமலை கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்னர் சபரிமலை மேல்சாந்தி, பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் கோவில் சாவியை ஒப்படைப்பார். இத்துடன் மண்டல, மகர விளக்கு காலம் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து மாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதி கோவில் நடை திறக்கப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகரவிளக்கு பூஜை தொடக்கத்திலும் சில நாட்கள் கடும் கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி அவதிப்பட்டனர்.
    • கடந்த ஆண்டு ரூ.403 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசனில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டும் மண்டல பூஜை காலத்தில் பல லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்தார்கள்.

    ஆன்லைனில் முன்பதிவு செய்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த நிலையில், உடனடி முன்பதிவு வசதியை பயன்படுத்தியும் ஏராளமானோர் வந்ததால் மண்டல பூஜை காலத்தில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. இதன் காரணமாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்பட நேர்ந்தது.

    மகரவிளக்கு பூஜை தொடக்கத்திலும் சில நாட்கள் கடும் கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி அவதிப்பட்டனர். உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்ட பிறகே கூட்ட நெரிசல் கட்டுக்குள் வந்தது. தற்போது மகரவிளக்கு பூஜை முடிவுக்கு வந்த நிலையில், தை மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டிருக்கிறது. வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

    பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததாக கூறப்பட்டாலும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பக்தர்கள் வருகை குறைவு என்றே கூறப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை 16 லட்சம் குறைந்துள்ளது.

    அதேபோன்று வருவாயும் கடந்த ஆண்டை விட குறைவாகவே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.403 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு மண்டல சீசனில் ரூ.241 கோடியே வருவாய் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசனில் வருவாய் ரூ.300 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 18ம் படி ஏறி ஐயப்பன் சன்னிதானத்தை திருவாபரணம் அடைந்தது.
    • கோவிலில் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர்.

    புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மகரவிளக்கின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான மகரஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது.

    மகரவிளக்கு பூஜையையொட்டி இன்று அதிகாலை 2.46 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகர சங்கராந்தி எனப்படும் மகர சங்ரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    மாலை 6.20 மணிக்கு பந்தளத்தில் இருந்து சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும் திருவாபரணத்தை தந்திரி மகேஷ் மோகனரு, மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக் கொண்டு அய்யப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்துகிறார்கள். 

    அதன்படி, 18ம் படி ஏறி ஐயப்பன் சன்னிதானத்தை திருவாபரணம் அடைந்தது.

    அந்த சமயத்தில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் சுவாமி ஐயப்பன் பேரொளியாக ஜோதி வடிவத்தில் பக்தர்களுக்கு 3 முறை காட்சி தந்தார். அப்போது, அங்கு திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர்.

    மேலும் பாதுகாப்பு பணிக்காக பம்பை மற்றும் சன்னிதானத்தில் கூடுதலாக ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு வசதிகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்ததால் நெரிசல் ஏற்பட்டது.
    • கோவில் வளாகத்தில் பக்தர்கள் முகாமிட தடை விதிக்கப்பட மாட்டாது என்று தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    மண்டல பூஜை சீசனை போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. இதனால் பம்பை, மரக்கூட்டம், நடைப்பந்தல், பதினெட்டாம்படி, சன்னிதான பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு வசதிகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வயதானவர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மகரவிளக்கு பூஜை தினத்தில் நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேவசம் போர்டு எடுத்தது.

    அதன்படி நேற்று முன்தினம் (10-ந்தேதி) முதல் உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு வருகின்றனர். இதனால் பக்தர்கள் வருகை குறைந்தது. இதன் காரணமாக கடந்த நாட்களில் இருந்ததைப்போன்று கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வருகிற 15-ந்தேதி வரை உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவு 16-ந்தேதி 50 ஆயிரம் பேருக்கும், 17 முதல் 20-ந்தேதி வரை தினமும் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்து சன்னிதானத்துக்கு செல்வதற்காக 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நிலக்கல், பம்பை மற்றும் வண்டிப்பெரியாறு ஆகிய இடங்களில் உடனடி சாமி தரிசனத்துக்கான முன்பதிவு மையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மகரவிளக்கு பூஜை தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளத்தில் இருந்து நாளை (13-ந்தேதி) புறப்படுகிறது. அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவாபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது.

    மகரஜோதி தரிசனத்தை காண சபரிமலையில் பாண்டித்தாவளம், குடிநீர் தொட்டியின் முன்பகுதி, பொதுப்பணித்துறை அலுவலகத்தின் முன்பகுதி, பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் வடக்கு பக்கம், கொப்பரைக்களம், சன்னிதானத்தின் திருமுற்றம், மாளிகைப்புரம் கோவிலின் சுற்றுப்பகுதிகள், அப்பாச்சிமேடு, அன்னதான மண்டபத்தின் முன்பகுதி உள்பட 10 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அந்த இடங்களில் இருந்து பக்தர்கள் மகர ஜோதி தரிசனம் செய்யலாம். மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் முகாமிட தடை விதிக்கப்பட மாட்டாது என்று தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

    மேலும் தேவசம்போர்டு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எந்த பக்தர்களையும் கட்டுப்படுத்த மாட்டார்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

    • சபரிமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பிரசாதத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
    • தற்போது சர்க்கரை வரத்து சீரானதை தொடர்ந்து அரவணை உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை:

    சபரிமலையில் தினமும் தற்போது 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பிரசாதத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    மும்பையில் இருந்து சர்க்கரை வரத்து தாமதமானதால் அரவணை உற்பத்தி பாதிக்கப்பட்டதால் அரவணை தட்டுப்பாடு ஏற்பட்டதாக திருவிதாங்கூர் தேவஸ்தானத்தினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தற்போது சர்க்கரை வரத்து சீரானதை தொடர்ந்து அரவணை உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அய்யப்ப பக்தர்களுக்கு அரவணை பிரசாத வினியோகம் சீராக நடைபெற்று வருவதாக சபரிமலை செயல் அதிகாரி கிருஷ்ணதாஸ் தெரிவித்தார்.

    • பதினெட்டாம்படி மற்றும் நடைப்பந்தல் பகுதிகளில் பக்தர்கள் கூட்ட நெரிசலை தாண்டியே சாமி தரிசனம் செய்ய முடிகிறது.
    • சபரிமலையில் உடனடி முன்பதிவு வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

    மண்டல பூஜை காலத்தில் இருந்ததுபோன்றே, தற்போதும் பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காத வகையிலேயே இருந்து வருகிறது. இதன் காரணமாக சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

    கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும், சன்னிதானம், பதினெட்டாம்படி மற்றும் நடைப்பந்தல் பகுதிகளில் பக்தர்கள் கூட்ட நெரிசலை தாண்டியே சாமி தரிசனம் செய்ய முடிகிறது. இதனால் வயது முதிர்ந்த பக்தர்கள், குழந்தைகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மகரவிளக்கு பூஜை தினத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை வருகிற 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கணிசமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. உடனடி முன்பதிவு வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சபரிமலையில் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் அவதிப்படுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே பல்வேறு யோசனைகளை தெரிவித்திருக்கும் கேரள மாநில ஐகோர்ட், தற்போது மேலும் ஒரு அறிவுரையை கூறியிருக்கிறது.

    சபரிமலையில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக செயல்பட்டு வரும் நிலக்கல் பகுதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் அனில் நரேந்திரன், கிரீஷ் ஆகியோர் கூறியுள்ளனர்.

    நிலக்கல் வாகன நிறுத்தம் தொடர்பாக தேவசம்போர்டு மற்றும் பத்தினம்திட்டா போலீஸ் சூப்பிரண்டுகளிடம் இருந்து பிரமாண பத்திரங்களை நீதிமன்றம் கேட்டிருந்தது. அதனை அவர்கள் தாக்கல் செய்ததன் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை கேரள ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

    • மண்டல பூஜை காலத்தை போன்றே, மகரவிளக்கு பூஜை காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவிலேயே இருக்கிறது.
    • 10-ந்தேதி முதல் உடனடி முன்பதிவு நிறுத்தப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

    மண்டல பூஜை காலத்தை போன்றே, மகரவிளக்கு பூஜை காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவிலேயே இருக்கிறது. இதனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 10 முதல் 15 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.

    பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக கண்காணிப்பு பணியில் போலீசாரும், தேவசம்போர்டு தன்னார்வ தொண்டர்களும் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மகரவிளக்கு பூஜையன்று பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று திருவிதாங்கோடு தேவசம்போர்டிடம் போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    இதில் மகரவிளக்கு பூஜை நடைபெறும் வருகிற 15-ந்தேதி மற்றும் அதற்கு முந்தைய தினமான 14-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களும் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 14-ந்தேதி மெய்நிகர் வரிசை ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும், 15-ந்தேதி 40 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 10-ந்தேதி முதல் உடனடி முன்பதிவு நிறுத்தப்படுகிறது. அதே நேரத்தில் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசன முன்பதிவு வழக்கம் போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அது மட்டுமின்றி 14 மற்றும் 15 தேதிகளில் சபரிமலைக்கு வருவதை பெண்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என்று தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

    • சபரிமலையில் மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
    • மண்டல பூஜைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (கார்த்திகை 1-ந்தேதி) முதல், மாலை அணிந்து விரதமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    மண்டல பூஜை தொடங்கிய சில நாட்கள் பக்தர்கள் வருகை குறைந்து காணப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர்.

    இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சபரிமலை சன்னிதானம், பம்பை, பக்தர்கள் நடைபயணம் மேற்கொள்ளும் மலை பாதைகள், மரக்கூட்டம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

    இந்த விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டு தலையிட்டு பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சபரிமலைக்கு செல்ல நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. மேலும் அதற்கான சில நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதனை அமல்படுத்தியதன் மூலம் சபரிமலையில் நிலவிய கூட்ட நெரிசல் கட்டுக்குள் வந்தது.

    இந்த நிலையில் சபரிமலையில் மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973-ம் ஆண்டு சபரிமலைக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.

    ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் பத்தினம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து இன்று காலை புறப்பட்டது. தங்க அங்கி ஊர்வலம் வரக்கூடிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஊர்வலம் வந்த இடங்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று தங்க அங்கியை தரிசனம் செய்தனர். ஐயப்பனின் தங்க அங்கி ஊர்வலம் பல்வேறு கோவில்களுக்கு சென்று, இறுதியில் சபரிமலைக்கு வந்து சேருகிறது.

    நாளை மறுநாள் (26-ந்தேதி) தங்க அங்கி ஊர்வலம் பம்பைக்கு வந்து சேரும். அங்கு பம்பை கணபதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்படும். பின்பு அங்கிருந்து நீலிமலை வழியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தங்க அங்கி எடுத்துச் செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.

    26-ந்தேதி மாலையில் இருந்து மறுநாள் (27-ந்தேதி) வரை ஐயப்ப சுவாமி தங்க அங்கியில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள். பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகளவில் இருக்கும் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

    மண்டல பூஜைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.

    மண்டல பூஜை நடைபெறும் 27-ந்தேதி ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய 40 ஆயிரம் பக்தர்களே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை முடிந்து அன்றைய தினம் இரவு 11.30 மணிக்கு கோவில் நடைசாத்தப்படுகிறது.

    பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 30-ந்தேதி மாலை மீண்டும் திறக்கப்படுகிறது.

    • சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.
    • மண்டல பூஜைக்கு பின், மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதியில் இருந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து சாமியை தரிசனம் செய்ய நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தபடி உள்ளனர். இதனால் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்தநிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளனர்.

    தற்போது சன்னிதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் போலீஸ், சி.ஆர்.பி.எப்., வெடிகுண்டு தடுப்பு பிரிவு என பல்வேறு துறைகளை சேர்ந்த 2,150 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மண்டல பூஜையின் போது சபரிமலையில் மட்டும் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இந்தநிலையில் சபரிமலையில் 750 பேரின் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. அதற்கு பதிலாக புதிய அதிகாரிகள் பொறுப்பேற்றனர். சன்னிதானம் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. ராகுல் ஆர்.நாயர் புதிய ராணுவ வீரர்களை வரவேற்றார். அவர் பேசும்போது, அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலில் போலீசார் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும். பக்தர்களை மிகுந்த கண்ணியத்துடன் நடத்த வேண்டும். போலீசார் உரிய நேரத்தில் பணிக்கு வருகைதர வேண்டும். தற்போது சபரிமலைக்கு வரும் பக்தர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதால் போலீசாரின் பொறுப்பு அதிகரித்து வருகிறது என்றார்.

    சபரிமலையில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் 10 பிரிவுகளாக 35 இன்ஸ்பெக்டர்கள், 105 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோரின் மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    சிறப்பு அதிகாரி சுதர்சனன் கூறுகையில், "ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரம் பக்தர்கள் 18-ம் படி ஏறுகிறார்கள். அனைவருக்கும் சாமி தரிசனம் கிடைக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். பக்தர்கள் போலீசாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்" என்றார்.

    மண்டல பூஜைக்கு பின், மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதி மகர சங்ரம பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது.

    • நிலக்கல், பம்பை, சன்னிதானம் மற்றும் மலைப்பாதைகள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
    • பம்பையிலேயே பக்தர்கள் நீண்ட நேரம் காத்து நின்று மலையேறினர்.

    திருவனந்தபுரம்:

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஆன்லைனில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து சபரிமலைக்கு வந்த நிலையில், உடனடி முன்பதிவு செய்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தார்கள். இதன் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்தது.

    நிலக்கல், பம்பை, சன்னிதானம் மற்றும் மலைப்பாதைகள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டதால், சாமி தரிசனத்துக்கு பல மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    பம்பையிலேயே பக்தர்கள் நீண்ட நேரம் காத்து நின்று மலையேறினர். மரக்கூட்டம், பதினெட்டாம் படி, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் கடும் நெரிசலும் ஏற்பட்டது. தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.

    ஆன்லைன் முன்பதிவு முறையில் ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்த நிலையில், உடனடி முன்பதிவு வசதியையும் பயன்படுத்தி ஏராளமானோர் வந்ததால் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியவில்லை. இதன் காரணமாக குழந்தைகளுடன் வந்தவர்கள், வயது முதிர்ந்தவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை ஐகோர்ட்டு உத்தரவுப்படி குறைத்தும், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்லாமலேயே திரும்பிச் சென்ற சம்பவமும் அரங்கேறியது.

    நேற்று பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தி அனுப்பப்பட்டனர். இதனால் 10 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக நிலக்கல்லியேயே பக்தர்கள் அதிக நேரம் நிறுத்தப்பட்டனர்.

    சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளில் ஏற்பட்ட குளறுபடியே பக்தர்களின் அவதிக்கு முக்கியமாக காரணமாக கூறப்படுகிறது. சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு கேரள அரசு மற்றும் தேவசம் போர்டை கேரள ஐகோர்ட்டு வலியுறுத்தியது.

    அதனடிப்படையில் பல்வேறு திட்டங்களை வகுத்தபோதிலும் கூட்ட நெரிசல் ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தநிலையில் இடுக்கியில் நடந்த நவ கேரள சதாஸ் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், சபரிமலை நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் வனத்துறை மந்திரி சுசீந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் தேவஸ்தான தலைவர் பிரசாந்த், கேரள டி.ஜி.பி.ஷேக் தர்வேஷ்சாகிப் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-

    சபரிமலையில் கடந்த 6-ந்தேதி முதல் பக்தர்களின் எண்ணிக்கை தினசரி 88 ஆயிரமாக உயர்ந்தது. இதுதான் கூட்ட நெரிசலுக்கு காரணம். அதன்பிறகு தரிசன நேரம் 18 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு 90 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

    நிலக்கல்லில் நடந்துவரும் உடனடி முன்பதிவை நிறுத்தி வைக்கலாம். தேவைப்பட்டால் மட்டும் உடனடி முன்பதிவை தொடர்ந்து நடத்தலாம். பெண்கள், குழந்தைகளுக்கான தரிசனத்தில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    பம்பை முதல் சன்னிதானம் வரை மலையேறும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் கிடைக்க தேவஸ்தான தலைவர் தலைமையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் பணிகளை ஒருங்கிணைந்த முறையில் செய்ய வேண்டும். பக்தர்கள் பாதிக்காத வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சபரிமலைக்கு கடந்த ஆண்டைப்போல பக்தர்கள் அதிகளவில் வருகிறார்கள். மெய்நிகர் வரிசையில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளது. உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகள் கூட்ட நெரிசலை குறைக்க உதவும்.

    பக்தர்களின் யாத்திரை அமைதியாக நடந்து வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது சிறுசிறு பிரச்சனைகள் எழுகின்றன. யாத்ரீகர்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க தயாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது:-

    கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் சபரிமலையில் பக்தர்களை கையாளுவதில் குளறுபடிகள் ஏற்பட்டது. அந்த குறுபடிகளை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. எல்லா வருடமும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம் தான்.

    கூட்டம் அதிகரிக்கும்போது அனைவருக்கும் எல்லாம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. அதனை வரும் ஆண்டுகளில் எப்படி நிவர்த்தி செய்யவேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கவும், அவர்களது வாகனங்களை நிறுத்த போதிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    நீதிபதிகள் அனில் நரேந்திரன், கிரிஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்திருப்பதாவது:-

    சபரிமலைக்கு செல்லும் கூட்டம் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வரிசை வளாகத்தில் பக்தர்களின் கூட்டத்தை அனுமதிக்க வேண்டாம். அதனை தினமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் உள்ள என்.எஸ்.எஸ். தன்னார்வலர்களின் மூலமாக அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு பரிசீலிக்கும். குழந்தைகள் உள்ளிட்ட யாத்ரீகர்களுக்கு கோவிலில் கூடுதல் வதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    ×