என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
    • இதுவரை பார்த்திராத மம்மூட்டியைக் காணத் தயாராக இருங்கள்

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்மூட்டி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ். இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார்.

    இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக கவுதம் வாசுதேவ் மேனனுடன் மம்மூட்டி இணைந்து நடித்த 'பசூகா' படம் வரும் ஏப்ரல் 10 அன்று வெளியாகிறது.

    இந்த நிலையில் மம்மூட்டியின் அடித்த பட அப்டேட் கிடைத்துள்ளது. இந்த படத்தை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பேனி தயாரிக்கிறது.


    குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்த படத்திற்கு 'களம்காவல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் போஸ்டரை வெளியிட்டு, இதுவரை பார்த்திராத மம்மூட்டியைக் காணத் தயாராக இருங்கள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்





    • யோகி பாபு தற்போது மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
    • ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்த கார் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே இருந்த சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டது.

    தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திற்குள் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர் யோகி பாபு. இவர் காமெடியன், கதாநாயகனாக பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென இடத்தை உருவாக்கிக்கொண்டவர். யோகி பாபு தற்போது மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். படங்களில் தொடர்ந்து பிசியாக இருக்கும் யோகி பாபு அவ்வப்போது பிரபலமான ஆன்மிக தலங்களுக்கும் செல்வார்.

    இந்த நிலையில், நடிகர் யோகி பாபு பயணம் செய்த கார் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்த கார் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே இருந்த சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டது.

    இதனை தொடர்ந்து, நான் சாலை விபத்தில் சிக்கவில்லை நலமுடன் இருக்கிறேன் என்று யோகி பாபு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார்.
    • நாம் சூப்பர்ஸ்டார்கள் அல்ல, விளையாட்டு வீரர்கள்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தது முதல் ரவிச்சந்திரன் அஷ்வின் சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், யூடியூப் தளத்தில் தொடர்ச்சியாக பேசி வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் போது ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

    இதன் பிறகு, அடிக்கடி கருத்து தெரிவித்து வரும் அஷ்வின் சமீபத்தில், இந்திய அணியில் உள்ள நட்சத்திர கலாச்சாரத்திற்கு எதிராக பேசியிருந்தார். அப்போது, வீரர்கள் மக்களுடன் தங்களை தொடர்புப்படுத்திக் கொள்ள நிதானமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். சமீபத்தில் இந்தி மொழி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அஷ்வின் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    அப்போது பேசிய அவர், "இந்திய கிரிக்கெட்டில் விஷயங்களை இயல்பாக்குவது முக்கியம். இந்திய கிரிக்கெட் அணிக்குள் சூப்பர் ஸ்டார் மற்றும் சூப்பர் பிரபலங்களை நாம் ஊக்குவிக்கக்கூடாது. எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நாம் இயல்பாக்க வேண்டும். நாம் கிரிக்கெட் வீரர்கள்."

    "நாம் நடிகர்கள் அல்லது சூப்பர் ஸ்டார்கள் அல்ல. நாம் விளையாட்டு வீரர்கள், மேலும் பொது மக்கள் எதிரொலிக்க வேண்டிய, தங்களை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும்," என்று கூறினார்.

    • பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்?
    • உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு நிதி அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு பிளாக் மெயில் செய்வதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா?

    தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்?

    தற்போது 2025 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்? என வினவியுள்ளார். 



    • கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல!
    • முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடனின் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 



    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • ரெயில் நிலையத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
    • கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

    டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

    நேற்று இரவு டெல்லி ரெயில் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
    • சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவு.

    உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    உத்தர பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரே நேரத்தில் பயணிகள் முண்டியடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கிய படுகாயமடைந்த மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    முன்னதாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "புதுடெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது அறிந்து துன்பமடைந்தேன். தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்த அனைவருடன் என் எண்ணங்கள் உள்ளன."

    "காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த நெரிசலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவி வருகின்றனர்," என பதிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகள், அறைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
    • சேவைகளுக்கு நன்கொடைகளை வழங்கலாம் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

    ஆந்திராவில் 'மன மித்ரா' என்ற பெயரில் வாட்ஸ்-அப் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு தொடங்கி உள்ளது.

    இந்த திட்டத்தை விரிவுபடுத்தி பல்வேறு சேவைகள் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேசுவர சாமி கோவிலில் (ஏழுமலையான் சாமி) கோவில் தரிசன டிக்கெட் முன்பதிவு சேவைகளும் பெற நடவடிக்கை எடுத்து வருகிறது.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான சேவைகள் விரைவில் 'வாட்ஸ்- அப்'பில் கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகள், அறைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். சேவைகளுக்கு நன்கொடைகளை வழங்கலாம் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

    • ஈக்களின் ஆயுட்காலம் சுமார் 5-60 நாட்கள் என்பதால், அவை ககன்யானின் 5 முதல் 7 நாட்கள் ராக்கெட் சோதனைக்கு ஏற்றதாக இருக்கும்.
    • தனித்தனி பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள பழ ஈக்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

    மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் 2 ஆள் இல்லாத ராக்கெட் மூலம் சோதனை செய்த பின்னர் 3-வது ராக்கெட் ஆள்களை ஏற்றி செல்ல இருக்கிறது. இதில் 3 இந்திய விண்வெளி வீரர்களை விசேஷமாக வடிவமைக்கப்பட்ட விண்கலத்தில் தாழ்வான பூமி சுற்றுப்பாதையில் அனுப்பி பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதை நோக்கமாக கொண்ட திட்டமாகும்.

    இந்த திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதில் முதல் ஆளில்லா சோதனை ராக்கெட் நடப்பாண்டு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த ராக்கெட்டில் பழ ஈக்களையும் விண்ணில் அனுப்பி சோதனை செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உளளனர்.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யானின் முதல் பயணத்தில் வானியலாளர்களுடன் இந்தியா பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. ஈக்களின் ஆயுட்காலம் சுமார் 5-60 நாட்கள் என்பதால், அவை ககன்யானின் 5 முதல் 7 நாட்கள் ராக்கெட் சோதனைக்கு ஏற்றதாக இருக்கும். ஈக்கள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழு விண்வெளியில் செலுத்தப்படும், மற்றொன்று 2-க்கும் இடையிலான பகுதியில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதற்காக பயன்படுத்தப்படும்.

    தனித்தனி பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள பழ ஈக்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும். விண்வெளிப் பயணம் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கிறது? மற்றும் ராக்கெட் பயணத்தின்போது அவை என்ன வகையான உயிரியல் மாற்றங்களையும், அழுத்தங்களை எதிர்கொள்கின்றன? என்பதை மதிப்பிடுவதற்கு பழ ஈக்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

    இந்த ஈக்கள் மனிதனுக்கான மரபணுவை சுமார் 75 சதவீதத்தை பகிர்ந்து கொள்கின்றன. இதன் மூலம் அவற்றின் உயிரியல் நிகழ்வுகளை அறிந்து கொள்ள ஏதுவாக அமைகிறது. மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் குழு, இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணமான ககன்யான்-1 ல் பழ ஈக்களை ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • பொதுக்குழு நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
    • கட்சியின் உட்கட்டமைப்பில் நிர்வாகிகள் நியமனம் முழுமையாக நிறைவு பெற்ற பின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2-ந்தேதியுடன் முதல் ஆண்டு முடிவடைந்து 2-ம் ஆண்டு தொடங்கியுள்ளது. கட்சியின் உள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்து வருகிறார்.

    இதுவரை 5 கட்டங்களாக மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அடுத்ததாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வியூகம் அமைப்பது தொடர்பான பணிகளில் விஜய் ஈடுபட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு மற்றும் கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழாவையும் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டது. பொதுக்குழு நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர். அப்போது இடம் தேர்வில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா, பொதுக்குழு நிகழ்ச்சிகளை தனித்தனியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வரும் 26-ந்தேதி த.வெ.க. முதலாம் ஆண்டு விழாவையும் அதன் பின் கட்சியின் உட்கட்டமைப்பில் நிர்வாகிகள் நியமனம் முழுமையாக நிறைவு பெற்ற பின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

    இதனால் வரும் 26-ந்தேதி கட்சியின் முதலாம் ஆண்டு விழா மட்டும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • மத்திய அமைச்சரின் கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த விவகாரத்தில் அரசியல் செய்யாமல், நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சருக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், தமிழ் நாட்டிற்கு நிதி அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு பிளாக் மெயில் செய்வதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "They have to come to the terms of the Indian Constitution என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?

    மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!

    "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!

    எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்..." என்று குறிப்பிட்டுள்ளார். 

    ×