என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
- சீமானை விடுவிக்க முடியாது என்று நீதிபதி கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகிறார். சீமான் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக விஜயலட்சுமி அளித்த புகார் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சீமானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை 2012-ம் ஆண்டு திரும்ப பெற்றுக் கொள்வதாக கடிதம் அளித்திருந்தார். இதையடுத்து காவல் துறையினர் வழக்கை முடித்து வைத்தனர். இந்த சூழலில் தான் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பான விசாரணையின் போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நடிகை விஜயலட்சுமி எதற்கான வழக்கை வாபஸ் பெற்றார். இவர் சீமானின் முதல் மனைவியா? எனக் கேட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
தீர்ப்பில் மிரட்டல் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்று கொண்டு இருப்பது தெளிவாகிறது. பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது. விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறிய புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டை உறுதிபடுத்தும் வகையில் உள்ளன. சீமான் வற்புறுத்தலால் 6, 7 முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எனவே இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். ஏற்கனவே சீமானுக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், விஜயலட்சுமி விவகாரம் தொடர்பான இந்த தீர்ப்பு சீமானுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
- ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் மனு ஆனந்த் படத்தை இயக்கியுள்ளார்.
- இந்தப் படத்தில் சரத்குமார் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இவர் ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் சரத்குமார் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மிஸ்டர் எக்ஸ் (MrX) படத்தின் அறிமுக காட்சிக்காக நடிகர் ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
கச்சிதமான உடல் அமைப்பில் இருக்கும் ஆர்யா இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மிஸ்டர் எக்ஸ் படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு நாளை வெளியிட இருக்கிறது. இப்படம் எம்மாதிரியான கதைக்களத்தில் அமைந்து இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2ஆக மத்திய அரசு குறைத்துள்ளது.
- சமூக வலைத்தளம் முழுக்க ரெயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்!
நாடு முழுவதும் இயக்கப்படும் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2ஆக மத்திய அரசு குறைத்துள்ளது.
26 ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக ஏசி 3 டையர் பெட்டிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும் ரெயில்களின் முன்பதிவில்லாப் பெட்டிகள் இன்று முதல் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், ரெயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளை குறைத்தது தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சமூக வலைத்தளம் முழுக்க ரெயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்!
அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஆங்சூ அறிவியல் மைய ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி உள்ளனர்.
- வைரஸ் பரவியதாக வெளியான தகவல்களை ஷி திட்டவட்டமாக மறுத்தார்.
புதிய வகை வௌவால் கொரோனா வைரஸ்-ஐ சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் கொண்டிருக்கிறது.
நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. வௌவால் கொரோனா வைரஸ்கள் குறித்து ஷி ஷெங்லி மேற்கொண்ட ஆய்வுகளில் வூஹான் பல்கலைக்கழகம் மற்றும் வூஹான் நச்சுயிரியல் மையத்தின் கீழ் இயங்கும் ஆங்சூ ஆய்வகம் மற்றும் ஆங்சூ அறிவியல் மைய ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி உள்ளனர்.
புதிய வகை கொரோனா வைரஸ் ஹெச்.கே.யு.5 (HKU5) என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் ஜப்பானை சேர்ந்த பிபிஸ்ட்ரெல் வகை வௌவால்களில் காணப்பட்டது. இந்த வைரஸூம் மனிதர்களின் சுவாச மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டுள்ளது. இதுவும் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் ACE 2, அதாவது முந்தைய சார்ஸ்-கோவி-2 வைரஸ் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது.
"வௌவால் ACE 2 மட்டுமின்றி மனித ACE 2 மற்றும் வெவ்வேறு இனங்களின் மரபணுக்களை பாதிக்கும் ACE 2 வகையை சேர்ந்த HKU5-CoV-ஐ கண்டுபிடித்திருப்பதை அறிவிக்கிறோம்," என சீன குழு இதழ் ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸை வௌவால்களில் இருந்து தனிமைப்படுத்தினால், அவை மனிதர்களிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸ் மனிதர்களுக்கு சுவாசம் மற்றும் குடல் உறுப்புகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று உருவானது எப்படி என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், சீன ஆய்வகத்தில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியதாக உலகளவில் நம்பப்படுகிறது. இதுதவிர கொரோனா வைரஸ் வௌவால்களில் இருந்து தான் மனிதர்களுக்கு பரவியதாகவும் கூறப்படுகிறது. ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரவியதாக வெளியான தகவல்களை ஷி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
- நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி."
- இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி." இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் இம்மாதம் 6 ஆம் தேதி திரைக்கு வந்து மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் மிக வைரலாகி ஹிட்டடித்த சவதீகா பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு.
- ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த வகையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கியவர்களில் டோனி டி சொர்சி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான ரியான் ரிக்கில்டன் மற்றும் கேப்டன் பவுமா நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். கேப்டன் பவுமா 58 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வேன் டெர் டூசென் 52 ரன்களை எடுத்தார்.
மறுப்பக்கம் ரிக்கில்டன் 103 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் சிறப்பாக ஆடிய ஏய்டன் மார்க்ரம் 52 ரன்களை எடுத்தார். இன்னிங்ஸ் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை குவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2 விக்கெட்டுகளையும் ஃபசல்ஹக் ஃபரூக்கி, அசமதுல்லா ஓமர்சாய் மற்றும் நூர் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
- சசிகுமார் தற்பொழுது அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- படத்தின் டைட்டில் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நந்தன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் தற்பொழுது அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்களை எழுத, ஆடை வடிவமைப்பு பணிகளை நவா ராஜ்குமார் கையாள்கிறார்.
ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
படத்தின் டைட்டில் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான முகை மழை பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை மோகன் ராஜன் வரிகளில் ஷான் ரோல்டன் மற்றும் சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தெலுங்கு நடிகையான ரூபா கொடுவாயூர் தற்பொழுது எமகாதகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார்.
- திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தெலுங்கு நடிகையான ரூபா கொடுவாயூர் தற்பொழுது எமகாதகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார்.
இப்படம் ஒரு அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார். படத்தை சரங் பிரதார்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
ரூபாவுடன் யூடியூப் பிரபலம் நரேந்திர பிரசாத், ஹரிதா, கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகமா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எந்த மொழி வேண்டும், எந்த மொழி வேண்டாம் என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.
- மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள் தங்களை தகுதி உள்ளவர்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நம்மை இணைப்பது தமிழ்மொழி தான். நான் தன்னம்பிக்கையுடன் உயிர்த்திருப்பதற்கு காரணம் தமிழக மக்கள்தான்.
வானுயர்ந்த தமிழ் மொழியை எவராலும் கீழே இறக்கிவிட முடியாது. 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருந்தால் இன்று நாம் நின்றிருக்கும் இடமே வேறாக இருந்திருக்கும்.
எந்த மொழி வேண்டும், எந்த மொழி வேண்டாம் என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இந்தாண்டு நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்கும். அடுத்தாண்டு மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டமன்றத்திலும் ஒலிக்கும்.
மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள் தங்களை தகுதி உள்ளவர்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், மத்திய அரசின் மீது மிகுந்த கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- மாணவர்கள் ஆங்கில ‘உலகமயமாக்கல்’ மொழியில் புலமை பெற்றதால்தான் உலக அளவில் இன்று அவர்கள் கோலோச்சி வருகின்றார்கள்.
மும்மொழிக் கொள்கையை ஏற்காவிடில் ரூ.5000 கோடி தமிழகத்திற்கு இழப்பு ஏற்படும் என்று மத்திய அமைச்சர் கூறிய தகவல் அதிர்ச்சி அளிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சில ஷரத்துக்கள் உள்ளன என்று பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டியும், அதை தமிழகம் எந்த மாற்றமுமின்றி பின்பற்ற வேண்டும் என்று வலுக்கட்டாயமாக வற்புறுத்துவதும், இதுவரை தமிழகத்தில் சிறப்பான சாதனைகளை கல்வித் துறையில் அடையக் காரணமாக பின்பற்றப்பட்டுவரும் இருமொழிக் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், மும்மொழிக்
கொள்கையை வற்புறுத்தித் திணிக்க முயலும் மத்திய அரசின் முயற்சியால், தமிழக மக்களிடையே அச்சமும், குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் 'PM SHRI' திட்டத்தை ஏற்காவிட்டால் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை தமிழகம் இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளதாக வரும் செய்திகள் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், மத்திய அரசின் மீது மிகுந்த கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கு, மத்திய அரசு SSA - சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தில் வழங்கக்கூடிய பங்கு நிதியினை இந்த ஆண்டு திடீரென்று நிறுத்தியுள்ளது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மக்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் நாட்டின் அறிவு சார்ந்த தலைவர்களால், குறிப்பாக பேரறிஞர் அண்ணா போன்றவர்களுடைய வழிகாட்டுதலின்படி, இருமொழிக் கொள்கையின் அவசியம் மற்றும் சிறப்பு பற்றி மத்திய அரசுக்கு எடுத்துரைத்ததன் அடிப்படையில்தான் மத்திய அரசும் அலுவல் மொழிச் சட்டம் 1963-ல் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்தது. இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் அலுவல் மொழிகள் விதி 1976 வகுக்கப்பட்டு இன்றுவரை தமிழ் நாட்டில் தாய்மொழியான தமிழ், தொடர்பு மொழியான ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா, அம்மாவின் அரசும், தொடர்ந்து இந்த அரசும் கடைபிடித்து வருகிறது.
இத்தகைய அறிவுசார்ந்த முடிவினால்தான் தமிழ் நாட்டில் பயிலும் மாணவர்கள் தாய்மொழிப் புலமையுடன், ஆங்கில மொழியையும் கற்று, இன்று இந்தியாவின் பிற மாநிலங்களிலும், உலகம் முழுவதிலும் பல உயர்ந்த பதவிகளை வகிப்பதுடன், தொழில்களையும் நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். 'உலகமயமாக்கல்' உள்ள இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்கள் ஆங்கில 'உலகமயமாக்கல்' மொழியில் புலமை பெற்றதால்தான் உலக அளவில் இன்று அவர்கள் கோலோச்சி வருகின்றார்கள்.
ஆங்கிலம் அல்லாத பிற மாநிலங்களிலும், நாடுகளிலும்கூட அந்தந்த மொழிகளை தேவைக்கேற்ப கற்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்கள்.
எனவே தமிழ் நாட்டிற்கு, இந்த காலக்கட்டத்தில் மும்மொழிக் கொள்கை என்பது தேவையற்ற ஒன்றாகும். இந்த நிலைப்பாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது.
மத்திய அரசு இந்த உண்மை நிலையை உணர்ந்து தமிழ் நாட்டில் மும்மொழிக் கொள்கை திணிப்பைக் கைவிட வேண்டும் என்று
வலியுறுத்துகிறேன். அதேபோல், மத்திய அரசின் நிதியுதவியோடு, மாநில அரசின் நிதிப் பங்குடன் நிறைவேற்றும் திட்டங்கள் பல உள்ளன. இவையெல்லாம் அந்தந்த துறைகளில் உள்ள குறியீடுகளை அடைவதற்கான நோக்கத்தைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றில் மாநில அரசின் பங்கும் உள்ளது. கல்வித் துறையில் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பல குறியீடுகளை தமிழ் நாடு தற்போதுள்ள திட்ட முறையிலேயே அடைந்துள்ளது.
இந்நிலையில், அனைத்து மாநிலங்களாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத தேசிய கல்விக் கொள்கை, தமிழ் நாட்டில் ஏன் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை, இதற்கு முன்பு ஆட்சி செய்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசும், தற்போதைய அரசும் சுட்டிக்காட்டி உள்ளன.
இத்தகைய ஆட்சேபனைக்குரிய ஷரத்துக்கள் பற்றி மத்திய அரசு, மாநில அரசுடன் உடனடியாக விவாதித்து ஒரு இணக்கமான முடிவை எடுக்க வேண்டுமே ஒழிய, இதுபோன்ற முக்கியமான துறைகளில் செயல்படுத்தப்படும் `சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம்' போன்றவற்றுக்கான நிதியை, தேசிய கல்விக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தி, நிதியை விடுவிக்க மறுப்பது தமிழ் நாட்டில் இருக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் மத்திய அரசு இழைக்கும் துரோகமாகவே கருதப்படும்.
இதனால், தமிழக மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி மிகுந்த அச்சமும், மத்திய அரசின் மீது வேதனையும், வெறுப்பும் அடைந்துள்ளனர். எனவே, மத்திய அரசு இது போன்ற தன்னிச்சையான போக்கை, மக்கள் நலன் கருதி
மாற்றிக்கொண்டு, தமிழ் நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் ஷரத்துக்கள் பற்றி விரிவான கலந்தாலோசனை மேற்கொண்டு ஒரு சுமூக முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதேசமயம், கல்வித் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் SSA போன்ற திட்டங்களின் நிதியை எந்தவிதமான நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
விடியா திமுக அரசு பொதுவெளியில் இதுபோன்ற பயனற்ற விவாதங்கள் செய்வதைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமாக மத்திய அரசை வலியுறுத்தி கலந்தாலோசனை செய்து, மக்கள் நலன் சார்ந்த நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்குத்தான் தமிழ் நாட்டு மக்கள், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்து அனுப்பி உள்ளார்கள் என்பதையும், விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கீர்த்தி பாண்டியன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படம், 'அஃகேனம்
- படத்தின் முதல் பாடலான மெல்லாலி மெல்லாலி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர்- தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் - என பன்முக ஆளுமை கொண்ட அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'அஃகேனம் ' என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நடிகர் அசோக் செல்வன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - இயக்குநர் கோகுல் - நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் உதய் கே இயக்கத்தில் உருவாகி வரும் ' அஃகேனம் ' எனும் திரைப்படத்தில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீண் ராஜா , ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி. எம். சுந்தர், ஆதித்யா மேனன், சீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை திவேத்தியன் கவனிக்க, கலை இயக்கத்தை ராஜா மேற்கொண்டிருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் 'அஃகேனம்' படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
படத்தின் முதல் பாடலான மெல்லாலி மெல்லாலி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கார்த்திக் நேதா வரிகளில் பிரதீப் குமார் மற்றும் ஐஷ்வர்யா ராதாகிருஷ்ணன் இணைந்து பாடியுள்ளனர்.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ & பி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டிராகன் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது.
- டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி இன்று வெளியான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வெளியீட்டுக்கு முன்பே டிராகன் திரைப்படத்தின் ஓ.டி.டி. மற்றும் இதர உரிமங்கள் விற்கப்பட்டு விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. மேலும், இந்தப் படம் திரையரங்கு வெளியீட்டில் பெரும் வசூல் முழுவதும் நிறுவனத்திற்கு போனஸ் தான் என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில், பட ரிலீசை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்த டிராகன் படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தான் இயக்கப்போகும் புதிய படம் தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார். இந்தப் படம் அவர் இயக்க இருக்கும் சிம்புவின் 51-வது (எஸ்.டி.ஆர். 51) படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை வைத்து மீண்டும் படம் இயக்குவதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
எஸ்.டி.ஆர். 51 படத்தைத் தொடர்ந்து தான் இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பார் என்றும் இந்தப் படத்தையும் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் என்றும் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். 2027-ம் ஆண்டு வாக்கில் இந்தப் படம் அமையும் என்றும் அப்போது பிரதீப் ரங்கநாதனின் கால்ஷீட் கிடைப்பதை பொருத்து அதன் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






