என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அ.தி.மு.க.வைப்பொறுத்தவரை தி.மு.க.வை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள்.
    • தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க. எல்லா முயற்சிகளும் எடுக்கும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மனு கொடுத்தோம்.

    * அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை தி.மு.க.-வை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள்.

    * தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க. எல்லா முயற்சிகளும் எடுக்கும்.

    * தேர்தல் நேரத்தில் அமையும் சூழலை பொறுத்துதான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் என்றார்.

    இதனிடையே, பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை என்று கூறினார். 

    • அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் 1-ந்தேதி அன்று அவரவர்களின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும்.
    • வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் 1-ந்தேதி அன்று அவரவர்களின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும். இந்த நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் 2-ந்தேதி தான் ஊதியம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 7.05 லட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் /குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இவ்வாண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் 02.04.2025 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    • நீஷம் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்.
    • செய்ஃபர்ட் 38 பந்தில் 6 பவுண்டரி, 10 சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் விளாசினார்.

    பாகிஸ்தான் அணி ஒயிட்பால் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான நியூசிலாந்து சென்றுள்ளது. முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த 4 போட்டிகள் முடிவில் நியூசிலாந்து தொடரை கைப்பற்றி 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. 3-வது போட்டியில் மட்டும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது.

    இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களம் இறங்கியது.

    நியூசிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சல்மான் ஆகா தாக்குப்பிடித்து 39 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சதாப் கான் 28 ரன்கள் சேர்த்தார். தொடக்க வீரர் முகமது ஹாரிஸ் 11 ரன் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்கள் மட்டுமே அடிக்க பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே அடித்தது.

    நியூசிலாந்து அணி தரப்பில் நீஷம் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜேக்கப் டஃபி 2 விக்கெட்டும், பென் சியர்ஸ் மற்றும் இஷ் சோதி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் 129 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் டிம் செய்ஃபர்ட் அபாரமாக விளையாடினார் மறுமுனையில் பின் ஆலன் 12 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த சாப்மேன் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். செய்ஃபர்ட் ஆட்டமிழக்காமல் 38 பந்தில் 97 ரன்கள் விளாச நியூசிலாந்து 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டிம் செய்ஃபர்ட் 6 பவுண்டரி, 10 சிக்சர்கள் விளாசினார்.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து 4-1 எனக் கைப்பற்றியுள்ளது. நீஷம் ஆட்டநாயகன் விருதம், டிம் செய்ஃபர்ட் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

    இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது.

    • மேடைகளுக்குச் செல்லும் ஓவர்பிரிட்ஜ் நடைபாலத்தில் வைத்து தலையில் சுட்டுக்கொன்றார்.
    • ஆரா ரெயில் நிலையத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    பீகாரில் ரெயில் நிலையத்தில் வைத்து இளம்பெண் மற்றும் அவரது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு இளைஞர் ஒருவர் தானும் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டத்தில் உள்ள ஆரா ரெயில் நிலையத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 20 வயதான அமன் குமார் முதலில் அப்பெண்ணையும் அதன் பின் அவளது தந்தையையும் ரெயில் நிலையத்தில் நடைமேடைகளுக்குச் செல்லும் ஓவர்பிரிட்ஜ் நடைபாலத்தில் வைத்து தலையில் சுட்டுக்கொன்றார்.

    பின் அதே இடத்திலேயே தானும் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இந்த சம்பத்தால் அங்கிருந்த பயணிகள் அதிரிச்சியில் மூழ்கினர். ஆர்பிஎப் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    உயிரிழந்த மூவரும் உத்வாண்ட்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது. பெண்ணின் பெயர் ஜியா குமாரி (18), தந்தையின் பெயர் அனில் சின்கா (50). காதல் விவகாரம் தொடர்பாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அந்த பெண் டெல்லிக்கு செல்வதற்காக ரெயில் நிலையம் வந்திருந்தாக தெரிகிறது.

    • 7-8 நாட்களாக எனக்குப் பேச அனுமதி வழங்கப்படவில்லை என்று ராகுல் காந்தி குற்றசாட்டு
    • ஜனநாயக விரோத முறையில் மக்களவை நடத்தப்படுகிறது.

    மக்களவையில் தனக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    மக்களவையின் கண்ணியத்தை நிலைநிறுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகளை ராகுல் காந்தி பின்பற்றவேண்டும் என்று மக்களவைத் சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டு கொண்டார். சபாநாயகர் இந்தக் கருத்தைச் எதற்காக கூறினார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.

    சபாநாயகர் கூறியது குறித்து பேசிய ராகுல் காந்தி, "என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. நான் சபாநாயகரிடம் என்னை பேச அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் என்னைப் பேச விடவில்லை. அவர் என்னைப் பற்றி ஆதாரமற்ற தகவலை கூறினார். பின்னர் தனக்கு பேச வாய்ப்பளிக்காமல் அவையை ஒத்திவைத்தார்.

    மக்களவையில் நான் எழுந்து நிற்கும் போதெல்லாம், எனக்குப் பேச அனுமதி வழங்கப்படுவதில்லை. 7-8 நாட்களாக எனக்குப் பேச அனுமதி வழங்கப்படவில்லை. அன்று, பிரதமர் மோடி, கும்பமேளா பற்றிப் பேசினார். நான் அதில் கூடுதல் தகவல்களை கூற விரும்பினேன். வேலையின்மை பற்றிப் பேச விரும்பினேன், ஆனால் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஜனநாயக விரோத முறையில் மக்களவை நடத்தப்படுகிறது" என்று தெரிவித்தார்.

    மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகோய், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கொறடா மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சுமார் 70 காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள், சபாநாயகரைச் சந்தித்து இது குறித்து கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • வருகிற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளின் வாக்குகள் சிதற விடாமல் இருப்பதற்காக கூட்டணி விசயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
    • தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட தேர்தல் களத்தை 2026 தேர்தல் சந்திக்க இருக்கிறது.

    சென்னை:

    தமிழக அரசியலில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தீவிரமாக களம் இறங்கி உள்ளார். இதையொட்டி அவரது அதிரடி அரசியல் திட்டங்கள் பரபரப்பாகி வருகிறது.

    விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சி முதல் மாநாட்டில் ஆட்சியில் பங்கு மற்றும் ஊழல் மற்றும் மத்திய, மாநில அரசுகள் மீதும் அவர் பேசிய அதிரடி கருத்துகள் அரசியல் அரங்கையே அதிர வைத்தது.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன், பா.ம.க., பா.ஜ.க., த.மா.கா. கூட்டணியும், தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடனும், தே.மு.தி.க., டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடனும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாகவும் போட்டியிட்டன. தேர்தலில் தி.மு.க. கூட்டணி 45.38 சதவீதமும், அ.தி.மு.க. கூட்டணி 39.72 சதவீதமும் பெற்ற நிலையில் 5.66 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியது.

    இந்நிலையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் திடீரென விரிசல் ஏற்பட்டு கூட்டணி முறிவு ஏற்பட்டது. அடுத்ததாக பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க. உடனும், பா.ஜ.க., ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் கட்சியுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைத்தது.

    எனவே வருகிற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளின் வாக்குகள் சிதற விடாமல் இருப்பதற்காக கூட்டணி விசயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மேலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சியின் அரசியல் பார்வை விஜய் கட்சியை உன்னிப்பாக உற்று நோக்கி வந்தது.

    வருகிற தேர்தலில் விஜய் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து விடும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனித்து போட்டியிடும் எண்ணத்தில் விஜய் உறுதியாக இருந்து வருகிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில் விஜய்யின் அரசியல் செயல்பாடு அமைந்து கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் எதிர்பாராத வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்கு சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் திடீர் திருப்புமுனையாக அமைந்ததுடன் வருகிற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதைத் தொடர்ந்து வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உருவாகி இருக்கிறது. எனவே தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட தேர்தல் களத்தை 2026 தேர்தல் சந்திக்க இருக்கிறது.

    4 முனை போட்டி யாருக்கு சாதகமாக அமையும் என்பது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேசும் பொருளாக அமைந்து உள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணிகளுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி கனியை பறிப்பதற்காக பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை விஜய் தனது கட்சிக்கு அரசியல் ஆலோசகராக நியமித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • எண்ணெய் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளில் சாதகமாக ஏதும் இல்லை.
    • வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உள்பட பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய இந்த சங்கத்தில் சுமார் 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக சுமார் 6 ஆயிரம் டேங்கர் லாரிகள் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகின்றது.

    குறிப்பாக பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் பழைய ஒப்பந்த காலம் முடிவடைகிறது. அடுத்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 2025-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருந்தது.

    அதில் பல்வேறு விதிமுறைகள் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக சங்க உறுப்பினர்களுடன் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி ஆலோசனை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சில விதிமுறைகளை தளர்த்துமாறு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து விரைவில் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எண்ணெய் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளில் சாதகமாக ஏதும் இல்லை. பாதகமாகத்தான் உள்ளது. விதிமுறைகளை தளர்த்த நாங்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. புதிய ஒப்பந்தத்தின் விதிமுறையால் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். நஷ்டத்தில் எங்களால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாது. அதனால் நாளை (27-ந்தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். 4 ஆயிரம் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் இயங்காது. எரிவாயு ஏற்றும் 10 இடங்களில் லோடுகளை ஏற்றாமல் லாரிகள் நிறுத்தப்படும். இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பிற மண்டலத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம. அவர்களும் போராட தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
    • அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    அரியானா மாநிலத்தில் வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவரை உயிருடன் புதைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் தன் மனைவியுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததை அடுத்து வீட்டு உரிமையாளர் இப்படி செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

    அரியானா மாநிலம் ரோதக்கில் உள்ள பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகம் அருகே வசித்து வருபவர் ஹர்தீப். இவர் தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார். இந்த வீட்டில் ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜக்தீப் என்பவர் வாடகைக்கு குடியேறினார். அவர் அந்த பகுதியில் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    வாடகைக்கு குடியேறிய அவர் ஹர்தீப் மனைவியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். மேலும் மனைவியுடன் யோகா ஆசிரியர் ஜக்தீப் தனிமையில் சந்தித்ததை ஹர்தீப் கண்டுபிடித்தார். தன்னுடைய வீட்டில் வாடகைக்கு வந்தவர் மனைவியுடன் கள்ளக்காதலை ஏற்படுத்திக் கொண்டு தகாத முறையில் நடந்து கொண்டதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    இதையடுத்து, யோகா ஆசிரியர் ஜக்தீப்பை தீர்த்தக்கட்ட ஹர்தீப் முடிவு செய்தார். இந்த கொலையில் தான் சிக்கிவிடக்கூடாது என்பதிலும் மிக கவனமாக இருக்க நினைத்துள்ளார். இதற்காக தனது நண்பருடன் தீவிர ஆலோசனை நடத்தி சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் திட்டம் தீட்டினார்.

    அதன்படி ஹர்தீப் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து கொண்டு யோகா ஆசிரியர் ஜக்தீப்பை உயிரோடு குழி தோண்டி புதைக்க முடிவு செய்தார். அதற்காக விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப் போவதாக கூறி பணியாளர்களை அழைத்து வந்து 7 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி தயார் நிலையில் வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 24-ம் தேதி ஜக்தீப் வேலைக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஹர்தீப் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து ஜக்தீப்பை கடத்திச் சென்று, ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்டிருந்த 7 அடி பள்ளத்தில் தூக்கி வீசினர். தொடர்ந்து அவரை உயிரோடு புதைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    பின்னர் ஹர்தீப் எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டார். இந்த நிலையில் யோகா ஆசிரியர் ஜக்தீப்பின் உறவினர்கள் அவரை காணவில்லை என கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி சிவாஜி காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதில் எந்த துப்பும் துலங்கவில்லை. இதனை தொடர்ந்து அவருடைய செல்போன் அழைப்பு பதிவுகளை வைத்து போலீசார் விசாரணையில் இறங்கினர்.

    சந்தேகத்தின் பேரில் ஹர்தீப்பை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் யோகா ஆசிரியரை கை கால்களை கட்டி உயிரோடு புதைத்து கொலை செய்ததாக தெரிவித்தார்.

    இந்த அதிர்ச்சி தகவலை அறிந்த போலீசார் நேற்று முன்தினம் புதைக்கப்பட்ட யோகா ஆசிரியர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக ஹர்தீப் மற்றும் அவருடைய நண்பர் தரம் பால் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருவதாக தெரிவித்தனர்.

    • கணக்குத் தொடங்கிய நாளில் இருந்து 2 ஆண்டுகளில் இத்திட்டம் முதிர்வடையும்.
    • திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கான வட்டி விகிதம் அதிகபட்சமாக ஆண்டுக்கு 7.5 சதவீதம் வழங்கப்படும்.

    சென்னை:

    மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான நிதி ஆதாரம் மற்றும் அதிகாரமளிக்கும் வகையில், மத்திய அரசின் நிதி அமைச்சகத்தால் 'மகளிர் மதிப்பு திட்டம்' என்ற சிறுசேமிப்புத் திட்டம் கடந்த 2023 மார்ச் 31-ந்தேதி தொடங்கப்பட்டது.

    இத்திட்டத்தில், பெண் குழந்தை அல்லது தனிப்பட்ட பெண்ணின் பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தனிப்பட்ட முறையிலும், 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் உரிய பாதுகாவலர் மூலமும் இந்த சேமிப்பு திட்டத்தைத் தொடங்கலாம். குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கணக்குத் தொடங்கிய நாளில் இருந்து 2 ஆண்டுகளில் இத்திட்டம் முதிர்வடையும். இதன்படி, இத்திட்டம் இம்மாதம் 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த நிலையில், இத்திட்டத்தில் இதுவரை சேராதவர்கள் உடனடியாக சேர்ந்து பயன்பெறுமாறு அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் கூறியதாவது: -

    மகளிருக்கு நிதி அதிகாரம் மற்றும் நிதி சுதந்திரம் அளிக்கும் வகையில், மத்திய அரசு தொடங்கியுள்ள மகளிர் மதிப்பு திட்டம் பெண்களுக்கு ஒரு சிறப்பான சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கான வட்டி விகிதம் அதிகபட்சமாக ஆண்டுக்கு 7.5 சதவீதம் வழங்கப்படும். கணக்குத் தொடங்கிய நாளில் இருந்து ஓராண்டு நிறைவடையும் போது 40 சதவீதம் வரை மீதித் தொகையில் திரும்ப பெற அனுமதிக்கப்படும். கணக்கு வைத்திருப்பவர்கள், பாதுகாவலர்கள் மரணம் அடைந்தாலோ தீவிர மருத்துவ காரணங்கள் இருந்தாலோ இந்தக் கணக்கை முடித்துக் கொள்ளலாம். கணக்குத் தொடங்கி 6 மாதங்களுக்குப் பிறகு எந்த நேரத்திலும் கணக்கை முன்கூட்டியே முடித்துக்கொள்ளலாம். ஆனால், அவ்வாறு முடித்துக் கொள்ளும் பட்சத்தில் வட்டி விகிதம் 2 சதவீதம் குறைக்கப்படும். வரும் 31-ந் தேதியுடன் இத்திட்டம் முடிவடைய உள்ளதால், பெண்கள், பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் இந்த வாய்ப்பை அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மேலும், விவரங்களுக்குக் https://www.indiapost.gov.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். இத்திட்டம் தொடங்கப்பட்ட தில் இருந்து இதுவரை சென்னை நகர மண்டல அஞ்சலத்துக்கு உட்பட்ட அஞ்சலகங்களில் 94,900 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.843 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு நடராஜன் தெரிவித்தார்.

    • பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் ரேசன் கடைகளில் கிடைக்கிறது.
    • ஆதாரில் இடம்பெற்றுள்ள ரேகைகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க செல்பவர்கள் பயோமெட்ரிக் முறைப்படி தங்கள் கை விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். ரேசன் அட்டையில் இடம் பெற்றிருக்கும் உறுப்பினர்களில் யாராவது ஒருவர் ரேகை வைக்க வேண்டும்.

    ஏற்கனவே கைரேகைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருப்பதால் ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க செல்பவர்களின் ரேகை அதனுடன் ஒத்திருந்தால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்.

    ஆதாரில் இடம்பெற்றுள்ள ரேகைகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பலர் புதுப்பிக்கவில்லை. அப்படிப்பட்டவர்கள் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.

    ரேசன் கடை ஊழியர்கள் கைரேகை பொருந்தாதவர்களிடம் நீங்கள் இன்னும் ஆதார் கார்டில் உங்கள் கைரேகையை அப்டேட் செய்யவில்லை. எனவே பொருட்கள் வாங்க முடியாது என்கிறார்கள்.

    ஆனால் விபரம் புரியாத சாதாரண மக்கள் 'சார். என்னிடம் ஆதார்கார்டும் இருக்கிறது. அதில் என் கைரேகை தான் இருக்கிறது' என்று சொல்கிறார்கள்.

    அதற்கு ரேசன் ஊழியர்களும் நீங்கள் அப்டேட் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதை கேட்டதும் எதுவும் புரியாமல் சினிமாவில் வடிவேலு 'அப்ரண்டி ஷிப்' என்பதை 'அப்ரசண்டிகள்' என்பதை போல் ஏதோ அப்ரடிக்காம்... ஒண்ணும் புரியலை என்றபடி பரிதாபமாக திரும்பி செல்கிறார்கள்.

    விருகம்பாக்கம் மின் மயானம் அருகில் உள்ள ரேசன் கடைக்கு பொருள் வாங்க சென்றவர் அவரது ரேகை ஒத்துப்போகவில்லை என்றதும் வீட்டுக்கு சென்று மனைவியை அழைத்து சென்றுள்ளார். அவரது ரேகையும் ஒத்துப்போகாததால் பொருட்கள் வாங்க முடியாமல் திரும்பி சென்றார்கள். தினசரி வேலைக்கு செல்லும் அவர்கள் கூறியதாவது:-

    ஆதார் கார்டில் கைரேகையை அப்டேட் செய்ய கோயம்பேட்டில் இருக்கும் ஆதார் தலைமை அலுவலகம் அல்லது போஸ்ட் ஆபீஸ்களுக்கு செல்ல வேண்டும் என்கிறார்கள்.

    கோயம்பேட்டுக்கு சென்றால் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டும். காத்திருந்தாலும் முடியாமல் செல்பவர்களும் உண்டு. வேலைக்கு லீவு போட முடியாது என்பதால் தனியார் நெட்சென்டர்களுக்கு சென்று முன்கூட்டி நேரம் முன்பதிவு செய்ய வேண்டி உள்ளது. அதற்கு ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அனைவரது ஆதார் கார்டிலும் அப்டேட் செய்ய ரூ.1000 செலவாகும்.

    எங்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி தான் நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த மாதத்திற்குரிய பொருட்கள் எதையும் வாங்க முடியவில்லை.

    பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் ரேசன் கடைகளில் கிடைக்கிறது. இதற்காக அரசு தரும் மானிய தொகையை ஆதார் கார்டு அப்டேட் செய்ய செலவழிக்க வேண்டி இருப்பதாக அவர்கள் ஆதங்கப்பட்டனர்.

    • ஏப்ரல் 1-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    * மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.

    * தமிழகம், புதுவை காரைக்காலில் 28-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும். ஏப்ரல் 1-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.

    * தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2- 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    * சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • கிளென் மேக்ஸ்வெல் முதலிடம் பிடித்துள்ளார்.
    • ஐந்து வீரர்கள் அதிகமுறை டக் அவுட் ஆகியுள்ளார்.

    உலகளவில் பிரபலமான கிரிக்கெட் தொடராக இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை நடக்கும் இந்தத் தொடரில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பிரான்சைஸ் அணிகளுக்காக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

    அந்த வகையில் 2025 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த சனிக்கிழமை (மார்ச் 22) தொடங்கியது. இந்தத் தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் பத்து அணிகள் கோப்பைக்காக மல்லுக்கட்டும் தொடரில் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. மேலும், ஒவ்வொரு போட்டியிலும் ஏதேனும் ஒரு சாதனை படைக்கப்பட்டு வருகிறது.

    அப்படியாக நேற்று (மார்ச் 25) நடந்த போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் வீரர் கிளென் மேக்ஸ்வெல் மோசமான சாதனை படைத்தார். நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்-ஐ எதிர்கொண்ட பஞ்சாப் அணிக்கு கிளென் மேக்ஸ்வெல் மிடில் ஆர்டரில் களமிறங்கினார். எனினும், இவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார்.

    இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் கிளென் மேக்ஸ்வெல் மீண்டும் முதலிடம் பிடித்தார். இதுவரை நடந்த ஐ.பி.எல். தொடர்களில் கிளென் மேக்ஸ்வெல் இதுவரை 19 முறை டக் அவுட் ஆகியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் அதிகமுறை டக் அவுட் ஆனவர்களின் டாப் 10 பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்...

    டக் அவுட் ஆனவர்கள் டாப் 10 பட்டியல்:

    கிளென் மேக்ஸ்வெல் 19 முறை

    ரோகித் சர்மா 18 முறை

    தினேஷ் கார்த்திக் 18 முறை

    பியூஷ் சாவ்ளா 15 முறை

    சுனில் நரைன் 15 முறை

    மந்தீப் சிங் 15 முறை

    ரஷித் கான் 15 முறை

    மணிஷ் பாண்டே 15 முறை

    அம்பத்தி ராயுடு 14 முறை

    ஹர்பஜன் சிங் 13 முறை

    ×