search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegal relationship"

    • கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
    • ஆத்திரத்தில் வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறினார்.

    உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டம் 'பிப்ரைச்' என்ற ஊரைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த். கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஷில்பா (வயது 34). திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.

    ஷில்பாவுக்கு பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஷில்பாவும் அந்த இளைஞரும் கடந்த ஏழு ஆண்டுகளாக பழகி வந்துள்ளதாக தெரிகிறது. இந்த விவரம் அறிந்த கணவன் ராம் கோவிந்த் இது குறித்து தனது மனைவியிடம் விசாரித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று ஷில்பா கடும் மன வேதனை அடைந்தார். மேலும் ஆத்திரத்தில் தனது வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறினார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கீழே இறங்குமாறு கூறினர். ஆனால், அவர் கீழே இறங்க மறுத்தார்.

    இதுபற்றி தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி அந்த பெண்ணை உயிருடன் மீட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

    மேலும், போலீஸ் விசாரணையில் மனைவி ஷில்பா தான் கள்ளத் தொடர்பு வைத்துள்ள நபரை தனது வீட்டில் தங்க வைக்க அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விபரீத கோரிக்கைக்கு கணவன் ஒப்புக் கொள்ள மறுத்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    குருபரப்பள்ளி அருகே மனைவியை கொலை செய்து தலைமறைவான ராணுவ வீரர் மற்றும் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்த பி.திப்பனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவுதமி (வயது 29). இவர்களுக்கு 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.

    கடந்த வாரம் கவுதமி வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் தலையணையால் அழுத்தியதில், ரத்தம் வழிந்து உறைந்த நிலையில் கிடந்தது.

    இது குறித்து குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்து கிடந்த கவுதமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்த அவரது கணவரை போலீசார் தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகி இருந்தார். இதனால் அவர்தான் கொலை செய்து இருப்பார் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். கள்ளக்காதலுக்கு இடையூறாக மனைவி இருந்ததால் அவரை கொன்றது தெரியவந்தது.

    ராஜேசின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்தனர்.

    கர்நாடக மாநிலம் தும்கூரு சதாசிவ நகர், 3-வது கிராஸ் பகுதியில் கள்ளக்காதலி வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் அவருடைய கள்ளக்காதலி கலைவாணி (30) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். 2 பேரையும் போலீசார் கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். கலைவாணி சேலம் பெண்கள் சிறையிலும், ராஜேஷ் சேலம் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    கொலை செய்யப்பட்ட கவுதமியின் கணவரான ராணுவ வீரர் ராஜேசுக்கும், கர்நாடக மாநிலம் தும்கூரு சதாசிவ நகர், 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்த கலைவாணி என்பவருக்கும் வாட்ஸ்-அப் மூலம் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. கலைவாணி தனது கணவர் சசிகுமாரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

    ஊருக்கு வந்த ராஜேஷ் தனது மனைவி கவுதமியை சந்தித்தார். அப்போது அவர் தனது கணவரின் கள்ளக்காதல் விவகாரம் குறித்து கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அவர் மனைவியை கொன்றுவிட்டு கள்ளக்காதலி வசிக்கும் ஊரில் சென்று பதுங்கி தலைமறைவானது தெரியவந்தது. ஆனால் போலீசார் துப்பு துலக்கி 2 பேரையும் கைது செய்து விட்டனர்.

    ராஜேஷ் கைதானது குறித்து ராஜஸ்தானில் உள்ள ராணுவ மையத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். #tamilnews
    கடம்பூர் அருகே மருமகளின் கள்ளத்தொடர்பை கண்டித்த விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கட்டிட தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள மேலபாறைப்பட்டி கீழ தெருவைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது 60) விவசாயி. இவருடைய மனைவி ஆனந்தம் அம்மாள். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் அரிகிருஷ்ணன். அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    நேற்று இரவு 9 மணி அளவில் அண்ணாத்துரை தனது வீட்டில் கட்டிலில் படுத்து கிடந்தார். மனைவி ஆனந்தம் அம்மாள், அருகில் உள்ள மாட்டு தொழுவத்துக்கு சென்றிருந்தார். அப்போது அண்ணாத்துரையின் வீட்டுக்குள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்மநபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டினர்.

    இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதுகுறித்து கடம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட அண்ணாத்துரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில் பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கொலையாளிகளை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    அண்ணாத்துரையின் மகன் அரிகிருஷ்ணனுக்கும், நெல்லையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பின் அரிகிருஷ்ணன் மனைவியை ஊரில் விட்டு விட்டு அமெரிக்கா சென்றுவிட்டார். இதனால் அரிகிருஷ்ணனின் மனைவி அண்ணாத்துரை வீட்டில் வசித்து வந்தார்.

    அப்போது அவருக்கும் கடம்பூர் அருகே உள்ள மும்மலைபட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்து மாரியப்பன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையறிந்ததும் அண்ணாத்துரை கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. மேலும் ஊருக்கு வந்திருந்த அரிகிருஷ்ணன் இந்த விவகாரத்தை அறிந்து மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதையடுத்து அரிகிருஷ்ணனின் மனைவி அவரை பிரிந்து நெல்லையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து விட்டார். அரிகிருஷ்ணனும் மீண்டும் அமெரிக்காவுக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அரிகிருஷ்ணன் தனது மனைவியை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த அவரது கள்ளக்காதலன் முத்து மாரியப்பன் தொடர்ந்து அண்ணாத்துரையிடம் தகராறு செய்து வந்தார்.

    இதுபற்றி அண்ணாத்துரை தரப்பில் கடம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் முத்து மாரியப்பன் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து அண்ணாத்துரையை கொலை செய்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் தொடக்கத்திலேயே முத்து மாரியப்பன் மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இதனிடையே முத்து மாரியப்பனை இன்று போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் அண்ணாத்துரை கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையில் ஈடுபட்ட மேலும் 2 நபர்கள் யார்? என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
    ×